Search This Blog

Monday, October 31, 2011

காஷ்மீரைக் காத்திடுவோம் பாகம்-3, ஜம்மு – அகதிகளின் புகலிடம்





ஜம்மு – அகதிகளின் புகலிடம்


 64 ஆண்டுகளாக இடம் பெயர்ந்து வந்து குடியேறியவர்களால் ஜம்மு பகுதி திணறி வருகிறது. தற்போது ஜம்முவில் 60௦ லட்சம் பேர் இருக்கின்றனர்.  அதில் 42 லட்சம் பேர் ஹிந்துக்கள். அந்த 42 லட்சத்தில் 15 லட்சம் பேர் பல வருடங்களாகவே அங்கு அகதிகளாக இருந்து வருகின்றனர்.சொந்த மண்ணிலேய மண்ணின் மைந்தர்கள் அகதிகளாக வாழ்வது வருவதை உலகில் வேறு எங்கும் காண முடியாது. அதை நமது நாட்டில் மட்டும்தான் காணலாம். நமது அரசியல் சாசனச் சட்டம்  நடைமுறைக்கு வந்து 60 ஆண்டுகள் கடந்த பின்பும் கூட ஜம்மு காஷ்மீரில்  ஹிந்துக்கள் இன்னும் அகதிகளாகவே இருந்து வருகின்றனர். அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சம உரிமைகளும், சம வாய்ப்புகளும் மறுக்கப்பட்டு வருகின்றன.  என்ன குற்றம் செய்தனர்  அவர்கள்? ஏன் இந்த அவல நிலைமை தொடர்கிறது? இன்னும் எத்தனை வருடத்திற்குத்தான் சொந்த நாட்டிலேயே அடிமைகளாகவும் பிச்சைக்காரர்களாகவும் வாழ்ந்திட வேண்டும் என்று அவர்கள் குமுறுகின்றனர். 

பாக் ஆக்கிரமிப்புப் பகுதியிலிருந்து வந்தவர்கள் 

 
1947 ஆம் வருடம் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து 50,000௦ பேர் ஜம்முவிற்கு வந்து குடியேறினர். அவர்கள் எண்ணிக்கை இன்று 12 லட்சமாக அதிகரித்துள்ளது. அதில் 8 லட்சம் பேர் ஜம்முவில் வசித்து வருகின்றனர்.  மீதமுள்ளவர்கள் நாடெங்கிலும் சிதறிக்  கிடக்கின்றனர். அவர்களுக்கு இன்று வரை நமது நாட்டின் குடியுரிமை வழங்கப்படவில்லை. 60௦ ஆண்டுகளுக்கும் மேலாக சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களது பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதற்கு மத்திய அரசோ அல்லது மாநில அரசோ எதுவும் செய்வதற்குத் தயாராக இல்லை. இன்றுவரை பாக் ஆக்கிரமித்து வைத்திருக்கிற ஜம்மு காஷ்மீர் பகுதிகளை நமது பகுதி என்றே நமது அரசு உரிமை கொண்டாடி வருவது மட்டுமல்ல வரைபடத்திலும் கூட அப்பகுதிகளை நமது நாட்டுக்குச் சொந்தமானதாகவே காட்டி வருகிறது. இதை காரணமாகக் கூறியே அவர்களுக்கு நிரந்தர குடியேற்ற உரிமைகள் ஏற்பாடுகள் எதுவும் செய்து தராமல் இருந்து வருகிறது. இவர்களுக்கு குடியுரிமை வழங்கி இழப்பீடுகள் கொடுக்கப்படுமானால் அவைகள் பாக் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் மீது நாம் கோரி வருகின்ற உரிமைகள் நீர்த்துப் போய் பலவீனமாகிவிடும் என்று காரணம் சொல்லப்பட்டு வருகிறது. அதன் காரணமாகவே அவர்களுக்காக ஏற்பாடு செய்து தரப்பட்ட 52 முகாம்களிலேயே அவர்கள் 63 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். துயரத்திற்கு விடிவு காலம் என்று பிறக்கும் என பெரும் எதிர்பார்ப்புடன்  காத்திருக்கின்றனர்.   அவர்கள் தங்குவதற்கு கொடுக்கப்பட்டுள்ள நிலத்தின் மீதோ அல்லது வீடுகளின் மீதோ அவர்கள் எந்த உரிமையையும் கோரமுடியாது. அவைகள் அவர்களுக்குச் சொந்தமானதல்ல. 1947 ஆம் வருடம் பாக் ஆக்கிரமிப்பு பகுதியிலிருந்து வந்தவர்கள் அங்கு விட்டுவிட்டு வந்துள்ள சொத்துக்கள் பற்றியோ  அல்லது உறவினர்கள் பற்றியோ எந்த ஒரு கணக்கெடுப்பையும் இது வரை நமது மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. நிலைமை இப்படி இருக்கையில் எதனடிப்படையில் இவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கிட முடியும்?  
 
 
இம்மாதிரி பிறநாடுகளில் இருந்து அகதிகளாக வந்து இங்கு குடியேறியுள்ள அனைவருக்கும் நமது நாட்டுக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு மட்டும்  இதுவரை அது  கொடுக்கப்படவில்லை. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 24 சட்டமன்றத் தொகுதிகளுக்குத் தேர்தல் நடத்தப் படாமல் வெற்றிடமாக இருந்து வருகிறது. அவைகள் பாக் ஆக்கிரமிப்புப் பகுதியில் இருந்து வருவதால் அங்கு தேர்தல்களை  நடத்திட இயலவில்லை என்று  அறிவிக்கப்பட்டு  வருகிறது. அகதிகளாக வசித்து வருகின்ற ஹிந்துக்களின் சந்ததியினர் கல்வி கற்றிட உதவித் தொகை எதுவும் வழங்கப்படுவது இல்லை. அவர்களுக்கு வேலைவாய்ப்பில் கூட எந்த முன்னுரிமையும் ஒதுக்கீடும் கிடையாது.
 
சம்பா பகுதி அகதிகள்
 
 
1947 மற்றும் 1965 ஆம் வருடங்களில் நடைபெற்ற போரினால் இடம் பெயர்ந்தவர்கள் ஜம்முவில் வந்து குடியேறியுள்ளனர். 1971 ஆம் வருடம் நடைபெற்ற போரில் நாம் வெற்றி பெற்றும் நாம் அதான் நமது பகுதிகளை அவர்களுக்கு தாரை வார்த்துள்ளோம். இரு நாடுகளுக்கு இடையே 1971ஆம் வருடம் கையெழுத்திடப்பட்ட சிம்லா உடன்படிக்கை காரணமாக 18,000ச.கி.மீ. நிலப்பரப்பினை நாம்தான் பாகிஸ்தானுக்கு கொடுத்துள்ளோம்.இதனால் அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் அங்கிருந்து கட்டாயமாக வெளியேற வேண்டியை சூழ்நிலை ஏற்பட்டது. சம்பா பகுதியிலிருந்து மொத்தம் 1லட்சம் பேர் வெளியேறி ஜம்மு பகுதியில் குடியேறினர். சம்பா பகுதியில் வசித்து வந்த மக்கள் இடம் பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் தங்கள் நிலம் வீடு மனைகள், தொழில்களை யெல்லாம் விட்டுவிட்டு வந்துள்ளனர். அச்சமயத்தில் வாக்குறுதி அளித்த படி மத்திய அரசு இதுவரை இடம் பெயர்ந்தவர்களுக்கு எந்த ஒரு இழப்பீடும் கொடுக்கவில்லை. இவர்களின் மறு குடியேற்றத்திற்கான நடவடிக்கைகளை செய்து தர வேண்டிய மத்திய அரசு கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்து கொண்டு இருக்கிறது.1989-1991 ஆம் ஆண்டுகளில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் செயல்பட்டு வந்த இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளால் அப்பகுதியில் வசித்து வந்த முஸ்லிம் அல்லாதவர்களை அச்சுறுத்தியதால், படுகொலை செய்ததால், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததால் அங்கிருந்து ஹிந்துக்கள் சீக்கியர்கள் அனைவரும் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
 
இதன் காரணமாக 52,000000 குடும்பங்கள் அதாவது சற்றேறக் குறைய 4 லட்சம் ஹிந்துக்கள் சீக்கியர்கள் பெரும்பாலானோர் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறி ஜம்முவில் வந்து அடைக்கலமாயினர்.அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள இருப்பதாக இதுவரை எத்தனையோ அறிக்கைகள் வந்துள்ளன, அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆனால்  பலன் எதுவம் கிடைத்திடவில்லை. அவைகள் வெறும் அறிக்கைகளாகவே இருந்து கொண்டிருக்கின்றன. காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து கட்டாயாமாக வெளியேற்றப்பட்ட ஹிந்து மற்றும் சீக்கியர்களின் மதம், சமுதாய உரிமைகளைப்  பாதுகாத்திடவோ, அவர்களது சொத்துக்களைப் பாதுகாத்திடுவதற்கோ அம்மாநில அரசு எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. காஷ்மீரில் விட்டு விட்டு வந்துள்ள ஹிந்து மற்றும் சீக்கியர்களின் சொத்துக்களை அங்குள்ள முஸ்லிம்கள் ஆக்கிரமித்து வருகின்றனர்.ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்றத்தில் இவைகளைக் காத்திட  எந்த ஒரு சட்டமும் இயற்றப்படவில்லை. இடம் பெயர்ந்துள்ள காஷ்மீர் ஹிந்துக்களின் உரிமைகளுக்காக  அம்மாநில சட்ட மன்றத்தில் குரல் கொடுத்திட அவர்களது  பிரதிநிதி ஒருவர் கூட இடம் பெறவில்லை. 1991 ஆம் வருடம் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறியவர்களில் ஒரு லட்சம் பேர்  வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர். ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை 70,000 ஆகக் குறைந்து விட்டது.காஷ்மீரிலிருந்து வெளியேற்றப்பட்ட வாக்காளர்கள் வாக்களித்திட சரியான வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவில்லை. வாக்களித்திட சரியான ஏற்பாடுகள் எதுவும் செய்து தரப்படாததால் பலருக்கு தேர்தலில் வாக்களிப்பதில் ஆர்வம் குறைந்து விட்டது. அதன் காரணாமாகவே வாக்காளர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. தங்களது மண்ணில் பாதுகாப்பாக மீண்டும் குடியமர்த்தப்படுவோம்  என்கிற நம்பிக்கை அவர்கள் மனதில் இருந்து வருகிறது. ஆனால் அது என்று நனவாகும் என்பதுதான் அவர்களுக்குத் தெரியவில்லை.
 
 
காஷ்மீர் பள்ளத்தக்கிலிருந்து பயங்கரவாதம் மெல்ல மெல்ல மலைப் பகுதிகளான தோடா, கிஷ்த்வார், ராம்பன், உதம்பூர், ரியாசி, ரஜெளரி, மற்றும் கத்துவா மாவட்டங்களுக்கும் பரவியது. அதனால் பதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு தேடி இடம் பெயர்ந்தனர்.பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட  பகுதிகளில்  இருந்து எவ்வளவு பேர்கள் குடிபெயர்ந்துள்ளனர். அவர்களை எங்கு மீள் குடியமர்த்துவது என்பது பற்றியோ அல்லது அவர்களது மறுவாழ்விற்கு என்னென்ன உதவிகள் தேவைப்படும் என்பது பற்றியோ சிறிதளவு கூட அம்மாநில அரசு கவலைப் படவில்லை. சுமார் 8 லட்சம் பேர் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.காஷ்மீர் மக்களுக்கு இணையான அனைத்து உரிமைகளையும் சலுகைகளையும் இடம் பெயர்ந்து ஜம்முவில் வசித்து வருகின்ற அகதிகளுக்கும் வழங்கிட வேண்டுமென உச்சநீதி மன்றமே  கூறியும் கூட எந்த பலனும் ஏற்படவில்லை. பயங்கரவாதத்தினை எதிர்த்துப் போராடியவர்கள் இவர்கள். எண்ணற்றோர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடியதில் சிலர் தங்கள் உடல் உறுப்புகளை நிரந்தரமாக இழக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகியுள்ளனர். அம்மாதிரி பாதிப்பிற்கு ஆளானவர்களுக்குக் கூட உதவி செய்திட மத்திய மாநில அரசுகள் முன்வரவில்லை என்பதுதான் கசப்பான உண்மையாகும். எத்தனையோ பேர் தங்களது சொந்த இடங்களை, மனைகளை, நிலங்களை, வர்த்தக நிறுவனங்களை எல்லாம் துறந்துவிட்டு  கிராமத்தைவிட்டே  வெளியேற வேண்டியதாகிவிட்டது. அங்கிருந்து வெளியேறியவர்கள் எல்லாம் ஜம்முவில்தான் குடியேறியுள்ளனர். வறுமையில் வாழ்ந்து வருகின்ற போதிலும் அவர்கள் மதம் மாறிடத் தயாரில்லை. அவர்கள் வாயிலிருந்து வருவதெல்லாம் பாரத் மாதா கி ஜெய், வந்தே மாதரம் என்கிற முழக்கம்தானே தவிர வேறெதுவும் இல்லை. ஆனால் அவர்களது குழந்தைககளின் படிப்பிற்கு எந்த ஏற்பாடும் இல்லாததால் ஏராளமான சிறுவர்கள் வீட்டு வேலைகளுக்கும்  உணவகங்களிலும் வேலைக்கு சென்று  கொண்டிருக்கின்றனர்.
 
 
பயங்கரவாதத்தினை தடுத்தி நிறுத்திட எந்த நடவடிக்கை எடுத்தாலும் அது சிறுபான்மையின மக்களையே பாதிக்கின்றது என்று கூறி கூப்பாடு போட்டு அந்த சட்டங்களையெல்லாம்  வாபஸ் வாங்க வைத்து வருகின்ற மத சார்பற்றவர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் பார்வையில் காஷ்மீர் ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் அனுபவித்து வருகின்ற  துன்பங்களும் துயரங்களும் படாமல் போனது ஏனோ?
 

சடகோபன்

1 comment:

  1. சில தலைவர்களின் சுயநலம், பலரின் வாழ்வில் இருளாய்... காஷ்மீர் பிரச்சினை குறித்து நிறைய தகவல்களையும், திரை மறைவு வேலைகளையும் புட்டு புட்டு வைக்கிறது நள்ளிரவில் சுதந்திரம் புத்தகம்

    ReplyDelete