Search This Blog

Wednesday, August 29, 2012

எனது இந்தியா (காதலுக்கு எதிரியா அக்பர்?! ) - எஸ். ராமகிருஷ்ணன்....


அக்பரின் அந்தப்புரத்தில் எண்ணிக்கையற்ற நடனப் பெண்கள் இருந்தனர். அவர்களில் ஒருத்தி நாதிரா. அவள், இளவரசன் சலீம் மீது ஆசைகொண்டாள் என்பதற்காக அக்பர் அவளை சிரச்சேதம் செய்ய உத்தரவிட்டார் என்றும் ஒரு கதை இருக்கிறது. லாகூரில் உள்ள அனார்கலி நினைவு மண்டபத்தில் நாதிரா என்ற பெயர் காணப்படுகிறது. ஆகவே அது, நாதிராவின் நினைவாக சலீம் எழுப்பிய மண்டபம் என்றும் கூறப்படுகிறது.

அக்பரின் மூன்றாவது பிள்ளையும் பின்னாளில் ஜஹாங்கீர் என்ற பட்டத்துடன் ஆட்சி செய்தவருமான சலீம் குறித்து 'மொகல் இ ஆசாம்’ படத்தில் சொல்லப்படும் பல நிகழ்வுகள் கட்டுக்கதையே. அவை, வரலாற்றுக் குறிப்புகளைவைத்துப் பின்னப்பட்ட கதைகள் என்பதால், நிஜம்போலத் தோன்றுகின்றன. அக்பர் தனது ஆளுகைக்கு உட்பட்ட மன்னர்களுடன் இணக்கமான உறவைப் பேணுவதற்காக பல பெண்​களைத் திருமணம் செய்துகொண்டார். அதில் ஒருவர் ராஜபுதனத்தைச் சேர்ந்த ஜோதாபாய். அவருக்குப் பிறந்த பிள்ளைதான் சலீம். ஒரு மான்சப்​தராக தனித்து நிர்வாகம் செய்யும்படி இளவயதிலேயே சலீம் அனுமதிக்கப்பட்டு இருக்கிறான். 12 வயதில் காபூல் பகுதியின் தளபதியாக இருந்த அவனுக்குத் தனித்த அதிகாரம் வழங்கப்பட்டது. 16 வயதில் மன்பவாவதி என்ற ஆம்பர் இளவரசியைத் திருமணம் செய்து இருக்கிறான். அந்தப் பெண் சலீமின் தாய்வழி ராஜபுதனத்தைச் சேர்ந்தவள்.

மாமன்னர் ஜஹாங்கீராக சலீம் முடிசூட்டப்பட்ட பிறகு, அந்தப்புரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்​கள் இருந்தனர். ஜஹாங்கீர் 12 திருமணங்களைச் செய்து இருக்கிறார். அவற்றில், தனது 42-ம் வயதில் வங்காளத்தின் புர்த்வான் பகுதியின் கவர்னரான ஷேர்கானின் மனைவியான நூர்ஜஹானை வலுக்கட்​டாயமாகக் கவர்ந்து தனது அந்தப்புர அழகியாக்கி, பிறகு திருமணம் செய்துகொண்டார். ஆகவே, எந்த வயதில் அவர் அனார்கலியைக் காதலித்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஒருவேளை, அக்பரின் அந்தப்புர பெண்களில் ஒருத்தியாக அனார்கலி இருந்திருக்கலாம் என்​கின்றனர். அப்படி என்றால், அவள் சலீமைக் காதலித்த சம்பவம் உண்மையா என்ற அடுத்த கேள்வியும் எழுகிறது. அரண்மனைப் பெண்களில் இருந்த நாதிராதான் அனார்கலி, மெஹர்னிசா என்ற பெண்தான் அனார்கலி, ஷர்புனிசா என்ற பெண்தான் அனார்கலியாக குறிப்பிடப்படுகிறாள் என்று மூன்று விதக் கருத்துக்கள் நிலவுகின்றன.

அக்பரின் விருப்பத்துக்குரிய ஆசைநாயகியான அனார்கலியை, சலீம் விரும்பி இருக்கிறான். அது பிடிக்காமல் அவளை உயிரோடு புதைக்கும்படி அக்பர் உத்தரவிட்டார். இது, அப்பாவுக்கும் மகனுக்குமான போட்டி. மற்றபடி, அக்பர் காதலுக்கு எதிரி அல்ல என்று முகமது பஷீர் என்ற உருது ஆசிரியர் குறிப்பிட்டு இருக்கிறார்.

அனார்கலி பல்வேறு ரூபங்கள் எடுத்ததற்கு முக்கியக் காரணம் 'வில்லியம் பின்ஞ்ச்’சின் குறிப்புகளே. பின்வந்தவர்கள், அந்தக் குறிப்புகளை அப்படியே நகலெடுத்த காரணத்தால் அது உண்மைச் சம்பவமாக உருப்பெறத் தொடங்கியது. மேலும் நாடகமாக, திரைப்படமாக, நீள்கவிதையாக மக்கள் மனதில் அனார்கலி பதிந்துவிட்டதால் அது வரலாற்றின் பகுதியாக​வே மாறியது. ஓர் சாதாரண மனிதன் இன்று, மாமன்னர் அக்பரை நினைவுகொள்வதற்கு அனார்கலி கதை மட்டுமே காரணமாக இருக்கிறது. வரலாற்றில் புனைவு எவ்வளவு வலிமையானது என்பதற்கு இது ஒன்றே சரியான உதாரணம்.

எப்படி இறந்தார் புத்தர்?

அனார்கலி கதைக்காவது நினைவு மகால் ஒன்று சான்றாக இருக்கிறது. ஆனால், பன்றிமாமிசம் சாப்பிட்டு ஜீரணம் ஆகாமல் புத்தர் இறந்து​போனார் என்பதை நிரூபிக்க நேரடிப் பதிவான கல்வெட்டுக்​களோ, செப்பேடுகளோ எதுவும் கிடையாது. உயிர்க் கொலை​யை மறுக்கும் புத்த பிக்குகள் பன்றி மாமிசம் சாப்பி​டுவார்​களா? புத்தர், பன்றி மாமிசம் சாப்பிடக்​கூடியவரா? மாமிச உணவை உண்பது பௌத்த தர்மத்துக்கு எதிரானது இல்லையா? என்று பல கேள்விகள் எழக்கூடும்.

புத்த மதத்தில் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. ஒன்று ஹீனயானம். இந்தப் பிரிவினரின் கூற்றுப்படி, புத்தர் ஒரு அவதார புருஷர் அல்ல. அவர் ஓர் சாதாரண மனிதர். தனது நல்லொழுக்க நெறிகளின் மூலம் உயர்ந்த நிர்வாண நிலையை அடைந்து புத்த​ராக மாறியவர். ஆகவே, அவரது ஞானநெறியைப் பின்பற்றி வாழ்வதே இந்தப் பிரிவினரின் நோக்கம். இரண்டாவது பிரிவு மஹாயானம். இது, ஹீனயானத்​தில் இருந்து மாறுபட்டது. மஹாயானம் என்பதற்கு சிறந்த வழி அல்லது பெரிய வழி என்பது அர்த்தம். இந்தப் பிரிவினரின் கூற்றுப்படி, புத்தர் ஓர் அவதார புருஷர். புத்தரின் போதனைகளைத் தொகுத்து வாழ்வியல் அறமாக மாற்றி புதிய நியதி​களுடன் கட்டுப்பாடுகளுடன் புத்தத் துறவிகளாக வாழும் முறையை மஹாயானமே அறிமுகம் செய்து​வைத்தது.

சீனா, கொரியா, வியட்நாம், தய்வான், திபெத் முதலிய நாடுகளுக்கு மகாயானம் மிக வேகமாகப் பரவியது. மகாயான பௌத்தத்தில் இருந்தே தாந்த்ரீக பௌத்தமான வஜ்ரயான பௌத்தம் தோன்றியது. இது திபெத், பூட்டான், மங்கோலியா போன்ற இடங்களில் பரவிக் காலூன்றியது. மஹாயானமே, புத்தருக்கு சிலைகள்வைத்து வழிபடுவதை முதன்மையாக்கியது. ஹீனயானத்தைச் சேர்ந்தவர்களுக்கு சைவ உணவுக் கட்டுப்பாடு கிடையாது. மான், பன்றி, மாடு உள்ளிட்ட விலங்குகளின் மாமிசத்தைச் சாப்பிடலாம் ஆனால், தங்கள் உணவுக்காக விலங்குகளை வேட்டையாடிக் கொல்வதற்கு அனுமதி இல்லை. ஆனால், மஹாயானப் பிரிவில் உணவுக் கட்டுப்பாடு முக்கியமானது. அவர்களுக்கு மாமிச உணவைத் தவிர்க்க வேண்டும் என்பது கட்டாயம். புத்தர் காலத்தில், துறவிகள் மாமிசம் சாப்பிடுவது இயல்பான ஒன்றாகவே இருந்திருக்கிறது. 'ரிக்வேத கால ஆரியர்கள்’ என்னும் நூலில் ராகுல சாங்கிருத்தியாயன், ஆரியர்களில் மாமிசம் உண்ணாதவர்களே எவரும் இல்லை. பெரிய ரிஷிகள், முனிவர்களுக்கு விருந்து படைக்க மான் மற்றும் பசுவின் மாமிசம் மிகவும் அவசியமான ஒன்றாகும்’ என்று  குறிப்பிட்டு இருக்கிறார்.புத்தரின் கடைசி நாளைப்பற்றி பரிநிர்வாண சூத்திரத்தின் 16-வது சூத்திரம் குறிப்பிடுகிறது. அதன்படி, சுந்தா என்ற கொல்லனின் மாந்தோப்பில் புத்தர் தங்கியிருந்தார். புத்தருக்கு என்று பிரத்யேக உணவுகள் தயாரிக்கப்பட்டு இருந்தன. அதைத் தனக்குப் பரிமாறும்படி சுந்தாவைக் கேட்டுக்கொண்டார் புத்தர். சுந்தா பரிமாறிய உணவை ருசித்த புத்தர், உணவு கெட்டுப்போய் இருக்கிறது. அதை அப்படியே குழி தோண்டிப் புதைத்துவிடுங்கள் என்று கூறினார். உணவு முழுவதையும்  மண்ணுக்குள் புதைத்துவிட்டார் சுந்தா. சாப்பிட்ட சிறிது நேரத்துக்குள் புத்தர் வாந்தி எடுத்தார். கூடவே, வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது. சுந்தா தந்த உணவால்தான் தனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுவிட்டது என்று அவன் மனம் வருந்தக் கூடாது என்பதற்காக, தான் பரிநிர்வாணம் அடையும் நேரம் வந்துவிட்டது. ஆகவே, புத்தரது கடைசி உணவைத் தந்த பெருமை அவனுக்கு உண்டு என்று சொன்ன புத்தர், அடுத்த சில மணி நேரத்தில் ரத்த வாந்தி எடுத்து இறந்துபோனார். அப்போது அவருக்கு வயது 80 என்கிறது அந்தச் சூத்திரம்.

சுந்தா தந்த உணவு பன்றி மாமிசம். அது, புத்தருக்கு ஒப்புக்கொள்ள​வில்லை. ஆகவே, அவர் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு இறந்துவிட்டார் என்று இதற்கு விளக்கம் தருகிறார்கள். இது தவறான தகவல். புத்தர் உண்டது பன்றி மாமிசத்தை அல்ல. அவர் உண்டது காளான் உணவு. அதுவும் நச்சுத்தன்மை உடைய காளான். அவை,  காட்டில் பறிக்கப்பட்ட காளான்கள். காளானைச் சமைத்து உண்பது புத்தத் துறவிகளின் வழக்கம். அன்று, புத்தர் சாப்பிட்ட உணவும் காளானே. அது, கெட்டுப்போய்விட்டது என்பதால்தான் வேறு யாரும் சாப்பிட்டுவிடாமல் புதைத்துவிடும்படி புத்தர் சொல்லி இருக்கிறார். சூக்ரமாத்வா என்ற வார்த்தைக்கு பன்றிகள் விரும்பிச் சாப்பிடக்கூடியது என்பதுதான் அர்த்தம். ஆனால், சில வரலாற்று ஆய்வாளர்களால் பன்றி மாமிசம் என்று அர்த்தப்படுத்தப்பட்டுவிட்டது. அது, தவறு என்கிறார்கள் பௌத்தத் துறவிகள். பன்றி மாமிசம் சாப்பிட்டு, புத்தர் இறந்து போனார் என்பதை நிரூபிக்க நேரடிப் பதிவான கல்வெட்டுக்களோ, செப்பேடுகளோ எதுவும் கிடையாது.  19-ம் நூற்றாண்டில்தான் பாலி மொழியில் எழுதப்பட்ட புத்த சூத்திரங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அப்போதுதான், இந்தச் சர்ச்சை மேலோங்கத் தொடங்கியது. அதுவரை, புத்தர் பன்றி மாமிசம் சாப்பிட்டாரா, இல்லையா என்ற கேள்வி இந்தியாவிலும் மேற்குலகிலும் முக்கியமாகக் கருதப்படவே இல்லை. இவ்வளவு ஏன்... சீனாவில் எழுதப்பட்ட எந்த புத்த நூலிலும் இப்படியான ஒரு சம்பவமே இடம்பெறவில்லை. உணவு ஒவ்வாமையால் புத்தர் இறந்தார் என்றுதான்  சீன பௌத்த நூல்கள் குறிப்பிடுகின்றன.

புத்தம் தழைத்தோங்கி இருந்த காலத்தில், இந்தியா முழுவதும் துறவிகள் முழுமையான சைவ உணவுப் பழக்கத்தைத்தான் கைக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எவ்விதமான உணவை யாசகம் பெறலாம் என்பதற்கான குறிப்புகளில் நெய், காய்கறிகள், தேன், அரிசி, ஊறவைத்த பயறு வகைகள், பழங்கள், தயிர், கரும்புச் சாறு, தானியங்கள், பால் முதலியவையே இடம்பெற்று இருக்கின்றன. புத்தர் என்ன உணவுகளைச் சாப்பிட்டார் என்ப​தைப் பற்றி 'சுத்த விபாங்கம்’ உள்ளிட்ட பல நூல்களில் தகவல்கள் காணப்படுகின்றன. பாலில் வேகவைக்கப்பட்ட அரிசி, பார்லி கஞ்சி, வேகவைக்​கப்பட்ட சோளம், மாம்பழத் துண்டுகள் கலந்த சோறு, அவித்த காய்கறிகள், தேன் போட்டுப் பிசைந்த மாவு உருண்டைகள், வேகவைத்த மாமிசம், உலர்ந்த பழங்கள், தயிர், நெய், பழச் சாறுகள், குருணைக் கஞ்சி போன்றவையே அந்த நூல்களில் இடம் பெற்றுள்ளன. அவர், பன்றி மாமிசம் சாப்பிட்​டதைப்​பற்றி வேறு எந்த நூலிலும் ஒரு தகவலும் கிடையாது.

ஆகவே, புத்தர் பன்றி மாமிசம் சாப்பிட்டுஇறந்து​போனவர் என்பதை இகழ்ச்சியான ஒரு குற்றச்சாட்​டாக உருமாற்றியது அன்றைய அரசியல் காரணங்களே. மற்றபடி, அவர் சாப்பிட்டது காளானா இல்லை பன்றி மாமிசமா என்பதைத் தெளிவாக்க இன்றும் எவராலும் முடியவில்லை. புத்தர் எப்படி இறந்தார் என்பது முக்கியம் இல்லை. எப்படி வாழ்ந்தார்? என்ன போதித்தார்? அதை ஏன் நாம் கைவிட்டோம் என்பதுதான் முக்கியம். இன்று, அதைப்பற்றி எந்த விவாதமும் இந்தியாவில் நடக்கவில்லை என்பது ஆதங்கமாகவே இருக்கிறது.

1 comment:

  1. சிறப்பான பகிர்வு... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete