Search This Blog

Saturday, December 31, 2011

அறிவோமா ஐ.ஐ.டி.?

தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததும், பாராளுமன்றச் சட்டத்திட்டத்தின் கீழ் செயல்படும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்வி நிலையத்தில் எப்படியாவது இடம் கிடைத்துவிடாதா என்பதுதான் பிளஸ் டூ மாணவர்களின் கனவு. அப்படி என்ன ஐ.ஐ.டி. உசத்தி? பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்வியை உலகத்தரத்தில் கற்றுக் கொடுக்கும் தலைசிறந்த கல்வி நிலையங்கள்தான் ஐ.ஐ.டி. தேசிய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச மாணவர்களையும் கவர்ந்துள்ளது இந்தக் கல்வி நிலையம். ஒரு நாடு பொருளாதாரம், விவசாயம், தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம், மின்சாரம் இப்படி எல்லாவற்றிலும் தன்னிறைவு பெற்றிருந்தால் மட்டுமே, அது வளர்ந்த நாடு. இதனை அடைய கல்வியிலும் ஆராய்ச்சியிலும் சிறந்த மாணவர்களை உருவாக்கித் தரும் கல்வி நிறுவனங்கள் வேண்டும். படிப்போடு நின்றுவிடாமல், நாட்டின் வளர்ச்சிக்குத் தேவைப்படும் கண்டுபிடிப்புகளைக் கற்றுத் தரும் கல்வி நிலையங்களில் முதன்மையானதுதான் இந்த ஐ.ஐ.டி. கல்வி நிலையங்கள். இப்படிப்பட்ட கல்வி நிலையங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்று மத்திய அரசு அறிவித்தது. 1961ஆம் ஆண்டுதான்.
தற்போது நாட்டில் மொத்தம் 15 ஐ.ஐ.டி. கல்வி நிலையங்கள் இருக்கின்றன. வாரணாசியில் உள்ள ஐ.ஐ.டி. கல்வி நிலையத்தின் ஒப்புதல் தற்போது மாநிலங்களவையில் இருக்கிறது. ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் பதினாறு. இதில் கரக்பூர், மும்பை, சென்னை, கான்பூர், தில்லி, குவஹாத்தி, ரூர்கி போன்ற இடங்களில் செயல்பட்டு வரும் ஐ.ஐ.டி. கல்வி நிலையங்கள் பழைமையானவை. ரோபர், புவனேசுவரம், ஹைதராபாத், காந்திநகர், பாட்னா, ராஜஸ்தான், மாண்டி, இந்தூரில் செயல்படும் ஐ.ஐ.டி. கல்வி நிலையங்கள் 2008ஆம் ஆண்டு மற்றும் அதற்குப் பிறகு அங்கீகாரம் பெற்றவை.ஐ.ஐ.டி. கவுன்சிலின் கீழ் செயல்பட்டு வரும் இந்த ஐ.ஐ.டி. கல்வி நிலையங்கள் ஒவ்வொன்றும் தன்னாட்சிப் பெற்ற பல்கலைக்கழகங்கள். ஒவ்வொரு ஐ.ஐ.டி. கல்வி நிலையங்களிலும், இளநிலை தொழில்நுட்பப் படிப்பு, ஒருங்கிணைந்த முதுநிலை அறிவியல் படிப்பு மற்றும் முதுநிலை தொழில்நுட்பப் படிப்புகள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. இந்த கல்வி நிலையங்களில் சேர விரும்பும் மாணவர்கள் ஐ.ஐ.டி.-ஜே.இ.இ. நுழைவுத் தேர்வில் தேர்ச்சிப் பெற வேண்டும். இந்திய மாணவர்கள் மட்டுமல்லாது அயல் நாட்டு மாணவர்களுக்கும் இந்த நுழைவுத் தேர்வு பொதுவானது. இளநிலை தொழில்நுட்பப் படிப்புகளில் சேருவதற்கு எப்படி ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறதோ, அதேபோல், முதுநிலைத் தொழில்நுட்பப் படிப்பில் சேருவதற்கு கிராஜுவேட் ஆப்டிட்யூட் டெஸ்ட் இன் இன்ஜினீயரிங் என்று அழைக்கப்படும் கேட் தேர்வை எழுத வேண்டும். அதேபோல் ஐ.ஐ.டி. கல்வி நிலைய வளாகங்களில் கற்றுக் கொடுக்கப்படும் எம்.எஸ். படிப்பு, எம்.எஸ்.சி. கணிதம், இயற்பியல், வேதியியல், எம்.பி.ஏ. மற்றும் பி.எச்டி. படிப்புகளில் சேருவதற்கு முறையே ஜேமேட், ஜாம், சீட் போன்ற நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். 
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 1950 மற்றும் 1960ஆம் ஆண்டுகளில் ஐ.ஐ.டி.க்கள் மூலம் உருவான தலைசிறந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், மேதைகள் மூலம் நாட்டுக்குப் பல்வேறு சிறந்த கண்டுபிடிப்புகள் கிடைத்துள்ளன. ஐ.ஐ.டி.க்களின் இந்தச் சிறப்பான செயல்பாடுகள் தான், 1990 மற்றும் 2000ஆம் ஆண்டுகளுக்கு இடையே இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி என்று அழைக்கப்படும் ஐ.ஐ. ஐ.டி. கல்வி நிலையம் உருவாகக் காரணம். தகவல் தொழில்நுட்பத்தில் புதிய வளர்ச்சி எட்டவேண்டும். அதில் இளம் ஆராய்ச்சியாளர்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் ஐ.ஐ.ஐ.டி. கல்வி நிலையத்தின் முக்கிய நோக்கம்.ஐ.ஐ.டி. கல்வி நிலையங்கள் சிலவற்றில் ஒருங்கிணைந்த எம்.எஸ்சி. படிப்பும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு எம்.டெக். படிப்பும் சில கல்வி நிலையங்களில் இரட்டை எம்.டெக். படிப்பும் (டியூயல் டிகிரி)படிக்க வசதி இருக்கின்றன. இக்கல்வி நிலையங்களில் ஒவ்வொரு பிரிவுக்கும் குறைந்தபட்சம் 40 மாணவர்களே சேர்த்துக் கொள்ளப்படுவதால், ஏதேனும் ஒரு படிப்பில் சேருவதற்குக் கடும் போட்டி நிலவி வருகிறது. நுழைவுத் தேர்வு கேள்வித்தாளில் கேட்கப்படும் கேள்விகள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இருந்துதான். மற்ற மாநிலத்தில் படித்துவரும் மாணவர்கள் அடிப்படையில் சி.பி.எஸ்.சி. பாடத் திட்டத்தில் இருந்து வருவதால் அவர்களால் எளிதாக நுழைவுத்தேர்வில் வெற்றி பெற முடிகிறது. ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை இங்கு மெட்ரிகுலேஷன், மாநிலப் பாடத் திட்டம், ஆங்கிலோ இந்தியன் பல்வேறு பாடத்திட்டங்கள் கடைப்பிடிக்கப் படுவதால், ஐ.ஐ.டி. கல்வி நிலையங்களில் மற்ற மாநில மாணவர்களைப்போல் தமிழக மாணவர்களால் பிரகாசிக்க முடியவில்லை. இருந்தாலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஒன்பதாம் வகுப்பிலிருந்தே ஐ.ஐ.டி. கல்வி நிலையத்தில் சேருவதற்கான பயிற்சிகளிலும் மாணவர்கள் தற்போது ஈடுபட்டு வருகிறார்கள். இந்த விழிப்புணர்வு நகர மாணவர்களுக்குக் கிடைத்ததுபோல கிராமப்பகுதி மாணவர்களுக்குக் கிடைக்கவில்லை.ஒவ்வொரு ஐ.ஐ.டி. கல்வி நிலையத்தின் சிறப்பம்சங்கள் என்ன? நாட்டில் உள்ள மிகப் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் எந்தெந்த ஐ.ஐ.டி.க்களில் படித்தவர்கள், ஐ.ஐ.டி. கல்வி நிலையத்தில் சேர நுழைவுத் தேர்வில் எம்மாதிரியான கேள்விகள் கேட்கப்படுகின்றன...? போன்ற சுவாரஸ்யமான தகவல்கள் அடுத்த பதிவில் . 
புகை படம் அனைத்தும்  ஐ.ஐ.டி கான்பூரில் எடுத்தது

4 comments:

  1. இது போன்ற விசயங்களுக்காக காத்து இருக்கும் சக பயணி.

    ReplyDelete
  2. நல்ல பதிவு சார் ! பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் மிகவும் அவசியம் ! தொடர்க ! நன்றி ! வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  3. last photo which building is it ?

    ReplyDelete
  4. பயனுள்ள பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete