Search This Blog

Saturday, July 28, 2012

ஈ....

ஈக்கள் எப்படி நோயைப் பரப்புகிறது :

 
பார்க்க அப்பாவியாகத் தெரியும் இந்த ஈக்கள் செய்யும் வேலை மிகவும் அபாயகரமானது. குப்​பைகள், கழிவு நீர், மலம் போன்ற ஏராளமான கிருமிகள் குடியிருக்கும் இடம்தான் இவற்றின் வாழ்விடம். நூறுக்கும் மேற்பட்ட நுண்ணுயிரிகளை சுமந்து திரியும் ஈயின்  ஆயுட்காலம் ஒரு வாரம்தான். ஆனால், அதற்குள் இது எத்தனையோ ஆபத்துகளை உருவாக்கி விடுகிறது. ஒவ்வொரு முறையும் சுமார் 500 முட்டைகள் வரை இடும் ஈயானது, தன்னுடைய வாழ்நாளில் 75 முதல் 150 முறை முட்டையிடும். அப்படி என்றால் ஒரு ஈ, தனது வாழ்நாளில் எத்தனை ஈக்களை உற்பத்தி செய்கிறது என்று கணக்கிட்டுக்​கொள்​ளுங்கள்.கழிவுகளில் குடியிருக்கும் ஈ, உணவாக உட்கொள்​வதும் அந்தக் கழிவுகளைத்​தான். ஈக்களின் கால்களில் பிசின் போன்ற வட்டமான ஒரு உறுப்பு உள்ளது. கழிவுகளின் மீது உட்காரும்​போது இந்தப் பிசின் போன்ற பகுதியில் கிருமிகள் ஒட்டிக்கொள்கின்றன. பிறகு அந்த ஈக்கள் உணவுப் பொருட்களின் மீதோ அல்லது நம் உடலின் மீதோ உட்காரும்போது, கிருமிகள் எளிதாக நம் உடலுக்குள் சென்றுவிடுகின்றன.
 
டைஃபாய்டு, காலரா, வயிற்றுப்போக்கு, வாந்தி, போலியோ, மஞ்சள் காமாலை, காச நோய், ஆந்த்ராக்ஸ், கண் அழற்சி, வயிற்றுப் புழுக்கள் போன்ற பல்வேறு நோய்களைத் தோற்றுவிக்கும் காரணியாக விளங்குகின்றன ஈக்கள். இந்த ஈக்களால் ஆண்டு தோறும் பல லட்சம் பேர் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகின்றனர். இவை எல்லாம்  ஆரம்பத்தில் சாதாரண வியாதிகளாகத்தான் தோன்றும். ஆனால், கண்டு​கொள்ளவில்லை என்றால் பெரிய ஆபத்தாகி விடும். உதாரணமாக வயிற்றுப்போக்கு தொடர்ச்​சியாக இருக்கும்போது, உடலில் நீர்ச்சத்து குறைந்து மரணம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. மஞ்சள் காமாலை, ஆந்த்​ராக்ஸ் போன்றவையும் உயிருக்கு உலை வைக்கக்கூடியவை.அதனால் குப்பைகளைத் தேங்க விடாமல் உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். வீட்டுக்கு அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வதன் மூலம் ஈக்களின் எண்ணிக்கை பெருகாமல் தடுக்க முடியும். உணவுப் பொருட்களை மூடி வைத்தே பயன்படுத்த வேண்டும். மொத்தத்தில் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொண்டால் ஈக்களால் பிரச்னை இல்லை. சுற்றுப்புறம் என்பது நம் வீடு மட்டும் அல்ல; பொது இடங்களையும் சேர்த்துத்தான். பக்கத்துத் தெருவில் தேங்கி இருக்கும் மழைநீரில் உள்ள ஈ, உங்கள் வீட்டுக்குப் பறந்துவர ஒரு நிமிடம்கூட ஆகாது. ஆகவே கவனம் தேவை!
 
 
மருத்துவர் கருணாநிதி. 
 

No comments:

Post a Comment