Search This Blog

Tuesday, April 01, 2014

சரோஜினி நாயுடு

ஹைதராபாத்தில், நிஜாம் கல்லூரி மிகவும் புகழ்பெற்றது. அந்தக் கல்லூரியை உருவாக்கி, முதல் முதல்வராக இருந்த கல்வியாளர், அகோர்நாத் சட்டோபாத்யாயா. அவரைவிட, அவரது மகளைப் பற்றிதான் ஊரில் பேச்சு.

அந்தச் சிறுமியின் பெயர், சரோஜினி. உருது, தெலுங்கு, வங்காளம், இந்தி, ஆங்கிலம் மற்றும் பெர்சிய மொழி என ஆறு மொழிகளில் இலக்கியங்களைச் சரளமாக எழுதியும் பொது மேடைகளில் பேசியும் அவள் வியக்கவைத்தபோது... அவளுக்கு வயது ஆறுதான்!

சரோஜினியின் அம்மா, ஒரு டைரி வைத்திருந்தார். அவர், வங்காள மொழியில் பாடல்கள் புனைந்து பாடுவதில் வல்லவர். ஒரு நவராத்திரி சமயம், தனது டைரியைத் திறந்தபோது வியப்பு. அதில், ஏழு வயது சரோஜினியின் கையெழுத்தில் இரண்டு புதிய பாடல்கள் இருந்தன.

சரோஜினிதான் வீட்டில் மூத்தவள். தம்பிகளான பிரேந்திர நாத் மற்றும் ஹரீந்திரநாத் உடன் தினமும் விளையாடுவதே, கவிதை புனைவதும் கவிதை நாடகம் நடத்துவதும்தான். பள்ளியில், படிப்பில் சரோஜினிக்கே முதல் இடம். நடனம், விளையாட்டு, நாடக நடிப்பு எனப் பல்வேறு திறன்கள் இயல்பாகவே அவளுக்கு இருந்தன. அந்தப் பள்ளியின் ஆண்டுவிழா கலை நிகழ்ச்சி முழுவதும் சரோஜினியின் பாடல்களே ஒலித்தபோது, அவளது வயது 11.


11-ம் வகுப்பு மெட்ரிக் (அந்தக் காலத்தில் சென்னை பல்கலைக்கழகம் நடத்தியது) தேர்வை சரோஜினி எதிர்கொண்டபோது, 12 வயது. சரோஜினியிடம் இருந்த  சிறப்பான குணம், எதையும் மனப்பாடம் செய்யாமல்  புரிந்துகொண்டு படிப்பது. புரியும் வரை விடாமல் ஆசிரியர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று சந்தேகங்களைக் கேட்பது. அந்த ஆண்டு மெட்ரிக் தேர்வில், அகில இந்திய அளவில் முதல் இடம் பிடித்து, இந்தியா முழுதும் பிரபலமானாள் சரோஜினி.

சரோஜினி படிப்பில் கொடிகட்டிப் பறப்பதைக் கண்டு, தன் மகள் ஒரு கணித மேதையாகவோ, விஞ்ஞானியாகவோ வர வேண்டும் என்று பெற்றோர் கனவு கண்டனர்.

சரோஜினியின் மனம், வானம்பாடியாகக் கவிதைகள் புனைவதிலேயே பறந்தது. தெலுங்கு, வங்காளம், இந்தி, ஆங்கிலம் மற்றும் பெர்சிய மொழியில் சரளமாகக் கவிதைகள் புனையத் தொடங்கினாள். தன் மகள் எப்படிப் படிக்கிறாள் என்பதைக் காண, அவளது அல்ஜீப்ரா நோட்டைப் பார்த்த தந்தைக்கு அதிர்ச்சி. 'மாஹர் முன்னீர்’ எனும் தலைப்பில் அந்த நோட்டின் 60 பக்கங்களுக்கு பெர்சிய மொழியில் கவிதை நாடகம் வடித்திருந்தாள் 13 வயது சரோஜினி. அதில் நாட்டுப்பற்று வரிக்கு வரி மிளிர்ந்தது.

சரோஜினியின் பெற்றோர், மற்றவர்களைப்போல இல்லை. மகள் விரும்பும் துறையில் அவள் பிரகாசிக்கட்டும் என முழுமையாக ஏற்றார்கள். விரைவில் அந்த பெர்சியக் கவிதை நாடகம், ஹைதராபாத் நவாபின் பார்வைக்குத் தந்தையால் அனுப்பப்பட்டது. நான்கே நாட்களில் நவாபினால் சரோஜினி அழைக்கப்பட்டாள்.

''நீதான் எழுதினாயா?'' என்று அவர் சந்தேகத்தோடு கேட்டார்.

சரோஜினி, தன்னிடம் இருந்த ஆங்கிலக் கவிதையை எடுத்து நீட்டினாள். 1,300 வரிகள் கொண்ட 'தி லேடி ஆஃப் தி லேக்’ (ஜிலீமீ லிணீபீஹ் ஷீயீ tலீமீ லிணீளீமீ) என்ற கவிதையைப் படித்த நவாப், தன்னுடைய செலவில் இங்கிலாந்துக்குப் படிக்க அனுப்பினார்.

 பின் நாட்களில் 'இந்தியாவின் நைட்டிங்கேல்’ ஆகவும் நாட்டின் விடுதலைப் போராட்டத்தில், கவிக்குயிலாகவும் திகழ்ந்தார்.

ஆயிஜா இரா. நடராசன் 

No comments:

Post a Comment