Search This Blog

Saturday, August 23, 2014

திருப்பதியில் சில அதிசயங்கள்!


திருப்பதியில் நம்மில் சிலருக்குத் தெரியாத அதிசயங்கள், உண்மைகள், நடைமுறைகள் எவ்வளவோ உள்ளன. ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் பல உள்ளன. அவற்றில் சில
* திருப்பதி ஆலயத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சிலா தோரணம் என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன. இந்த பாறையின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும் இந்த பாறைகளும் ஒரே விதமானது.

* ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக் கற்பூரம் சாத்துகிறார்கள். இந்த பச்சைக் கற்பூரம் ஒரு வகையான ரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒரு வகை அமிலம். இந்த ரசாயனத்தை சாதாரண கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால் சிலா தோரணத்திலுள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப் பாறைகள் வெடிப்பதில்லை. ஏழுமலையான திருவுருவச் சிலைக்கு 365 நாட்களும் பச்சைக்கற்பூரம் பூசுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை.

* எந்த கருங்கல் சிலையானாலும் எங்காவது ஓர் இடத்தில் சிற்பியின் உளிபட்ட தடம் தெரியும். உலோகச் சிலையானாலும் உலேகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாக இருக்கின்றன.

* ஏழுமலையான் திருவுருவச் சிலை எப்போதும் போல் 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3,000 அடி உயரத்தில் உள்ள குளிர் பிரதேசம் அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது. பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக நகைகளைக் கழற்றும் போது ஆபரணங்களெல்லாம் சூடாகக் கொதிக்கின்றன.

திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல், வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகவே இருக்கின்றன.

திருப்பதி திருக்கோயில் மடப்பள்ளி (சமையல் கட்டு) மிக பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம், புளிசாதம், சித்திரான்னம், வடை முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப் பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.

* ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண் சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோயில் கர்ப்பக்கிரக குலசேகரப்படியை தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப் பாத்திரங்கள் எதுவும் குலசேகரப் படியைத் தாண்டிச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண் சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப்பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.

* ஏழுமலையான் உடை 21 முழம் நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையைக் கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 500 ரூபாய் செலுத்த வேண்டும். வாரத்தில் ஒருமுறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரத்தைச் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

* உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் 2,000 ரூபாய் கட்டணமாகும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வஸ்திரங்கள் சாத்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு 10 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

* பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர்வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

* அபிஷேகத்திற்காக ஸ்பெயினிலிருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரீஸ் நகரத்திலிருநது வாசனைத் திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு தங்கத்தாம்பளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும். காலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.

* ஐரோப்பாவிலுள்ள ஆம்ஸ்ட்டர்ட்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலை சுமார் 80 ரூபாய்.

* சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம் தமாலம், கிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

* ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ. 1,000 கோடி. இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடம் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரி நகைகளை செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.

* ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை; பாதக் கவசம் 3.75 கிலோ. கோயிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூபாய் 100 கோடியாகும். திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

* சிவராத்திரி அன்று கே்ஷத்ரபாலிகர் என்ற உற்சவம் நடைபெறுகிறது - அன்று உற்சவப் பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெறுகிறது. தாளப்பாக்கம் அன்னமயா ஏழுமலையானை பிரம்மாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும் க்தி ஸ்வரூபமாகவும் பாடி அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதி வைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக் கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமயாவும் சம காலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர். மந்திரம், சாஸ்திரம் தெரிந்தவர். நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமலையான் மீது சேஷாசல நாமாவளியைப் பாடியுள்ளார்.

* தினசரி அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்ற ஐதிகம் உள்ளது.

* ஏழுமலையானின் ஸ்தல விருட்சம் புளியமரம்.

* எந்த சாத்விக சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் இரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால், ஏழுமலையான் திருவுருவச் சிலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுத பாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம்முன்னோர்களால் ‘வெறுங்கை வேடன்’ என்று அழைக்கப்பட்டார்.

1781-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33வது பிரிவைச் சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயமடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானப் பிரார்த்தித்து இருக்கிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடனைச் செலுத்தியிருக்கிறார்.

*ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ கர்னல் ஜியோ ஸ்டிரெட்டின் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.

* திருப்பதி அலர்மேலுமங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது - செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால் இதை நெய்யும் போது மூன்று வேளையும் குளிப்பார்கள். அவர்கள் மது, புலால் உண்ணமாட்டார்கள் வெள்ளிக் கிழமை அபிஷேகத்திற்கு பரிமள அறையில் வியாழன் இரவு அரைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திற்குச் சேர்க்கப்படுகிறது. வெளி நாடுகளிலிருந்து வாசனைத் திரவியங்களை பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ. 50,00 மதிப்புள்ள வாசனைத் திரவியங்கள் வருகின்றன.

* ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்ணுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வருகிறது.

* ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்றபடியே இருகைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்தில் விட வேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.

* வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்துமுறை நடக்கும். வடகலை சம்பிரதாயத்தில் ‘வேங்கடமெனப் பெற்ற" என்ற பாசுரமும், தனியன்களும் இடம்பெறும். சாத்து முறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழு மலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென்கலை சாத்துமுறை சேவிக்கப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.

* கி.பி. 1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதி தாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கிபி. 1764ல் நிஜாம் ஒருவனது தலைமையில் வந்த முஸ்லிம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.

* திருவில்லிப்புத்தூர் கோயிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த பூமாலைகள் திருப்பதிக்குக் கொண்டு வரப்பட்டு ஏழுமலையானுக்குச் சாத்தப்படுகிறது.



No comments:

Post a Comment