Search This Blog

Sunday, February 17, 2013

பட்ஜெட் எதிர்பார்ப்பு ! - எந்தத் துறைக்கு என்ன தேவை..?

ஐந்து ஆண்டுகள் கடந்த பின்னும் 2008-ல் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை இன்னும் சீரானபாடில்லை..! அதிக பணவீக்க விகிதம், அதிக வட்டி விகிதத்தால் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) சுமார் 5.5% அளவுக்குதான் இருக்கும் என பலரும் ஆரூடம் சொல்லத் தொடங்க, எதிர்வரும் பட்ஜெட்டில் தொழில் துறைக்கு பல்வேறு சலுகை களை அளித்தால்தான் நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சி ஏற்படும். எந்தெந்தத் துறைக்கு என்ன வேண்டும் என்று பல்வேறு துறை நிபுணர்களின் கருத்துகள் இனி;
 உள்கட்டமைப்பு !

 ''இன்றைக்கு இந்தியா முழுக்க மிக முக்கிய பிரச்னையாக இருப்பது மின்சார பற்றாக்குறை. இதற்கு காரணம், நிலக்கரி பற்றாக்குறைதான். மேலும், அரசிடமிருந்து நிலக்கரியை வாங்கி மின் உற்பத்தி செய்யும் பல தனியார் நிறுவனங்கள், அவற்றின் மொத்த உற்பத்தியையும் பிற தனியார் நிறுவனங்களுக்கு நல்ல விலைக்கு விற்று வருகின்றன. இதற்குபதில் குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை மாநில மின் வாரியத்துக்கு சலுகை விலையில் தரவேண்டும் என மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவிக்கவேண்டும்.


நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நிலக்கரி வெட்டி எடுக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் 15 முதல் 20 நிறுவனங்கள் தான் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. மீதி நிறுவனங்கள் நிதிப் பற்றாக்குறை, நிலத்தைக் கையகப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னையில் சிக்கி இருக்கின்றன. இதனால், நிலக்கரியை இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். 2012-ல்

1 டன் நிலக்கரி 40 டாலருக்கு விற்றது. அது இப்போது 80 டாலராக அதிகரித்துள்ளது. மின்சாரம் இல்லை என்றால் ஜி.டி.பி. வளர்ச்சி இல்லை. எனவே, மத்திய அரசு, மின் உற்பத்தித் துறை சந்தித்துவரும் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண பட்ஜெட்டில் நடவடிக்கை எடுக்கவேண்டும்'.

ஸ்டீல் மற்றும் சிமென்ட் !

ஸ்டீல் துறை, மூலப்பொருள் கிடைப்பதில் சிக்கலைச் சந்தித்து வருகிறது. இதற்கு காரணம், பல இடங்களில் கச்சா இரும்பு போதிய அளவுக்குக் கிடைக்கவில்லை. மேலும், அதனை வெட்டி எடுக்க காலதாமதமாகிறது. வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை விரைந்து அனுமதி தரும்பட்சத்தில் இந்தக் காலதாமதம் தவிர்க்கப்படும். இதற்கான திட்டங்களை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும். 

சிமென்ட் துறை தற்போது குறைவான டிமாண்டில் இருக்கிறது; செலவும் அதிகரித் துள்ளது. அந்த வகையில் சிமென்ட் மீதான கலால் வரியை அதிகரிக்கக் கூடாது என்பது இத்துறையினரின் முக்கிய கோரிக்கை.

விருந்தோம்பல் துறை !

ஓட்டல் துறைக்கு இன்ஃப்ரா அந்தஸ்து தரப்பட்டால் அதிக முதலீடு வரும். அந்த வகையில் பட்ஜெட்டில் இந்த அறிவிப்பை வெளியிடவேண்டும் என இத்துறை யினர் எதிர்பார்க்கிறார்கள். ஓட்டல் கட்டடங்களுக்கான தேய்மானத்தை தற்போதுள்ள 10 சதவிகிதத்திலிருந்து 20 சத விகிதமாக உயர்த்தவேண்டும். மேலும், ஓட்டல்களில் தற்போது 25,000 ரூபாய்க்கு மேல் செலுத்தும் போது பான் எண்ணை குறிப்பிட வேண்டும் என்பதை ரூ.1 லட்சம் ரூபாயாக அதிகரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

பெட்ரோலியத் துறை..!

பெட்ரோலியப் பொருட்களின் விலை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. பெட்ரோலியப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படும் நாப்தா ரிஃபார்மேட் உள்ளிட்டவை மீதான இறக்குமதி வரியை முற்றிலும் நீக்கவேண்டும் என பெட்ரோலியப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மத்திய அரசை கேட்டிருக்கின்றன.

கேப்பிட்டல் மற்றும் இன்ஜினீயரிங் கூட்ஸ் !

பொருளாதார மந்தநிலை மற்றும் புதிய முதலீடு குறைந்துபோனதால் கேப்பிட்டல் மற்றும் இன்ஜினீயரிங் கூட்ஸ் துறை மிகவும் பாதிக்கப்பட்டி ருக்கிறது. குறிப்பாக, தேவையும் உற்பத்தியும் குறைந்துள்ளதால் சென்வாட் வரியைக் குறைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது. கூடவே, மூலப்பொருட்கள் இறக்குமதிக்கான வரியையும் குறைக்க கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. 

தகவல் தொழில்நுட்பத் துறை.. !

