Search This Blog

Saturday, May 10, 2014

லியாண்டர் - பூபதி


வழக்கமாக லியாண்டர் பெயஸும் மகேஷ் பூபதியும் அடித்துக் கொள்வதுதான் இந்திய டென்னிஸ் சங்கம் (ஏ.ஐ.டி.ஏ.) எதிர்கொள்ளும் பிரச்னையாக இருக்கும். ஆனால், இந்த முறை இருவரும் டேவிஸ் கோப்பையில் ஆடுவதாக விருப்பம் தெரிவித்திருப்பது ஏ.ஐ.டி.ஏ.வுக்குச் சிக்கலை உண்டாக்கியிருக்கிறது.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய - ஓசியானா குரூப் -1 பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்திய அணி, தென்கொரியாவை வென்று, உலக குரூப் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது. தென் கொரியாவுடனான போட்டியில் சோம்தேவ் தேவ்வர்மன், சனம் சிங், சாகேத் மைனேனி, ரோஹன் போபண்ணா ஆகியோர் பங்கேற்றார்கள். அடுத்ததாக, பெங்களூருவில் செப்டெம்பர் 12 -14ல் நடக்கும் ப்ளே ஆஃப் சுற்றில் இந்திய அணி செர்பியாவுடன் விளையாடுகிறது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றால், 2015-ம் ஆண்டுக்கான உலகப் பிரிவு பிரதான முதல் சுற்றுக்குத் தகுதி பெறும். செர்பியாவுடனான போட்டியில் யார் யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதுதான் ஏ.ஐ.டி.ஏ. முன்னால் உள்ள மிகப்பெரிய சவால். எதனால் இந்தக் குழப்பம்?

2013 வரை தொடர்ந்து டேவிஸ் கோப்பையில் ஆடிவந்தார் லியாண்டர். ஆனால் 2014ல் திடுதிப்பென்று விடுமுறை விண்ணப்பம் கொடுத்தார். 2014ல், 16-17 போட்டிகளில் ஆடுகிறேன். அதனால் டேவிஸ் கோப்பை மற்றும் ஆசியக் கோப்பைக்கான போட்டிகளிலிருந்து என்னை விலக்கிக் கொள்ளவும். வேறு எந்தப் பிரச்னைகளை முன்வைத்தும் இந்த முடிவை எடுக்கவில்லை" என்று சொந்தக் காரணங்களை முன்வைத்து, இந்திய டென்னிஸ் சங்கத்துக்குத் தகவல் கொடுத்தார்.  

மகேஷ் பூபதியின் கதையே வேறு. கடைசியாக 2011ல் டேவிஸ் போட்டியில் ஆடியதுதான். 2012 ஒலிம்பிக்ஸில் லியாண்டருடன் ஆடமாட்டேன் என்று பூபதி அடம்பிடித்ததால் ஏராளமான சர்ச்சைகள் உருவாகின. ஒலிம்பிக்ஸுக்குப் பிறகு நடந்த டென்னிஸ் சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் மகேஷ்பூபதி, ரோஹன் பொபன்னா ஆகியோர் ஜூன் 2014 வரை இந்தியாவின் சார்பில் டென்னிஸ் போட்டிகளில் விளையாட பரிசீலிக்கப்பட மாட்டார்கள் என்று முடிவெடுக்கப்பட்டது. இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றார் பூபதி. கர்நாடக உயர்நீதி மன்றமும் ஏ.ஐ.டி.ஏ.வின் முடிவுக்குத் தடை விதித்தது. ஆனாலும் பூபதிக்கும் பொபன்னாவுக்கும் டேவிஸ் போட்டிகளில் வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்த வருட ஜனவரியில் பொபன்னா மட்டும் மீண்டும் டேவிஸ் கோப்பை அணியில் சேர்க்கப்பட்டார். (பூபதியை ஏசியன் கேம்ஸில் ஆடவைக்கும் திட்டமுண்டு என்று ஏ.ஐ.டி.ஏ. தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.) ஆனால், பூபதியை டேவிஸ் கோப்பையில் ஆட வைப்பது பற்றி இதுவரை ஏ.ஐ.டி.ஏ. முடிவெடுக்கவில்லை. பூபதி, இந்த வருடத்தோடு டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்றுவிடுவார் என்பதால் அவருக்குண்டான வாய்ப்பை ஓர் இளம் வீரருக்கு வழங்கலாம் என்பது ஏ.ஐ.டி.ஏ.வின் விருப்பம். மகேஷ் பூபதி, 2012ல் இந்திய டென்னிஸ் சங்கத்துடன் மல்லுக்கட்டியதால் இன்றுவரை அதன் பலனை அனுபவித்து வருகிறார்.  

இந்த நிலையில், லியாண்டரும் பூபதியும் செர்பியாவுடன் ஆட விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் ஏ.ஐ.டி.ஏ. செயலாளர் வேறுவிதமாகப் பேட்டியளித்தது டென்னிஸ் சங்கத்தில் இன்னும் பூசல்கள் நிலவுவதை வெளிப்படுத்தியுள்ளது. இந்திய டென்னிஸ் தேர்வுக்குழு, மீண்டும் பின்னால் செல்லப்போகிறதா அல்லது இளையதலைமுறை மீது நம்பிக்கை வைக்கப்போகிறதா என்பதை முடிவுசெய்ய வேண்டும்," என்று ஏ.ஐ.டி.ஏ. செயலாளர் பரத் ஓசா பேட்டி கொடுத்திருக்கிறார். அணித்தேர்வு ஜூலையில் நடக்கவுள்ளது.தென் கொரியாவை வெளிநாட்டில் இதுவரை இந்திய அணி தோற்கடித்ததில்லை. லியாண்டர், பூபதி இல்லாமல் ஆடிய இந்திய அணி சமீபத்தில் இந்தச் சாதனையைச் செய்துள்ளது. அதனால் அந்த வெற்றிக்கு மதிப்பளிக்கும் விதத்தில் மீண்டும் புதிய தலைமுறை வீரர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதா அல்லது லியாண்டர் - பூபதி இருவரையும் மீண்டும் டேவிஸ் கோப்பை அணியில் சேர்த்துக் கொள்வதா? இதுதான் ஏ.ஐ.டி.ஏ. முன்னால் இருக்கும் கேள்விகள்.1993ல் டேவிஸ் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் பிரான்சையும் பிறகு 1995ல் க்ரோஸியாவையும் (இவானி செவிக் ஆடிய போட்டி) தோற்கடித்ததில் லியாண்டரின் பங்களிப்பு உண்டு. மேலும், டேவிஸ் கோப்பை இரட்டையர் ஆட்டத்தில், லியாண்டரும் பூபதியும் 1997லிருந்து இன்றுவரை ஆடிய 23 ஆட் டங்களில் ஒன்றில்கூட தோற்காமல் தொடர்ச்சியாக ஜெயித்து வருகிறார்கள். இது ஓர் உலக சாதனையும்கூட. செர்பியா, 2010ம் ஆண்டின் டேவிஸ் கோப்பை சாம்பியன். ஜோகோவிச் முதலிய உலகத்தரமான வீரர்கள் கொண்ட வலுவான அணி. (2011ல் இந்தியாவை 4-1 என்ற கணக்கில் செர்பிய அணி தோற்கடித்தது.) செர்பியாவைத் தோற்கடிக்க லியாண்டர், பூபதி போன்ற அனுபவசாலிகள் தேவை என்பது பலருடைய கருத்து. ஆனால், தென் கொரியாவை அதன் மண்ணில் லியாண்டர், பூபதி இல்லாமலேயே வீழ்த்திய இளைஞர்களுக்கு மீண்டுமொரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது இன்னொரு தரப்பினரின் விருப்பம். என்ன செய்யப்போகிறது ஏ.ஐ.டி.ஏ.?


1 comment:


  1. வணக்கம்!

    நாட்டில் நடக்கின்ற நாடகத்தை, மின்வலை
    ஏட்டில் படைத்தீா் இனித்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete