Search This Blog

Saturday, January 04, 2014

பறிபோகும் தமிழன் வேலை!


எங்கு திரும்பினாலும் இந்தி பேசியபடி தம்மைக் கடந்து செல்லும் சிவந்தநிற மனிதர்கள். நாம் இருப்பது தமிழ்நாடுதானா என எண்ணத் தோன்றும் படியான நிலையில்... பணியிடங்களில் தமிழர்களைத் தேட வேண்டியுள்ளது. இச்சூழலில் தமிழர்களின் வேலைகள் பறிபோவதாகக் கூக்குரல் எழத் தொடங்கிவிட்டன.

சென்னை மட்டுமின்றி கோவை, திருப்பூர் போன்ற நகரங்களிலும் கட்டப்படும் மால்கள், மல்டிப்ளக்ஸ்கள், பெரிய கடைகள், உணவகங்கள், சாலைப் பணிகள், கட்டுமானப் பணிகள், மெட்ரோ ரயில் திட்டப் பணிகள், தொழிற்சாலைகள், அழகு நிலையங்கள்... பல்வேறு தொழிற்பேட்டைகளிலும் வட இந்தியர்களே பெருமளவில் தென்படுகின்றனர். 

சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி சென்னையில் மட்டும் மூன்றரை லட்சம் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் பீகார், ஆந்திரா மற்றும் ஒரிசா மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், தங்கள் மனைவி, குழந்தைகளோடு இங்கு வந்து தங்கி பணியாற்றி வருகின்றனர்.

சென்னையில் அதிகமான கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இவர்கள் இந்தத் துறையில் அதிக அளவில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கடினமான வேலை என்றாலும் இவர்கள் அதனை எளிதாக மேற்கொள்வதோடு, அங்கேயே தங்கியிருந்து பணிபுரிந்து வருகின்றனர். வேகமாக பணிகள் நடப்பதோடு, குறைந்த கூலி என்பதால், உள்ளூர்த் தொழிலாளர்களைவிட, வடமாநிலத் தொழிலாளர்களை ஈடுபடுத்துவது லாபகரமாக உள்ளது என்று பெரிய கட்டுமான நிறுவனங்கள் வடமாநிலத்தவர்களை முழுவதுமாக ஈடுபடுத்தி வருகின்றன. இதனால் கட்டுமானப் பணிகளில் தமிழர்களுக்கான வாய்ப்புகள் கிட்டத்தட்ட குறைந்தே போய்விட்டது. 

தமிழர்கள் வேலை பறிபோக என்ன காரணம் என்று அலசியதில்...

தமிழர்கள் நாள் ஒன்றுக்கு 650 ரூபாய் கூலி பெற்றார்கள். ஆனால், வடஇந்தியர்க்கு 450 ரூபாய் கொடுத்தாலே கூட்டம் கூட்டமாக வந்து விடுகிறார்கள். 
 
தொடக்கத்தில் வெளி மாநிலத் தொழிலாளர்களைத் தமிழர்கள் ஒரு பிரச்னையாகப் பார்க்கவில்லை. ஆனால், இப்போது அந்தப் பார்வை மெள்ள மெள்ள மாறுவதை உணர முடிகிறது. எதிர்காலத்தில் இவர்களின் வரவு நிச்சயம் ஒரு பெரிய சமூகப் பிரச்னையாக மாறும். இப்படி வருபவர்கள் இங்கேயே தங்கி விட்டால் தமிழ்நாட்டில் தமிழர்களைவிட இவர்களின் எண்ணிக்கை அதிமாகிவிடும். தற்போது சென்னையின் பொருளாதாரம் ராஜஸ்தானியர் மற்றும் குஜராத்தியர்களிடம்தான் இருக்கிறது. காரணம், எந்தத் தொழில் என்றாலும் மொத்தமாக விற்பனை செய்யும் முதலாளிகள் இவர்கள் தான்ஒருவேளை, நேரடியாகத் தொழில் செய்ய முடியவில்லை என்றால் மறைமுகமாக வட்டித் தொழில் மூலம் அவர்களது கரங்கள் அதில் இணைந்திருக்கும் என்பது சமூக ஆய்வாளர்களின் கருத்து. சென்னையின் பல பகுதிகளும் வடஇந்தியர்களின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. வருங்காலத்தில் அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் பெரும் சவாலாக இருப்பார்கள்"முன்பு தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபர் கடை தொடங்கினால் சொந்த ஊரைச் சேர்ந்தவர்களையே பணிக்கு அமர்த்துவர். காரணம், சொந்த மண் பாசம், விசுவாசம். இப்போது அவை எல்லாம் மலையேறிப் போய்விட்டன. சரியாக வேலைக்கு வருவதில்லை. வந்தாலும் அதிகச் சலுகைகளை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்திக்காரார்களைப் பொறுத்தவரை வேலை நேரம் தொடங்கும் முன்பே வந்து விடுகிறார்கள். விடுமுறை எடுப்பதில்லை. வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே சொந்த ஊருக்குப் போவார்கள். சொன்னதைச் சரியாகச் செய்கிறார்கள். வந்த ஆறு மாதத்திலே தெளிவாகத் தமிழ்ப் பேசக் கற்றுக்கொள்கிறார்கள்.
 
வேலை இல்லாமை, கடன் தொல்லை - குடும்பச் சூழல் காரணமாகவே இங்கு வேலை செய்ய வரு கிறோம் என்று வெளிமாநிலத்தவர் சொன்னால் அது உண்மையில்லை. அவர்களுக்கு அங்கேயும் வேலை கிடைக்கிறது. ஆனால், இங்கேதான் சாப்பாடு, டி.வி. வசதியோடு வேலை கிடைப்பதால் வசதியாக வாழ ஆசைப்பட்டே சென்னை வருகிறார்கள்.

No comments:

Post a Comment