Search This Blog

Sunday, October 26, 2014

கச்சா எண்ணெய்யின் விலை இப்போது எப்படி குறைந்தது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைந்துள்ளது. டீசல் விலை ஒரு லிட்டருக்கு 3.37 ரூபாய் குறைந்துள்ளது என்ற செய்தி அனைவருக்கும் தீபாவளி இனிப்பாக தித்திக்க வைத்திருக்கிறது. எப்போதும் ஏறுமுகத்தில் இருக்கும் கச்சா எண்ணெய்யின் விலை இப்போது எப்படி குறைந்தது. சாதாரண மனிதர்களுக்கும் தோன்றும் இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்ள வேண்டுமெனில், உலக அளவில் சமீபத்தில் நடந்த சில நிகழ்ச்சிகளின் பின்னணியைக் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.
 
எண்ணெய் யுத்தம் காரணமா?
கச்சா எண்ணெய்யின் விலை  உலக  அளவில் கணிசமாகக் குறைந்திருக்கிறது. கடந்த ஜூன் மாதத்தில் 110 டாலருக்கு விற்ற ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் ஏறக்குறைய 25% குறைந்து, தற்போது 85 டாலருக்கு விற்பனையாகி வருகிறது. இந்த அபார விலை குறைவுக்கு பின்னால் நடப்பது வல்லரசுகளுக்கு இடையே நடக்கும் எண்ணெய் யுத்தமே  காரணம் என்கிறார்கள். எப்படி?


கச்சா எண்ணெய்யின் விலை சமீப காலமாக குறைந்ததற்கு முக்கிய காரணம், அமெரிக்காவிலிருந்து வரும்  அதிகப்படி யான சப்ளை மற்றும் சவுதி அரேபியாவில் இருந்து கச்சா எண்ணெய் வரத்து அதிகரித்திருப்பதே. கடந்த ஆறு வருடங்களில் இல்லாத அளவுக்கு அமெரிக்கா தனது கச்சா எண்ணெய் உற்பத்தியை 70 சதவிகிதத்துக்குமேல் அதிகரித்துள்ளது. அமெரிக்கா ஒரு நாளைக்கு உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவு ஏறக்குறைய 9 மில்லியன் பேரல்களைத் தொட்டுள்ளது.

அமெரிக்கா கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிகரிக்க என்ன காரணம்? உலகின் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் முக்கிய நாடுகளான ஈரானுக்கும்  அதன் நட்பு நாடான ரஷ்யாவுக்கும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவே அமெரிக்கா உற்பத்தியை அதிகரித்துள்ளது என சில சர்வதேச ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்து வருவதைத் தொடர்ந்து இந்த இரண்டு நாடுகளும் சமாளிக்கும் வழி தெரியாமல் திணறி வருகின்றன. இதைத் தான் அமெரிக்கா எதிர்பார்த்தது என்றாலும், இதனால் நீண்ட காலத்தில் அமெரிக்காவுக்கு லாப இழப்பே ஏற்படும் என்கிறார்கள் நிபுணர்கள். எனினும் கச்சா எண்ணெய் விலை குறைய இதுதான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா, எதிர்காலத்தில் கச்சா எண்ணெய் விலை எப்படி இருக்கும்?

தொழில்நுட்பமே காரணம்!

‘‘தற்போது உலக அளவில் கச்சா எண்ணெய்யின் உற்பத்தி என்பது முன்பிருந்ததைவிட அதிகரித்துள்ளது. அதிலும், அமெரிக்காவின் உற்பத்தி என்பது கணிசமாக அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், அமெரிக்கா விடம் உள்ள தொழில்நுட்ப வசதிகள் தான். அமெரிக்கா தற்போது கச்சா எண்ணெய் உற்பத்திக்கு ‘ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால், அதிக எண்ணெய்யை உற்பத்தி செய்ய முடிகிறது.

அதேசமயம், உலகில் கச்சா எண்ணெய்க்கான தேவையும், பயன்பாடும் குறைந்துள்ளது. உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய்       பயன்பாட்டாளரான சீனாவின் பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பதும் கச்சா எண்ணெய்க்கான தேவையைக் குறைத்துள்ளது. சர்வதேச அளவில் ஐரோப்பிய நாடுகளில் பொருளாதாரம் இறக்கத்தில் இருப்பதும் கச்சா எண்ணெய்யின் விலை குறைய காரணமாகியுள்ளது. தற்போது சுமார் 85 டாலர் என்ற அளவில் வர்த்தகமாகி வரும் கச்சா எண்ணெய் இன்னமும் குறைந்து 75 டாலர் வரைகூட செல்ல வாய்ப்புள்ளது. ஆனால், அதற்குக் கீழ் செல்லும்போது அதிக உற்பத்தி செய்யும் நாடுகளும், அமெரிக்காவும் அதன் உற்பத்தியைக் குறைக்கலாம். அப்போது மீண்டும் அதன் விலை ஒரு நிலைக்குவர வாய்ப்புள்ளது.

நமக்கு என்ன நன்மை?  

முதலாவதாக, வெளிநாடுகளிலிருந்து நாம் இறக்குமதி செய்யும் பொருள்களில் முதலிடத்தில் இருப்பது கச்சா எண்ணெய்தான். பொதுவாக, கச்சா எண்ணெய்யின் விலை குறையும்போது பங்குச் சந்தையின் மதிப்பு உயரும். அப்படி உயரும்போது ரூபாயின் மதிப்பும் அதிகரிக்கும். அதாவது, முன்பு ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யை 100 டாலர் (இந்திய ரூபாயில் ரூ.6,100) தந்து வாங்கி இருப்போம். அதையே தற்போது 85 டாலர் (இந்திய ரூபாயில் ரூ.5,185) என்ற அளவில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்குவதால், நமது இறக்குமதி செலவு கணிசமாக குறையும்.

இரண்டாவதாக, கச்சா எண்ணெய் விலை குறையும்போது நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் குறைந்திருக்கிறது. ஜனவரி 2012-ல் 5,432 ரூபாய்க்கு வர்த்தகமான ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய், 6,000 ரூபாய்க்குமேல் சென்றது. கடந்த மாதம் மிகக் குறைந்த விலையான 5,525-க்கு குறைந்து வர்த்தகமானது.  கச்சா எண்ணெய்யின் விலை 100 டாலருக்குக் கீழ் வர்த்தகமாகும் பட்சத்தில், நமது ஜிடிபியில் 2.2 சத விகிதமாக இருந்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, 1.55 சதவிகிதமாகக் குறையும் என்று கிரைசில் நிறுவனம் சொல்லியிருக்கிறது. 

மூன்றாவதாக, கச்சா எண்ணெய்யின் விலை குறையும்போது பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களின் விலை குறைந்து வாகனங்களின் போக்குவரத்துச் செலவும் குறையும். இதன்மூலம் காய்கறி, பால் போன்ற அத்தியாவசிய மற்றும் உணவுப் பொருள் களின் விலை குறையும் என எதிர்பார்க்க லாம். இந்தத் தொடர் நடவடிக்கைகளால் மக்களின் கையிருப்பு அதிகமாகி, அவை சேமிப்பாகவும் முதலீடாகவும் மாறுவதற்கு வாய்ப்புள்ளது.



 

No comments:

Post a Comment