Search This Blog

Friday, July 06, 2012

விரல் துண்டானால் என்ன செய்வது? - முதலுதவி


சாலை விபத்துகள், தொழிற்சாலை விபத்துகள், கூரிய ஆயுதங்களால் தாக்குதல் ஆகியவற்றின்போது உடல் உறுப்புகள் நசுங்கிவிடலாம் அல்லது துண்டிக்கப்படலாம். இவ்வாறு பாதிக்கப்பட்ட உறுப்புகள் முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ துண்டிக்கப்படுவதுண்டு.
இப்போதுள்ள நவீன மருத்துவ முறைகளில், துண்டிக்கப்பட்ட உடல் உறுப்புகளைத் திறம்பட மீண்டும் அதே இடத்தில் பொருத்த முடியும்.
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
பொதுவாக, விரல், கை, கால் போன்றவைதான் இது மாதிரியான விபத்துகளில் பாதிப்புக்குள்ளாகும். அப்போது, பாதிக்கப்பட்டுள்ள நபருக்கு ரத்தமிழப்பு அதிகமாக இருக்கும். ஆகவே, ரத்த மிழப்பை நிறுத்துவதுதான் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.
என்ன செயலாம்?
சுத்தமான துணியால் அல்லது பஞ்சு கொண்டு அடிபட்ட பகுதியை அழுத்திப் பிடிக்கவேண்டும். இதன் மூலம் ரத்தம் நிற்கவில்லை என்றால், அந்தப் பகுதியின்மீது அழுத்தமாகத் துணிக்கட்டுப் போட வேண்டும்.
கட்டுப்போட பாண்டேஜ் கிடைத்தால் இன்னும் நல்லது. பாண்டேஜ் கட்டு அதிக அழுத்தம் தரும் என்பதால், ரத்தம் வெளியேறுவது உடனடியாக நிற்கும்.
இந்த நேரடி அழுத்தத்தில் ரத்தம் வெளியேறுவது நிற்கவில்லை என்றால், மறைமுக அழுத்தம் தர வேண்டும். அதாவது, பாதிப்படைந்துள்ள பகுதிக்கு எந்த ரத்தக்குழாயிலிருந்து ரத்தம் வருகிறதோ, அதை அழுத்திப் பிடிக்கவேண்டும்.
எடுத்துக்காட்டாக, கை அல்லது விரல் வெட்டுப்பட்டிருந்தால், அக்குளுக்கு அடுத்த மேற்கையில் ஒரு துண்டு கொண்டு அழுத்தமாகக் கட்டுப்போட வேண்டும். கால் அல்லது பாதங்கள் வெட்டுப்பட்டிருந்தால், தொடையில் கட்டுப்போட வேண்டும்.
காயத்தில் கல், மண், கண்ணாடி என்று ஏதேனும் அந்நியப் பொருள்கள் இருந்தால், அகற்றிவிட வேண்டும்.
பாதிக்கப்பட்டுள்ள நபரைப் படுக்க வைத்து முதலுதவிகள் செய்ய வேண்டும். இல்லையென்றால், மயக்கம் வந்துவிடும்.
பாதிக்கப்பட்டுள்ள நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு 108 ஆம்புலன்ஸ் உதவும்.
துண்டிக்கப்பட்ட உடல் பகுதியைத் தேடிக் கண்டுபிடிக்க முடிந்தால், அதைக் காயமுற்ற நபருடன் அனுப்பி வையுங்கள்.
அதைத் தேடிக் கண்டுபிடிக்கத் தாமதம் ஆகுமென்றால், நேரத்தை வீணாக்காமல், காயமுற்ற நபரை மட்டும் உடனே மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு, துண்டிக்கப்பட்ட பகுதி கிடைத்ததும், அதைத் தனியாகக் கொண்டு செல்லலாம்.
இதுதான் மிகவும் முக்கியம்!
முறையாகப் பாதுகாக்கப்பட்ட தசையில்லாத விரல் போன்ற உறுப்புகளை விபத்துக்குள்ளான 6 மணி நேரத்துக்குள்ளும், தசையுடன் கூடிய முன்னங்கை போன்ற உறுப்புகளை 2 மணி நேரத்துக்குள்ளும் உடலில் இணைக்கப்பட வேண்டும். அதற்கு ஏற்றாற்போல், துண்டிக்கப்பட்ட பகுதிகளை மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
துண்டிக்கப்பட்ட பகுதியை எப்படிப் பாதுகாப்பாகக் கொண்டு செல்வது?
துண்டிக்கப்பட்ட உறுப்பில் தூசு, மண், கல் போன்றவை இருந்தால், சுத்தமான தண்ணீரில் மென்மையாகக் கழுவுங்கள்.
பின்பு, நன்கு உலர்ந்த பஞ்சு அல்லது சுத்தமான துணி கொண்டு அதை மூடுங்கள்.
இதை ஒரு சுத்தமான பாலித்தீன் பையில் வையுங்கள்.
மூடி உள்ள ஒரு பாத்திரத்தில் சில ஐஸ் கட்டிகள் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் இந்த பாலித்தீன் பையை வையுங்கள்.
இப்போது அந்தப் பாத்திரத்தை மூடி, உடனடியாக மருத்துவனைக்கு எடுத்துச் செல்லுங்கள்.
இந்த முதலுதவியின் நோக்கம் என்னவென்றால், துண்டிக்கப்பட்ட பகுதி குளிர்ச்சியாக இருக்க வேண்டும்; ரத்தம் ஓட்டம் தடையில்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான்.
என்ன செய்யக்கூடாது?
துண்டிக்கப்பட்ட பகுதியைச் சுத்தம் செய்யும்போது அழுக்கை எடுப்பதற்காக அழுத்தமாகத் தேய்க்கக்கூடாது.
துண்டிக்கப்பட்ட உடல்பகுதியை ஐஸ் கட்டிகள் கொண்டு மூடக்கூடாது.
அதுபோல், துண்டிக்கப்பட்ட உடல்பகுதியை ஐஸ் கட்டிகள் மீது நேரடியாகவும் வைக்கக்கூடாது.
அப்படி வைத்தால், ஐஸ் கட்டியின் அதீதக் குளிர்ச்சியால் துண்டிக்கப்பட்ட பகுதி சேதமடைந்துவிடும். பிறகு, அதை உடலில் பொருத்த முடியாது.
துண்டிக்கப்பட்ட பகுதி தொங்கிக்கொண்டிருந்தால் என்ன செய்வது?
தொற்று நீக்கப்பட்ட துணி, சுத்தமான துணி, ஈரமான பஞ்சு, சலைனில் ஊறவைத்த பஞ்சு இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி காயத்தைச் சுத்தப்படுத்துங்கள்.
இப்போது, துண்டாகித் தொங்கும் உடல் பகுதியை அந்த இடத்தில் மீண்டும் எடுத்து வையுங்கள்.
கனமான துணியால் அல்லது பாண்டேஜ் கொண்டு அந்த உடற்பகுதியைச் சுற்றி அழுத்தமாகக் கட்டுங்கள்.
எலும்பு முறிவும் இருக்குமானால், அடிபட்ட பகுதிக்கு மேலும் கீழும் அடிஸ்கேல், சிறிய மரப்பலகை, கனத்த நோட்டு போன்றவற்றால் அணை கொடுத்துக்கட்டி, அந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.
பாதிக்கப்பட்டுள்ள நபருக்கு மயக்கம் வராமலிருக்க தண்ணீர், குளுக்கோஸ், பால், மோர், காபி, தேநீர், டொரினோ, இளநீர் போன்ற திரவ பானங்களில் ஒன்றைத் தர வேண்டியதும் முக்கியம்.
துண்டிக்கப்பட்ட உடல் பகுதியை உடலில் மீண்டும் பொருத்த எல்லா மருத்துவமனைகளிலும் வசதி இருக்காது. ’நுண் நாளம் அறுவை மருத்துவர்’ (Micro Vascular Surgeon) உள்ள மருத்துவமனைகளில் மட்டுமே இது இயலும்.
ஆகவே, உங்கள் ஊரில் இந்த மருத்துவர் எங்கு இருக்கிறார் என்று முதலிலேயே தெரிந்து வைத்துக் கொண்டு, நேரடியாக அங்கு செல்வதே நல்லது. எனென்றால், இந்தச் சிகிச்சையைப் பொறுத்தமட்டில் எவ்வளவு விரைவில் துண்டிக்கப்பட்ட உடல்பகுதி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படுகிறதோ, அந்த அளவுக்கு சிகிச்சை வெற்றி பெறும்.





No comments:

Post a Comment