Search This Blog

Wednesday, February 20, 2013

எனது இந்தியா (ஒதுக்கி வைக்கப்பட்ட டாட்டா! ) - எஸ். ராமகிருஷ்ணன.....

சீனாவில் இருந்து தேயிலை, மருந்துப் பொருட்கள் மற்றும் பீங்கான் சாமான்களை வாங்கிவந்து பம்பாயில் விற்று மிகப்பெரிய வணிகராக உயர்ந்தார் ஜீஜீபாய். சீனாவுக்கும் பம்பாய்க்கும் இடையில் அவரது வணிகக் கப்பல்கள் தன்னாட்சி செலுத்தத் தொடங்கின. அவரைப் பயன்படுத்திக்கொண்ட பிரிட்டிஷ், சீனாவுக்கு ஓபியம் கடத்தியது என்றும் கூறப்படுகிறது. ஜீஜீபாயின் வளர்ச்​சியால் பார்ஸிகள் கடல் கடந்து சீனாவுக்குச் சென்று வியாபாரம் செய்யத் தொடங்கினர். ஜீஜீபாய் தான் சம்பாதித்த பணத்தை, தான, தர்மக் காரியங்களில் செலவிடத் தொடங்கினார். கல்வி, மருத்துவம், காப்பகம் என்று தாராளமாக பணத்தைச் செலவு செய்தார். இன்றும் அவரது பெயரில் சேவை நிறுவனங்கள் செயல்படுகின்றன. அரசியலிலும் பார்ஸிகள் இந்திய விடுதலைக்கு உதவிசெய்தவர்கள். குறிப்பாக,  தாதாபாய் நௌரோஜியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

மூன்று முறை இந்திய தேசியக் காங்கிரஸின் தலைவராக இருந்த தாதாபாய் நவ்ரோஜி எழுதிய, 'இந்தியாவின் வறுமையும் பிரிட்டிஷ் கொடுங்கோல் ஆட்சியும்’  என்ற புத்தகம், பிரிட்டிஷ் அரசு இந்தியர்களை எப்படிச் சுரண்டி வாழ்கிறது என்ற உண்மையை உலகுக்கு எடுத்துக்காட்டியது. 1825-ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி, மும்பையில் உள்ள ஒரு பார்ஸி குடும்பத்தில் நவ்ரோஜி பிறந்தார். அவருக்கு நான்கு வயதானபோது, தந்தை பலன்ஜி தோர்டி இறந்துவிட்டார். அவரது அன்னை மானெக்பாய், நவ்ரோஜியைக் கஷ்டப்பட்டுப் படிக்கவைத்தார். எல்ஃபின்ஸ்டோன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த நவ்ரோஜி, அதே கல்லூரியில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1852-ம் ஆண்டு தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய நவ்ரோஜி, ஆங்கிலேயரின் ஆட்சிமுறையை தீவிரமாக எதிர்த்து செயல்படத் தொடங்கினார். இந்திய மக்கள் கல்வியறிவு பெற வேண்டும் என்பதே சுதந்திரச் செயல்பாட்டின் முதல் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று நவ்ரோஜி கருதினார். அதற்காக, அடித்தட்டு மக்களுக்குக் கல்வியறிவு வழங்கவும், விடுதலை வேட்கையை எழுப்பவும் 'கியான் பிரசார் மண்டல்’ என்ற அமைப்பை உருவாக்கினார். 1855-ல் இங்கிலாந்துக்குச் சென்ற தாதாபாய், இந்திய வர்த்தக அமைப்பை 1859-ல் அங்கு தொடங்கினார்.


பிரிட்டிஷ் இந்தியாவுக்குள் இருவிதமான பொருளாதார அமைப்புகள் இயங்கிவருவதாக நவ்ரோஜி குறிப்பிட்டார். பிரிட்டிஷ் ஆட்சி​யாளர்கள், ராணுவத்தினர், முதலாளிகள், வணி​கர்கள் ஆகியோர் தங்களுடைய மூலதனம், ஊதிய வருமானம், வரி வருவாய், லாபம், வட்டி, ஓய்வூதியத் தொகை ஆகியவற்றை இங்கிலாந்துக்கு எடுத்துச் சென்று செல்வத்தைக் குவிக்கின்றனர் என்றும் கூறினார். இந்தியாவின் பொருளாதார வள ஆதாரங்கள் சுரண்டப்படுகின்றன என்பதை நவ்ரோஜியே முதன்முதலில் பட்டியலிட்டார் என்கிறார். பம்பாயில் கல்விச் சாலைகள் உருவாக்கப்​பட்டவுடன் பார்ஸி இனப் பெண்கள் அதிக அளவில் கல்வி கற்றுக்கொள்ளத் தொடங்கினர். அதில் முக்கியமானவர் மேடம் காமா. 1896-ம் ஆண்டு பம்பாய் நகரம் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டபோது, மேடம் காமா தன்னார்வக் குழு ஒன்றில் இணைந்து தீவிரமாகத் தொண்டு செய்தார். இதனால், பிளேக் நோய் அவருக்கும் தொற்றியது. பிறகு, இங்கிலாந்து மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று, நோயிலிருந்து மீண்டு வந்தார். லண்டனில் இருந்த காலத்தில் தாதாபாய் நவ்ரோஜியின் உதவியாளராகப் பணிபுரிந்தவர் மேடம் காமா. எவருக்கும் அஞ்சாத வீராங்கனையாக சுதந்திரப் போராட்டக் களத்தில் செயல்பட்டவர். இவர் அனுப்பிய துப்பாக்கியைக்கொண்டுதான் வாஞ்சிநாதன், ஆஷ் துரையை சுட்டுக் கொன்றார். இப்படி, பார்ஸிகள் இந்திய சுதந்திரப் போரில் தனித்துவமான பங்களிப்பு செய்தனர்.

