Search This Blog

Thursday, August 02, 2012

ஒலிம்பிக்ஸில் இந்தியா

 
120 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா, ஒலிம்பிக் போட்டிகளில் இருக்கும் இடம் தெரியாது. பதக்கப் பட்டியலில் கடைசி வரிசையில்தான் இடம்பிடிக்கும். திறமைக்குப் பஞ்சமில்லை என்றாலும் ஏனோ இந்திய வீரர்களுக்கு எப்போதும் ஒலிம்பிக் பதக்கம் என்பது எட்டாக்கனிதான். இதையும் தாண்டி, ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக முத்திரை பதித்திருக்கிறார்கள்.இந்தியாவின் முதல் ஒலிம்பிக் பதக்கமே சர்ச்சைக்குரியது. இந்தியா, 1900 பாரிஸ் ஒலிம்பிக்ஸில், நார்மன் பிச்சர்ட் என்ற ஆங்கிலேய வீரரை அனுப்பியது. அவரும் அத்லெடிக்கில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றார். ஆனால், நார்மன் இங்கிலாந்து சார்பாக கலந்துகொண்டதாக ஒரு சர்ச்சை பின்னால் கிளம்பியது. 1908க்குப் பிறகுதான் விளையாட்டு வீரர்கள், ஒரு நாட்டின் சார்பாக ஒலிம்பிக்ஸுக்கு அனுப்பப்பட்டார்கள். அதற்கு முன்புவரை, வீரர்கள் தங்கள் விருப்பத்துடன் கலந்துகொண்டதால், நார்மனின் சாதனைக்கு இங்கிலாந்தும் உரிமை கோருகிறது. ஆனால், ஒலிம்பிக் ஆவணங்களில், நார்மன் இந்தியராகவே குறிப்பிடப்பட்டுள்ளார். அதன்பிறகு 1920 பெல்ஜியம் ஒலிம்பிக்ஸில்தான், ஒரு குழுவை அனுப்பியது இந்தியா. 5 இந்திய வீரர்கள் கலந்து கொண்ட அந்த ஒலிம்பிக்ஸில் இந்தியா ஒரு பதக்கமும் பெறவில்லை. 1928 ஆம்ஸ்டர்டம் ஒலிம்பிக்ஸில், இந்திய ஹாக்கி அணி தம் முதல் தங்கப் பதக்கத்தை வென்றது. அதற்குப் பிறகு, அடுத்த ஆறு ஒலிம்பிக்ஸிலும் இந்திய ஹாக்கி அணி தங்கத்தை மட்டுமே வென்றது. அதற்குப் பிறகு, இரண்டு ஒலிம்பிக்ஸ்களில் தங்கம் வென்று, எட்டு முறை முதலிடம் பிடித்தது. கடைசியாக 1980 மாஸ்கோ ஒலிம்பிக்ஸில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றது. அதற்குப் பிறகு 28 வருடங்கள் கழித்து, முதல்முறையாகத் தனி நபராக இந்தியாவுக்குத் தங்கம் வாங்கித் தந்தார் அபினவ் பிந்திரா.
 
1980க்கு முன்னால், ஹாக்கி அணி பெற்றுக்கொடுத்த பதக்கங்களைத் தவிர, இந்தியாவுக்கு 1952 ஒலிம்பிக்ஸில் மல் யுத்தத்தில் கே.டி. ஜாதவ் ஒரு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார். ஒலிம்பிக்ஸில், முதல் பதக்கம் பெற்ற இந்தியர் என்ற பெருமையை அடைந்தார். 1980க் குப் பிறகு அடுத்த மூன்று ஒலிம்பிக்ஸ்களில் இந்தியா ஒரு பதக்கமும் பெறவில்லை. இந்திய ஹாக்கி அணியின் தரமும் இந்தக் காலகட்டத்தில் குறைந்து, மற்ற அணிகளோடு போட்டி போட முடியாத நிலை ஏற்பட்டது. 1996, 2000 ஒலிம்பிக்ஸ்களில் லியாண்டர் பெயஸ், கர்ணம் மல்லேஸ்வரி ஆகியோர் வெண்கலப் பதக்கங்களையும் 2004ல் ரதோர் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றார்கள். பீஜிங் ஒலிம்பிக்ஸில்தான் இந்திய அணி அதிக பதக்கங்களைப் பெற்றது. ஒரு தங்கமும் இரண்டு வெண்கலப் பதக்கங்களும் கிடைத்தன.
இதனால் லண்டன் ஒலிம்பிக்ஸில் இந்திய அணி அதிக பதக்கங்களைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்தியா, லண்டன் ஒலிம்பிக்ஸுக்காக 260 கோடி ரூபாயைச் செலவழித்துள்ளது.

முதல் எதிர்பார்ப்பு சானா மீது. பீஜிங்கில் காலிறுதியில் தோற்ற பிறகு நிறைய முன்னேறியிருக்கிறார். தர வரிசைப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார் சானா (முதல் ஐந்து இடங்களில் நான்கு பேர் சீனப் பெண்கள்). 2010ல் ஐந்து போட்டிகளில் முதலிடம் பிடித்தார் சானா (காமன்வெல்த் போட்டிகளில் தங்கம்). இந்தக் காலகட்டத்தில், உலகின் இரண்டாம் நிலை வீரராக முன்னேறினார் சானா. இந்த வருடம் 3 போட்டிகளை வென்று லண்டனுக்குப் பிரமாதமாகத் தம்மைத் தயார்படுத்தியுள்ளார் சானா.

அடுத்த நம்பிக்கை நட்சத்திரம் 29 வயதான மேரி கோம். உலக சாம்பியன் குத்துச்சண்டைப் போட்டியில் 5 முறைசாம்பியன் பட்டம் வென்றுள்ள இவர், 51 கிலோ எடைப் பிரிவில் ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பங்கேற்கிறார். மேரி கோம் மணிப்பூரைச் சேர்ந்தவர். ஒலிம்பிக்ஸில் குத்துச்சண்டை பிரிவில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள ஒரே இந்திய வீராங்கனை அவர்தான்.

டென்னிஸில், இந்த முறை நிறைய சர்ச்சைகள் ஏற்பட்டாலும், பதக்கம் கிடைக்கும்போது அத்தனை காயங்களும் மறைந்துவிடும். லியாண்டர், பூபதி,சானியா, பொபன்னா போன்றோர் என்ன சாதிக்கப்போகிறார்கள் என்று நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது.

பீஜிங்கில் தங்கம் வென்ற அபினவ் பிந்திரா சென்றமுறை எந்த வொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்று தங்கம் வென்றார். ஆனால், இந்த முறை தங்கத்துக்குக் குறைவாக என்ன பதக்கம் வென்றாலும் அவருக்குத் தோல்விதான். அந்தளவுக்கு ரசிகர்கள் அவர்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அபினவ், ககன் நரங், ரஞ்சன் சிங் சோதி, மனவ்ஜித் சிங் சோதி என பலமான அணி லண்டனுக்குச் சென்றிருக்கிறது.

குத்துச் சண்டையில் விஜேந்த்ர் சிங் மட்டுமல்லாமல்,ஜெய்பக்வான், தேவேந்ரோசிங் போன்ற வீரர்களாலும் பதக்கம் வெல்ல வாய்ப்புண்டு. லண்டன் ஒலிம்பிக்ஸில், தமிழகத்தைச் சேர்ந்த ட்ரிபிள் ஜம்ப் வீரரான ரஞ்சித் மகேஸ்வரி கலந்துகொள்கிறார். வட்டு எறிதல் வீராங்கனையான கிருஷ்ண பூனியா, சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் தங்கம் வென்ற தீபிகா குமாரியும் லண்டனில் கவனத்தை ஈர்க்கக்கூடும்.

 

1 comment: