Search This Blog

Friday, October 28, 2011

புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை

மனித குலத்துக்குச் சவாலாக இருக்கும் நோய்களில் ஒன்று, புற்று நோய்! 'யாருக்கு வேண்டுமானாலும்... எப்போது வேண்டுமானாலும் வரலாம்’ என்று மிரட்டிவரும் புற்று நோய்க்கு மருத்துவத் துறையின் நவீன வளர்ச்சியால் பல்வேறு சிகிச்சை முறைகள் கண்டுபிடிக்கப் பட்டு வருகின்றன. அதில் லேட்டஸ்ட், ரேப்பிட் ஆர்க் எனப்படும் கதிர் வீச்சு சிகிச்சை முறை. 
புற்று நோயைப் பொறுத்தவரை அறுவை சிகிச்சை, கதிர் வீச்சு, கீமோதெரபி என மூன்று வகையான சிகிச்சை முறைகள் இருக்கின்றன. இதில் கதிர்வீச்சு சிகிச்சை மிகவும் பயன் அளிக்கக்கூடியது. தற்போது ஐ.எம்.ஆர்.டி. (IMRT), ஐ.ஜி.ஆர்.டி. (IGRT), எஸ்.ஆர்.டி. (SRT), வி.எம்.ஏ.டி.  (VMAT) போன்ற கதிர்வீச்சு சிகிச்சை முறைகள் உள்ளன. இந்த சிகிச்சைகள் தினமும் 15 முதல் 30 நிமிடங்களுக்கு சுமார் ஆறு வாரங்கள் வரை அளிக்கப்படுகிறது. ஆனால், தற்போது வந்திருக்கும் ரேப்பிட் ஆர்க் சிகிச்சையின் மூலம் முன்பைவிட பல மடங்கு துல்லியமாகவும் வேகமாகவும் சிகிச்சை அளிக்க முடியும்.இந்த சிகிச்சையானது லினாக் இயந்திரம் மூலம் தரப்படுகிறது. புற்று நோயாளியை முதலில் சி.டி., எம்.ஆர்.ஐ. அல்லது பெட் ஸ்கேன் செய்து, புற்று நோயின் தன்மை, நிலை, பரவிய அல்லது பரவக்கூடிய இடங்கள் ஆகியவற்றைக் கண்டறிவோம். பின்னர் சிகிச்சை முறை வடிவமைக்கப்பட்டதும், நோயாளிக்கு ரேப்பிட் ஆர்க் சிகிச்சையைத் தொடங்குவோம்.
நோயாளியை லினாக் இயந்திரத்தின் கீழே படுக்கவைப்போம். பிரத்யேகமாக வடிவமைக்கப் பட்ட கருவிகள் மூலம் உடல் அசையாமல் பிடித்துக்கொள்ளப்படும். அந்த இயந்திரத்தில் உள்ள ஸ்கேன் கருவி, நோயாளியைப் படம் பிடிக்கும். அந்தப் படத்தைக்கொண்டு புற்று நோயால் பாதிக்கப்பட்ட திசுக்கள் மட்டும் கண்டறியப்படும். அந்தப் பகுதிக்கு மட்டும் கதிர் வீச்சு செல்லுமாறு கம்ப்யூட்டர் மூலம் சிகிச்சை வடிவமைக்கப்படும்.கதிர் வீச்சு செல்லும் இடமும், புற்று நோய்க் கட்டி இருக்கும் இடமும் மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், பாதிக்கப்பட்ட பகுதியைச் சுற்றிலும் அதாவது 360 டிகிரி கோணத்தில் கதிர் வீச்சு செலுத்தப்படும்.முந்தைய சிகிச்சையில் ஒரே பக்கத்தில் இருந்து கதிர் வீச்சு செலுத்தப்படும். அதனால் புற்று நோய் பாதிப்புள்ள திசுவுடன் சேர்ந்து நல்ல திசுவும் ஓரளவு பாதிக்கப்படும் வாய்ப்பு இருந்தது. அதனால் நோயாளிக்கு கூடுதல் பாதிப்பும் வேதனையும் ஏற்படும். ஆனால், இந்த ரேப்பிட் ஆர்க் சிகிச்சை முறையில் அந்த பாதிப்புக்கு சிறிதும் இடம் இல்லை. இரண்டு அல்லது மூன்று நிமிடங்களிலேயே இந்த சிகிச்சை முடிந்துவிடுகிறது.
பொதுவாக கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கும்போது, நீண்ட நேரம் படுத்திருப்பதால் நோயாளியின் உடல் அசையவும், அதனால் நோய் இருக்கும் இடத்தைத் தாண்டி நல்ல திசுக்கள் மீதும் படுவதற்கு வாய்ப்புகள் இருந்தன. ஆனால், இந்த ரேப்பிட் ஆர்க் சிகிச்சை மிகக் குறுகிய காலத்திலேயே முடிந்துவிடுவதாலும், உடல் அசையாமல் பிடித்துக் கொள்ளப்படுவ தாலும் நோயாளியின் உறுப்புகள் அசைவதற்கான வாய்ப்புகள் முற்றிலும் இல்லை. இது தவிர ஸ்கேட்டரிங் எனப்படும் கதிர் சிதறலும் மிகக் குறைவான அளவிலேயே இருக்கிறது. இது போன்ற காரணங்களால் நல்ல திசுக்கள் சிறிதளவும் பாதிப்புக்கு உள்ளாவது இல்லை.இந்த ரேப்பிட் ஆர்க் கதிர்வீச்சை, ரத்தப் புற்று நோய் தவிர்த்து மற்ற அனைத்து வகையான புற்று நோய்களுக்கும் அளிக்க முடியும். மற்ற கதிர்வீச்சு சிகிச்சைகளைப் போலவே இந்த சிகிச்சையும் நான்கு முதல் ஆறு வாரங்களுக்குத் தரப்படும். நோயின் தன்மையைப் பொறுத்து, சிகிச்சைக்கான காலம் குறையவும் வாய்ப்பு உண்டு. மிகக் குறுகிய நேரத்தில் துல்லியமாக சிகிச்சை அளிக்கும் இந்த சிகிச்சையால் நோயாளிக்குப் பக்க விளைவுகள் இல்லாமல் போகிறது.
புற்று நோய் சிகிச்சை நிபுணர் சுப்ரமணியன்
வி.எஸ். மருத்துவமனை

1 comment:

  1. "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் " இந்த வரியின் முழுமையான அர்த்தம் இந்த காலங்களில் தான் புரிகிறது

    ReplyDelete