Search This Blog

Thursday, September 02, 2010

'நக்சலைட்டுகளை மக்கள் ஆதரிப்பது ஏன்?'

ல்லமலை... இந்தியாவின் ஆறு மாநிலங்களில், 160 மாவட்டங்களில் பரந்து
விரிந்திருக்கும் நக்சல் நெட் வொர்க்கின் மையப் புள்ளி!

ஆந்திராவில் செயல்பட்ட மக்கள் யுத்தக் குழுவும், மத்திய இந்தியாவில் செயல்பட்ட எம்.சி.சி. எனப்படும் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்டரும் 2004-ம் வருடத்தில் 'மாவோயிஸ்ட்டுகள்' என்ற பொதுப் பெயரில் ஒன்றிணைந்தார்கள். அப்போது தங்களின் அரசியல் அஜெண்டாவாக 'ரெட் காரிடர்' என்ற திட்டத்தை அறிவித்தனர். அந்தச் சிவப்புப் பாதையின் ரூட் நல்லமலை டு நேபாள்! 

ஆந்திராவின் ராயலசீமாவில் இருக்கிறது நல்லமலை. இதைச் சுற்றிய 40 கிராமங்கள்தான் நக்சல்களின் பலம். எத்தனை இடர்கள் வந்தபோதும், இந்த மக்கள், அரசாங்கத்தைவிட மாவோயிஸ்ட்டுகளையே அதிகம் நம்புகின்றனர். 'அவர்களுக்கு மாவோயிட்ஸ்டுகள் மிகவும் பிடித்தவர்களாக இருப்பது ஏன்?' 

நல்லமலையில் இருக்கும் ஒரு நபர் கீழ் கண்டவாறு விவரிக்கிறார்


89-வது வருஷம் நல்லமலையில சில இளைஞர்கள் ஒண்ணு சேர்ந்து 'ரேடிகல் ஸ்டூடன்ட் யூனியன்', 'ரேடிகல் யூத் லீக்'னு ரெண்டு குழுக்களை ஆரம்பிச்சாங்க. ரெண்டுக்கும் ரெண்டு தலைவருங்க இருந்தாங்க. ஒருத்தர்... ஆஞ்சநேய பாபு. இன்னொருத்தர்... தொம்மல சின்ன நரசிம்மலு. இந்த ரெண்டு பேரும்தான், முதல்ல அந்த கிராமங்களுக்குள் வந்தவங்க. கிராம மக்களை ஒன்று திரட்டி, கிராம முன்னேற்றத்துக்காக சங்கம் அமைச்சாங்க. 'உழுபவனுக்கு நிலம், வேலைக்கு ஏத்த கூலி, சரிசம வாழ்க்கை' இதுதான் கொள்கை. அங்கு இருக்கும் மக்களுக்கு விவசாயம்தான் தொழில். சில பேர்  காட்டுக்குப் போய் பீடி சுத்த இலைகளைக் கொண்டுவருவார்கள்  . மூங்கில் கட்டைகளையும் கொண்டுவருவார்கள். அவர்களை ஃபாரஸ்ட்காரங்க ரொம்பத் துன்பப்படுத்துவாங்க. அவங்ககிட்ட இருந்து காப்பாத்துனது இந்த இயக்கத்துக்காரங்கதான். 

அதே சமயம்,  'காடுகளை அழிக்கக் கூடாது'ன்னு தனியா வகுப்பும் எடுப்பாங்க. இப்படித்தான் எங்களுக்கும் அவங்களுக்கும் நெருக்கம் உருவாச்சு. கொஞ்ச நாள் கழிச்சு, அவங்க கையில் துப்பாக்கி வந்துச்சு. எங்களுக்குப் பிரச்னைன்னா, எந்த நேரமும் அவங்கதான் வந்து நிப்பாங்க. நாங்க செய்யற சமையலைச் சாப்பிடுவாங்க. எங்களுக்குப் புரியாத அரசியல் எல்லாம் பேசுவாங்க!" 

இன்னோர் இளைஞர் பேசத் தொடங்கினார்... "94-ம் வருஷம் நக்சல்கள் தேர்தலைப் புறக்கணிக்கச் சொன்னாங்க. நல்லமலையைச் சுத்தி உள்ள எல்லாக் கிராமங்களும் தேர்தல் புறக்கணிப்பு முடிவை எடுத்தோம். உடனே, போலீஸ் படை ஊருக்குள் வந்து, எங்களைச் சித்ரவதை பண்ண ஆரம்பிச்சது. சிலரை ஜெயிலுக்குள்ள பிடிச்சுப் போட்டாங்க. இது இயக்கத்துக்காரங்களுக்குக் கோபத்தை உண்டுபண்ணுச்சு. 

நல்லமலை அடிவாரத்தில் பைருலூட்டி பங்களான்னு ஒண்ணு இருந்தது. ஆந்திராவில் எந்த ஆட்சி வந்தாலும் அந்தப் பங்களாவுக்குப் புதுப் பொலிவு கொடுப்பாங்க. அதை இயக்கத்துக்காரங்க குண்டு வெச்சுத் தரை மட்டமாக்கினாங்க. அடுத்த ரெண்டே நாள்ல, இயக்கத் தலைவர் ஆஞ்சநேய பாபுவை போலீஸ் சுட்டுக் கொன்றது. அப்ப இருந்துதான் இந்தப் பகுதிக்கும் நக்சல்களுக்கும் ஒரு நெருக்கமான பிணைப்பு உருவாச்சு" என்றார் அந்த இளைஞர். 

ஆந்திராவின் சூப்பர் ஹிட் திட்டமான இந்திரம்மா வீட்டு வசதித் திட்டத்தை வெலுக்கோடு கிராமத்தினர் மட்டும் சபித்துக்கொண்டு இருந் தார்கள். ஊர்க்காரர் ரங்கையா........

"இந்தப் பக்கத்தில் செயல்படுத்தப்படும் அரசாங்கத் திட்டங்களில் ஊழலே இருக்காது. காரணம், இயக்கத்துக்காரங்க மேல் உள்ள பயம். இப்போ ஒரு வருஷமா அவங்க யாரும் வர்றது இல்லை. உடனே, இந்திரம்மா வீட்டு வசதித் திட்டத்தில் 400 வீடுகள் கட்டினதாக் கணக்குக் காட்டி இரண்டு கோடி ரூபாய் கொள்ளை அடிச்சுட்டாங்க. பேப்பர்காரங்க இதைப்பத்தி எவ்வளவோ எழுதிட்டாங்க. ஒண்ணும் நடக்கலை. இயக்கம் வந்தாத்தான் சரியா வரும். வருவாங்கன் னுதான் நாங்களும் காத்துக்கிடக்கோம்" என்கிறார்.

நல்லமலை கிராம மக்களுக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்குமான இணைப்பைத் துண்டிக்க ஆந்திர அரசு ஓசைப்படாமல் ஒரு காரியம் செய்தது. ஆறு வருடங்களுக்கு முன்பு ஆந்திராவின் கொடூரக் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்களை ஒன்றுதிரட்டி அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கி, நல்லமலையின் அடிவாரத்தில் சித்தாபுரத்தில் குடிவைத்தது. இலவச நிலம், பாசன வசதி எல்லாம் வழங்கப்பட்டது. ஆனால், அரசாங்கம் நினைத்தது நடக்கவில்லை. அந்தப் பகுதியில் சாராய ஆறு பெருக்கெடுத்ததுதான் மிச்சம்.

மாவோயிஸ்ட்டுகளை ஆதரிக்கும் 40 கிராமங்களில் வேம்பட்டாவின் நிலை வேறு. அந்தக் கிராமத்தின் இளைஞர்களிடம் பேசினால், 100 கேள்விகள் கேட்டு பிரச்னை இல்லை என்று முடிவுக்கு வந்தவுடன்தான் பேசவே ஆரம்பிக்கிறார்கள். "99-வது வருஷம் எங்க ஊருக்கு வந்த அமைச்சர் பிடா வெங்கல்ரெட்டியை இயக்கத்துக்காரங்க சுட்டுக் கொன்னாங்க. ஊழல் செஞ்சதால், அவருக்குத் தண்டனைன்னு காரணம் சொன்னாங்க. அப்பவே எல்லா கட்சிகளுக்கும் எங்க ஊர் மேல் வெறுப்புதான். செத்துப்போன அமைச்சரோட பி.ஏ-வும் எங்க ஊர்தான். அவர் ரொம்ப நல்லவர். அவரையும் இயக்கத்துக்காரங்க கொன்னுட்டாங்க. இது எங்களுக்குப் பிடிக்கலை. 2005-ம் வருஷம் எங்க ஊர்ல ஒரு பஞ்சாயத்துப் பேச இயக்கத்துக்காரங்க எட்டு பேர் வந்தாங்க. நாங்க எல்லோரும் அவங்களைக் கட்டி வெச்சுட்டோம். பிறகு, ஊருக்கு நடுவில் நெருப்பு மூட்டி எட்டு பேரையும் அதுல போட்டு உயிரோடு எரிச்சுட்டோம். உடனே, எங்க கிராமத்தை ஒரு சாக்காவெச்சு மத்த கிராமங்களையும் தனக்குச் சாதகமா மாத்த அரசாங்கம் பல திட்டங்களைப் போட்டது. பஸ் வராத எங்க ஊர்களுக்கு புதுசு புதுசா பஸ் வந்துச்சு. வானம் பார்த்த எங்க பூமிக்கு தண்ணீர் கொண்டுவர ராஜசேகர ரெட்டி 1,000 கோடியில் திட்டம் போட்டார். இப்படி அரசாங்கத்தோட கையாளா நாங்க மாறுவது இயக்கத்துக்காரங்களுக்குப் பிடிக்கலை. 


எங்களைப் பேச்சுவார்த்தைக்கு காட்டுக்குக் கூப்பிட்டாங்க. 100 பேர் போனோம். அமைச்சரோட பி.ஏ-வை ஏன் கொன்னோம்னு சொன்னாங்க. அவர் செஞ்ச ஊழல்களை ஆதாரத்தோடு எடுத்துவெச்சாங்க. எல்லாம் முடிஞ்சு நாங்க கிளம்பற நேரம் 'எங்க ஆளுங்களை நெருப்புவெச்சுக் கொளுத்தினவங்களை மட்டும் இங்கேயே எங்ககிட்ட விட்டுட்டு மத்தவங்க போகலாம்'னாங்க. நாங்க அதை எதிர்பார்க்கலை. எட்டுப் பேரை மட்டும் பிடிச்சு வெச்சுக்கிட்டாங்க. எதுவும் செய்ய முடியாம ஊருக்கு வந்துட்டோம். அந்த எட்டுப் பேரையும் அன்னிக்கு ராத்திரியே கொன்னுட்டாங்க. உடனே, போலீஸ் காட்டுக்குள் போச்சு. ஆனா, எதுவும் பண்ண முடியலை. அதுக்குப் பிறகு, இயக்கத்துக்காரங்களோட நடமாட்டமும் குறைஞ்சுபோச்சு. ஏதோ ஒரிஸ்ஸா பார்டர்ல பிஸியா இருக்கிறதா சொல்றாங்க" என்றார்கள் அந்த இளைஞர்கள். அவர்களின் பேச்சில் இயக்கத்துக்காரர்கள் மீது கோபம் இருக்கிறதே தவிர, வெறுப்பு இல்லை! 


இப்போது ஏன் இயக்கத்துக்காரர்களின் நடமாட்டம் இல்லை? ஆத்மகூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் அதற்கு விடை சொன்னார். "வேம்பட்டா சம்பவத்துக்குப் பிறகு, இயக்கத்தினர் வெளிப்படையாக ஊருக்குள் வருவது இல்லை. அவர்களுக்குத் தேவையான தகவல்கள், உணவு, இதர பொருட்களை 40 கிராமங்களில் இருக்கும் 10 பேர் கொண்ட குழு கவனித்துக்கொண்டது. இந்த 10 பேர் இயக்கத்தில் இருப்பது அவர்களின் குடும்பங்களுக்கே தெரியாது. இந்த 10 பேரையும் போலீஸ் மோப்பம் பிடித்துவிட்டது. உடனே, இதை இயக்கமும் மோப்பம் பிடித்துவிட்டது. விளைவு, இப்போது இயக்கத்துக்காரர்கள் யாரையும் நம்புவது இல்லை. யாரையும் சந்திப்பது இல்லை. தற்காலிகமாக நல்லமலையில் இருந்து ஒரிஸ்ஸா பக்கம் முகாமிட்டு இருப்பதாகத் தகவல்" என்றார்.

இவ்வளவு விஷயங்களும் வெளிப்படையாக நடந்தபோதிலும், இந்தப் பகுதியில் ஒரு போலீஸ் ஸ்டேஷன்கூட இல்லை. ஆத்மகூரில் ஒரு காவல் நிலையம் இருக்கிறது என்றாலும், அந்த காவல் நிலையமே எக்கச்சக்க காவல் போட்டுதான் இயங்கிக்கொண்டு இருக்கிறது. நல்லமலை மாவோயிஸ்ட்டுகள் விவகாரத்தைக் கையாள்வது 100 கி.மீ. தொலைவில் இருக்கும் நந்தியால் நகர ஓ.எஸ்.டி. (ஆபரேஷன் ஸ்பெஷல் டியூட்டி) போலீஸ்தான். ஆனால், அவர்கள் தகவல் கிடைத்து நல்லமலை வந்து சேரவே குறைந்தது இரண்டு மணி நேரம் ஆகும்.
நல்லமலை வனச்சரகர் வெங்கடசுப்பையாவைச் சந்தித்தேன். "20 வருடங்களுக்குப் பிறகு, இந்த மலை அடிவாரத்தில் இப்போதுதான் வனச்சரகர் அலுவலகம் தைரியமாகத் திறக்கப்பட்டு இருக்கிறது. நான் தினமும் காடுகளுக்குள் நடந்தேதான் போய் வருகிறேன். இயக்கத்தினர் என் கண்களுக்கு அகப்படவில்லை. உள்ளே இருக்கும் பழங் குடியினரைக் கேட்டாலும் அவர் களும் இல்லை என்றுதான் சொல்கிறார்கள். 

பல வருடங்களுக்கு முன்பு நாங்கள் காட்டுக்குள் போனபோது ஒரு சில இயக்கத்தினரைப் பார்த்தோம். 'அடுப்புக்காக மரம் கொண்டுபோகும் ஏழைகளை எதுவும் செய்யாதீர்கள். ஆனால், காடுகளை அழித்துக் காசு பார்க்கும் களவாணிகளை விடாதீர்கள். அவர்களைப் பிடிக்க நாங்களே உங்களோடு வருவோம். ஏழைகளை நீங்கள் துன்புறுத்தினால், நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்' என்றார்கள். அவர்களை நல்லவர்கள் என்பதா, கெட்டவர்கள் என்பதா?" என்று கேட்டார். 

மக்களுக்கு அரசைவிட, மாவோயிஸ்ட்டுகளை அதிகம் பிடித்துப்போனதற்கான காரணம் என்ன? முழுமையான பதில் கண்டறிய முடியவில்லை. அந்தப் பதிலில்தான் இருக்கிறது இந்தப் பிரச்னைக்கான தீர்வு!

No comments:

Post a Comment