ஐ.டி. சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் இயங்கும் (எஸ்.இ.இசட்.) ஐ.டி. மற்றும் அது சார்ந்த சேவை நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் குறைந்தபட்ச மாற்று வரியை (மேட்) பட்ஜெட்டில் நீக்கவேண்டும் என சாஃப்ட்வேர் நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் மத்திய அரசை கேட்டிருக்கிறது. 2011-12-ல் மேட் (MAT - Minimum Alternative Tax) வரி 18.5 சதவிகிதமாக  அதிகரிக்கப்பட்ட பிறகு எஸ்.இ.இசட். திட்டங்களில் செய்யப் பட்ட முதலீடு குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைந்துள்ளது. 

ஜவுளி !

பாலியஸ்டர் ஃபைபர் மீதான கலால் வரியைக் குறைக்கவேண்டும். அப்போதுதான் கையால் நெய்யப்படும் நூலிழை ஏற்றுமதிக்கு ஊக்கம் கிடைக்கும் என ஜவுளித் துறையிடமிருந்து கோரிக்கை சென்றிருக்கிறது.

ரியல் எஸ்டேட் !

''ரியல் எஸ்டேட் கட்டுமானங்களுக்கு அரசுத் துறைகளின் அனுமதி வாங்க எப்படியும் சில ஆண்டுகள் ஆகிவிடுகிறது. இந்தக் காலதாமதத்தைத் தவிர்க்க சிங்கிள் விண்டோ சிஸ்டம் கொண்டுவர வேண்டும். இதற்கான அறிவிப்பு மத்திய பட்ஜெட்டில் வரவேண்டும்'.


சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு விதிக்கப்பட்ட மேட் என்கிற குறைந்தபட்ச மாற்று வரி கடந்த பட்ஜெட்டில் நீடிக்கப்பட்டது, அதை இந்த பட்ஜெட்டில் நீக்கவேண்டும் என கோரிக்கை எழுந்திருக்கிறது. 

கடனுக்கான வட்டி விகித குறைப்பு மற்றும் வெளிநாடுகளில் நிதி திரட்டுவதற்கான நடைமுறைகளை எளிதாக்குதல், ரியல் எஸ்டேட்டை இன்ஃப்ரா துறையின் கீழ் கொண்டு வருவது உள்ளிட்டவைகளையும் ரியல் எஸ்டேட் துறை பட்ஜெட்டில் எதிர்பார்க்கிறது. 

மத்திய வீட்டு வசதித் துறை அமைச்சர் அஜய் மகேன், அபோர்டபிள் ஹவுஸிங்-க்கு இன்ஃப்ராஸ்ட்ரக்சர் அந்தஸ்து கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். அதை ஒட்டுமொத்த ரியல் எஸ்டேட் துறைக்கும் கொண்டுவர நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்திருக்கிறது.

பொருளாதாரத்தைச் சீராக்க நிதி அமைச்சர் இக்கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போமே!

ஜி.எஸ்.டி: இந்த பட்ஜெட்டில் வரலாம்...!
  ''இந்த பட்ஜெட்டில் ஜி.எஸ்.டி. பற்றிய அறிவிப்பு வர அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால், இதை 2014-ல்தான்  அமல்படுத்த முடியும். காரணம், ஜி.எஸ்.டி. மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, வாக்கெடுப்பில் நான்கில், மூன்று பங்கு ஆதரவு கிடைத்தால் மட்டும்தான் அமலுக்கு வரும். மேலும், இந்தியாவிலுள்ள 50 சதவிகித மாநிலங்களாவது இந்த முறையை ஏற்றால்தான் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும்.

ஜி.எஸ்.டி., மாநிலங்களின் வரி வசூலிக்கும் அதிகாரத்தை முற்றிலுமாக மாற்றி அமைக்கும். சேவை வரியை மாநில அரசு வசூலித்துக்கொள்ளும் அதிகாரம் கிடைக்கும். ஆனால், அதில் பிரச்னை வருவதற்கான வாய்ப்புகளும் நிறையவே உள்ளன. ஒரு மாநிலத்திலிருந்து வேறு மாநிலங்களுக்குச் சென்று வேலை பார்ப்பவர்களுக்கு எந்த மாநிலம் சேவை வரி விதிக்கவேண்டும் என்பதில் குழப்பம் வரும்.

தங்களின் வரி வருமானம் குறையும் என மாநில அரசுகள் இதைக்கொண்டுவர எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வருமானம் குறைந்தால் மத்திய அரசு உதவி செய்யும் என சொல்லி இருக்கும் மத்திய அரசு, அதற்கென 12,000 கோடி ரூபாயை ஒதுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மாநிலங்களின் வருமான இழப்பு 32,000 கோடியாக உள்ளது.

ஜி.எஸ்.டி. வந்தால் சில பொருட்களுக்கு வரி மேலும் கூடும். சிலவற்றுக்கு வரி குறையும். இதனால் குறிப்பிட்ட பொருட்களின் விலை உயரும். அதிகம்பேர் வரிச் செலுத்தும் வளையத்திற்குள் வருவார்கள் என்பதால் அரசின் வரி வருமானம் கணிசமாக உயரும். 

ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் கிரெடிட் சிஸ்டம் வந்தால்தான் பயனுள்ளதாக இருக்கும். கிரெடிட் சிஸ்டம் என்பது ஒரு பொருளை வாங்கும்போது வரிச் செலுத்தி இருப்பீர்கள். அதை மீண்டும் விற்கும்போது அல்லது அதை மதிப்புக்கூட்டு பொருளாக மாற்றி விற்கும்போது வசூலிக்கும் வரியில் ஏற்கெனவே கட்டிய வரியைக் கழித்துவிட்டு மீதமுள்ள வரியை மட்டும் அரசுக்குக் கட்டினால் போதும்.''

No comments:

Post a Comment