Search This Blog

Tuesday, April 15, 2014

தங்க ஓலையில் தரங்கம்பாடி !


ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள் தொட்டுச் செல்லும் தொலைவில் கம்பீரமான அழகுடன் நிற்கிறது அந்தக் கோட்டை. ஐரோப்பிய காலனி ஆதிக்கத்தின் முதல் சுவடு தமிழ்நாட்டில் பதிக்கப்பட்ட கடற்கரைக் கிராமமான தரங்கம்பாடியில் 16-ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டது. டேனிஷ்காரர்களுக்கு முன்னரே போர்த்துகீசியர்களும், டச்சுக்காரர்களும் கிறித்துவத்தைப் பரப்ப இந்தக் கிராமத்துக்கு வந்திருக்கிறார்கள். ஆனால் வலிமையான இந்தக் கோட்டை எழுந்த பின்னர்தான், ‘தரங்கம்பாடி மிஷின்’ என்ற சபை உருவாகி, தமிழ்நாட்டில் கிறித்துவத்தின் நுழைவாயிலாகி இருக்கிறது இந்தக் கோட்டை. ஒரு தமிழகக் குறுநில மன்னராலோ புரட்சிக்காரர்களாலோ கட்டப்படவில்லை. இங்கு வந்து ஒரு கோட்டையைக் கட்டிக் கொள்ளுங்கள், உங்கள் மக்களைக் குடியமர்த்துங்கள் என டென்மார்க் மன்னரான 4ஆம் கிறிஸ்டியனுக்கு ரெங்கநாத நாயக்கர் என்பவர் வரவேற்று எழுதிய ஒரு கடிதத்தால் எழுந்த கோட்டை. 

கடிதம் சாதாரணமாக எழுதப்படவில்லை. பனை ஓலை வடிவில் தயாரிக்கப்பட்ட ஒரு தங்க ஓலையில் தமிழில் எழுதப்பட்டிருக்கிறது. இந்தத் தங்க ஓலையும் இதைப்போல வேறு சில தங்க ஓலைகளும் இன்னும் பத்திரமாக இருப்பது டென்மார்க் தலைநகரான கோபன்ஹேகனில் உள்ள ‘ராயல் ஆர்க்கைவ்ஸ்’ என்ற ஆவணக் காப்பகத்தில். இதைத் தவிர பல ஆயிரக்கணக்கானச் சுவடிகளும், கையெழுத்துப் பிரதி ஆவணங்களும் நவீன வசதிகளுடன் இங்கே பாதுகாக்கப்படுகின்றன.இந்தக் குவியல்களுக்குள்ளே இருக்கும் தங்க ஓலைகளைப் பார்த்து ஆராய்ந்து, அதிலிருக்கும் விவரங்களைச் சொல்லியிருப்பவர் ஒரு தமிழர். பேராசிரியர் பி.எஸ்.ராமானுஜம். இவர் தொல்லியலில் பேராசிரியர் இல்லை. டென்மார்க்கின் மிகப்பெரிய, பாரம்பரிய மிக்க பல்கலைக்கழகமான டென்மார்க் டெக்கினிக்கல் யூனிவர்சிட்டியில் இயற்பியல் பேராசிரியர். தம் துறையில் 8 புத்தகங்களும், 82 கட்டுரைகளும் எழுதியிருப்பவர். இவருக்கு பழைய சுவடிகள், ஆவணங்களை ஆராய்ச்சிச் செய்வது பொழுதுபோக்கு. இவர் டேனீஷ், ஜெர்மன் மொழிகளை நன்கு அறிந்தவர். பண்டைய தமிழ் எழுத்துகளையும் எளிதாகப் படிப்பவர். இந்த ஆவணங்களை நாம் படிக்கக்கூடிய தமிழில் எழுதி, ஆங்கிலம், டேனிஷ், ஜெர்மன் மொழிகளில் மொழிபெயர்த்து ஆவணக்காப்பகத்துக்கு உதவுகிறார்.

இந்தத் தங்க ஓலை அன்றைய தஞ்சாவூர் மன்னருக்கும் டென்மார்க் மன்னருக்கும் ஏற்பட்ட ஒரு உடன்படிக்கை என ஆவணக் காப்பகத்தில் கேட்லாக் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இது ரெங்கநாத நாயக்கன் என்பவர் டென்மார்க் மன்னருக்கு எழுதிய ஒரு கடிதம். இதில் மன்னரை நலம் விசாரித்து டென்மார்க்கிலிருந்து வந்த கடற்படை கேப்டன் ரோலண்ட், ஹாலந்திலிருந்து வந்திருக்கும் ஜெனரல் ஆகியோரை சிறப்பாகப் பல்லக்கில் வரவேற்றது குறித்தும் தரங்கம்பாடி துறைமுகம் நிறுவப்பட்டிருப்பதால் டேனிஷ் மக்களை வந்து குடியமரச் சொல்லும்படியும் எழுதப்பட்டிருக்கிறது. ‘நாயக்கன்’ என்ற சொல்லால் மன்னர் எனத் தவறாக மொழிபெயர்க்கப்பட்டு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மன்னருக்கு அனுப்பப்பட்டிருக்கும் பரிசுகளும் கடிதத்தில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. தரங்கம்பாடி பகுதி ரெங்கநாதரின் கட்டுப்பாட்டிலிருக்கும் பகுதியாக இருந்தாலும் டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் வியாபாரங்களால் அவர் பயன் பெற்றதால், ஒரு பண்டகச் சாலை அமைக்க இடம் கொடுத்திருக்கிறார். பின்னாளில் அது கோட்டையாகியிருக்கிறது.

40 செ.மீ. நீளமும் 25 செ.மீ., அகலமும் உள்ள இந்தத் தங்க ஓலை1620 ஏப்ரலில் ஆணியும் சுத்தியும் கொண்டு தமிழில் வடிக்கப்பட்டிருக்கிறது. ரெங்கநாத நாயக்கன் தெலுங்கில் கையெழுத்திட்டிருக்கிறார். அவரது நீண்ட கையெழுத்துக்கு மேல் சில கடித எழுத்துக்கள் இருப்பதால் முதலில் கடிதத்தில் கையெழுத்துப் போடப்பட்டபின் செய்தி வடிக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழில் கையெழுத்திடத் தெரியாத ஒருவர் தங்க ஓலையில் தரங்கம்பாடி கிராமத்தை, தமிழ் தெரியாத டென்மார்க் மன்னருக்கு தாரைவார்த்திருக்கிறார். இந்தக் கடிதத்தின் டேனிஷ் மொழிபெயர்ப்பு காகிதத்தில் எழுதப்பட்டு இதனுடன் அனுப்பப்பட்டிருக்கிறது, அதுவும் இந்த காப்பகத்தில் இருக்கிறது. அப்போது இந்தியாவிலும், டென்மார்க்கிலும் அங்கீகரிக்கப்பட்ட மொழி பெயர்ப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள். இந்த தங்க ஓலையைத் தவிர, இன்னும் இரண்டு தங்க ஓலைகளும் இருக்கின்றன. ஒன்று மன்னருக்கு நன்றி சொல்லும் கடிதம், மற்றொன்று ‘கம்பெனியின் சார்பாக’ என நான்கு தமிழர்கள் கையெழுத்திட்ட ஒரு புகார்க் கடிதம்.  ஏன் தங்க ஓலைகள்? எழுதியவர் மற்றும் பெறுபவரின் கௌரவத்தையும் முக்கியத்துவத்தையும் காட்டுவதற்கும், என்றும் நிலைத்து நிற்கும் ஆவணமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் இருக்கலாம் என்கிறார் ராமானுஜம். இந்தக் காப்பகத்தில் 100க்கும் மேற்பட்ட அலமாரிகளில் ஆயிரக்கணக்கான தமிழ் ஆவணங்கள் தவிர உருது, தெலுங்கு, கன்னட மோடி (பழைமையான மராத்திய மொழி) மொழிகளிலும் ஆவணங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இவற்றில் தமிழ் ஆவணங்களைப் பற்றி மட்டும் ஆராய்ச்சிகள் செய்கிறார் ராமானுஜம். அவர் ஆராந்தவற்றின் ஆங்கிலம், டேனிஷ் மொழிபெயர்ப்புகளை குறிப்புகளுடனும், ஆவணங்களின் போட்டோக்களுடனும் அவருடைய இணையதளத்தில் (http://www.tharangampadi.dk/) வெளியிட்டிருக்கிறார். ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவுவது நோக்கம். ஆர்வமுள்ளவர்களைத் தொடர்பு கொள்ள வரவேற்கிறார். இவர் இந்தத் தங்க ஓலையில் கண்டுபிடித்துச் சொன்ன ஒரு விஷயம் அதிலிடப் பட்டிருக்கும் தேதியில் தவறு. அந்தத் தவறைச் சரித்திர ஆசிரியர்கள் எவரும் கவனிக்கவில்லை என்கிறார். தமிழில் எழுதப்பட்டிருக்கும் அந்தத் தங்க ஓலையில் ஆண்டும் மாதமும் தமிழில் ‘ருத்ர வருடம் சித்திரை மாதம் 20’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழ் வருடங்களுக்கு இணையான ஆங்கில வருடங்களைக் காட்டும் அட்டவணையின்படி அது 1620 ஏப்ரல் 25. ஆனால் அந்தக் காலகட்டத்தில் இந்தக் கடிதத்தில் சொல்லப்பட்டிருக்கும் டேனிஷ் கேப்டன் ஓவ்க் ஜெட்டேயின் கப்பல் ஆப்பிரிக்கக் கடலைக் கடந்து கொண்டிருந்தது; இந்தியாவை அடையவில்லை. அப்படியானால் எங்கே தவறு? ஆராய்ச்சிக்குரிய விஷயம் இதுதான்! 

தரங்கம்பாடி அரசியல் ஆவணங்களைத் தவிரவும் பல சுவடிகள் இங்கிருக்கின்றன. கிறிஸ்டியன் கிறிஸ்டோபர் என்பவர் தரங்கம்பாடி டேனிஷ் பள்ளியில் ஆசிரியராக இருந்தவர். இவர் 1831ல் ‘கபில வாசகம்’, ‘ஆத்திசூடிக் கதைகள்’ என்ற இரண்டு பெரிய சுவடித் தொகுப்புகளை வாங்கி டென்மார்க்குக்கு அனுப்பியிருக்கிறார். பல ஆண்டுகளாகக் கேட்பாரற்றுக் காப்பகத்தின் நிலவரையிலிருந்த இது ஒரு நூலகரால் சில ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டு இப்போது இங்கே பாதுகாக்கப்படுகிறது. அதை ராமானுஜம் நாம் படிக்கக்கூடிய தமிழில் எழுதி அதை ஆங்கிலத்திலும் டேனிஷிலும் மொழிபெயர்த்திருக்கிறார். சுவடிகளின் படங்களுடன் பக்க எண் இட்டு மொழிபெயர்ப்புகளைத் தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.400 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் ஒரு பகுதி மக்களின் வாழ்க்கைப் பயணங்கள் தமிழில் பதிவு செய்யப்பட்டிருப்பதும் அது ஐரோப்பாவின் ஒரு பகுதியில் சிறப்பாகப் பாதுகாக்கப்படுவதும் பெருமைக்குரிய விஷயம். அதைவிட பெருமைக்குரியது முனைவர் ராமானுஜம் செய்து கொண்டிருப்பது.

No comments:

Post a Comment