Search This Blog

Saturday, January 04, 2014

என்னாச்சு இந்திய அணிக்கு?


இன்னுமொரு தோல்வி. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய எந்த நாட்டிலும் தோனியால் ஒரு டெஸ்டைக் கூட ஜெயிக்க முடியவில்லை. 10 டெஸ்டுகளில் 9 தோல்வி. டிரா ஆன ஒரு டெஸ்டிலும் தோல்வியி லிருந்து தப்பிப் பிழைத்த கதைதான். கடந்த 10 வருடங்களில் வேறு எந்த இந்திய கேப்டனுக்கும் இப்படியொரு நிலைமை ஏற்பட்டதில்லை. 

தென் ஆப்பிரிக்காவலுவான அணிதான். டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் நெ.1 அணி. கடந்த ஏழு வருடங்களில் ஒரேயொரு டெஸ்ட் தொடரில் மட்டும் தோற்றிருக்கிறது (2009ல் ஆஸி). கடந்த 11 வருடங்களில் தெ.ஆ-வில் நடந்த டெஸ்ட் தொடர்களிலும் ஒரேயொரு முறைதான் தோல்வி! இப்படிப் பட்ட அணியை வெல்வது சாதாரணமான காரியமல்ல தான். ஆனால், முதல் டெஸ்டில் அதற்கு வாய்ப்பு வந்தும் கோட்டை விட்டது இந்திய அணி. ஒரு பௌலர் ஒரு மேட்சில் சரியாக பௌலிங் செய்யவில்லையென்றால் அவரை அடுத்த மேட்சில் உட்கார வைக்கிறார் தோனி. எனில், இந்த 9 தோல்விகளுக்கும் யார் பொறுப்பேற்பது? 2014ல் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என மூன்று நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து 11 டெஸ்டுகள் ஆடப்போகிறது இந்திய அணி. மீண்டும் இதே மாதிரி லட்டு லட்டாகத் தோற்றுப்போய் வரப்போகிறோமா?

கங்குலியால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தானில் ஒரு டெஸ்டையாவது வெல்ல முடிந்தது. (கங்குலி 49 டெஸ்டுகளுக்கு கேப்டனாக இருந்து வெளிநாடுகளில் 11 டெஸ்டுகளில் வெற்றி பெற்றிருக்கிறார். தோனிக்கு இதுவரை 5 வெற்றிகள்தான்) கடந்த 10 வருடங்களில் வெளிநாடுகளில் சாதித்த ஒரே இந்திய கேப்டன், ராகுல் டிராவிட். முக்கியமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரை வென்று காண்பித்தவர். வழக்கமாக எல்லோரும் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்றுப்போனால் பதவியிலிருந்து விலகுவார்கள். ஆனால், இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வென்ற பிறகு விலகினார் டிராவிட். தோனியும் ஒரு கேப்டனாக நிறையச் சாதித்திருக்கிறார். அவருடைய பேட்டை, - ஒருநாள்/டி20 போட்டிகள். ஒருநாள் போட்டியில் 2013 இந்திய அணிக்குச் சிறந்த ஆண்டு. 6 ஒருநாள் தொடர்/போட்டிகளை வென்று முதல் இடத்தில் உள்ளது. ஆனால் வெளிநாட்டு டெஸ்ட் தொடர்கள் என்று வரும்போது தோனியின் எல்லாப் பெருமைகளும் செயலிழந்து விடுகின்றன.  

தோனி இடத்தில் வேறொருவர் இருந்தால் ஜெயித்திருக்க முடியுமா என்று கேட்கமுடியாது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் 8 டெஸ்டுகளில் தோற்றபோதும் கடைசிவரை அணியின் பேட்டிங் ஆர்டரை மாற்றவேயில்லை தோனி. ஆனால், தெ.ஆ.வில் நடந்த முதல் டெஸ்டின் நான்காவது இன்னிங்ஸில் டுப்ளெஸ்ஸியை முன்னால் இறக்கினார் ஸ்மித். கடைசியில் அதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. ( அதனால்தான் ஸ்மித்தால் 100 டெஸ்டுகளுக்கு மேல் கேப்டனாக இருக்கமுடிகிறது!) இதுபோன்ற பரிட்சார்த்த முயற்சிகளில் தோனி ஈடுபடவேயில்லை. கடைசி டெஸ்டில் தாராளமாக இரண்டு ஸ்பின்னர்களைக் களமிறக்கியிருக்கலாம். ஆனால், அந்தத் தைரியம் தோனிக்கு வரவில்லை. இப்படி, முக்கியமான முடிவுகளில் தோனி தொடர்ந்து சொதப்பியதால்தான் இத்தனை தோல்விகள். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய மூன்று நாடுகளிலும் ஒரு டெஸ்ட்டில்கூட ஜெயிக்காதவரை சிறந்த கேப்டன் என்று எப்படிச் சொல்வது? 

இந்த டெஸ்ட் தொடரில் புஜாரா, கோலி, விஜய், ரெஹானே ஆகிய நால்வரும் மிக நன்றாக ஆடினார்கள். வெளிநாட்டு டெஸ்டுகளில் நான்கு பேட்ஸ் மேன்களை இப்படிப் பாராட்டும் வாய்ப்பு கிடைப்பதே அரிதுதான். பௌலர்களில் ஷமி, ஜடேஜா மிகுந்த நம்பிக்கை அளித்தார்கள். அப்படியும் போதவில்லை. முக்கியமான கட்டங்களைக் கோட்டை விட்டுவிட்டார்கள். முதல் டெஸ்டின் முதல்நாளில் தென் ஆப்பிரிக்க அணியினர் சரியாக பௌலிங் போடவில்லை. உடனே அடுத்தநாள் அந்தத் தவறைத் திருத்திக் கொண்டார்கள். முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கும் சரியில்லை. ஆனால், கடைசியாக பிரமாதமாக ஆடி அணியைப் பெரிய சரிவிலிருந்து மீட்டார்கள். இதுபோல, முதலில் தவறுகள் செய்தாலும் அதிலிருந்து தென் ஆப்பிரிக்க அணியால் உடனே எழ முடிந்தது. இந்திய அணி அப்படியே தலைகீழ்! இரண்டு டெஸ்டுகளிலும் வலுவான நிலையிலிருந்து கீழிறங்கி தொடரில் தோற்றிருக்கிறது. ‘எங்களுக்கும் ஒரு காலிஸ் இருந்திருந்தால் 2 ஸ்பின்னர்களுடன் டர்பனில் ஆடியிருப்போம்’ என்கிறார் தோனி. ஆல்ரவுண்டர் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் அஸ்வின். அவரைப் பயன்படுத்தியிருக்கலாமே! ஸ்பின் பிட்சில் இரண்டு ஸ்பின்னர்களுடன் களமிறங்காமல் எப்படி ஜெயிக்கமுடியும்? அதுவும் இந்திய அணியில் ஸ்டீயின், பிளாண்டர் போன்ற உலகத்தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாத நிலையில்! (இந்த வருடம் வெளிநாடுகளில் நடக்கவிருக்கும் 11 டெஸ்ட் மேட்சுகளிலும் ஜடேஜாவுக்குத்தான் முன்னுரிமை என்றால் அஸ்வினின் கதி என்ன? ஜடேஜா வழிவிடுவாரா?)  

இந்திய பேட்டிங்கில் பெரிய கவலைகள் இல்லை. அதிலும் பேட்ஸ்மேனாக தோனிதான் பெரிய சுமையாக இருக்கிறார். வெளிநாடுகளில் தோனியின் பங்களிப்புக் குறைவாகவே இருக்கிறது. உண்மையில், இந்திய அணி 20 விக்கெட்டுகளை எடுக்கத் திணறுகிறது. ஜாகீர்கான், இஷாந்த் சர்மா வால் இந்திய அணியின் வெற்றிக்கு உதவ முடியாது என்பது 9 டெஸ்ட் தோல்விகளிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. 2013 முழுக்க புவனேஷ்வர் குமாரை ஒருநாள் ஆட்டங்கள் மற்றும் இந்தியாவில் நடந்த டெஸ்ட் மேட்சுகளில் பயன்படுத்திவிட்டு தென் ஆப்பிரிக்கா சென்றதும் கழற்றி விட்டது எந்த விதத்தில் நியாயம் தோனி? 

இந்த ஒரு வருடம் முழுக்க இந்திய அணிக்கு வெளிநாட்டில் தான் ஜாகை. மீண்டும் இதே தோனி, இதே தோல்விகளா? என்ன செய்யப் போகிறது இந்தியத் தேர்வுக்குழு?

No comments:

Post a Comment