நம் காலத்தில் நமக்குமுன்னே கண்ணுக்குத் தெரிகிற பெரியவர்களுக்கு வந்தால், இங்கேதான் மரியாதை என்ற அம்சம் ரொம்பவும் முக்ய ஸ்தானத்தில் இடம் பெறுகிறது. தெய்வசக்தி என்பதைப் பற்றிய நம் கணக்குப்படி அது ஸரியா, தப்பா என்பது வேறு விஷயம்; ஆனால் அதுதானே நடைமுறையில் இருக்கிறது?
அந்தக் கணக்குப்படி பார்த்தால் தெய்வங்கள், பூர்வகால மஹான்கள், நம் காலத்துப் பெரியவர்கள் ஆகிய மூன்று பேருக்கு எப்படி மார்க் போடுகிறோமோ அதற்கு ‘இன்வர்ஸ் ப்ரபோர்ஷ’னிலேயே (எதிரிடை விகிதாசாரத்திலேயே) நாம் அவர்களிடம் காட்டுகிற மரியாதை இருக்கிறது!
ப்ரியம், பந்துத்வம், ஸ்வாதீனம் என்றெல்லாம் இருக்கிற பக்தியம்சங்கள் ப்ரத்யக்ஷப் பெரியவர்களிடம் தூக்கலாக இல்லாமல், அதனாலேயேதானோ என்னவோ, மரியாதையம்சம் இங்கேதான் தலைதூக்கிக் கொண்டு முக்யமாக நிற்கிறது.
மதஸம்பந்தமாகப் பெரியவர்கள் என்றிருக்கிற ஸ்வாமியார்கள் மட்டுந்தான் என்றில்லை; அரசியல் ப்ரமுகர்கள், கட்சித் தலைவர்கள், அறிவாளிகளாக இருக்கப்பட்டவர்கள், கலைகளில் சிறப்புப் பெற்றவர்கள், பணபலம் படைத்தவர்கள் என்று யாரை எடுத்தாலும், எந்தத் துறையிலும் பெரியவர்களாக உள்ளவர்களிடம் மரியாதைதான் நம் அப்ரோச்சில் முக்யமாயிருக்கிறது. ‘மரியாதை’ என்பதைவிட ‘ரெஸ்பெக்ட்’ என்று சொன்னால் இந்த விஷயம் நன்றாகப் புரியும்.
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
No comments:
Post a Comment