Search This Blog

Saturday, May 11, 2013

சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) வின் சீக்ரெட்!

 
எல்லா அணிகளும் வாயைப் பிளக்கின்றன. எப்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் மட்டும் வருடாவருடம் ஃப்ளே ஆஃப் (செமி ஃபைனல்) சுற்றுக்குத் தகுதி பெறமுடிகிறது? எப்படி தொடர்ந்து 7 மேட்சுகளில் ஜெயித்து ஐ.பி.எல். சாதனையைச் செய்ய முடிந்தது? எப்படி ஒரே கேப்டன், வைஸ் கேப்டனை வைத்து 6 வருடங்களாக அணியை நிர்வாகம் செய்கிறார்கள்? இந்த அணியில்தான் லோக்கல் வீரர்களும் வெளிநாட்டு வீரர்களும் தொடர்ந்து அணிக்குப் பங்களிக்கிறார்கள். டுப்ளெஸ்ஸி, ஹில்பெனாஸ் போன்ற வீரர்களுக்குக் கூட இடம் கிடைக்காத அளவுக்கு ஒவ்வொரு இடத்துக்கும் கடுமையான போட்டி. இந்த சி.எஸ்.கே. என்னதான் மாயம் செய்கிறது என்று மண்டையை உடைத்துக் கொண்டு யோசிக்கிறார்கள்.
 
டி20 வரலாற்றில் வேறு எந்த அணியும் இவ்வளவு கட்டுக்கோப்பாக இருந்து, இத்தனை வெற்றிகளைப் பெற்றது கிடையாது. சி.எஸ். கே.வின் வெற்றி ரகசியம்தான் என்ன?தோனிதான் காரணம் என்கிறார் கெவின் பீட்டர்சன். ஓரளவு உண்மை. ஆனால், தோனி மட்டும்தானா? இதே தோனியால் சர்வதேச டி20 களத்தில் இந்திய அணிக்குப் பெருமை சேர்க்க முடியவில்லையே? முதல் டி20 உலகக்கோப்பையை வென்றதோடு சரி, பிறகு வந்த எல்லா டி20 உலகக்கோப்பைகளிலும் இந்திய அணி செமத்தியாக அடிவாங்கியதே? அப்போது, எங்கே போனார் இந்த வித்தைக்காரர் தோனி? சி.எஸ்.கே.வின் முதுகெலும்பு, நிச்சயமாக தோனி தான். ஆனால், அணியின் இந்த அசகாய வெற்றிகளுக்குப் பின்புலமாக பல அம்சங்கள் உள்ளன. சி.எஸ்.கே.வை உருவாக்கிய இந்தியா சிமென்ட்ஸின் பங்களிப்பு மிகமுக்கியம் என்கிறார் தோனி. நீங்கள் இந்திய அணியின் கேப்டனாக இருந்தால் உங்களை ஒருவர்கூட கேள்வி கேட்கமுடியாது. கேட்க மாட்டார்கள். ஆனால், ஐ.பி.எல். அணி கேப்டன் என்றால் உங்கள் முதலாளியான ஷாரூக்கானுக்கோ பிரீத்தி ஜிந்தாவுக்கோ பதில் சொல்லியே ஆகவேண்டும். பீல்டிங் பிளேஸ்மெண்ட்களிருந்து எல்லாவற்றையும் அவர்களுக்கு விளக்கியாக வேண்டும். இந்தக் கொடுமைகள் எல்லாம் சி.எஸ்.கே.வில் தோனிக்கு ஏற்படவில்லை. சி.எஸ்.கே. மற்ற அணிகள்போல சினிமா, தொழிலதிபர்களின் பின்னணியில் உருவான அணி அல்ல. இந்தியா சிமென்ட்ஸ், இரண்டாயிரம் கோடி டர்ன் ஓவர் மதிப்புள்ள நிறுவனம் என்றாலும், தமிழ்நாட்டு கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா சிமென்ட்ஸுக்கும் ஓர் இடமுண்டு. தமிழ்நாட்டில், அதுவொரு வலுவான கிரிக்கெட் அணி. கிரிக்கெட் பின்புலம் உள்ள ஒரு நிறுவனம் என்பதால் தோனியின் திட்டங்கள் முழுதாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன. சி.எஸ்.கே.வின் நிர்வாகிகள், அணித்தேர்வில் சாதுரியமாக நடந்து கொண்டு தோனியின் வேலையைச் சுலபமாக்குகிறார்கள். மற்ற அணிகளைப் போல தேவையற்ற வீரர்களுக்கு கோடிகளை வீணடித்து (பாண்டிங், மேக்ஸ்வெல் உதாரணங்கள்) அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதில்லை. 
 
சி.எஸ்.கே. என்பது இந்தியா சிமென்ட்ஸுக்கு இன்னொரு பிராண்ட் மட்டுமல்ல, ஏராளமான வருமானங்களை அள்ளிக் கொடுக்கக்கூடிய வாய்ப்பாகவும் மாறியிருக்கிறது. இந்தியா சிமென்ட்ஸ் சார்பாக குருநாத் மெய்யப்பன் அணியை வழிநடத்துகிறார். இவர் பி.சி.சி.ஐ. தலைவர், இந்தியா சிமென்ட்ஸின் எம்.டியான ஸ்ரீனிவாசனின் மருமகன். சமீபத்தில், இந்தியா சிமென்ட்ஸின் வைஸ் பிரசிடெண்டாக தோனி நியமிக்கப்பட்டார். ‘கிரிக்கெட் காலத்துக்குப் பிறகு கிரிக்கெட் வீரர்களுக்குப் பாதுகாப்பு தேவைப்படுகிறது’ என்றார் ஸ்ரீனிவாசன். இதுபோன்று, வீரர்கள்மீது அக்கறை செலுத்தி அவர்கள் மீது நம்பிக்கை வைப்பதால், அரசு வேலையில் கிடைக்கிற பாதுகாப்பு உணர்வு உண்டாகிறது. இதன் பலன், சி.எஸ்.கே.வின் வெற்றிகளில் தெரிகிறது. ‘குழு மனப்பான்மை உள்ள அணி, சி.எஸ்.கே. எல்லோரும் குடும்பம் போல பழகுவதால் அணிக்காக சிறப்பாக ஆடவேண்டும் என்று வீரர்கள் நினைக்கிறார்கள். கிரிக்கெட் தொடர்புடையவர்களால் உருவான அணி என்பதால் எந்தவொரு சிக்கலும் இல்லை. மேட்சில் தோற்றுப்போனால் யாரையும் நோக்கியும் கை நீட்டுவதில்லை. எப்போதும் தோள் கொடுக்கிறார்கள்’ என்கிறார் தோனி.  2011 ஐ.பி.எல்.லில், மறு ஏலம் நடந்தபோது, தோனி, விஜய், ரைய்னா, ஆல்பி மார்கல் ஆகிய வீரர்களைத் தக்க வைத்துக்கொண்டது சி.எஸ்.கே. ஏலத்தில் பத்ரிநாத், அஸ்வின், பொலிஞ்சர், ஹஸ்ஸி போன்ற (சிஎஸ்கே) வீரர்களை எப்பாடுபட்டாவது தேர்வு செய்து கொண்டது. மெய்க்குல்லத்துக்குப் பதிலாக மைக் ஹஸ்ஸியைத் தேர்வு செய்தது, அதன் சிறப்பான தேர்வுக்கு ஒரு சான்று. ஐந்து ஐ.பி.எல்.லிலும் சி.எஸ்.கே.வுக்கு ஒரு நல்ல இந்திய வேகப்பந்து வீச்சாளர் கிடைக்கவில்லை. அந்தக் குறை, இந்த வருடம் மோஹித் சர்மாவால் தீர்ந்தது. இன்னொரு முக்கியமான அம்சம், பத்ரிநாத் என்கிற பாதுகாப்பு வீரர். 10 ஓவருக்குள் இரண்டு விக்கெட்டுகள் விழுந்தால், உடனே பத்ரிநாத் அனுப்பப்படுவார். அடுத்த ஐந்து, 10 ஓவர்களுக்கு விக்கெட் விழாது என்று கண்ணை மூடிக்கொண்டுச் சொல்லலாம். கடைசி ஓவர்களில் வெளுத்துக்கட்ட தோனி, ஜடேஜா, பிராவோ, மார்கல் என பீமபலம் கொண்ட வீரர்கள் உள்ளார்கள். 
 
இந்தத் திட்டங்கள், சாதுரியங்கள் எல்லாம் வேறு ஐ.பி.எல் அணிகளுக்குச் சாத்தியமேயில்லை. குறிப்பிட்டு சொல்லும் படியான எந்தச் சர்ச்சையிலும் சி.எஸ்.கே.வும் அதன் வீரர்களும் மாட்டிக்கொள்ளவில்லை. பி.சி.சி.ஐ. தலைவராகவும் ஸ்ரீனிவாசன் இருப்பதால், சி.எஸ்.கே. மீது எல்லோரும் ஒரு சந்தேகப் பார்வை பார்த்தபடி தான் இருக்கிறார்கள். ஆனால், எதையும் சட்டை செய்யாமல், சாதனை மேல் சாதனை செய்து, டி20 கிரிக்கெட்டில் ஒரு முன்மாதிரி அணியாக மாறியிருக்கிறது, சி.எஸ்.கே.
 
 

1 comment: