Search This Blog

Wednesday, May 07, 2014

சோட்டா பீம் & மௌக்ளி

 
சோட்டா பீம் என்றால் குட்டி பீமன் என்று அர்த்தம். சோட்டா பீம் சாகசங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட தொலைக்காட்சி தொடர், கடந்த 2009ம் வருடம் முதல் போகோ சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது. தோலக்பூர் கற்பனையான ஓர் ஊர். அந்த ஊரைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் பீம். இது நூற்றுக்கு நூறு இந்தியப் பின்னணியில், இந்தியச் சிறுவர், சிறுமியரைக் கவர்வதற்காகவே உருவாக்கப்பட்ட கதாபாத்திரம். இன்று இந்தியாவின் நெம்பர் ஒன் அனிமேஷன் தொடர் என்ற பெருமையைப் பெற்றுள்ள சோட்டா பீம் இந்தியாவிலும், உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் வசிக்கும் இந்தியக் குழந்தைகளை மட்டுமின்றி பல்வேறு நாட்டுக் குழந்தைகள் மத்தியிலும் கூட பிரபலமாகி இருக்கிறது. மகாபாரதத்தில் வரும் வீர பராக்கிரமசாலியான பீமன்தான் சோட்டா பீம் கதாபாத்திரத்தை உருவாக்குவதற்கு உந்துதலாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. கிரிபன் கோல்ட் அனிமேஷன் நிறுவனம் சோட்டா பீம் அனிமேஷன் தொடரைத் தயாரித்து வருகிறது. 
 
இயற்கை அழகு சூழ்ந்த தோலக்பூரைச் சேர்ந்த சோட்டா பீம் பலசாலி மட்டுமில்லை; மிகவும் புத்திசாலியும் கூட. ஊரில் யார் கஷ்டப்பட்டாலும், சோட்டா பீமுக்குப் பொறுக்காது. உடனே அவர்களுடைய பிரச்னையைத் தீர்ப்பதற்குப் புறப்பட்டுவிடுவான். ஊரைக் கொள்ளையடிக்க வரும் கொள்ளையர்களைக் கூட வீரத்தோடு மோதி விரட்டி அடித்துவிடுவான்.  

பீமின் புத்திசாலித்தனத்தையும் புகழையும் கண்டு பொறாமைப்படும் சிறுவன் காலியா. ஊரில் உள்ள சிறுவர்களில் யாருக்கு என்ன பிரச்னை என்றாலும், தீர்வு காண பீமைத்தான் நாடுவார்கள். சோட்டா பீமுக்கு அவ்வப்போது ஏதாவது பிரச்னைகளைக் கொடுப்பது காலியா மற்றும் நண்பர்களின் வழக்கம். ஆனால், பீம் அவற்றை எல்லாம் சுலபமாகச் சமாளித்து, அவர்கள் முகத்தில் கரி பூசிவிடுவான்.
 
தோலக்பூரின் அரசன் இந்திரவர்மா. சோட்டா பீமை அவருக்கு மிகவும் பிடிக்கும். ஊர் மக்கள், சோட்டா பீம் வளர்ந்து பெரியவன் ஆனதும் ராஜா இந்திர வர்மா, இளவரசியை பீமுக்குக் கல்யாணம் செய்து வைத்து, அரசாட்சியை அவனிடம் ஒப்படைப்பார் என்று ஒரு பேச்சு கூட உண்டு.  

குட்டி பீமுக்கு லட்டு என்றால் மிகவும் பிடிக்கும். லட்டு சாப்பிட்டு விட்டால் போதும் அவனுக்கு அசாத்தியமான பலம் வந்துவிடும். பீமின் நெருங்கிய தோழி ஏழு வயது சுட்கி, பீமுக்குப் பிடித்த லட்டு கொண்டு வந்து கொடுப்பாள். அவ்வப்போது, பீமுக்கு அவள் தருகிற யோசனைகள் மிகவும் உபயோகமாக இருக்கும். பீம் கூடவே இருந்து அவனுக்கு உதவும் இன்னொரு சுட்டிப் பையன் ராஜு. இவர்கள் அணியில் இடம்பெற்றுள்ள இன்னொரு ஜாலியான உறுப்பினர் ஜக்கு என்ற குரங்கு.

