Search This Blog

Tuesday, February 04, 2014

உலக புற்றுநோய் விழிப்பு உணர்வு தினம் பிப்ரவரி 4

''சினிமா தியேட்டரில், 'என் பெயர் முகேஷ்... எனக்கு வாய்ப் புற்றுநோய்’ என்று ஆரம்பித்து, அவருக்கு வயது 24, முகேஷ் தற்போது உயிருடன் இல்லை, என்று முடியும் விளம்பரத்தைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கும். இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் இருக்கிற முகேஷ் போன்றோர்க்குத்தான் இதுபோன்ற வியாதிகள் வரும். நம் ஊரில் எல்லாம் இந்த அளவுக்குப் பிரச்னை இல்லை என்று பலரும் அந்த விளம்பரத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. ஆனால், தமிழகத்திலும் வாய்ப் புற்றுநோய் அதிகமாக இருக்கிறது என்பதுதான் அதிர்ச்சி.

'உலக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் புற்றுநோயாக முதல் இடத்தில் மார்பகப் புற்றுநோய் இருக்கிறது. புகையிலைப் பொருட்களால் ஏற்படக்கூடிய புற்றுநோய், ஆண்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. புகைபிடிப்பது, பான் மசாலா, புகையிலை மெல்லுவது போன்ற செயல்களால், 10-ல் நான்கு பேருக்கு வாய்ப் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்தப் புற்றுநோயால் 42 சதவிகித ஆண்களும், 18 சதவிகிதப் பெண்களும் உயிரிழக்கின்றனர்.புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களுக்கு, வாயின் உள்பகுதியில் புண் போல ஆரம்பிக்கும். அது கொஞ்சம் கொஞ்சமாக உதடு, கன்னம், தொண்டை, உணவுக் குழாய் என மற்ற எல்லாப் பகுதிகளையும் தாக்கி, மிக மோசமான வாய்ப் புற்றுநோயாக உருவெடுத்துவிடுகிறது.புற்று நோய் என்பது எப்போதும் வரலாம். புகைக்கும் அளவையும், பான் போடும் அளவையும், நம்முடைய நோய் எதிர்ப்பு ஆற்றலையும் பொருத்துதான் நோய் வருவதற்கான வாய்ப்பு அமையும்.

வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கான வழி :

தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும். பற்களுக்கு இடையே உள்ள அழுக்கை அகற்ற ஃபிளாஸ் பயன்படுத்த வேண்டும்.

புகையிலை மெல்லுவதை, புகைப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். வாயில் சிறிய புண் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.

 

மஞ்சள், அடர் பச்சை நிறக் காய்கறிகள், கீரை, பூண்டு, திராட்சை, க்ரீன் டீ, சோயா, தக்காளி போன்ற உணவுகளைச் சாப்பிடுவது புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கும்.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரைச் சந்தித்து வாய் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

மாதத்துக்கு ஒரு முறை கையடக்கக் கண்ணாடியைவைத்துக்கொண்டு, வீக்கம், புண் போன்று ஏதேனும் உள்ளதா என்று பார்த்து, சந்தேகப்படும்படி இருந்தால், உடனடியாக உங்கள் பல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

சரவணக்குமார்

No comments:

Post a Comment