பார்ஸிகள் தங்கள் இனத்துக்குள்ளாகவே மணஉறவு கொள்ளக்கூடியவர்கள். பார்ஸி இனப் பெண்ணை வேறு சமயத்தைச் சேர்ந்தவர் திருமணம் செய்வதை அவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்வது இல்லை. ஒருவேளை, பார்ஸி இன ஆண், இன்னொரு சமயப் பெண்ணை மணந்துகொண்டாலும் அந்தப் பெண்ணை பார்ஸி சடங்குகள் மற்றும் வழிபாடுகளில் ஏற்றுக்கொள்வதும் இல்லை. உறவுகளுக்குள் தலைமுறை தலைமுறையாக திருமணம் நடைபெற்று வருவதால், பார்ஸிகளுக்கு மரபணுக் கோளாறுகள் அதிகம் ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

பார்ஸி அல்லாத பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு அவளை பார்ஸி மதத்துக்கு மதமாற்றம் செய்தாலும் அவளுக்கு மத உரிமைகள் வழங்கப்பட முடியாது என்று இருக்கும் கெடுபிடியை எதிர்த்து ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நடந்தது. அந்த வழக்கைத் தொடுத்தவர் பிரபல தொழில் அதிபர் ஆர்.டி.டாட்டா. இவர், ஒரு பிரெஞ்சுப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அந்தப் பெண் கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்தவர். திருமணத்துக்குப் பிறகு, அந்தப் பெண்ணை பம்பாய்க்கு அழைத்து வந்து தனது சமயத்துக்கு மதம் மாற்றினார் டாட்டா. ஆனாலும், அவளுக்கு மதச் சடங்குகளில் கலந்துகொள்ள அனுமதி தர முடியாது என்று பார்ஸி மத அமைப்பு தடை விதித்தது. இதை எதிர்த்து, நீதிமன்றத்தில் முறையிட்டார் டாட்டா. பார்ஸிகளின் சார்பாக பார்ஸி பஞ்சாயத்து என்ற அமைப்பு வாதிட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மதமாற்றத்தில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து மதம் மாறிய ஒருவர் மட்டுமே வழக்கு தொடுக்க முடியும். இந்த வழக்கில் டாட்டாவின் மனைவி சேர்க்கப்படவில்லை. ஆகவே, இந்த வழக்கை ஏற்க முடியாது என்று தள்ளுபடி செய்தனர். ஆனால், பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து மதமாற்றத்தில் உரிமைகள் பறிக்கப்பட்டால், அதை நீதிமன்றம் தலையிட்டு வழிகாட்ட முடியாது. மத அமைப்புகளே அதைப் புரிந்துகொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறியது. இந்த வழக்கு காரணமாக, பார்ஸிகள் டாட்டாவின் குடும்பத்தை ஒதுக்கி வைத்தது அவர்களின் பிடிவாதமான சமயப்பற்றுக்கு ஒரு சாட்சி. இதை பார்ஸிகளின் பலவீனம் என்கிறார் நுரோஜி என்ற பத்திரிகையாளர். 

பார்ஸிகள், இறந்த உடலை அடக்கம் செய்யும் முறை மிக விசித்திரமானது. இறந்தவரின் உடலை எரிக்கவோ புதைக்கவோ கூடாது என்பது அவர்களின் நம்பிக்கை. ஆகவே, கழுகுக்கு இரையாக வைத்துவிடுவார்கள்.

அப்படி, இறந்த உடலைக் கொண்டுபோய் வைக்கும் கட்டடத்துக்கு, 'டாக்மா’ அல்லது 'டவர் ஆஃப் சைலன்ஸ்’  என்பது பெயர்.

இதற்கு, பார்ஸிகள் சொல்லும் விளக்கம் என்னவென்றால், இறந்த உடலைப் புதைப்பதால் மண் மாசுபடுகிறது. எரிப்பதால் காற்று மாசுபடுகிறது. நதிகளில் உடலைவிடுவதால் நீர் மாசுபடுகிறது. இறந்த பிறகு, இந்த பூமியை மாசுபடுத்தக் கூடாது என்ற காரணத்தால் அவற்றை கழுகுக்கு உணவாகத் தந்துவிடுகிறோம் என்கின்றனர்.

ஆனால், இது ஒரு பழைமையான பாலைவனச் சடங்கு. அங்கே, இறந்த உடல்களை இப்படி கழுகுகளுக்கு உணவாக அளிக்கும் முறை இன்றும் இருக்கிறது. அதையே பார்ஸிகளும் பின்பற்றுகின்றனர் என்கிறார்கள் மானுடவியலாளர்கள்.

பம்பாயில் இதுபோன்ற 'டவர் ஆஃப் சைலன்ஸ்’ ஒன்று மலபார் பகுதியில் காணப்படுகிறது. அது, இரண்டு அடுக்குக் கட்டடம் இரண்டாம் கட்டடத்தில் உள்ள படிகளில் ஏறி 50 மீட்டர் உயரமுள்ள ஒரு பெரிய கோபுரத்தின் உச்சியில் இறந்தவரின் உடல் வைக்கப்படுகிறது. இந்தக் கோபுர உச்சிக்கும், கட்ட​டத்துக்கு உள்ளும் வெளியாட்கள் செல்ல அனு​மதி கிடையாது.

சவச்சடங்கு செய்பவர்கள் என்று தனித்து அடையாளம்கொண்ட சிலரே இறந்த உடலைக் கொண்டுசெல்லும் பணியைத் தொடர்ந்து செய்கின்றனர். அவர்கள் வெளியுலகுக்கு வராமல் சமுதாயத்தில் இருந்து விலகி வாழ்கின்றனர். அவர்கள் மட்டுமே இறந்த உடலை கோபுரத்துக்கு எடுத்துச் செல்வார்கள். பார்ஸிகளின் இறுதிச் சடங்கில் முக்கியமானது மரணத் தறுவாயில் உள்ளவரின் முன் அமர்ந்து அவருக்குப் புனித நூலின் பகுதியை வாசித்துக் காட்டுவது. அதுபோலவே, மாதுளைச் சாறு ஒரு மிடறு குடிக்கவைப்பதும் சடங்காக நடத்தப்படுகிறது. இறந்த உடலைக் குளிக்கவைத்து சலவை செய்த வெள்ளைத் துணியைச் சுற்றி வைத்துவிடுவார்கள். அதைப் பிறர் தொடுவது தீட்டாகக் கருதப்​படுகிறது.

இறந்த உடலை வீட்டில் இருந்து வெளியே கொண்டு​வரும்போது அதை ஒரு நாய் பார்க்க வேண்டும் என்ற சடங்கும் இருக்கிறது. காரணம், 'நான்கு முகமுள்ள நாய் ஒன்று மரணத்தின் தூதுவனாக இருப்பதாக’, அவர்கள் நம்புகின்றனர். அதன் பிறகு, 'டவர் ஆஃப் சைலன்ஸ்’ கட்டடத்துக்கு உடல் கொண்டுசெல்லப்படுகிறது. அங்கே, உடல் கழுகுகளுக்கு இரையாக வைக்கப்படுகிறது. கழுகுகள் தின்றதுபோக மீதமுள்ளவற்றைச் சேகரித்து அப்புறப்படுத்திவிடுகின்றனர். ஓர் உடல் ஓர் ஆண்டு வரை அங்கே கிடக்க அனுமதிக்கப்​படுகிறது.

உடலை அழிக்கவல்ல கழுகு இனத்தின் வீழ்ச்சி காரணமாக, இன்று டவரில் வைக்கப்படும் உடல்கள் அழிவதற்கு பல காலம் ஆகிறது. இந்தக் குறையை நீக்க, நவீன அறிவியல் முறைப்படி மிகப் பெரிய சூரியக் கண்ணாடிகளை வைத்து உடலை அழிக்க முயற்சிகள் நடக்கின்றன. இப்போது, சோலார் முறைப்படி உடலை அழிப்பதற்கான வசதிகளை பார்ஸிகள் ஏற்படுத்தி இருக்கின்றனர்.

இன்று, இந்தியாவில் ஒன்றரை லட்சம் பார்ஸிகள்தான் இருக்கின்றனர். இது, மிகச் சிறிய எண்ணிக்கை என்றாலும், இவர்கள் இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சியில் அளிக்கும் பங்களிப்பு மிக முக்கியமானது. இந்தியாவில் மாதம் ஒன்றுக்கு 90,000 ரூபாய்க்கும் குறைவாக சம்பாதிக்கும் பார்ஸி இன மக்களை 'ஏழை பார்ஸிகள்’ என அறிவிக்க வேண்டும் என, பார்ஸிகள் சமயச் சங்கத்தினர் சமீபத்தில் ஒரு கோரிக்கை வைத்துள்ளனர் என்றால், பொருளாதார ரீதியில் அவர்கள் எவ்வளவு உயர்ந்து இருக்கிறார்கள் என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

No comments:

Post a Comment