Search This Blog

Sunday, October 16, 2011

ரிப்பன் பில்டிங் யாருக்கு?


காட்சி 1: சிந்தாதரிப்பேட்டை கூவம் ஆற்றை ஒட்டின ஏரியா. வறுமையில் உழலும் மக்கள் வாழும் பகுதி. உங்களை நாடி... உங்கள் வீட்டைத் தேடி வோட்டு கேட்க வருகிறார் சமூகத் தொண்டர் சைதை துரைசாமி," என்று மைக் அலறுகிறது. கிட்டத்தட்ட 200 மோட்டார் பைக்குகள், நான்கைந்து கார்கள் பின் தொடர , டாடா சுமோவில் வாக்கு கேட்டு வருகிறார். கண் சிமிட்டுவதற்குள் ஒரு பெரிய கும்பல் அவரைச் சுற்றிக் கூடிவிடுகிறது. இது அரசியல் மாற்றத்துக்கான தேர்தல் அல்ல. அம்மாவின் திட்டங்களை உங்களுக்குக் கொண்டு வர அம்மாவின் வேட்பாளரான என்னை ஆதரியுங்கள். சென்னையை உண்மையாகவே சிங்காரச் சென்னையாகவே மாற்றிக் காட்டுவார் அம்மா," என்று முடிக்க கண்ணைக் கூச வைக்கும் அளவுக்கு வெளிச்சத்தை உமிழ்ந்தவாறு அடுத்த பாயின்ட்டுக்கு விரைகிறது கார். அ.தி.மு.க. எனக்குப் பிடிக்காதுங்க. ஆனா, துரைசாமி நல்ல மனுஷன்," என்கிறார் ஆட்டோ ஓட்டுனரான சூசை.


காட்சி 2: மயிலாப்பூர் ரயில்வே நிலையத்தை ஒட்டின பல்லக்கு மாநகர். குடிசை மாற்று வீடுகள் உள்ள பகுதி. நெருக்கடியான சந்துகள். ஒரு ஜீப்பில் வோட்டு கேட்டபடியே செல்கிறார் மா. சுப்பிரமணியம். அ.தி.மு.க. பிரசாரத்தில் காணப்படும் ஆரவாரமும் எழுச்சியும் மிஸ்ஸிங். மா.சு.வை பின் தொடரும் கழக உடன்பிறப்புகளின் முகத்தில் உற்சாகம் இல்லை. மாநகராட்சிப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தி, தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்தினோம். மாநகராட்சி மருத்துவ மனைகளை தனியார் மருத்துவ மனைகள் போன்று மாற்றியிருக்கிறோம். போக்குவரத்து நெருக்கடியை நீக்க ஒன்பது மேம்பாலங்கள் கட்டப்பட்டிருக்கின்றன..." என்று தமது ஐந்தாண்டு சாதனைகளைப் பட்டியலிடுகிறார் மா.சு. ரொம்ப நல்ல மனிதர் சார். ஆனால், மோசமான கட்சியில் இருக்கிறார்," என்கிறார் மெக்கானிக் வாசு.


சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் இதுதான் நிலைமை. தி.மு.க., அ.தி.மு.க., இரண்டின் சார்பிலும் நிற்க வைக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் பற்றி மக்களுக்கு மிக நல்ல அபிப்ராயமே இருக்கிறது. இவர்களைத் தவிர தே.மு.தி.க. சார்பில் வேல்முருகன், பா.ம.க. சார்பில் ஏ.கே. மூர்த்தி, காங்கிரஸ் சார்பில் சைதை ரவி என்று 32 பேர் களத்தில் நிற்கிறார்கள். போட்டி என்னவோ சைதையாருக்கும், மா.சு.வுக்கும்தான். கூட்டணி இன்றி தனி மரமாக வாக்கு கேட்கும் பா.ம.க ஏ.கே. மூர்த்திக்கு இது புது அனுபவம்தான். இவர் ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது, செய்த பணிகளைச் சொல்லிக் கேட்கிறார். ஐநூறு சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட சென்னை மாநகராட்சிப் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சைதை ரவியைத் தேட வேண்டியதாக இருக்கிறது. 106வது வட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் சுரேஷ்பாபு, ரொம்பக் காலத்துக்குப் பிறகு தனியா போட்டியிடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கட்சியின் இருப்பைச் சொல்ல வேண்டாமா?" என்கிறார்.  மயிலைப் பகுதியில் கராத்தே தியாகராஜனின் உழைப்பு காரணமாக காங்கிரஸ் போட்டியில் இருப்பதும் தெரிகிறது. தி.மு.க.- அ.தி.மு.க.வுக்கு அடுத்த படியாக பளிச்செனத் தெரியும் பிரசாரம் தே.மு.தி.க.வின் பிரசாரம்தான். விஜயகாந்த் சுழன்று, சுழன்று வேனிலிருந்தவாறே பேசுகிறார். ‘மக்களே... மக்களே...’ என்று பேசும்போது கூட்டம் உன்னிப்பாகக் கேட்கிறதோ இல்லையோ ஆரவாரம் ஓய்வதில்லை. ஆனால், வேன் உள்ளுக்குள் இருந்து வாக்காளத் தெய்வங்களை வணங்க வேல்முருகன் எழுந்து கொள்ளும்போது, விஜயகாந்த் அவர் தலையைப் பிடித்து உள்ளுக்குள் அழுத்துவது ஏன்? இதை மக்கள்தான் கேட்க வேண்டும்.


சைதையார் மற்றும் மா.சு. பேரில் எந்த ஊழல் குற்றச்சாட்டும் கிடையாது. இருவரும் சைதைப் பகுதி. ஆளும் கட்சியாக இருப்பதால், ஆள், அம்பு, சேனை எல்லாம் சைதையாருக்குப் பின்னால். வடசென்னையில் பாலகங்கா, வெற்றிவேல், தென்சென்னையில் செந்தமிழன், மைத்ரேயன் என அம்மாவின் காலில் வெற்றிக் கனியை வைக்க விறுவிறுப்பாகச் செயல்படுகிறது அ.தி.மு.க. படை. வோட்டை மாற்றிப்போடும் அளவுக்கு அ.தி.மு.க. ஆட்சிக்கு எந்தக் கெட்ட பெயரும் வரவில்லை என்பது ப்ளஸ் பாயின்ட்.  தவிர, மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருப்பதால் அதே கட்சி உள்ளாட்சியிலும் பொறுப்பில் இருந்தால் நகருக்கு நல்லது என்ற கருத்தும் வாக்காளர்களிடம் இருக்கிறது. வடசென்னையில் சேகர்பாபு மா.சு.வுக்காக கடுமையாக உழைக்கிறார். மா.சு.வுக்கு நல்ல இமேஜ் இருந்தாலும் டேமேஜான தி.மு.க.வின் இமேஜ் அப்படியேதான் இருக்கிறது. தொண்டர்கள் தேர்தல் செலவுக்குப் பணம் வாங்கிக்கொண்டு பம்முகிறார்கள். சைதையாருக்கு ஆதரவாக ஒரு இளைஞர் கூட்டம் ஹைடெக் யுக்திகளைக் கையாண்டு பிரசாரம் செய்கிறது. 2006ல் நடந்ததுபோல வன்முறை இருக்கக்கூடாதே என்பதுதான் வாக்காளர்கள் கவலையாக இருக்கிறது. மற்றபடி சென்னையின் வெள்ளை மாளிகையான ரிப்பன் பில்டிங்கில் அமரப் போகும் வாய்ப்பு சைதையாருக்கே பிரகாசமாக இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கு இல்லை.

1 comment:

  1. அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete