Search This Blog

Saturday, January 04, 2014

பாதயாத்திரை..

சபரிமலைக்கு மாலை போட்டுப் பாதயாத்திரை போவதும், பழநிக்குப் பாதயாத்திரை செல்வதும் என ஆன்மிக அன்பர்களுக்கே உரிய அற்புதமான காலம் இது. பக்திப் பரவசத்தில், எந்தவித முன்னெச்சரிக்கையுமின்றித் திடீரென்று நடைபயணம் தொடங்கும்போது, பலருக்கு உடல்ரீதியான பிரச்னைகள் வரும்.  


'நீண்ட நடைபயணம் மேற்கொள்பவர்களுக்கு தசைப்பிடிப்பும் மூட்டுவலியும்தான் பெரிய பிரச்னை. வயதானவர்களுக்கு ஏற்கெனவே மூட்டுவலி இருப்பின் மூட்டுத்தேய்மானம் அடைய வாய்ப்புள்ளது. நுரையீரல் சம்பந்தமான பிரச்னை உள்ளவர்களுக்கு 'வீசிங்’ வரலாம். ரத்த அழுத்தம் உள்ளவர்கள், மதிய நேரங்களில் நடந்துசெல்லும்போது, 'சன்ஸ்ட்ரோக்’ ஏற்படலாம். சிலர் குழந்தைகளை, தங்கள் தோள்பட்டையில் தூக்கிவைத்துக்கொண்டு நடப்பார்கள். அவர்களுக்கு முதுகுவலி ஏற்படும்
.
 

நடைபயணம் மேற்கொள்வதற்கு முன் செய்யவேண்டியவை:  

இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் டாக்டரின் ஆலோசனையின் பேரில்தான் நடைபயணத்தை மேற்கொள்ள வேண்டும். பாதயாத்திரை தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பு இருந்தே, கொஞ்சம் கொஞ்சமாக ஓரிரு கி.மீ. வரை நடைப்பயிற்சி செய்தால், தசைகள் மற்றும் தசை நார்கள் தொடர்பான பிரச்னைகளைத் தவிர்க்கலாம். 35 வயதைத் தாண்டியவர்கள் தங்களின் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவைத் தெரிந்துகொண்டு நடைபயணத்தைத் தொடங்குவது நல்லது. உரிய பயிற்சிக்குப் பிறகு நடைபயணத்தை ஆரம்பித்தால், உடல் ரீதியான பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும்.

நடைபயணத்தின்போது ஏற்படும் பிரச்னைகளும் தீர்வும்... 

தசைப்பிடிப்பு, தசைவலிப் பிரச்னை உள்ளவர்கள் உடனடித் தீர்வுக்கு ஐஸ் கட்டி ஒத்தடம் அல்லது குளிர்ந்த நீரை தசைப்பிடிப்பு உள்ள இடத்தில் ஊற்றலாம். சிறிய ரத்தக் காயங்களுக்கு ஐஸ் ஒத்தடம் கூடாது. ஒரு மணி நேரம் நடந்தால், குறைந்தது 10 நிமிடங்களாவது ஓய்வு எடுக்க வேண்டும். தொடர்ந்து இரண்டு, மூன்று மணி நேரம் நடப்பவர்கள் அரை மணி நேரமாவது படுத்து ஓய்வு எடுக்க வேண்டும்.

காலையில் நடக்க ஆரம்பிப்பதற்கு முன்பும், நடந்து முடிந்த பின்பும், மெதுவாகக் குதித்தல், தோள்பட்டையைச் சுழற்றுதல், முழங்கை, முழங்காலை மடக்கி நீட்டுதல் போன்ற சின்னச் சின்ன 'வார்ம் அப்’ பயிற்சிகள் செய்ய வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் காலில் காயம் ஏற்படா வண்ணம் பாதுகாப்பாக நடக்க வேண்டும். நாள்பட்ட சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு காயங்கள் ஏற்படவில்லை என்றாலும் நரம்புகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதால், முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதய நோயாளிகள் அவ்வப்போது மூச்சுப்பயிற்சிகள் செய்யலாம். மெதுவாக அதே சமயம் சீரான வேகத்தில் நடப்பது நல்லது.

தொடர்ச்சியாக வெயிலில் நடக்கும்போது காலில் கொப்புளம் வராமல் இருக்க, துணி அல்லது சாக்ஸ் அணிந்துகொண்டு நடக்கலாம். எச்சரிக்கையுடன் செயல்பட்டால் பாதயாத்திரையும் பரவச யாத்திரையாக அமைந்துவிடும். 

பதமான பாதத்துக்கு...

உச்சி வெயிலில் நடக்கக் கூடாது. இதன் மூலம் சன் ஸ்ட்ரோக்கில் இருந்து தப்பிக்கலாம். 

இரவில் நடப்பது வீசிங் பிரச்னையை ஏற்படுத்தலாம். எனவே, காலை நேரத்தில் நடப்பது நல்லது. 

காலையில் நான்கு மணி நேரமும், மாலையில் நான்கு மணி நேரமும் நடந்துவிட்டு ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். 

வலி உள்ள இடங்களில் வலி நிவாரணிகளை, சூடு பறக்கத் தேய்க்கும்போது வலிகள் அதிகமாகுமே தவிர, குறையாது. மிதமாகத் தடவிவிடலாம்.   

எக்காரணத்தைக் கொண்டும் சுளுக்கு எடுக்கக் கூடாது. 

அதிக தூரம் நடைபயணம் மேற்கொள்வதால் தண்ணீர், இளநீர், மற்றும் பழங்களை உணவாகச் சாப்பிடுவது நல்லது.

  

No comments:

Post a Comment