Search This Blog

Thursday, August 16, 2012

எனது இந்தியா (அபினி சந்தை! ) - எஸ். ராமகிருஷ்ணன்....

 
பருத்தி, அபினி இந்த இரண்டையும் 'வெள்ளைத் தங்கம்’ என்று குறிப்பிடுகிறது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி. இந்த இரண்டும் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துத் தந்தன. இன்று, மாஃபியா எனும் குற்றக் குழுக்கள் ஹாங்காங், பாங்காக், மலேசியா, சீனா என விரிந்து வளர்ந்து வலிமையான கடத்தல் மற்றும் அழித்தொழிப்பு இயக்கங்களாகச் செயல்படுகின்றன. இதற்கான தொடக்கப் புள்ளி பிரிட்டிஷ் அரசு, சீனாவுக்கு அபினி கடத்தியதில்தான் ஆரம்பம் ஆனது. ஓபியம் எனப்படும் அபினிச் செடியை தமிழில் கசகசாச் செடி என்று அழைக்கிறோம். இதற்கு, கம்புகம் என்ற பெயரும் இருக்கிறது. பளுப்புக் கசகசாச் செடி, வெள்ளைக் கசகசாச் செடி என்று இரண்டு வித செடிகள் உண்டு. இதில், வெள்ளைக் கசகசாச் செடி இந்தியாவில் அதிகம் விளைகிறது. கசகசா சாற்றைக் குடித்தால் மிதமிஞ்சிய போதை இருக்கும் என்கின்றனர்.
 
இந்தியாவில் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் வங்காளத்தில் அதிகமாக அபினி விளைகிறது. வங்காளத்தில் விளையும் அபினி தரத்தில் உயர்ந்தது என்கின்றனர். கசகசா காய்கள் முற்றும்போது, அதில் விதைகள் உண்டாகின்றன. அந்த விதைகளை முற்றவிடாமல் உறிஞ்சிகள் வழியாக பாலை எடுத்து உறையவைத்து அபினி எடுக்கிறார்கள். சில நேரத்தில், கத்தியால் காயைக் கீறி அதில் இருந்து வடியும் பாலில் இருந்தும் அபினி எடுக்கப்படுகிறது. இந்தப் பாலில் 10 சதவிகிதம் முதல் 14 சதவிகதம் வரை மார்பின் எனும் போதைப் பொருள் இருக்கிறது. அதுபோலவே, 4 சதவிகதம் நார்க்கோடின் இருக்கிறது. காய் முற்றி விதையாகிவிட்டால் இந்த போதைதன்மை அற்றுப்போய்விடும்.
 
ரோமானியரின் உறக்கத்துக்கான கடவுளின் பெயர் சோம்னாஸ். இந்தப் பெயரில் இருந்தே கசகசா செடியின் தாவரவியல் பெயரான பபாவேர் சோமினிபெரம் என்பது உருவானது. அதுபோல, மார்பின் எனப்படும் போதைப் பொருள் மார்பியஸ் என்ற கனவுக்கான கடவுளின் பெயரில் இருந்து தோன்றியுள்ளது.

ஓபியத்தின் சரித்திரம் மிகவும் பழைமையானது. கிறிஸ்து பிறப்பதற்கு 3,400 ஆண்டுகளுக்கு முன்பே மெசபடோமியா, சுமேரியா, எகிப்து பகுதிகளில் ஓபியம் செடி பயிரிட்டு இருக்கின்றனர். மருந்துச் செடியாகவே ஆரம்ப காலத்தில் அபினி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. குறிப்பாக, வேதனையில் தவிக்கும் நோயாளிகளுக்குத் தூக்கம் வரவழைப்பதற்கும், ஆண்மையை அதிகரிக்கவும், வயிற்றுப்போக்கை நிறுத்தும் மருந்தாகவும் அபின் பயன்படுத்தப்பட்டது.

எகிப்தியர்கள், துயில் தரும் செடி என்று கசகசாவைக் குறிப்பிடுகின்றனர். கிரேக்கர்கள், தங்கள் கடவுளுக்கு கசகசா செடியின் பூக்களை அணிவிப்பதன் மூலம் மனிதர்களுக்கு நிம்மதியான உறக்கம் கிடைக்கும் என்று நம்பினர். ஆகவே, பண்டைய காலத்தில் மகிழ்ச்சி தரும் செடியாக அபினி கருதப்பட்டது. அபினி புகைப்பது அல்லது அதன் சாற்றைக் குடித்து போதை ஏற்றிக்கொள்வது திருவிழா மற்றும் மதச்சடங்குகளுடன் சம்பந்தப்பட்ட பழக்கமாக ராஜஸ்தானில் இன்றும் நிலவுகிறது. இதே பழக்கம், இந்தியாவின் பல மாநிலங்களிலும் இருக்கிறது. மருத்துவப் பொருளான அபினியை, வணிகத்துக்கான போதைப் பொருளாக அடையாளம் கண்டுகொண்டது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிதான்.

அக்பர் காலத்திலேயே, பீகார் மற்றும் வங்காளப் பகுதியில் விளைந்த அபினியை கிழக்கிந்தியக் கம்பெனி வாங்கி விற்பனை செய்துவந்தது. வங்காளம், பரோடா, மால்வா ஆகிய பகுதிகளில் அபினி அதிகமாக விளைந்தது. இந்த வியாபாரத்துக்காகவே, பாட்னாவில் அபினி வணிகக் கூட்டமைப்பு ஒன்றும் செயல்பட்டது. அபினி விற்பனையில் கொள்ளை லாபம் கிடைக்கிறது என்று கண்டுகொண்ட டச்சுக்காரர்கள், பீகார் வணிகர்களுடன் பேரம்பேசி தாங்களே அபினியை மொத்தமாகக் கொள்முதல் செய்யத் தொடங்கினர். இதைஅறிந்த கிழக்கிந்தியக் கம்பெனி, அபினி வணிகத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தது. அதற்காக, விவசாயிகளுக்கு முன்பணம் கொடுத்து உற்சாகப்படுத்தியதோடு தானே மொத்தமாக வாங்கிக்கொள்ள ஆரம்பித்தது.

1770-களில் அபினி வணிகம் பெரும் போட்டியாக மாறியது. டச்சு வணிகர்கள் இந்தோனேஷியாவுக்கு அபினியைக் கடத்தினர். போர்த்துக்கீசியர்களோ, சீனாவுக்கு விற்க முயற்சித்தனர். ஆனால், 1773-ல் வங்காள ஆளுனராகப் பொறுப்பு ஏற்ற வாரன் ஹேஸ்டிங், அபினி வர்த்தகத்தை கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டார். அதற்காக, பாட்னாவில் இருந்த அபினி கூட்டமைப்பை உடைத்து, அபினி வணிகத்தை ஏகபோகமாக்கினார். இவரது முயற்சியின் தொடர்ச்சியாகவே, சீனாவுக்கு அபினி பெருமளவு கடத்தப்பட்டது.

அபினி வணிகத்தைப் பற்றி அறிந்துகொள்ள, சீனா மற்றும் கிழக்கிந்தியக் கம்பெனி ஆகிய இரண்டுக்கும் இடையே இருந்த வணிக உறவைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம்.

உலகுக்குத் தேயிலையை அறிமுகப்படுத்தியது சீனர்கள் தான். தேயிலைச் செடி அங்குதான் முதன்முதலில் பயன்பாட்டுக்கு வந்தது. ஐரோப்பிய நாடுகளில் தேயிலை புகழ்பெறத் தொடங்கவே, சீனாவில் இருந்து தேயிலையை வாங்கி ஐரோப்பாவில் விற்கத் தொடங்கியது கிழக்கிந்தியக் கம்பெனி. அதுபோலவே, பட்டுக்கும் சீனக் களிமண்ணால் செய்த பாத்திரங்களுக்கும் ஐரோப்பாவில் பெரிய கிராக்கி இருந்தது. இந்த மூன்றையும் வாங்கி விற்றதில், கிழக்கிந்தியக் கம்பெனிக்கு லாபம் கொட்டியது. ஆனாலும், தேயிலைக்கு மாற்றாக பிரிட்டிஷ் கொடுத்த கைக் கடிகாரம், வெள்ளிப் பொருட்கள், கண்ணாடிகள் ஆகியவை, கொள்முதலுக்குப் போதுமானதாக இல்லை. ஆகவே, சீனாவிடம் இருந்து கடனாளி யாகவே தேயிலையைப் பெற்றுக்கொள்ள நேர்ந்தது. 

இதை ஈடுசெய்யும் விதமாக இந்தியாவில் விளைந்த, போதைப் பொருளான அபினியை சட்டவிரோத முறையில் சீனாவுக்கு அனுப்பத் தொடங்கியது கிழக்கிந்தியக் கம்பெனி. இந்த போதைப் பொருள் வணிகத்தில் கொள்ளை லாபம் கிடைத்ததால், அபினி வணிகத்தை முதன்மையாக்கியது பிரிட்டிஷ் கம்பெனி. துருக்கி மற்றும் அரேபிய வணிகர்களின் மூலம் 6 அல்லது 7-ம் நூற்றாண்டில்தான் சீனாவுக்கு அபினி அறிமுகமானது. அது, வலி நிவாரணியாகவே ஆரம்ப காலத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், 17-ம் நூற்றாண்டில் புகைப்பிடிக்கும் பழக்கம் சீனர்களிடம் மேலோங்கத் தொடங்கவே, போதைக்காக அபினியைப் புகைக்கும் பழக்கம் தலைதூக்க ஆரம்பித்தது.

போதை தரும் அபினியை உட்கொண்ட காரணத்தால், சீனாவில் போதை அடிமைகள் அதிகரித்தனர். குற்றச் சம்பவங்கள் அதிகரித்தன. இந்த அவலம்பற்றி எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல், அபினியை டன் டன்னாக சீனாவுக்கு அனுப்பி பணத்தைக் குவித்தது கிழக்கிந்தியக் கம்பெனி. இவ்வளவுக்கும், அபினி இறக்குமதி பிரிட்டனில் தடைசெய்யப்பட்டு இருந்தது. இங்கிலாந்தில், அபினியை போதைப் பொருள் எனத் தடை செய்துவிட்டு, இன்னொரு தேசத்தில் கப்பல் கப்பலாக அபினியை விற்றதுதான் கிழக்கிந்தியக் கம்பெனியின் சாதனை! இப்படிக் கிடைத்த பணத்தில் இந்தியப் பருத்தியை வாங்கி கனரக இயந்திரங்களுடன் புதிய நூற்பாலைகளைத் தொடங்கியது கிழக்கிந்தியக் கம்பெனி.

பம்பாய் துணி ஆலைகள் பெருமளவு, அபினி விற்பனையில் கிடைத்த உபரிப் பணத்தில்  தொடங்கப்பட்டதே என்கிறார், இதைப்பற்றி ஆய்வு செய்த ஆர்.எஸ்.கேல்கர். இதுபற்றிக் குறிப்பிடும் எழுத்தாளர் சிவனடி, தனது இந்திய சரித்திரக் களஞ்சியம் என்ற புத்தகத்தில், 'ஜீஜீபாய் என்ற பார்சிக்காரர், சீனத்துடன் நடத்திய அபினி வணிகத்தில் பெரும் லாபம் சம்பாதித்தார். அதற்கு உறுதுணையாக இருந்த பிரிட்டிஷ்காரர்களை சந்தோஷப்படுத்துவதற்காக, 1857-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பம்பாய் ஓவியப் பள்ளிக்கு மிகப் பெரிய தொகை நன்கொடை வழங்கினார். அபினிப் பணம்தான் இந்தியாவில் ஓவியக் கலை வளருவதற்கும் காரணமாக இருந்தது’ என்கிறார்.
18-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய வணிகர்கள், சீனாவின் தென் கிழக்குப் பகுதியில் ஓடும் பியர்ல் ஆற்றின் கரையில் அமைந்துள்ள காண்டோன் துறைமுகத்தில் மட்டுமே வணிகம் செய்ய அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்காக, 13 பண்டக சாலைகள் ஒதுக்கப்பட்டு இருந்தன. இந்த வளாகத்துக்குள் மட்டுமே அவர்கள் தங்கள் வணிகத்தை நடத்த முடியும். அதுவும், கோடைக் காலத்தில் மட்டுமே வணிகம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

வணிகம் செய்யவந்த ஐரோப்பிய வணிகர்கள், சீன மொழி கற்பதற்கு அனுமதி கிடையாது. பொழுதுபோக்குவதற்குக்கூட துறைமுகத்தைத் தாண்டி, நாட்டுக்குள் செல்ல முடியாது. இவ்வளவு கட்டுப்பாடுகளுக்குள்தான் சீனாவில் ஐரோப்பிய கம்பெனிகளின் வணிகம் நடைபெற்று வந்தது. அபினி கடத்துவது என்று முடிவு செய்தவுடன் கிழக்கிந்தியக் கம்பெனி ஓர் பெரிய திட்டத்தை உருவாக்கியது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விளைவிக்கப்பட்ட அபினியை, மொத்தமாக விலைக்கு வாங்கி வந்து பக்குவப்படுத்தி கல்கத்தாவில் ஏலம்விட்டது. கிழக்கிந்தியக் கம்பெனி, சீனாவில் நேரடியாக அபினி விற்பது தடைசெய்யப்பட்டு இருப்பதால், ஒரு மாற்று வழியை உருவாக்கியது. அதன்படி, கம்பெனியின் உயர் அதிகாரிகளும், ஆங்கிலேய விசுவாசிகளாக செயல்பட்ட தனியாரும் அபினியை விலைக்கு வாங்கி தங்களுக்கான கப்பலில் ஏற்றி லிண்டின், ஹாங்காங் போன்ற இடங்களுக்கு அனுப்பிவைப்பார்கள். இதனால், சீன அரசு பிரிட்டிஷ் கம்பெனியைக் கேள்வி கேட்கவே முடியாது.


 

No comments:

Post a Comment