Search This Blog

Friday, February 07, 2014

அவசர உதவிக்கு உலகம் முழுவதும் ஒரே எண்!

எப்பொழுது என்ன நடக்கும் என்று சொல்ல முடியாத உலகில்தான் நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் நினைத்துப் பார்க்க முடியாத சம்பவங்கள் எங்கு வேண்டுமானாலும் நடந்து விடலாம். அப்பொழுது உதவிக்கு யாரை அழைப்பது என்று பரிதவிப்போம். இதற்காகவே 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசர எண்கள் உள்ளன. காவல்துறை கட்டுப் பாட்டு அறையைத் தொடர்பு கொள்ள 044-2844 7200 என்ற எண்ணை எப்பொழுது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட இந்தச் சேவையில் சம்பந்தப்பட்ட துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். 
 
இதுபோக, ஒவ்வொரு துறைக்கும் இலவச அவசர அழைப்பு எண்கள் உள்ளன. இவை அனைத்தும் 24 மணி நேர சேவை கொண்டவை. அவசர போலீஸ் உதவிக்கு 100, தீயணைப்புத் துறைக்கு 101, போக்குவரத்து முறைகேட்டுக்கு 103, ஆம்புலன்ஸ் உதவிக்கு108, குழந்தைகளுக்கான உதவிகளுக்கு 1098, பெண்களுக்கான உதவிக்கு 1091, முதியோருக்கான உதவிக்கு 1253, மீனவர்கள் மற்றும் கடலோரப் பாதுகாப்பு உதவிக்கு 1093, விலங்குகள் பாதுகாப்பு உதவிக்கு 12700, ராகிங் தொல்லை உதவிக்கு 155222 அல்லது 18001805512 என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு எண் உள்ளது. இவை அனைத்தையும் நினைவில் வைத்துக் கொள்வது சிரமம். அதிலும் வெளிநாடு சென்றிருக்கும்பொழுது நமது நாட்டுக்கான அவசர உதவி எண்கள் பயன்படாது.
 
இன்றைக்கு வெளிநாட்டுப் பயணம் என்பது சாதாரணமாகிவிட்டது. அங்கு நாம் ஏதேனும் பிரச்னையில் மாட்டிக்கொண்டால், அவசர உதவிக்கு என்ன செய்வது? அதற்காகத்தான் உலகம் முழுக்க பயன்படும்படியான, ஒரு பிரத்யேக அவசர உதவி எண்ணை ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் இருக்கும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கோ அல்லது உதவி மையத்துக்கோ சென்றடையும்படி அமைத்திருப்பார்கள்.
 
நமது தமிழகத்தில் 911, 112 எண்களை டயல் செய்தால், அது தானாக அவசர எண் 100க்கு சென்று சேர்வதுபோல் அமைத்துள்ளனர். இந்த எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால்கூட போதும். அவர்கள் நம்மை தொடர்புகொண்டு உதவி செய்வார்கள். செல்ஃபோனில் கீபேட் லாக் ஆகியிருந்தாலும்கூட 1,2,9 ஆகிய இந்த மூன்று எண்களை மட்டும் டயல் செய்ய முடியும். உங்கள் மொபைல் சிம் பிளாக் ஆகியிருந்தாலும்கூட இந்த 911, 112 எண்களை அழைக்க முடியும். மொபைல் சிக்னல் இல்லாத இடங்களில்கூட டயல் செய்ய முடியும். எனவே, உலகம் முழுவதும் அவசர உதவிக்கு அழைக்கக்கூடிய 911, 112 எண்களை நாம் நினைவில் வைத்திருப்பது நல்லது.
 
ஜெயசுதா

No comments:

Post a Comment