Search This Blog

Tuesday, March 15, 2011

பிராண்டிங் - வளர்ந்த கதை!

பிராண்டிங் - கடந்த நூறு ஆண்டுகளுக்குள்தான் இந்த கான்சப்ட் உருவாகி வளர்ந்திருக்க வேண்டும் என்று நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். காரணம், இன்றிருக்கும் தொழிற்துறையானது கடந்த நூறாண்டுகளில்தான் மிகப் பெரிய வளர்ச்சி கண்டிருக்கிறது. ஆனால் பிராண்டின் வரலாறு மிகப் பழமையானது.

'பிராண்டிங்’ என்ற சொல்லுக்கு ஆரம்ப காலத்தில் 'எரியூட்டும்’ அல்லது 'சூடான’ என்கிற ஒரு அர்த்தமும் இருந்திருக் கிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் தங்களிடமுள்ள மாடுகள், ஆடுகள், குதிரைகள், நாய்கள் ஆகியவற்றைத் தங்களுடையவை என்று நிலைநாட்டும் பொருட்டு ஏதாவது ஒரு முத்திரையைப் பதித்து வந்தார்கள். பழுக்கக் காய்ச்சிய சுடுகோலால் இடப்பட்ட குறிதான் ஆதிகாலத்தில் 'பிராண்டிங் லோகோ’வாகக் கருதப்பட்டது.    

கி.மு. 3000 முதல் கி.மு. 2250 வரையிலான காலகட்டத்தில் சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த மக்கள், தாங்கள் உருவாக்கிய மண்பாண்டங்கள், உலோகப் பொருட்கள், ஆபரணங்கள் ஆகியவற்றில் தங்களுடைய தனி முத்திரையைப் பதித்து பிராண்டிங் செய்து வந்தது அகழ்வாராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. தங்களின் தனித்தன்மையினை நிலை நிறுத்தும் வகையில் தாங்கள் உருவாக்கிய உலோகப் பொருட்கள் மற்றும் மண்பாண்டப் பொருட்களில் விலங்கு உருவங்கள், சில வகையான குறியீடுகள் போன்றவற்றை அடையாளமாகப் பயன்படுத்தியுள்ளனர்.

கி.மு. 1000 முதல்  250 வரையிலான காலகட்டத்தில் கிரேக்கர்களும், ரோமானியர்களும் வீட்டு உபயோகப் பொருட்களில் மட்டுமின்றி, ஆயுதங்கள், உணவுப் பொருட்கள், வீடு கட்டும் கற்கள் போன்ற பலவற்றிலும் தங்களது முத்திரையைப் பதிக்க ஆரம்பித்தனர். இதே ரீதியிலான தனிமுத்திரைகள் எகிப்து, பாபிலோன் போன்ற பகுதிகளிலும் காணக் கிடைக்கின்றன.


ரோமானிய சாம்ராஜ்யத்தில் மிகவும் பிரசித்தி பெற்றிருந்த பாம்பி (Pompeii) நகரம் கி.பி.79-ல், வெசூவியஸ் எரிமலை வெடித்துச் சிதறியதில் முற்றிலுமாக அழிந்து புதையுண்டு போய்விட்டது. அங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அந்தக் காலகட்டத்திலேயே 'பிராண்டிங்’  உத்தி பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. அப்போது பயன்படுத்தப்பட்டு வந்த ஒயின் ஜாடிகளில் குறிப்பிட்ட முத்திரை பெருவாரியான ஜாடிகளில் காணக் கிடைத்ததால் அதுவே ஒரு வகை 'பிராண்டிங்’ உத்தியாகப் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

