Search This Blog

Tuesday, April 15, 2014

பாபர் மசூதி - கோப்ரா போஸ்ட்

 
டிசம்பர் 6, 1992. இந்திய வரலாற்றில் ஓர் கருப்பு பக்கம். ராமஜென்ம பூமியான அயோத்தியாவில், இருந்த பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டதும் அதன் விளைவாக எழுந்த கலவரங்களும் போராட்டங்களும் அழியாவடுக்களாக இன்றும் பலர் மனத்திலிருக்கிறது. கர சேவைக்காகப் போன பக்தர்கள் கூட்டம் தலைவர்களின் எழுச்சிமிக்க பேச்சுக்களால் ஆவேசம் அடைந்து, உணர்ச்சிவசப்பட்டு அந்தப் பழைய கட்டடத்தை இடித்து விட்டார்கள் என்று சொல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து, கமிஷன்களும், வழக்கு விசாரணைகளும் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இப்போது வெளியாகியிருக்கும் தகவல், இது ஒரு திட்டமிட்டு வெற்றிகரமாக அரங்கேற்றபட்ட சதி என்கிறது.
 
கோப்ரா போஸ்ட் என்பது ஒரு புலனாய்வு இணைய பத்திரிகை. (தெஹல்கா மாதிரி) இதன் இணை ஆசிரியர் கே ஆஷிஷ், பாபர் மசூதி இடிப்புத் தொடர்பாக ஓர் ஆய்வு நூல் எழுதுவதாகச் சொல்லி, 23 முக்கிய தலைவர்களைப் பேட்டி எடுத்துள்ளார். இந்த ரகசிய வீடியோ பதிவில் வின கட்டியார், உமா பாரதி, கல்யாண்சிங், சுவாமி சச்சிதானந்த் சாக்ஷி மஹராஜ், மஹந்த் ராம்விலாஸ் வேதாந்தி. சாத்வி ரித்தம்பரா, மஹந்த் அவைத்யநாத் மற்றும் சுவாமி நிருத்ய கோபால்தாஸ் மற்றும், பா.ஜ.க. சிவசேனா, வி.ஹெச்.பி மற்றும் பஜ்ரங்தளம் ஆகியவற்றின் முக்கிய தலைவர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.  

இவர்களில் 15 பேரை நீதிபதி லிபரான் கமிஷன் குற்றவாளிகள் என்று குறிப்பிட்டுள்ளது. 19 பேர் குற்றவாளிகள் என்று சி.பி.ஐ. தமது குற்றப் பத்திரிகையில் தெரிவித்துள்ளது. ‘ஆப்ரேஷன் ஜென்மபூமி’ என்ற பெயரில் நடத்தப்பட்ட சதிச் செயலின் அடித்தளம் வரை சென்று கண்டறிந்த பல உண்மைகளை வெளியிட்டிருக்கும் ‘கோப்ரா போஸ்ட்’டின் டிவிடியை தில்லி பத்திரிகையாளர்களுக்கு அதன் ஆசிரியர் அனிரோத் வழங்கினார். இதில் சொல்லப்படும் விஷயங்களின் ஹைலைட்கள்:
 
பாபர் மசூதி இடிப்பு வி.ஹெச்.பி., சிவசேனா வால் நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட சதிச் செயல் என்றும், இந்த இரு அமைப்புகளும் தங்களது தொண்டர்களுக்கு பல மாதங்களுக்கு முன்பாகவே பயிற்சி அளித்ததாகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் ‘பலிதானி ஜாதா’ எனும் பெயரில் தற்கொலைப்படைகளும் அமைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. பயிற்சி குஜராத்தில் ஒரு கிராமத்தில் முன்னாள் ராணுவ அதிகாரிகளால் அளிக்கப்பட்டது. எதற்கு பயிற்சி என்று சொல்லப்படாத நிலையில் கடின மலைஏற்றம், கயிற்றில் தொங்கி சுவரை உடைப்பது போன்ற பயிற்சிகள் தரப்பட்டன. இந்தப் படைக்கு லக்ஷ்மண சேனை என்று பெயர்.
 
மசூதியை இடிக்கத் தொடங்கியவுடன், ராம்விலாஸ் வேதாந்தி பாபா தலைமையில் கரசேவகர்கள் எல்.கே.அத்வானி, அசோக் சிங்கால், முரளி மனோகர் ஜோஷி, கிரிராஜ் கிஷோர், ஆச்சார்யார் தர்மேந்தர் உட்பட பலரது முன்னிலையில் 5 பேர்கள் ராமபக்தர்களானார்கள். நாங்கள் கோவிலை காப்போம் என ராமர் மேல் சத்தியம் செய்து கொண்டு பணியைத் தொடங்கினார்கள்.  

சுவர்களை உடைக்கும் பெரிய சுத்தியல்கள், சரியான நீளத்தில் வலுவான கயிறு எல்லாம் சேகரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கத் திட்டமிட்டவர் உமா பாரதி. பயிற்சி பெற்ற பலரில் இந்த 5 பேர் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். கட்டடத்தின் வெடிப்புகளில் நுழைக்க பெட்ரோல் குண்டுகளும் கொடுக்கப்பட்டது.ஒருவேளை முயற்சி தோல்வி அடைந்தால் மசூதியை வெடிகுண்டு வைத்துத் தகர்க்க இரண்டு தற்கொலைப் படையினர் உடலில் கட்டிய குண்டுகளுடன் ‘பிளான் பி’யாக தயாராக இருந்தனர் என்றும் பேட்டிகளில் பதிவாகியிருக்கிறது.மசூதியை இடிப்பதற்கு ஒருநாள் முன்னதாக அயோத்தியின் இந்துதாமில் வி.ஹெச்.பி. மற்றும் ஆர்.எஸ்.எஸ். நடத்திய ரகசியக் கூட்டத்தில், அசோக் சிங்கால், வினய் கட்டியார், வி.ஹெச்.டால்மியா மற்றும் மஹந்த் அவைத்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். ஹனுமன் பாக்கில் நடந்த ரகசியக் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் ஹெச்.வி. சேஷாத்ரி மற்றும் பாரதிய ஜனதாவின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர் என்று கோப்ரா போஸ்ட் தெரிவிக்கிறது.இந்த நாசவேலைக் குறித்து அன்றைய மாநில முதல்வர் கல்யாண்சிங்குக்கும், பிரதமர் நரசிம்ம ராவுக்கும் தெரியும் என்கிறது கோப்ரா போஸ்ட். இதில் விருப்பமில்லாத சிங் டிச. 6 அன்று தன் பதவியை ராஜினாமா செய்யவிருந்த போது தடுத்தவர் முரளி மனோகர் ஜோஷி என்றும் இடிப்பு முழுவதுமாக முடியும் வரை அவர் லக்னோவில் ஆர். எஸ்.எஸ்.வீரர்களால் ‘சிறை’ பிடிக்கப்பட்டிருந்தார் என்றும் ஒருவர் பேட்டியில் சொல்லுகிறார். இந்நிலையில், தேர்தல் அமைதியாக நடப்பதைத் தடுக்கும் விதத்தில் ‘கோப்ரா போஸ்ட்’ திட்டமிட்டு காங்கிரஸின் உதவியுடன் சதிசெய்வதாகவும், இது தொடர்பான அனைத்துச் செய்திகளையும் உடனடியாகத் தடைசெய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. புகார் செய்தது. இந்தக் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. செய்தியைத் தடை செய்ய வேண்டும் என்று சொல்லும் பி.ஜே.பி. அதன் பேட்டிகளை, பேட்டியில் சொல்லப்படும் விஷயங்களை மறுக்கவில்லையே ஏன்? என்கிறது காங்கிரஸ்.
 
இது எங்களது இரண்டாண்டு புலானாய்வு. அத்தனைக்கும் பதிவுசெய்யப்பட்ட ஆதாரம் இருக்கிறது வழக்குகளைச் சந்திக்கத் தயார் எனச் சவால் விடுகிறது கோப்ரா போஸ்ட்.  

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை சட்ட விதிகளுக்குட்பட்டு கட்டுவோம் என்று கடைசி பக்கத்தில் ஒரு வரியாக தன் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறது பி.ஜே.பி.
 
ஆதித்யா

No comments:

Post a Comment