Search This Blog

Wednesday, May 07, 2014

திமிங்கிலம்

 
யானையைப் பார்த்தால் நமக்கு வியப்பாக இருக்கிறது. நிலத்தில் வாழும் விலங்குகளில் யானை தான் மிகப்பெரியது. ஆனால் உலகின் மிகப்பெரிய விலங்கு கடல்களில் வாழும் நீலத் திமிங்கிலமே. சற்றே நீல நிறத்துடன் இருப்பதால் அதற்கு அந்தப் பெயர். நீலத் திமிங்கிலம் குறைந்தது 30 மீட்டர் நீளம் கொண்டது. எடையோ சுமார் 120 டன். அதாவது 20 யானைகளின் எடைக்குச் சமம். 
 
கிரில் எனப்படும் மிகச்சிறிய கடல் வாழ் உயிரினத்தைத்தான் அது உண்டு வாழ்கிறது. கிரில்கள் இறால் போன்றவை. கிரில் நான்கு செ.மீ. நீளம் கொண்டது.

கிரில்கள் கடலில் கூட்டம் கூட்டமாகக் காணப்படும். ஒரு கூட்டத்தில் பல ஆயிரம் கிரில்கள் இருக்கும். நீலத் திமிங்கிலம் தனது வாயைத் திறந்தபடி கிரில் கூட்டத்தின் வழியே செல்லும்போது பல ஆயிரம் கிரில்கள் திமிங்கிலத்தின் வாக்குள் சிக்கும். நீலத் திமிங்கிலம் ஒரு நாளில் நான்கு முதல் ஏழு டன் கிரில்களை விழுகுகிறது.
 
திமிங்கிலத்தின் வாக்குள் விசேஷ அமைப்புகள் உள்ளன. நிறைய கிரில்கள் உள்ளே சிக்கியதும் திமிங்கிலம் வாயை மூடிக்கொள்ளும். அதன் தொண்டைக்குள் ‘கதவுகள்’ போன்ற திறப்புகள் விரியும். வயிறும் விரிவடையும். திமிங்கிலத்தின் மேல் தாடையில் சீப்புகள் போன்ற அமைப்புகள் உள்ளன. திமிங்கிலம் தனது நாக்கை உயர்த்தும்போது சீப்புகள் போன்ற அமைப்புகள் வழியே கடல் நீர் வெளியே சென்று விடும். உள்ளே சிக்கிய கிரில்களைத் திமிங்கிலம் விழுங்கி விடும்.வடிவில் பிரம்மாண்டமானது என்பதால் நீலத் திமிங்கிலம் விஷயத்தில் எல்லாமே பெரிதாக இருக்கிறது. அதன் நாக்கு எடை நான்கு டன். அதன் நாக்கின் மீது 12 பேர் வரிசையாக நிற்கலாம். அதன் இருதயமோ கார் அளவு இருக்கும்.திமிங்கிலத்தின் குட்டியானது பிறக்கும் போதே மூன்று டன் எடை கொண்டதாக உள்ளது. நீளமோ 25 அடி. திமிங்கிலங்களில் ஸ்பெர்ம் திமிங்கிலம், ஹம்ப்பேக் திமிங்கிலம், மிங்கி திமிங்கிலம், பெலுகா திமிங்கிலம், ஆர்க்கா திமிங்கிலம் உட்பட பலவகைத் திமிங்கிலங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றின் உணவும் வெவ்வேறு விதமாக உள்ளது. திமிங்கிலங்கள் அனைத்துமே குட்டிப் போட்டுப் பால் கொடுப்பவை.
 
திமிங்கிலங்களில் இன்னொரு விசேஷம் இவை மீன்களைப் போல நீருக்குள் சுவாசிப்பவை அல்ல. நம்மைப் போல காற்றை சுவாசிப்பவை. நீருக்குள் நடமாடினாலும் இவை ஒவ்வொரு தடவையும் சுவாசிப்பதற்காக நீர் மட்டத்துக்கு வரும். நுரையிலிருந்து காற்றை புஸ் என்று வெளியே விட்டுவிட்டு புதிதாக காற்றை உள்ளிழுத்துக் கொண்டு மறுபடி நீருக்குள் சென்று விடும்.

நம்மால் நீருக்குள் சில கணங்களே தம் கட்டி இருக்க முடியும். திமிங்கிலங்கள் அரை மணி நேரத்துக்கு மேல் தம் கட்டி நிற்கும். அதாவது ஒரு தடவை காற்றை உள்ளே இழுத்துக்கொண்டால் அரை மணி நேரத்துக்கு அதனால் நீருக்குள் நடமாட முடியும். ஸ்பெர்ம் திமிங்கிலம் சுமார் ஒன்றரை மணி நேரம் வரை நீருக்குள் இருக்கும் திறன் கொண்டது.

திமிங்கிலங்களிடம் இது விஷயத்தில் இயல்பாக சில விசேஷத் திறன்கள் உள்ளன. நாம் சுவாசிக்கும் போது நுரையீரலுக்குள் செல்லும் காற்றில் அடங்கிய ஆக்சிஜனில் 15 சதவிகிதத்தைத்தான் உடல் கிரகித்துக் கொள்கிறது. ஆனால் திமிங்கிலத்தின் நுரையீரலுக்குள் செல்லும் காற்றில் அடங்கிய ஆக்சிஜனில் 90 சதவிகிதத்தை திமிங்கிலம் ஈர்த்துக் கொள்கிறது. இந்தக் கூடுதல் ஆக்சிஜன் திமிங்கிலத்தின் தசைகளில் அடங்கிய செல்லும் காற்றில் அடங்கிய ஆக்சிஜனில் 90 சதவிகிதத்தை திமிங்கிலம் ஈர்த்துக் கொள்கிறது. இந்தக் கூடுதல் ஆக்சிஜன் திமிங்கிலத்தின் தசைகளில் அடங்கிய மையோகுளோபின் எனப்படும் விசேஷ புரத செல்களில் சேமித்து வைக்கப்படுகிறது. திமிங்கிலங்களிடம் மற்ற விலங்குகளை விட அதிக அளவில் மையோகுளோபின் உள்ளது. தவிர, திமிங்கிலத்தினால் ஆக்சிஜன் உபயோகத்தைக் குறைத்துக்கொள்ளவும் முடிகிறது.

திமிங்கிலம் கடலுக்குள் மூழ்கியிருக்கும்போது அதன் இதயத் துடிப்பு வேகம் குறைந்து விடுகிறது. சில உறுப்புகளுக்குக் குறைவான ரத்தமே செல்கிறது. இப்படியான காரணங்களால் திமிங்கிலத்தால் நீருக்குள் அதிக நேரம் இருக்க முடிகிறது.

திமிங்கிலம் நீண்ட நேரம் சுவாசிக்காமல் இருந்து விட்டு நீருக்கு மேலே வரும் கட்டத்தில் வேகமாக மூச்சை வெளிவிடுகிறது. அப்போது கடல் நீரானது நீரூற்று போல நல்ல உயரத்துக்குப் பீச்சிடும். இது 12 மீட்டர் உயரம் வரை இருக்கும். திமிங்கிலம் இருக்கு மிடத்தைக் கண்டுபிடிக்க நவீன வழிகள் இல்லாத அந்த நாட்களில் கடல் நீர் இப்படி உயரே எழும்புவதை வைத்து திமிங்கில வேட்டைக்காரர்கள் அதன் இருப்பிடத்தை அறிந்துகொண்டனர்.

திமிங்கிலம் நீருக்குள் இருக்கும்போது கட்டைக் குரலில் குரல் எழுப்பும். இந்த ஒலி எதிரொலித்துத் திரும்புவதை வைத்து இரை எங்கே உள்ளது என்பதைத் திமிங்கிலம் கண்டுகொள்ளும். தங்கள் இனத்துடன் தொடர்புகொள்ளவும் இந்த ஒலியை அது பயன்படுத்திக் கொள்கிறது. சிலவகைத் திமிங்கிலங்கள் எழுப்பும் ஒலியானது 1600 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும்.

திமிங்கிலங்கள் உலகின் எல்லாக் கடல்களிலும் காணப்படுகின்றன. தென் துருவப் பகுதியில் அண்டார்டிகா அருகே உள்ள திமிங்கிலங்களும் சரி, வட துருவ ஆர்டிக் பகுதியில் காணப்படும் திமிங்கிலங்களும் சரி, குளிர் காலத்தில் வெப்ப மணடல கடல் பகுதிகளுக்கு வருகின்றன. குட்டி பிறந்ததும் பழைய இடத்துக்கே சென்று விடுகின்றன. இப்படி இடம் பெயரும் காலத்தில் திமிங்கிலங்களால் தொடர்ந்து உணவு இன்றி இருக்க முடியும்.

கடந்த காலத்தில் பல்வேறு வகையான திமிங்கிலங்களும் இஷ்டத்துக்கு வேட்டையாடப்பட்டன. இதனால் அவற்றின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. இதைத் தொடர்ந்து திமிங்கிலங்களைக் காப்பதற்காக அமைக்கப் பட்ட சர்வதேச திமிங்கில கமிஷன் உலகின் கடல்களில் வர்த்தக ரீதியில் திமிங்கிலங்களை வேட்டையாடக் கூடாது என்று 1986ம் ஆண்டில் சர்வதேச அளவில் தடையை அமல்படுத்தியது. ஆனால் இவ்விதக் கட்டுப்பாட்டை ஜப்பான், நார்வே, ஐஸ்லாந்து போன்ற நாடுகள் எதிர்த்து வருகின்றன. ‘ஆராய்ச்சிக் காரணங்களுக்காக’ திமிங்கிலங்களை வேட்டையாடலாம் என சர்வதேச தடைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. தடைச் சட்டத்தில் உள்ள இந்த ஓட்டையைப் பயன்படுத்தி மேற்படி நாடுகள் இன்னமும் திமிங்கிலங்களை வேட்டையாடி வருகின்றன. திமிங்கிலங்களைப் பாதுகாப்பதில் பல நாடுகளையும் சேர்ந்த தனியார் அமைப்புகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

என்.ராமதுரை
 

No comments:

Post a Comment