18-ம் நூற்றாண்டில் பிரிட்டனைச் சேர்ந்த மதுபானம் தயாரிக்கும் கம்பெனியான 'பாஸ் அண்ட் கோ’ சிவப்பு முக்கோணத்தை தனது பொருட்களுக்கான பிராண்ட் லோகோவாகப் பயன்படுத்தி வந்துள்ளது. தேயிலை, காபி பொருட்கள், குளிர்பானங்கள், சோப்புகள், டிடர்ஜென் டுகள், ஓட்ஸ் என சகலவித மான பொருட்களுக்கும் பிராண்டிங் உத்தி பயன்பட ஆரம்பித்தது.
கி.பி. 1600 முதல்  1800-ம் ஆண்டு வரை குற்றவாளிகளின் முகங்களில், கைகளில், முதுகுகளில் எழுத்தையோ, குறியீடையோ சூடுக்கோலால் அச்சிட்டு பிராண்ட் செய்வதும் வழக்கத்தில் இருந்துள்ளது. அதிலும், விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகளை இவ்விதத்தில் பிராண்ட் செய்து வந்துள்ளனர். இந்த முத்திரைகளை வைத்தே அவர்கள் என்ன வகையைச் சேர்ந்தவர்கள் என்பதை மற்றவர்கள் எளிதாக அறிந்துகொண்டனர். 1925-ம் ஆண்டு முதலே ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நன்றாகச் செயல்பட்டுவந்த அனைத்து நிறுவனங்களும் தங்களுடைய தயாரிப்புகளை மிகப் பெரிய 'பிராண்ட்’-ஆக மாற்ற ஆரம்பித்தன.  அன்றைய 'ஃபோர்டு’ முதல் இன்றைய 'ஆப்பிள்’ வரை, அனைத்துமே இவ்விஷயத்தில் மிகத் தெளிவாக இருக்கின்றன. காரணம், இன்றைய தேதியில் 'பிராண்டிங்’ என்பது ஒரு பொருளின் தரத்தோடு சம்பந்தப்பட்ட விஷயமாக மாறியிருக்கிறது. ஒரு பொருளின் நம்பகத்தன்மையை, வாடிக்கையாளர்கள் மத்தியில் அது பிடித்திருக்கும் இடத்தை அளந்து சொல்லும் ஒரு விஷயமாக ' பிராண்ட்’ என்பது மாறியிருக்கிறது.

கோடிகளைக் குவிக்கும் பிராண்டுகள்!


 Coca - Cola இளமையின் ஃபார்முலா

பார்த்தால் சாதாரண கூல்டிரிங்க்ஸ்தான். ஆனால் அதன் சுவை உலகத்தையே கட்டிப்போட்டு வைத்திருக்கிறது, அதுவும் தலைமுறை தலைமுறையாக! ஆரம்பித்து இருநூறு வருடங்கள் தாண்டிவிட்டாலும் இன்றைக்கும் அதுதான் இளைஞர்களின் அடையாளமாக இருக்கிறது.

1800-களின் பிற்பகுதியில் அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத் தில்தான் கோக் முதலில் உற்பத்தி செய்யப்பட்டது. ஜான் பெம்பர்டன் என்பவர்தான் 'கோகோ ஒயின்’ என்கிற பெயரில் ஒருவகையான மதுபானத்தை முதலில் உருவாக் கினார். பிறகு ஆல்கஹால் கலக்காமல் இந்தப் பானம் தயார் செய்யப்பட்டது. இது ஒற்றைத் தலைவலி, டிஸ்பெப்சியா (நமக்கு அடிக்கடி வர்ற வயித்துவலிதான்!) உள்ளிட்ட பல நோய்களைத் தீர்க்கும் என்று பெம்பர்டன் கூறியதால் விற்பனை பெருகியது. 

பிறகு இந்தப் பானத்தின் தயாரிப்பு உரிமையை கிரிக்ஸ் கேண்ட்லர் என்பவர் விலைக்கு வாங்கினார். ஆனால், 1888-களில் கிரிக்ஸ் கேண்ட்லரின் நிறுவனம் தவிர வேறு இரு நிறுவனங்களும் கோகோ கோலா ஃபார்முலாவை வாங்கி இருந்தது. போதாக் குறைக்கு பெம்பர்டனின் மகன் சார்லியும் அந்தப் பானத்தைத் தயாரிக்கும் வேலையில் இறங்கியிருந்தார். 'கோகோ கோலா’ என்ற பெயரின் உரிமை சார்லிக்குத்தான் சொந்தம் என்று பெம்பர்டன் திடீரென்று அறிவிப்புச் செய்ய, கேண்ட்லரின் விற்பனையில் மண் விழுந்தது. வேறுவழியின்றி பெரும் விலை கொடுத்து 'கோகோ கோலா’ என்ற பெயருக்கான உரிமையை கேண்ட்லர் வாங்கினார்.

அதன்பிறகு கேண்ட்லர் 'தி கோகோ கோலா கம்பெனி’ என்ற புதிய நிறுவனத்தை 1892-ம் ஆண்டு நிறுவினார். தனது அசாதாரணமான வியாபார, விளம்பர உத்திகளால் உலகெங்கும் தனது தயாரிப்பை எடுத்துச் சென்றார். கடந்த நூறு ஆண்டுகளில் இந்த நிறுவனம் அடைந்தது போன்றதொரு வளர்ச் சியை மிகச் சில நிறுவனங்கள் மட்டுமே அடைந்திருக்கிறது. இன்று கோகோ கோலா பானத்தின் எஸென்ஸ் மட்டுமே தாய் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு, உலகெங்கும் வியாபித்துள்ள கிளை நிறுவனங் களுக்கு அனுப்பப்பட்டு, பானங்கள் தயாரிக்கப்படுகிறது. இப்போது வரை கோக் தயாரிக்கும் ஃபார்முலாவை படுரகசியமாக வைத்திருக்கிறது கோக் நிறுவனம். கோக் என்ற பிராண்ட் மக்கள் மனதில் பதிய பல காரணங்கள் உண்டு. பிரத்யேகமான அதன் சுவை, பாட்டில் அமைப்பு, அதன் நிறம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

இருட்டில்கூட இந்த பாட்டிலின் வடிவத்தைக் கொண்டு இது கோக் பாட்டில் என்று மக்கள் உணரும் அளவுக்குக் கவனமாக இந்த பாட்டில் வடிவமைக்கப்பட்டது. 1941-ல் கோக் என்கிற பெயர் அந்த நிறுவனத்தின் அனைத்து வகையான பானங்களுக்கும் பொதுப் பெயராக ஆக்கப்பட்டது. இதன்பிறகே அமெரிக்காவைத் தாண்டியும் அகில உலகம் முழுக்க பரவ ஆரம்பித்தது கோக்.   

குடிக்கும் முன் கீழே கொடுத்து உள்ள லிங்கை பார்க்கவும் :
coke formula
http: en.wikipedia.org wiki Coca-Cola_formula  

மக்களிடம் பிரசித்த பெற்ற  பிராண்டு பற்றி அலசுவோம் 

கம்ப்யூட்டர் முதல் ஐபாட் வரை! 

 ஸ்டீவ் ஜாப்ஸ்  மற்றும் ஸ்டீவ் வோஸ்நியாக் (Steve Wozniak) இருவரும் சேர்ந்து உருவாக்கியதுதான் ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ். ஒரு நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்று தோன்றியதே தவிர, என்ன பெயர் வைக்க வேண்டும் என்று இருவ ருக்குமே தோன்றவில்லை. சில காலம் பெயர் இல்லாமலே நிறு வனத்தை நடத்தி வந்தார்கள். பிறகு ஒரு நாள் இருவரும் காரில் பயணம் செய்த போது ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு தோன்றிய பெயர்தான் ஆப்பிள்.

இவர்கள் நிறுவனத்தை ஆரம்பித் தாலும்கூட, இதைத் தவிர்க்க முடியாத பிராண்டாக மாற்றிய பெருமை, ஜான் ஸ்கல்லே (John Sculley) என்பவரையே சேரும். பெப்சி நிறுவனத்திலிருந்து 1983-ம் ஆண்டு வெளியேறி ஆப்பிள் கம்ப்யூட்டரில் சேர்ந்தார் ஸ்கல்லே. இது டெக்னாலஜி கம்பெனியாக இருந்தாலும் ஜானின் மார்க்கெட்டிங் யுக்தியால் தான் வெற்றியடைந்தது. மார்க்கெட்டிங் செய்வதற்காக அதுவரை 10 மில்லியன் டாலர்கள் செலவழித்துவந்த இந்த நிறுவனம், இவர் வேலைக்குச் சேர்ந்தபிறகு 100 மில்லியன் டாலர்களை பிராண்ட் புரமோஷனுக்காகச் செலவு செய்தது. புதிய புராடக்ட்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை பிராண்ட் புரமோஷனுக்கும் கொடுத்தது இந்த நிறுவனம். ஒருவேளை இந்நிறுவனத்தை ஒரு பிராண்டாக மாற்றவில்லை என்றால் இந்நேரம் ஆப்பிளே இருந்திருக்காது. இப்படிச் சொல்லி இருப்பவர் 'எமோஷனல் பிராண்டிங்’ புத்தகத்தின் ஆசிரியர் மார்க் கோப் (Marc Gobe).


நிறுவனத்தை ஆரம்பிப்பதை விட முக்கியம் அதை பிராண்டாக மாற்றுவது!

நம்பிக்கையின் மறுபெயர்! - டாடா!

வெள்ளைக்காரன் காலத்திலேயே இந்தியாவில் தொடங்கப்பட்ட கம்பெனிகளில் இன்றும் டாப்பில் இருப்பது டாடா நிறுவனம். இதன் சமீபத்திய தயாரிப்பான நானோ காரை பற்றி உலகமே வியந்து பேசியது.

1877-ல் 'எம்ப்ரஸ் மில்’ என்கிற பெயரில் நாக்பூரில் தொடங்கப்பட்ட தொழிற்சாலைதான் டாடாவின் முதல் பெரிய தொழிற்சாலை. ஆனால் இன்றோ மின் உற்பத்தி, கார் தயாரிப்பு என 80-க்கும் மேற்பட்ட தொழில்களில் இறங்கி கலக்குகிறது. விலை அதிகமான இரும்பை தயார் செய்யும் அதே நேரத்தில், விலை குறைவான காபி, டீ, உப்பு போன்ற பொருட்களையும் தயார் செய்கிறது. இதனால் டாடாவின் பிராண்டுகள் புகாத வீடுகளே இந்தியாவில் இல்லை. டாடாவின் தயாரிப்புகள் அதிக அளவில் விற்பனையாகக் காரணம், அதன் தரம். கடந்த நூறு ஆண்டு வரலாற்றில் அந்த நிறுவனம் தயாரித்த எந்தப் பொருளும் சோடை போனதில்லை என்பது வாடிக்கையாளர்களின் கருத்து. பொருட்களை நிறைய விற்க வேண்டும் என்று நினைக்கிற அதே நேரத்தில் இந்தியாவின் பல நகரங்களில் சேவை மையங்களை அமைத்து, வாடிக்கையாளர்களின் குறைகளையும் நிவர்த்தி செய்து வருகிறது. கைக்கடிகாரங்களின் சந்தை வீழ்ந்திருந்த நேரத்தில் தைரியமாக வாட்ச் தயாரிப்பில் இறங்கியது. ஜோடி வாட்ச்களை தயாரித்து வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது இதன் சிறப்பம்சம். இதனால் டாடாவின் தயாரிப்புகளுக்கு எப்போதும் மக்களிடம் மவுசு அதிகம்தான். 

No comments:

Post a Comment