Search This Blog

Friday, January 10, 2014

நீர் - என்.சொக்கன்

உலகில் பெரும்பகுதி தண்ணீர்தான் இருக்கிறது. நம் உடலுக்குள்ளும் பெரும்பகுதி தண்ணீர்தான். தண்ணீர் சேர்க்காமல் எதையும் சமைக்க முடியாது, சாப்பிட முடியாது. ஒருவேளை சாப்பாட்டை மறந்தாலும், தண்ணீர் குடிக்காமல் மனிதர்களால் உயிர்வாழவும் முடியாது.

மனிதர்கள் மட்டுமல்ல, செடி, கொடி, மரத்தில் ஆரம்பித்து நுண்ணுயிரிகள், விலங்குகள், பறவைகள் என எல்லாவற்றுக்கும் தண்ணீர் தேவை. எந்த அளவு தேவை என்ற கணக்கு மாறுமே தவிர, தண்ணீர் இன்றி வாழும் தாவரம், உயிரினம் எதுவுமே கிடையாது. உலகின் ஜீவாதாரம் என்று பார்த்தால், அது தண்ணீர்தான்!வேதியியல் பாடத்தில், தண்ணீரின் ரசாயனக் குறியீடு H2Oˆ என்று படித்திருக்கிறோம். அதாவது, இரண்டு பங்கு ஹைட்ரஜன், ஒரு பங்கு ஆக்ஸிஜன் இணைந்து கிடைப்பது தண்ணீர்.ஆனால், மற்ற ரசாயனங்களுக்கும் இதற்கும் ஒரு வித்தியாசம், தண்ணீர் இப்படித்தான் கிடைக்கும் என்று யாராலும் வரையறுத்துச் சொல்ல இயலாது. பூமியிலும் மற்ற சில கிரகங்களிலும் திடப்பொருள், திரவப் பொருள், வாயு என்று மூன்று வடிவங்களிலும் தண்ணீர் கிடைக்கிறது.திடப் பொருள், அதாவது பனிக்கட்டி. ரெஃப்ரிஜிரேட்டரில் நாம் உறைய வைக்கிற ஐஸ் கட்டியில் தொடங்கி, கடலுக்குள் தென்படும் பெரிய பனிப்பாறைகள் வரை, தண்ணீரின் திட வடிவம்.திரவ வடிவம் எல்லாருக்கும் தெரிந்ததுதான். குழாயில் பிடித்துக் குடிக்கும் தண்ணீரில் ஆரம்பித்து ஆறு, கடல், அருவி என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.வாயு வடிவம் என்பது நீராவி. தண்ணீரைப் பாத்திரத்தில் வைத்துக் கொதிக்க வைத்தால், ஒரு கட்டத்துக்கு மேல் அது வாயு வடிவத்தில் வெளியேறத் தொடங்கிவிடும்.இப்படிப் பல விதங்களில் நம்மைச் சுற்றித் தண்ணீரின் மூன்று வடிவங்களும் இருக்கின்றன. ஒன்றை இன்னொன்றாக மாற்றுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த மூன்று நிலைகளிலும் தண்ணீர் சமையலுக்குப் பயன்படுகிறது. பனிக்கட்டியை வைத்துப் பழரசங்களைக் குளிர்விக்கிறோம், திரவத்தை வைத்துக் காய்கறிகளை வேக வைக்கிறோம், வாயு வடிவத்தில் இட்லி, புட்டு போன்றவற்றை வேகச் செய்கிறோம்!‘தண்ணீர்’ என்ற தமிழ்ச் சொல்லே மிக அழகானது. தண்மை + நீர் என்று அதைப் பிரிக்க வேண்டும். அதாவது, குளிர்ச்சியான நீர்.இந்தப் பூமியில் கிட்டத்தட்ட முக்கால் பங்கு தண்ணீர்தான். ஓர் உலக வரைபடத்தை எடுத்துப் பாருங்கள், எங்கு பார்த்தாலும் நீலக் கடல் தெரியும். கடல் தவிர ஆறு, ஏரி, குளம், குட்டை, அருவி என்று பல இயற்கை வழிகளிலும் கிணறு, அணைக்கட்டு, நகராட்சித் தொட்டிகள் எனக் குறுகி, நம் தெருமுனையிலும் வீட்டிலும் உள்ள குழாய்கள் வரை நீரைப் பெறலாம், போதாக்குறைக்கு மழையாக வானத்திலிருந்தும் கொட்டும்.உலகில் உள்ள தண்ணீரில் 97% கடலில் உள்ளது. அதை நாம் அப்படியே குடிக்க முடியாது. சுத்திகரித்துக் குடிப்பதற்கும் இப்போதைய தொழில் நுட்பத்தில் ஏகப்பட்ட செலவாகும்.அடுத்து, 2% தண்ணீர் துருவப் பகுதிகளில் பனிப்பாறைகளாக உறைந்திருக்கிறது. அவற்றையும் நாம் வரவழைத்துக் குடிப்பது சாத்தியமில்லை. மீதமுள்ள 1%, அதாவது ஒரே ஒரு சொட்டு, அந்தத் தண்ணீரைதான் நாம் குடித்துக் கொண்டிருக்கிறோம். அதை வைத்துதான் ஒட்டுமொத்த உலகமும் வாழ்ந்தாக வேண்டும்! இதனால்தான் உலகில் கோடிக்கணக்கான மக்களுக்குச் சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை.

தண்ணீர் இருக்கிறது என்பதற்காக அதனை வீணடிப்போரும் உண்டு. தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோர் மிகக் குறைவு. பெரும்பாலானோர் தாங்கள் நீரை வீணடிக்கிறோம் என்று புரியாமலே அதனை வாரி இறைக்கிறார்கள்.உதாரணமாக, ஒருவர் தினமும் பாத் டப்பில் குளிக்க நூறு லிட்டர் தண்ணீர் செலவாகிறது என்று வைத்துக் கொள்வோம், அதையே அவர் ஒரு வாளியில் பிடித்துக் குளித்தால் இருபத்தைந்து லிட்டர் போதும்.இன்னொருவர் தண்ணீர்க் குழாயைத் திறந்துவிட்டபடி பல் துலக்குகிறார். இரண்டு நிமிடங்கள்தான். அதற்குள் அவர் வீணாக்கும் தண்ணீர் எவ்வளவு தெரியுமா? சுமார் 15 லிட்டர்கள். இப்படி உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொருவரும் தினசரி முப்பது முதல் ஐம்பது லிட்டர் வரை தண்ணீரைச் சேமித்தாலே போதும். நமக்கும் நல்லது, பூமிக்கும் நல்லது!கடலில் இருப்பதும் தண்ணீர்தான். நம் வீட்டில் குழாயில் வருவதும் தண்ணீர்தான். பாட்டிலில் விற்பனையாவதும் தண்ணீர்தான். ஆனால், கடல் நீர் உப்புக் கரிக்கிறது, நம் வீட்டுத் தண்ணீர் சாதாரணமாக இருக்கிறது, பாட்டில் தண்ணீர் சற்றே இனிப்பாக உள்ளது... உண்மையில் தண்ணீரின் சுவைதான் என்ன?தூய்மையான நீருக்கு நிறம் கிடையாது, சுவை கிடையாது, வாசனையும் கிடையாது! கடல் நீரில் உப்பு கலந்துள்ளது. ஆகவே, அதன் சுவையை அது பெற்றுவிடுகிறது. பாட்டில் தண்ணீரில் பல தாதுகள் சேர்ந்திருப்பதால், அதுவும் ஒரு சுவையைப் பெறுகிறது. கடல், ஆறு என நிலப்பரப்புக்கு மேலே கிடைப்பது போலவே, அதன் கீழேயும் தண்ணீர் உள்ளது. இதனைப் பெரிய கிணறு வெட்டியோ, ஆழ்துளைக் கிணறை அமைத்தோ நாம் மேலே கொண்டு வரலாம். அதன் தரத்தைப் பொறுத்துக் குடிப்பதற்கோ, குளிப்பதற்கோ மற்ற வேலைகளுக்கோ பயன்படுத்தலாம்.

இந்த நிலத்தடி நீரை நாம் உறிஞ்சி எடுக்க எடுக்க, அது மேலும் கீழே சென்று கொண்டிருக்கும். இந்த நிலையை மேம்படுத்த மழை நீர் சேகரிப்புத் திட்டங்கள் உதவும்!விவசாயத்திற்கு மழை அவசியம். சரியான நேரத்தில், சரியான அளவில் மழை பெய்தால்தான் பயிர்கள் சிறப்பாக வளரும், அறுவடையும் நன்றாக இருக்கும். ஆகவே, விவசாயத்தை நம்பியிருந்த நம் முந்தைய தலைமுறை மக்கள் மழையைக் கொண்டாடினார்கள். பலவிதங்களில் அந்தத் தண்ணீரைப் பயன்படுத்தி பூமியை வளப்படுத்தினார்கள்.மனித உடலில் முழுக்கத் தண்ணீர் இருந்தாலும், அது இயங்குவதற்கு வெளியிலிருந்து தண்ணீர் ஒரு குறிப்பிட்ட அளவில் தினமும் தேவை. இதற்காக, ஒரு நாளைக்கு 8 தம்ளர் என்ற அளவு சிபாரிசு செய்யப்படுகிறது. ஆனால், இதை நாம் கண்டிப்பாக எண்ணிப் பின்பற்ற வேண்டியதில்லை. வெயில் அதிகமுள்ள நாள்களில் சற்றே கூடுதலாகவும், குளிர் நாள்களில் குறைவாகவும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம் ஆனால் தொடர்ந்து மிகக் குறைவாகவே தண்ணீரைத் குடிக்கிறவர்களின் உடலுக்குப் பின்னாளில் பல பிரச்னைகள் வரக்கூடும். ஆகவே, தினமும் மறக்காமல் நான்கு முதல் ஐந்து தம்ளர் தண்ணீரைக் குடித்துவிடுவது நல்லது!தண்ணீர் மூலம் பரவும் நோய்களைத் தடுப்பதற்குப் பலவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகள் சிபாரிசு செய்யப்படுகின்றன. அவற்றில் மிக முக்கியமானது, தண்ணீரைக் காய்ச்சிக் குடிப்பது.தண்ணீரை அருந்துவது, சமைப்பது ஒருபுறமிருக்க, அது இன்னும் பலவிதங்களில் நமக்குப் பயன்படுகிறது. நீரால் உடலைத் தூய்மைப்படுத்தலாம், பாத்திரங்களைத் தேய்க்கலாம், விவசாயத்துக்குப் பயன்படுத்தலாம், நெருப்பை அணைக்கலாம், இயந்திரங்கள் செயல்படும் போது உண்டாகும் சூட்டைக் குளிர்விக்கலாம்... அவ்வளவு ஏன், அதிலிருந்து மின்சாரம்கூட எடுக்கலாம்!நீர் மின்சாரம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஓடுகிற அல்லது கொட்டுகிற நீரின் ஆற்றலைப் பயன்படுத்தி இயந்திரங்களைச் சுழலவிட்டு, அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
தண்ணீரைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்துவதும் உண்டு. கப்பல்கள், சிறு படகுகள் போன்றவற்றில் மனிதர்களோ பொருள்களோ பயணம் செய்யலாம்.

No comments:

Post a Comment