சோட்டா பீம் பிரபலம் காரணமாக சோட்டா பீம் முத்திரையுடன் கூடிய பல பொருட்கள் விற்பனையாகின்றன.


மௌக்ளி


ருட்யார்ட் கிப்ளிங் ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவில் பிறந்த ஆங்கிலேய எழுத்தாளர். இலக்கியத்துக்காக நோபெல் பரிசு பெற்ற முதல் ஆங்கில எழுத்தாளர் என்ற பெருமை இவருக்கு உண்டு. அவர் குழந்தைகளைக் கவரும்படியாக உருவாக்கிய ஒரு கதாபாத்திரம்தான் மௌக்ளி. ஜங்கிள் புக் என்ற புத்தகத்தின் மூலம்தான் மௌக்ளி என்ற சுவாரசியமான கற்பனை கதாபாத்திரம் வாசகர்களுக்கு அறிமுகமானது. பத்தொன்பதாம் நூறாண்டின் இறுதியில் அவர் இந்தக் கதைகளை எழுதினார்.

ருட்யார்ட் கிப்ளிங் இந்தியாவில் பிறந்து, இங்கிலாந்தில் வளர்ந்து, மீண்டும் வேலை செய்ய இந்தியாவுக்கு வந்தவர். அதனால் அவருக்கு இயற்கையாகவே இந்தியாவின் மீதும் அதன் இயற்கை வளங்களின் மீதும் மிகுந்த ஆர்வம் இருந்தது. இதுவே அவரது கற்பனையோடு இணைந்து, கதைகளாக உருப் பெற்றன. 

மௌக்ளி கதாபாத்திரத்தை மத்தியப் பிரதேசத்தின் காடுகளோடு இணைந்த ஒரு பாத்திரமாக உருவாக்கினார். அவர் முதலில் எழுதிய கதைகளில், காட்டுப் பகுதியில் வசிக்கும், அபார வேட்டையாடும் திறன் கொண்ட ஓர் இளைஞனாக அறிமுப்படுத்திவிட்டு, அதன் பிறகு எழுதிய கதைகளில்தான் மௌக்ளியின் பால பருவத்தைப் பற்றிய கதைகளை எழுதினார். பெற்றோர்களைப் பிரிந்து, காட்டில் தனியே விடப்பட்ட குழந்தையான மௌக்ளியை, அன்போடு எடுத்து வளர்க்கின்றன ஓநாய்கள். தாங்கள் வளர்க்கும் மனிதக் குழந்தைக்கு மௌக்ளி என்று பெயர் சூட்டுகின்றன.

காட்டில் வசிக்கும் விலங்குகளின் கால்களில் முள் குத்திவிட்டால், அவை உடனே மௌக்ளியிடம் உதவி கேட்டு வரும். அவன் பொறுமையோடு அந்த முள்ளை எடுப்பான். இதனால் விலங்குகள் அனைத்துக்கும் மௌக்ளி நெருங்கிய நண்பனாகிவிடுவான். காட்டில் வசிக்கும் ஷேர்கான் என்ற புலி மௌக்ளியைச் சாப்பிட நினைத்தாலும், அதனிடமிருந்து ஓநாய்கள் காப்பாற்றுகின்றன. ஒரு கட்டத்தில் நெருப்பைக் கண்டால் புலிக்குப் பயம் என்பதை அறிந்து, அந்த நெருப்பைப் பயன்படுத்தி, புலி தன்னை நெருங்க விடாமல் தடுக்கிறான் மௌக்ளி. 

ஜங்கிள் புக் கதைகளுக்குக் கிடைத்த சிறப்பான வரவேற்பு காரணமாக, அது திரைப்படமாகவும், ரஷ்யாவில் அனிமேஷன் படங்களாகவும், டிவி தொடர்களாகவும் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியாகி பெரும் பாராட்டுகளைப் பெற்றன. பி.பி.சி. ரேடியோவில் பிரபல நடிகர்களின் குரல்களில் ஜங்கிள் புக் கதைகள் ஒலிபரப்பாகி, மௌக்ளி இளைஞனர்கள் மத்தியில் பெரும் ஹீரோவாக விளங்கினான். ரஷ்யாவில் மௌக்ளியையும் அவன் நண்பர்களையும் தபால்தலையில் வெளியிட்டு கௌரவித்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment