Search This Blog

Sunday, October 26, 2014

ஸமத்வம்! சரணாகதி!


‘புருஷ ப்ரஜைக்கு உபநயனம் எப்படியோ அப்படியேதான் ஸ்த்ரீ ப்ரஜைக்கு விவாஹம்’ என்பதற்கு இது போன்ற அம்சங்கள் நிரூபணம். ஒரு ஆண் குழந்தை குருவிடம் சரணாகதி செய்து அவன் கைப்பிடிப்பில் லக்ஷ்ய மார்க்கத்தில் போகிறது போலவே ஒரு பெண் குழந்தை பதி என்ற குருவின் மூலம் பண்ண வேண்டும் என்பதுதான் சாஸ்த்ர அபிப்ராயம். இந்த இரண்டிலுமே, Shake - hand போல் பரஸ்பரம் இரண்டு பேருமே ஒருத்தர் கையை மற்றவர் பிடித்துக் கொண்டிருப்பதாக இல்லை.

ஆசார்யன் தான் - உபநயனத்தில் ஆசார்யன் என்றே இருப்பவர்; விவாஹத்தில் வரன் என்ற பெயரில் உள்ள ஆசார்யன்; அவனொருத்தன் தான் - அந்த வடுவின் கையையும், வதூவின் கையையும் தன் கையால் அழுந்த மூடிக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பவன். அங்கே (கை குலுக்கலில்) ஸமத்வம்; அதனால் பரஸ்பரம் ஒரே போலப் பண்ணுவது. இங்கேயோ (உபநயன, விவாஹங்களிலோ) சரணாகதி; சிஷ்யனாக உள்ள வடுவும், சிஷ்யையாக உள்ள வதூவும் விநயமாகக் கீழ் ஸ்தானத்திலிருந்து கொண்டு சரணாகதி செது, தன் செயலே இல்லை என்று இருக்கிறவர்கள். தன் செயலே இல்லாததால் பதிலுக்குக் கையைப் பிடித்துக் குலுக்குகிற கார்யமும் இல்லை!
மனோ-வாக்-காயங்களை குருவுக்கே அர்ப்பணிப்பதற்கு அடையாளமாகக் கார்யத்திற்கெல்லாம் கருவியாயுள்ள கையை, ஆசார்ய ஸ்தானத்திலிருக்கிறவரிடம் ஒப்புவித்துவிட்டு அதைச் சும்மாயிருக்க விடுகிறார்கள். சரணாகதனை ரக்ஷித்துப் பூர்ணமாக அங்கீகரித்துக் கையைப் பிடித்து வழி நடத்திப் போவதற்கு அடையாளமாக ஆசார்யனே, அவன் மட்டுமே, சிஷ்ய ஜீவனின் கையைப் பிடித்துக் கொள்கிறான்.

ராமானுஜன் கணித அறிவு!

இந்தியாவில் பிறந்து உலகப் புகழ்பெற்ற கணித மேதை சீனிவாச இராமானுஜன் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். ஆனால் அவரின் கணித அறிவு இந்தியர்களைத் தொட்டுத்தொடர்கிறது. தென்கொரியாவில் உள்ள சியோல் நகரில் நடந்த சர்வதேசக் கணித மாநாட்டில் இந்திய வம்சாவளி யைச் சேர்ந்தவர்கள் இளம் கணிதவியலாளர் விருதை வென்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கணிதத்தில் சாதனை படைத்த அறிஞர் பெருமக்க ளுக்கு அகில உலகக் கணிதக் கழகம் (ஐணணாஞுணூணச்ணாடிணிணச்டூ –ச்ணாடஞுட்ச்ணாடிஞிச்டூ க்ணடிணிண ஐ–க்) பரிசு வழங்கிக் கௌரவித்து வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கொருமுறை நடை பெறும் சர்வதேசக் கணித மாநாட்டின் தொடக்க விழாவில் நோபல் பரிசுக்கு இணையான ‘பீல்ட்ஸ் பதக்கம்’ (ஊடிஞுடூஞீண் –ஞுஞீச்டூ) 1936 முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு சர்வதேசக் கணித மாநாடு ஆகஸ்டு 13 முதல் 21 வரை தென்கொரியாவில் உள்ள சியோல் நகரில் நடந்தது. நாற்பது வய துக்கு உட்பட்ட மிகச்சிறந்த கணிதப் பங்களிப் பைச் செத இளம் கணித வியலாளர்களுக்கு ‘பீல்ட்ஸ் பதக்கம்’ வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ‘பீல்ட்ஸ்’ பதக்கத்தை வென்ற மஞ்சுல் பார்க்கவாவும், ‘நெவன்லினா’ பரிசை வென்ற சுபாஷ் கோட் என்பவரும் இந்திய வம்சாவளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

2010ல் சர்வதேச மாநாடு ஹைதராபாத்தில் நடை பெற்றது. 2018ல் நடைபெற உள்ள அடுத்த சர்வதேச கணித மாநாடு பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரோ என்னும் நகரில் நடைபெற இருக்கிறது.

உலக மொழியாகிய கணிதத்துக்கு இம்மாநாடு பரிசுகளும் பெருமையும் சேர்க்கின்றன. நம்மவர்களும் அதற்கு முயலவேண்டும் என்பதே நம் அவா! நம்மிடம் இல்லாத ராமானுஜன்களா என்ன?

கச்சா எண்ணெய்யின் விலை இப்போது எப்படி குறைந்தது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைந்துள்ளது. டீசல் விலை ஒரு லிட்டருக்கு 3.37 ரூபாய் குறைந்துள்ளது என்ற செய்தி அனைவருக்கும் தீபாவளி இனிப்பாக தித்திக்க வைத்திருக்கிறது. எப்போதும் ஏறுமுகத்தில் இருக்கும் கச்சா எண்ணெய்யின் விலை இப்போது எப்படி குறைந்தது. சாதாரண மனிதர்களுக்கும் தோன்றும் இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்ள வேண்டுமெனில், உலக அளவில் சமீபத்தில் நடந்த சில நிகழ்ச்சிகளின் பின்னணியைக் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.
 
எண்ணெய் யுத்தம் காரணமா?
கச்சா எண்ணெய்யின் விலை  உலக  அளவில் கணிசமாகக் குறைந்திருக்கிறது. கடந்த ஜூன் மாதத்தில் 110 டாலருக்கு விற்ற ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் ஏறக்குறைய 25% குறைந்து, தற்போது 85 டாலருக்கு விற்பனையாகி வருகிறது. இந்த அபார விலை குறைவுக்கு பின்னால் நடப்பது வல்லரசுகளுக்கு இடையே நடக்கும் எண்ணெய் யுத்தமே  காரணம் என்கிறார்கள். எப்படி?


கச்சா எண்ணெய்யின் விலை சமீப காலமாக குறைந்ததற்கு முக்கிய காரணம், அமெரிக்காவிலிருந்து வரும்  அதிகப்படி யான சப்ளை மற்றும் சவுதி அரேபியாவில் இருந்து கச்சா எண்ணெய் வரத்து அதிகரித்திருப்பதே. கடந்த ஆறு வருடங்களில் இல்லாத அளவுக்கு அமெரிக்கா தனது கச்சா எண்ணெய் உற்பத்தியை 70 சதவிகிதத்துக்குமேல் அதிகரித்துள்ளது. அமெரிக்கா ஒரு நாளைக்கு உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவு ஏறக்குறைய 9 மில்லியன் பேரல்களைத் தொட்டுள்ளது.

அமெரிக்கா கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிகரிக்க என்ன காரணம்? உலகின் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் முக்கிய நாடுகளான ஈரானுக்கும்  அதன் நட்பு நாடான ரஷ்யாவுக்கும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவே அமெரிக்கா உற்பத்தியை அதிகரித்துள்ளது என சில சர்வதேச ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்து வருவதைத் தொடர்ந்து இந்த இரண்டு நாடுகளும் சமாளிக்கும் வழி தெரியாமல் திணறி வருகின்றன. இதைத் தான் அமெரிக்கா எதிர்பார்த்தது என்றாலும், இதனால் நீண்ட காலத்தில் அமெரிக்காவுக்கு லாப இழப்பே ஏற்படும் என்கிறார்கள் நிபுணர்கள். எனினும் கச்சா எண்ணெய் விலை குறைய இதுதான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா, எதிர்காலத்தில் கச்சா எண்ணெய் விலை எப்படி இருக்கும்?

தொழில்நுட்பமே காரணம்!

‘‘தற்போது உலக அளவில் கச்சா எண்ணெய்யின் உற்பத்தி என்பது முன்பிருந்ததைவிட அதிகரித்துள்ளது. அதிலும், அமெரிக்காவின் உற்பத்தி என்பது கணிசமாக அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், அமெரிக்கா விடம் உள்ள தொழில்நுட்ப வசதிகள் தான். அமெரிக்கா தற்போது கச்சா எண்ணெய் உற்பத்திக்கு ‘ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால், அதிக எண்ணெய்யை உற்பத்தி செய்ய முடிகிறது.

அதேசமயம், உலகில் கச்சா எண்ணெய்க்கான தேவையும், பயன்பாடும் குறைந்துள்ளது. உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய்       பயன்பாட்டாளரான சீனாவின் பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பதும் கச்சா எண்ணெய்க்கான தேவையைக் குறைத்துள்ளது. சர்வதேச அளவில் ஐரோப்பிய நாடுகளில் பொருளாதாரம் இறக்கத்தில் இருப்பதும் கச்சா எண்ணெய்யின் விலை குறைய காரணமாகியுள்ளது. தற்போது சுமார் 85 டாலர் என்ற அளவில் வர்த்தகமாகி வரும் கச்சா எண்ணெய் இன்னமும் குறைந்து 75 டாலர் வரைகூட செல்ல வாய்ப்புள்ளது. ஆனால், அதற்குக் கீழ் செல்லும்போது அதிக உற்பத்தி செய்யும் நாடுகளும், அமெரிக்காவும் அதன் உற்பத்தியைக் குறைக்கலாம். அப்போது மீண்டும் அதன் விலை ஒரு நிலைக்குவர வாய்ப்புள்ளது.

நமக்கு என்ன நன்மை?  

முதலாவதாக, வெளிநாடுகளிலிருந்து நாம் இறக்குமதி செய்யும் பொருள்களில் முதலிடத்தில் இருப்பது கச்சா எண்ணெய்தான். பொதுவாக, கச்சா எண்ணெய்யின் விலை குறையும்போது பங்குச் சந்தையின் மதிப்பு உயரும். அப்படி உயரும்போது ரூபாயின் மதிப்பும் அதிகரிக்கும். அதாவது, முன்பு ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யை 100 டாலர் (இந்திய ரூபாயில் ரூ.6,100) தந்து வாங்கி இருப்போம். அதையே தற்போது 85 டாலர் (இந்திய ரூபாயில் ரூ.5,185) என்ற அளவில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்குவதால், நமது இறக்குமதி செலவு கணிசமாக குறையும்.

இரண்டாவதாக, கச்சா எண்ணெய் விலை குறையும்போது நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் குறைந்திருக்கிறது. ஜனவரி 2012-ல் 5,432 ரூபாய்க்கு வர்த்தகமான ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய், 6,000 ரூபாய்க்குமேல் சென்றது. கடந்த மாதம் மிகக் குறைந்த விலையான 5,525-க்கு குறைந்து வர்த்தகமானது.  கச்சா எண்ணெய்யின் விலை 100 டாலருக்குக் கீழ் வர்த்தகமாகும் பட்சத்தில், நமது ஜிடிபியில் 2.2 சத விகிதமாக இருந்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, 1.55 சதவிகிதமாகக் குறையும் என்று கிரைசில் நிறுவனம் சொல்லியிருக்கிறது. 

மூன்றாவதாக, கச்சா எண்ணெய்யின் விலை குறையும்போது பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களின் விலை குறைந்து வாகனங்களின் போக்குவரத்துச் செலவும் குறையும். இதன்மூலம் காய்கறி, பால் போன்ற அத்தியாவசிய மற்றும் உணவுப் பொருள் களின் விலை குறையும் என எதிர்பார்க்க லாம். இந்தத் தொடர் நடவடிக்கைகளால் மக்களின் கையிருப்பு அதிகமாகி, அவை சேமிப்பாகவும் முதலீடாகவும் மாறுவதற்கு வாய்ப்புள்ளது.



 

நெக்ஸஸ் 9


ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்!

கூகுள் நிறுவனம் HTC உடன் இணைந்து நெக்ஸஸ் 9 என்கிற புதிய டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த டேப்லெட்டுக்கான ஆர்டர்கள் அக்டோபர் 17-ம் தேதி தொடங்கிய நிலையில், வருகிற நவம்பர் 9-ம் தேதி இந்த டேப்லெட் விற்பனைக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த டேப்லெட்டின் மிகச் சிறப்பான விஷயம், கூகுளின் அடுத்தத் தலைமுறை மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்  இதில் இருப்பதே.  இந்த ஆபரேட்டிங் சிஸ்டத்துடன் வெளிவரும் முதல் டேப்லெட் என்கிற பெருமையையும் நெக்ஸஸ் 9 பெற்றிருக்கிறது.

பிராசஸர்:

நெக்ஸஸ் 9, Nvidia Tegra K1 சக்திவாய்ந்த பிராசஸரைக் கொண்டுள்ளது. அதனால் இந்த டேப்லெட்டின் மூலம் பல்வேறு செயல்பாடுகளை வேகமாகச் செய்து முடிக்க முடியும்.  அதேசமயம், வலுவான கேம்களுக்கும் (Game), அப்ளிகேஷன்களுக்கும் இந்த பிராசஸர் சாதகமாக அமையும். 2GB RAM என்பதும் டேப்லெட்டின் செயல்பாட்டு வேகத்துக்குச் சாதகமாகவே அமையும்.

டிஸ்பிளே:

இந்த டேப்லெட்டின் டிஸ்பிளே அளவு 8.9 இன்ச். ஐபிஎஸ் எல்சிடி தொழில்நுட்பத்துடன் இதன் டிஸ்பிளே வடிவமைக்கப்பட்டுள்ளது கவனிக்க வேண்டிய விஷயம். இது கொரில்லா க்ளாஸ் 3 பாதுகாப்பு மற்றும் QXGA உடன் 2048×1536 பிக்ஸல்கள் கொண்டதாக இருக்கிறது.

கேமரா மற்றும் பேட்டரி:

பொதுவாக, டேப்லெட்டை வடிவமைக்கும்போது அதில் கேமராவுக்கு முக்கியத்துவம் வழங்காமலே பெரும்பாலும் வடிவமைக்கப்படும். ஆனால், இதில் f / 2.4 aperture மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட 8 மெகாபிக்ஸல் பின்புற ஆட்டோஃபோகஸ் கேமரா மற்றும் 1.6-மெகாபிக்ஸல் ஃப்ரன்ட் கேமராவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. டேப்லெட்டின் பேட்டரி திறனானது 6700mAh என்கிற அளவில் பொருத்தப்பட்டுள்ளது. இதற்குமுன் இந்த நிறுவனம் வெளியிட்ட நெக்ஸஸ் 7 டேப்லெட்டில் இருக்கும் பேட்டரியைவிட இது மிக அதிகத் திறன் கொண்டது என்பது சிறப்பு.
சேமிப்பு:

புதிய நெக்ஸஸ் டேப்ெலட் 16GB,  Wi-Fi மாடல் $399 விலையில் (சுமார் ரூ24,500), 32GB, Wi-Fi மாடல் $479 (தோராயமாக ரூ.29,500) மற்றும் 32GB LTE மோட் $599 (சுமார் ரூ. 37,000) ஆகிய மூன்று விதங்களில் வெளிவருகிறது.

கீபோர்டு:

இந்த டேப்லெட்டின் இன்னொரு சிறப்பம்சம், ஆப்ஷனல் கீபோர்டுடன் வெளிவருகிறது. இதற்கென்று தனியே பேட்டரியுடன் வெளிவருவதால், பேட்டரி செலவு குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. தேவை என்கிறபோது டேப்லெட்டுடன் இணைத்தும், தேவையில்லாதபோது தனியே பிரித்து வைத்தும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதர சேவைகள்:

 
3.5 மி.மீ ஆடியோ ஜாக், மைக்ரோ-USB, ஜிபிஎஸ்,  Wi-Fi, மற்றும் ப்ளூடூத் ஆகியவையும் இந்த டேப்லெட்டில் அடங்கும். மேலும், கூகுள் நெக்ஸஸ் 9 டேப்லெட் அம்சங்களான HTC-ன் பூம் சவுண்ட் மற்றும் டூயல் மைக்ரோபோன்களுடன் டூயல் ஃப்ரன்ட் ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது.

Monday, October 20, 2014

ஸ்கந்த சஷ்டி

‘சஷ்டி’ என்றால் ஆறு என்று பொருள். திதிகளில் ஆறாவது என்பதால் அதற்கு ‘சஷ்டி’ என்றும் பெயர். ‘ஸ்கந்த சஷ்டி’ என்பது ஆறுமுகப்பெருமான், சூரனை வதைத்த பெருமையைக் கொண்டாடும் விழாவாகும். ஐப்பசி மாதம், சுக்ல பட்ச பிரதமை முதல் சஷ்டி வரை உள்ள ஆறு நாட்களும் ஸ்கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாட்களையும் முருக பக்தர்கள் விரத நாட்களாகக் கருதி வழிபடுகின்றனர்.

கூர்கொண்ட வேலன், போர் பூண்ட காலன், ஆறிரு தடந்தோளன் ஆறுமுகனுக்கு ஆயிரமாயிரம் கோயில்கள் இருந்தாலும் திருச்செந்தூர் தனிச்சிறப்பு வாய்ந்தது. முருகனின் அறுபடை வீடுகளில், திருச்செந்தூர் மட்டுமே கடற்கரைக் கோயில். ‘திருச்சீரலைவா’ என அழைக்கப்பட்ட திருச்செந்தூரில் அமைந்துள்ள இக்கோயில், சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் சிறப்பு வாய்ந்தது. இங்கு கொண்டாடப்படும் ‘ஸ்கந்த சஷ்டி’ விழா உலகப் பிரசித்தி பெற்றது. பல லட்சம் பக்தர்கள் முன்னிலையில் இங்கு முருகப்பெருமான் நிகழ்த்தும் சூரசம்ஹார வைபவத்தைக் காணக் கண்கோடி வேண்டும்.

மங்கலங்களையே விரும்புவது மனித மனம். மங்கலங்களை நமக்களிப்பது போதுமென்ற மனம். போதுமென்ற மனத்தை அடையத் தடையாக இருப்பது ஆசை. அதுபோன்றே, பரம்பொருளாம் இறை பதம் சென்றடைய ஆணவம், கன்மம், மாயை போன்றவை தடைகளாக உள்ளன. இம்மும்மலங்களின் மொத்தத் தோற்றமே சூரபத்மன். அதர்மத்தின் வித்தான இவனது கொடுமையால் விளைந்தது தேவர்களின் சிறைவாசம். தேவர்தம் குறை தீர்க்கும் பொருட்டு சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோற்றமானான் கந்தப்பெருமான்.

ஆறுமுகன் தரிசனம் வேண்டி, தேவ குரு பிரகஸ்பதி செந்தூர் தலத்தில் தவமிருக்க, அவருக்குக் காட்சி தந்த முருகப்பெருமான் இங்கேயே தங்கினார். தேவ குரு மூலம் சூரபத்மனின் கொடுங்கோல் பின்னணியையும் தெரிந்து கொண்டார். அவனைத் திருத்தி ஆட்கொள்ள சமாதானம் வேண்டி தமது படைத்தளபதி வீரவாகுவைத் தூதாக அனுப்பினார்.

அசுர குணமல்லவா? ஆண்டவன் அருட்குணத்தைப் புரிந்து கொள்ளவில்லை. போருக்குக் கிளம்பி வந்த சூரபத்மனை வெற்றி கொண்டான் முருகப் பெருமான். இது, ‘ஆணவம்’ எவ்வகையில், எத்தனை முறை தலையெடுத்தாலும் அது பூண்டோடு அழிக்கப்பட்டே தீரும் என்பதை உணர்த்துவதாகும். இறுதியில் சூரபத்மனை வாஞ்சையோடு ஆட்கொள்ளவும் செதார் சிவனார் மைந்தன்.

எப்படி? முருகப்பெருமான் சூரபத்மனை கொல்ல வில்லை. மாறாக, மாமரமாக உருமாறி எதிர்த்த சூரபத்மனை தமது வேலாயுதத்தால் இரண்டாகப் பிளந்தார். இருகூறாகப் பிளந்த மாமரம், சேவலாகவும், மயிலாகவும் மாறியது. அசுர சுபாவத்தால் எதிர்க்கவும் முனைந்தது. தம் அருட்பார்வையை அவற்றின்மீது செலுத்தி ஆட்கொண்டார் முருகப்பிரான். கொடியவனான சூரன் சேவல் கொடியானான்; வேலவனைத் தாங்கும் வாகனமும் ஆனான்.

தேவர்களைப் பொறுத்தவரை நடந்தது சம்ஹாரம் என்றாலும், சூரபத்மனைப் பொறுத்தவரை அவனுக்கு நிகழ்ந்தது மங்கலமே. அனைவரையும் அலற வைத்தவன், அனைவராலும் வணங்கப்படுபவனாக ஆனது, எவ்வளவு பெரிய மாற்றம்?! ஆறுமுகனல்லவா இந்தப் பேற்றை அவனுக்கு அருளினான்.

ஸ்கந்த சஷ்டியன்று, யானை முகன், சிம்ம முகன், சூரபத்மன் என மூன்று ரூபங்களில் வரும் அசுரர்களை வதைக்கிறார் முருகப்பெருமான். இம்மூன்று அசுரர்களும் முறையே மாயை, கன்மம், ஆணவம் போன்றவற்றை உணர்த்துகின்றன. மாயையை உணர்த்தும் யானை முகன் முதலில் வதைக்கப்படுகிறான். மாயை ஒழிந்தால் கன்மம் தானாகவே தொலையுமாதலால் அடுத்து, சிம்ம முகனை வதைக்கிறார். மூன்றாவதாக, ஆணவ மலமானவன் சூரபத்மன். ஆணவ மலம் ஒடுங்குமே தவிர, அழியாது. எனவே, சூரபத்மனை மயிலாகவும், சேவலாகவும் ஒடுக்கிப் பணிகொண்டார் முருகப்பெருமான். இதுவே ஸ்கந்த சஷ்டி நமக்கு உணர்த்தும் தத்துவப் பொருளாகும்.

மனிதத் தலைகளாய் அல்லது கடல் அலைகளாய் என வியப்புறும் வண்ணம் லட்சோப லட்சம் மக்கள் பங்கு பெற்று களிப்புறும் திருச்செந்தூர் ஸ்கந்த சஷ்டி திருவிழா 12 நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது. முதல் ஆறு நாட்கள் சஷ்டி விரதம் மேற்கொள்ளப்பட்டு, முடிவில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. பின்பு, ஏழாம் நாள் முருகப்பெருமான் - தெய்வானை திருக் கல்யாண வைபவம். அடுத்த ஐந்து நாட்கள் சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை சாதிக்கிறார். எதிர்த்து நின்றவனையும் ஏற்றுக் கொள்ளும் அம்பிகையின் அருமந்த புதல்வனின் அருட்திறத்தைத் தான், திருச்சீரலைவாயின் கடலலைகள் இன்றும் பாடிக் கொண்டிருக்கின்றன.

அருள்வாக்கு ‘ஸிம்பாலி’க்கான அஞ்சலி!


அஞ்சலியைப் பற்றி பேச்சு வந்ததில் ஒற்றைக் கை அஞ்சலி முறை வந்து சேர்ந்தது. தன் நெற்றியிலேயே கை வைத்துப் போடும் ஒற்றைக்கை ஸல்யூட், தன்னுடைய ஒரு கையால் மற்றவரின் ஒரு கையைப் பிடித்துக் குலுக்குகிற Shake & hand என்றிப்படி மேல் நாட்டு வழக்கமிருக்க, நாம் இரண்டு கைகளையுமே சேர்த்துக் குவித்து அஞ்சலி, கும்பிடு போடுகிறோம். பிரிந்து பிரிந்து போகிற சித்தத்தை ஒன்றாகச் சேர்த்து ஸமர்ப்பணம் செய்வதற்கு அது அடையாளமாக, அபிநயமாக இருக்கிறது.

கூம்பின புஷ்பம், அதாவது தாமரை மொக்கு மாதிரியான அபிநயம் அது. ‘கூம்புவது’ என்பதிலிருந்து தான் ‘கும்பிடுவது’ வந்ததோ என்னவோ? கை கூப்புவது என்றே சொல்வதையும் கவனிக்கணும்.

ஹ்ருதயமே ஒரு தாமரை மொக்கு மாதிரிதானே இருக்கிறது? ஹ்ரு தய பூர்வமாக அன்பு தெரிவிப்பதற்கு ‘ஸிம்பாலிக்’காக இருக்கிறது இந்த அஞ்சலி. அழகான எண்ணத்தில் பிறந்த அழகான சைகை.

புஷ்பாஞ்சலி என்று கையில் புஷ்பத்தை எடுத்து அஞ்சலி முத்ரையோடு ஸ்வாமி மேல் போடுகிறோம். அஞ்சலி முத்ரையே கூம்பின புஷ்பந்தான்!

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

வரவு - செலவு கணக்கு... கைகொடுக்கும் ஃபைனான்ஷியல் ஆப்ஸ்!

தினசரி நாம் செய்யும் செலவு களைக் குறித்து வைக்கும் பழக்கம் இன்றைக்கு பெரும்பாலா னவர்களுக்குக் கிடையாது. இதனால் என்னதான் நாம் சம்பாதித்தாலும், மாத கடைசியில் சம்பளம் அத்தனை யும் எப்படி செலவானது, எதற்காக எவ்வளவு செய்தோம் என்று தெரியாமல் முழிப்போம். நம் தினப்படி செலவுகளை யாராவது குறித்து வைத்துச் சொன்னால் நன்றாக இருக்குமே! அதனோடு நாம் சேமிக்க வேண்டிய தொகை என்ன, கட்ட வேண்டிய கடன் எவ்வளவு என்பதையெல்லாம் கண்டுபிடித்துச் சொன்னால் நன்றாக இருக்குமே என்று நினைக்கத் தோன்றுகிறது அல்லவா? இந்த மாதிரியான ஒரு வேலையைத்தான் இன்றைய பல ஃபைனான்ஷியல் ஆப்ஸ்கள் செய்கின்றன. அவற்றுள் ஒரு சில ஆஃப்ஸ்களைப் பற்றி இப்போது பார்ப்போம்.


மை பட்ஜெட் புக்!
Rating   4.6
இந்த ஆப்ஸ் ஒருவரது செலவு மற்றும் வருமானம் ஆகியவற்றைப் பதிவு செய்து, அதன் மூலம் அவரது நிதித் திட்டமிடலுக்கு உதவுகிறது. இதில் உங்களின் வருமானம் மற்றும் தினசரி செலவை பதிவு செய்துவந்தாலே போதும்; இந்த மாதத்தில் உங்கள் செலவு எப்படி இருக்கும், நீங்கள் இன்னமும் எவ்வளவு தொகையைச் சேமிக்க வேண்டும் என்பது போன்ற விவரங்களை இந்த ஆப்ஸ் தானாகவே திரட்டி, திட்டம் போட்டுத் தந்துவிடும். அதற்கேற்ப உங்கள் செலவுகளை நீங்கள் மாற்றியமைத்துக் கொள்ளலாம்.


இந்த ஆப்ஸைப் பயன்படுத்த இன்டர்நெட் வசதி தேவையில்லை. இதனை ஆங்கிலம் உள்பட 11 மொழிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். எந்த நாட்டின் பணமாக இருந்தாலும், அதற்கேற்ப இந்த பட்ஜெட் புக் சரியான திட்டமிடலைச் செய்யும் திறன்கொண்டதாக இருக்கிறது.

இதில் நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கையும் இணைத்துக் கொள்ளலாம் என்பதால் அதிகப் பாதுகாப்புடன் இந்த ஆப்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உங்கள் வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் தினசரி செலவுகள் ஆகியவற்றை எக்ஸ்எல் படிவங்களாகத் தரவிறக்கம் செய்துகொள்ளும் வசதியும் உள்ளது.

இந்த ஆப்ஸை கூகுள் ப்ளே ஸ்டோரில் வாங்கலாம். இந்த ஆப்ஸின் விலை 212 ரூபாய் மட்டுமே. புதிய அப்டேட்களும் அடிக்கடி இலவசமாகவே கிடைக்கின்றன. 5-க்கு 4.6 ரிவியூ பெற்றிருக்கும் இந்த ஆப்ஸ் நிதித் திட்டமிடலுக்கான சிறந்த ஆப்ஸாக உள்ளதாக இதைப் பயன்படுத்துபவர்கள் சொல்கிறார்கள். இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்துள்ளனர். இதன் கடைசி அப்டேட் ஆகஸ்ட் 2014-ல் வெளிவந்துள்ளது.

ஃபைனான்ஷியல் கால்குலேட்டர்!
Rating 4.3 

சிலர் மூன்று, நான்கு இடங்களில் கடன் வாங்கியிருப்பார்கள். எவ்வளவு அசல் கட்டியிருக்கிறோம், எவ்வளவு தொகை கடன் பாக்கியுள்ளது, இஎம்ஐ தொகை இந்த மாதம் எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதெல்லாம் தெரியாமலே மாய்ந்து மாய்ந்து கடனைக் கட்டிக் கொண்டிருப்பார்கள்.  இந்தப் பிரச்னையைத் தீர்க்க இப்போது பல ஆப்ஸ்கள் ஸ்மார்ட் போன்களில் வரத் துவங்கிவிட்டன. ஃபைனான்ஷியல் கால்குலேட்டர் எனும் இந்த ஆப்ஸ் ஒருவரது அனைத்து ஃபைனான்ஷியல் கணக்குகளையும் கணக்கிட்டுச் சொல்லும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் நமது முதலீடுகளில் இருந்து நமக்கு வரவேண்டிய தொகை மற்றும் நாம் வாங்கியுள்ள கடனுக்குச் செலுத்த வேண்டிய வட்டி ஆகியவற்றுக்கான தகவல்களை அளித்தால் அதுவே கணக்கிட்டுச் சொல்லிவிடுகிறது.


இந்த ஆப்ஸ் கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கிறது. இந்த ஆப்ஸ் 5-க்கு 4.3 ரிவியூ பெற்றிருக்கிறது. இந்த ஆப்ஸ் ஃபைனான்ஷியல் கணக்கீடுகளுக்கு உதவும் சிறந்த ஆப்ஸ் என பயன்பாட்டாளர்கள் கூறியிருக்கின்றனர். இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்துள்ளனர். புதிய அப்டேட்களும் அடிக்கடி இலவசமாகவே கிடைக்கின்றன.

தினசரி செலவுகளைச் சமாளிக்கும் ‘டெய்லி எக்ஸ்பென்ஸ்’!
Rating    4.5

தினசரி நாம் எவ்வளவு செலவு செய்கிறோம் என்பது தெரியாமலே செலவு செய்கிறவர்களுக்குத் தடுப்புக்கட்டை போடுகிற ஆப்ஸ்தான் இது. இதன்மூலம் ஒருவர் தனது மாத வருமானத்தில் ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்திருக்கிறார், அதன் மூலம் மாத வருமானம் எப்படி குறைந்திருக்கிறது, இந்த விகிதத்தில் செலவழித்தால், இந்த மாதம் அவரது வருமானத்தில் எவ்வளவு பணம் மிச்சம் இருக்கும் என்பதைக் கணித்துத் தரும் வகையில் இந்த ஆப்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இந்த ஆப்ஸை பயன்படுத்தி தினசரிக் கணக்குகளுக்கான வார, மாத விவரங்களை கிராபிக்ஸ் படங்களாக பெற முடியும். இதில் நாம் பயன்படுத்தும் நாட்டின் பணத்துக்கேற்ப விவரங்களை மாற்றிக்கொள்ள முடியும். இந்த ஆப்ஸ் கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கிறது. இதற்கு 5-க்கு 4.5 ரிவியூ பெற்றிருக்கிறது.

தினசரி வரவு - செலவுகளைக் கணக்கிட இது மிகவும் உதவியாக இருப்பதாக இதைப் பயன்படுத்துபவர்கள் சொல்கிறார்கள்.  இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள்  இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்துள்ளனர். புதிய அப்டேட்களும் அடிக்கடி இலவசமாகவே கிடைக்கின்றன.


வருமான வரி கணக்கிட இன்கம் டாக்ஸ் அசிஸ்டென்ட்!
Rating   4.4

பலருக்கும் வருமான வரி என்றாலே வேப்பங் காய்தான். ஆனால், வருமான வரியை வருட ஆரம்பம் முதலே எப்படியெல்லாம் திட்டமிடலாம் என்பதை அழகாக எடுத்துச் சொல்கிறது இந்த ஆப்ஸ். நமது சேமிப்புக் கணக்குத் தொடர்பான விவரங்களையும், பிஎஃப் தொகை பங்களிப்பு மற்ற முதலீடுகளின் பங்களிப்பு என அனைத்துக்கும் ஏற்றவாறு கணக்கிட்டு நம் வருமான வரியை எப்படித் திட்டமிட வேன்டும் என்பதையும் எக்ஸ்எல் படிவங்களாக தந்துவிடுகிறது.

ஸோலோ Q2100

ஆண்ட்ராய்டு இயங்குதளத்துடன் சமீபத்தில் ஸோலோ நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் போனான ‘Xolo Q2100’யை வெளியிட்டது. ‘ஸோலோ Q2100’ ஸ்மார்ட் போன் 5.5 இன்ச் 720x1280 pixels (267 ppi) தொடுதிரையைக் கொண்டுள்ளது. கீறல்களைச் சமாளிக்க ‘Corning Gorilla Glass 3’ என்ற தொழில் நுட்பத்தை இந்தத் தொடுதிரை கொண்டுள்ளது. மேலும், ‘ஸோலோ Q2100’ ஸ்மார்ட் போன் சக்திவாய்ந்த  8 மெகா பிக்ஸல் பின்புற கேமராவையும், 2 மெகா பிக்ஸல் முன்புற கேமராவையும் கொண்டுள்ளது.

ஸோலோ Q2100 ஸ்மார்ட் போன், 1.3GHz Quadcore சக்திவாய்ந்த பிராசஸர் மற்றும் 1GB ரேம்மைக் கொண்டு இயங்கு கிறது. ‘Mali 400-MP2’ என்ற கிராபிக்ஸ் பிராசஸரும் இந்த ஸோலோவின் Q900Sல் அடங்கும். ஆண்ட்ராய்டு 4.4.2-யைக் கொண்டு இயங்கும் ஸோலோ Q2100-ன் இன்டர்னல் மெமரி 8GB. மேலும், 32GB வரை SD கார்டு மூலம் விரிவுபடுத்திக் கொள்ளலாம். பேட்டரி வசதியைப் பொறுத்த வரை, 2800mAh பேட்டரியைக் கொண்டுள் ளது இந்த ஸ்மார்ட் போன்.


டூயல் சிம் வசதியோடு வரும் ஸோலோ Q2100, சராசரி ஸ்மார்ட் போன்களின் வசதி களான GPRS, EDGE, 3G, WiFi, GPS மற்றும் ப்ளூ-டூத் ஆகியவற்றையும் பெற்றுள்ளது. ரூபாய் 12,440 விலையில் இந்திய சந்தையில் விற்பனையாகும் ஸோலோ Q2100 ஸ்மார்ட் போன், ‘Fingerprint’ சென்ஸாரோடு வருகிறது. ஆப்பிளின் ஐபோன் மற்றும் சாம்சங்கின் கேலக்ஸி எஸ்5 ஆகிய விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்களில் மட்டுமே இருக்கும் ‘Fingerprint’ சென்ஸார், ஸோலோ Q2100 ஸ்மார்ட் போனின் பின்புறத்தில் அமைந்துள்ளது.

இந்தப் புதிய தொழில்நுட்பம் வாடிக்கையாளர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜீன் டிரோல் - பொருளாதாரப் பிரிவில் நோபல் பரிசைப் பெற்றிருப்பவர்

அறிவியல் துறைகளில் புதியவற்றைக் கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு தருவதுபோல, பொருளாதாரத்தில் புதிய கருத்தாக்கங் களைக் கண்டுபிடிக்கும் பொருளாதார நிபுணர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு தரப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பொருளாதாரப் பிரிவில் நோபல் பரிசைப் பெற்றிருப்பவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜீன் டிரோல்.

ஜீன் டிரோல் 1953-ம் வருடம் பிரான்ஸின் டிரோயிஸ் நகரில் பிறந்தார். பாரிஸில் தனது தொழில்நுட்பப் படிப்பை மேற்கொண்ட ஜீன் டிரோல், 1981-ல் மசாசூசெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலயில் (MIT) பொருளாதார ஆய்வுகளுக்காக டாக்டர் பட்டம் பெற்றார். இவர் டவ்லஸ் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் மற்றும்  எம்ஐடியில் பேராசிரியராக பணியாற்றுகிறார்.

நிறுவனங்களின் மார்க்கெட் அதிகாரம் மற்றும் நெறிமுறை களுக்கு ஜீன் டிரோல் செய்த ஆய்வுக்காக  நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக ராயல் சுவீடீஸ் அகாடமி சொல்லியிருக்கிறது. 1980-களில் இருந்தே டிரோல் தனது ஆராய்ச்சிகளைத் துவங்கியுள்ளார். மார்க்கெட்டில் நிறுவனங்கள் சந்திக்கும்  தோல்விகள், அதற்கான காரணங்கள் குறித்து தனது ஆராய்ச்சியில் விரிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

 

‘மோனோபொலி’ என்று அழைக்கப் படும் ஏகோபித்த அதிகாரம் கொண்ட நிறுவனங்கள் தொலை தொடர்பு தொடங்கி வங்கிகள் வரை அனைத்து துறைகளிலும் இருக்கின்றன.

இந்த நிறுவனங்கள் வர்த்தகப் போட்டியில் மற்ற நிறுவனங்களை எப்படி மொத்தமாக அழிக்கின்றன என்பதையும், இதுபோன்ற நிறுவனங்களை எப்படி நெறிமுறைப்படுத்த வேண்டும் என்பதை யும் தனது ஆய்வில் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் டிரோல்.

நோபல் பரிசு பெற்ற ஜீன் டிரோல் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ‘‘அதிக அதிகாரமுள்ள நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு நெறிமுறைப்படுத்தப்பட வேண்டும்’’ என்று சொல்லியிருக்கிறார்.

தற்போதுள்ள பொருளாதார நிலை யில் ‘மோனோபொலி’ நிறுவனங்களின் எண்ணிக்கை சர்வதேச அளவில் அதிகரித்து வருவதையடுத்து நோபல் பரிசு பெற்ற ஜீன் டிரோலின் கருத்து மிக முக்கியமானது. 61 வயதிலும் பொருளாதாரம்

புரூஸ் லீ!

குங் பூ என்றதுமே இன்றைக்கும் பலரது நினைவுக்கு வருவது புரூஸ் லீதான். இவரது சண்டைகள் எப்படி கடினமானவையோ அதுபோல, அவரது வாழ்க்கையும் கஷ்டங்கள் நிறைந்தது. 

நவம்பர் 27, 1940-ல் கலிஃபோர்னியா வில் உள்ள சான் ஃப்ரான்சிஸ்கோவில் பிறந்தார் லீ. இவர் பிறந்த மருத்துவமனை யில் வேலை பார்த்த நர்ஸின் பெயரையே அவருக்கு முதல் பெயராக வைத்தனர். இதனோடு அவரது தந்தையின் பெயரான லீயும் சேர்ந்தது.

லீயின் தந்தை ஒரு திரைப்பட நடிகர்.  சிறுவயதிலேயே குங் பூ கற்றுத் தேர்ந்தார். ஆனால், மற்றவர்களுடன் சண்டையில் ஈடுபடுவதைக் கண்ட அவரது தந்தை லீயை நியூயார்க் நகரத்துக்கு அனுப்பி வைத்தார்.


தனது அன்றாட வாழ்க்கைக்காக குங் பூ கற்றுத் தருவதைத் தொழிலாக்கினார். அப்போது வோங் ஜாக்மேன் எனும் குங் பூ வீரர், “ஆசியாவைச் சேராத மக்களுக்கு குங் பூ கற்றுத் தராதே” என்றார். ‘‘கலை எல்லோருக்கும் பொதுவானதுதானே’’ என்று லீ சொல்ல, அவரை சண்டைக்கு அழைத்தார். இந்தச் சண்டையில் தோற்றால், குங் பூ சொல்லித் தருவதை நிறுத்திவிட வேண்டும் என்பது ஒப்பந்தம். ஆனால், அந்தச் சண்டையில் லீ வென்றார்.

குங் பூ கலையில் சில மாற்றங்களைக் கொண்டுவந்த லீ, டிவி ஷோக்களிலும், ஹாலிவுட் படங்களிலும் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளில் அனைவரையும் அசரவைத்தார். லீயின் வலதுகால் இடதுகாலைவிட சற்று உயரம் குறைவு. அதை ஒரு குறையாகக் கருதாமல் தன் பாணியில் சண்டையிட்டு கலக்கினார். இவரது வேகத்தை ஒரு நொடிக்கு 24 பிரேம்களால் படம் பிடிக்க முடியவில்லை; இன்னமும் 10 பிரேம்கள் கூடுதலாகத் தேவைப்பட்டன.

1973-ம் ஆண்டு சீனாவில் எடிமா நோயால் இறந்தார் லீ. தனது முதுகு வலிக்கு எடுத்துக்கொண்ட மருந்துதான் லீயின் மூளையைப் பாதித்து அவரைக் கொன்றுவிட்டது என்றனர் சிலர். மேலும் சிலர், அவரது மரணத்தில் சர்ச்சை இருப்பதாக கூறினர். 32 வயதில் புரூஸ் லீ இறந்தாலும், தடைகளைக் கடந்து செல்லும் மன தைரியத்தை அவரிட மிருந்து எல்லோருமே பெறலாம்!

ஸ்ரீராம்

Friday, October 17, 2014

மோக்லி - அக்டோபர் 9, 2015...

இந்தியாவில் பிறந்த இங்கிலாந்து எழுத்தாளர், ஜோசப் ருட்யார்ட் கிப்ளிங் (Joseph Rudyard Kipling). இவர் எழுதிய புகழ்பெற்ற படைப்பு, ஜங்கிள் புக்.

இந்தியக் காடு ஒன்றில் தவறவிடப்படும் ‘மோக்லி’ என்ற சிறுவனை, விலங்குகள் எடுத்து வளர்க்கின்றன. கரடி, ஓநாய், கருஞ்சிறுத்தை, மலைப்பாம்பு போன்ற பயங்கர விலங்குகள் எல்லாம் மோக்லியின் உயிர் நண்பர்கள். அவனுடன் ஆட்டம் பாட்டமாக இருப்பவர்கள். அதே சமயம், புலி மற்றும் குரங்குக் கூட்டங்களால் தொந்தரவும் உண்டாகும். கானகத்தை ஒட்டியிருக்கும் கிராமத்து மக்களுக்கும் அவனுக்கும் ஏற்படும் தொடர்பு, சில மனிதர்களால் உண்டாகும் பிரச்னைகள் என விறுவிறுப்பும் நகைச்சுவையும் போட்டிபோடும்.
 

அன்பு, ஒழுக்கம், பிறருக்கு நன்மை செய்தல் என நன்னெறி விஷயங்களை அடிப்படையாகக்கொண்ட கதைகளின் தொகுப்பு இது. அதனாலேயே, பிற சாகசக் கதைகளில் இருந்து வேறுபட்டது. உலக அளவில், சாரணச் சிறுவர்களுக்கு இந்தப் புத்தகம் அளிக்கப்படுகிறது.

காமிக்ஸ், தொலைக்காட்சித் தொடர், சினிமா எனப் பல வடிவங்களில் ஏற்கெனவே வெளியாகி, உலகச் சுட்டிகளை ஈர்த்துள்ளது. இப்போது, மனிதர்கள் மற்றும் அனிமேஷன் கலந்த பிரமாண்டமான 3D படமாக, டிஸ்னி தயாரிப்பில் உருவாகிவருகிறது.

இதில், மோக்லி வேடத்தில் நடிப்பது, ‘நீல் சேத்தி’ (Neel Sethi) என்ற 10 வயது சிறுவன். நியூயார்க்கில் வசிக்கும் இவன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவன். படத்தில், விலங்குகள் எல்லாம்  அனிமேஷனில் வரும். ‘பகீரா’ என்ற கருஞ்சிறுத்தைக்குக் குரல் கொடுப்பவர், பென் கிங்ஸ்லி (Ben Kingsley). பாலூ (Baloo) கரடிக்குக் குரல் கொடுப்பவர், பில் முர்ரே (Bill Murray). அயன் மேன் 1&2 படங்களை இயக்கிய, ஜான் ஃபேவ்ரூ (Jon Favreau) இந்தப் படத்தை இயக்குகிறார்.



மலாலா

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பில், இரட்டை மகிழ்ச்சி. இந்தியாவைச் சேர்ந்த ஒருவரும், உலகச் சிறுவர்கள் பலருக்கும் ரோல்மாடலாக இருக்கும் ஒரு பெண்ணும், அமைதிக்கான நோபல் பரிசைப் பகிர்ந்து பெற்றிருக்கிறார்கள்.

பெண்கள் உரிமைக்காகத் தொடர்ந்து செயல்பட்டுவரும் மலாலா, சிறுவர்களின் உரிமைக்காகப் போராடிவரும் கைலாஷ் சத்யார்த்தி இருவரும் இந்தப் பரிசைப் பெறுகிறார்கள். ஓர் இந்தியரும் பாகிஸ்தானியரும் இணைந்து அமைதிக்கான நோபல் பரிசு பெறுவது, உலக அளவில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

‘மிக இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர்’ என்ற பெருமையுடன் உலகை நிமிர்ந்துபார்க்கிறார் 17வயது மலாலா.  1915-ல், வில்லியம் லாரன்ஸ் பராக் (William Lawrence Bragg) தன்னுடைய 25-வது வயதில் நோபல் பரிசு பெற்றார். சுமார் 100 ஆண்டுகள் நீடித்த இந்தச் சாதனையை, மலாலா மாற்றிவிட்டார். பாகிஸ்தானில் இருந்து நோபல் பரிசு பெறும் முதல் நபர் என்ற பெருமையையும்  மலாலா பெற்றிருக்கிறார்.


தன்னுடைய 11-வது வயதில், பிபிசி இணையதளத்தில், புனைப் பெயரில் கட்டுரைகள் எழுதிவந்தார் மலாலா. அவை, ‘தாலிபான்கள்’ என்ற தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில், கல்வியின் நிலை, பெண்களின் வாழ்க்கைமுறை எப்படி இருக்கிறது என்பனவற்றைப் பற்றிப் பேசின. இது, தாலிபான்களைக் கொதிப்படையச் செய்தன.

2012-ம் ஆண்டு, சக மாணவிகளுடன் பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார் மலாலா.  வழிமறித்து ஏறிய தாலிபான் ஒருவன்,  துப்பாக்கியால் சுட்டான். மலாலாவின் தலை, தோள்பட்டைப் பகுதிகளில் குண்டுகள் பாய்ந்தன.

இந்தச் சம்பவத்தால், மலாலாவின் மன உறுதியைத் தீவிரவாதிகளால் அழிக்க முடியவில்லை. இங்கிலாந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பியவர், முன்பைவிடத் தீவிரமாகச் செயல்பட ஆரம்பித்தார்.

‘‘இனி, புனைப் பெயர்கள் தேவை இல்லை. நான்தான் மலாலா” என்று சொல்லிக்கொண்டு, பெண் குழந்தைகளின் கல்வி, உரிமைகளுக்காக  தீர்க்கமான கருத்துக்களை முன்வைத்து இயங்கத் தொடங்கினார்.

ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய உரையில், “அவர்கள் ஆயுதங்களால் என்னை அமைதியாக்க விரும்பினார்கள். ஆனால், நான் மேலும் உறுதியாக இருக்கிறேன்” என்றார்.

ஐக்கிய நாடுகள் சபை, மலாலாவின் பிறந்த நாளான ஜூலை 12-ம் தேதியை ‘சர்வதேச மலாலா தினம்’ என்று அறிவித்தது. ‘தேசிய இளைஞர்களுக்கான அமைதி விருது, அன்னை தெரசா நினைவுப் பரிசு, அமைதிக்கான ரோமின் விருது, சிமோன் டி போவார் விருது’ என்று மலாலா பெற்ற விருதுகளின் பட்டியல் நீள்கிறது. இப்போது, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றிருக்கிறார், இந்தத் துணிச்சல் நாயகி.



‘குழந்தைப் பருவத்தைக் காக்கும் இயக்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி, குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு, கல்வி பெற வழிவகுக்கும் சேவையை 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்துவருகிறார், கைலாஷ் சத்யார்த்தி.

கைலாஷ், நோபல் பரிசு பெறும் ஏழாவது இந்தியர் மற்றும் இந்தியாவிலிருந்து அமைதிக்கான நோபல் பரிசு பெறும் இரண்டாம் நபர்.

1954 ஜனவரி 11-ம் தேதி, மத்தியப்பிரதேச மாநிலத்தின் விதிசா என்ற ஊரில் பிறந்தவர். சிறுவயது முதலே, ஏழ்மையில் இருக்கும் சக சிறுவர்கள், குழந்தைகள் மீது மிகுந்த அன்புடன் இருப்பார்.

தனது 11-வது வயதிலேயே குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்தார்.

‘‘வசதியான மாணவர்கள், தங்களது முந்தைய பாடப் புத்தகங்களை ஏழை மாணவர்களுக்குக் கொடுத்து, அவர்களின் கல்விக்கு உதவ வேண்டும்” என்று சொன்னார்.

தனது நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு சமூகப் பனியில் ஈடுபட்டார்.பொறியியல் படித்துவிட்டு, கல்லூரி விரிவுரை யாளராகப் பணியாற்றினார்.



1980-ம் ஆண்டு அந்தப் பணியிலிருந்து விலகி, கொத்தடிமை ஒழிப்பு இயக்கத்தைத் தொடங்கினார். சர்க்கஸ் கம்பெனி ஒன்றில் அடிமைகள் போல நடத்தப்பட்ட, குழந்தைத் தொழிலாளர்களை மீட்கச் சென்றார். அப்போது, ரௌடிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டார். உடம்பு முழுவதும் ரத்தம் கொட்டியபோதும் பின்வாங்கவில்லை. அந்தக் குழந்தைகளை மீட்டு, கல்வி கற்க ஏற்பாடு செய்தார்.

அப்போது ஆரம்பித்த இவரது போராட்ட வாழ்க்கை, தேசிய அளவிலும் சர்வதேச அளவிலுமாக, பரந்துபட்ட தளத்தில் விரிந்தது. இவருடைய இயக்கத்தின் போராட்டங்கள் காரணமாக 80ஆயிரம் குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். இந்தப் போராட்டங்களில் இவரது இரண்டு தோழர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.

‘‘குழந்தைகளின் கல்வியை மறுத்து, அவர்களின் உழைப்பைச் சுரண்டித் தயாரிக்கப்படும் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்” என்று சொன்ன கைலாஷ், ‘இந்தப் பொருள், குழந்தைத் தொழிலாளர்களால் தயாரிக்கப்படவில்லை’ என்று அறிவிக்கும்படியாக ஒரு தரச் சான்றிதழ் முறையை உருவாக்கினார்.

‘‘உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் இன்னும் குழந்தைத் தொழிலாளர்கள் முறை இருப்பது வேதனையானது. இதை முற்றிலும் ஒழிக்கும் எனது பணி் தொடரும்” என்கிறார் கைலாஷ்.

Wednesday, October 15, 2014

ஞானமலை

வேலூர் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் அருகில், கோவிந்தச்சேரி கிராமத்தில் உள்ள ஒரு மலையின்மேல் கல்வெட்டு ஒன்று காணப்பட்டதாக நாளேடுகளில் ஒரு செய்தி வெளியானது. 'காளிங்கராயன் என்பவன் இந்த ஞானமலைக்குப் படிகளை அமைத்தான்’ என்பதுதான் அந்தச் செய்தி. செய்தி வெளியான ஆண்டு 1998. மண்கொண்ட சம்புவராயர், முதலாம் ராஜநாராயணன், இரண்டாம் ராஜநாராயணன் ஆகிய அரசர்கள் காலத்தில் தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதிக்கு அதிகாரியாக இருந்தவன் இந்தக் காளிங்கராயன் (1322-1340).

1977ம் ஆண்டு தொடங்கி, இடைவிடாது நான்கு ஆண்டுகள் திருப்புகழ்த்தலங்களைப் பற்றித் தீவிரமாக ஆய்வு செய்தபோது, 'ஞானமலை’யின் இருப்பிடம் மட்டும் தெரியவரவில்லை. 

'முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச்சரவண...’ என்று முதலடி எடுத்துக் கொடுத்து அருணகிரிநாதரை ஆட்கொண்டான் கருணை முருகன். அங்கிருந்து புறப்பட்டு பல மலைகளையும், பல தலங்களையும் தரிசித்துவிட்டு, அருள் பெறும் நிலையில் ஞானமலைக்கு வருகிறார் அருண கிரியார். திருவண்ணாமலைக் காட்சிகள் அவரது நினைவுக்கு வருகின்றன. அங்கே உலகை வெறுத்து உயிரை விடத் தீர்மானித்தபோது, முருகப் பெருமான் திருவடி தரிசனம் தந்து ஆட்கொண்டான் அல்லவா? அந்தத் திருவடிக் காட்சிப் பேரருளை மீண்டும் ஞானமலையில் வேண்ட, அவ்வண்ணமே அவருக்கு யோகாநுபூதி அளித்து, பாத தரிசனம் அளிக்கிறான் ஞான பண்டிதன்.

'எமைமனம் உருக்கி யோக அநுபூதி அளித்த பாத
உமைபாலா எழுதரிய பச்சைமேனி
இமையவர் துதிப்ப ஞானமலையுறை குறத்தி பாக
இலகிய சசிப்பெண் மேவு பெருமாளே’

என்று அந்த அருள் அனுபவத்தை ஞானமலைத் திருப்புகழில் பதிவு செய்கிறார் அருணகிரியார். ஞானமலை ஞானபண்டிதனை வழிபட்டு அவனது பாத தரிசன அனுபவத்தை நாமும் பெற வேண்டும் அல்லவா?


ஞானமலை அடிவாரத்தில் தென்திசை நோக்கி அருள்பாலிக்கும் ஞானசக்தி கணபதியை தரிசனம் செய்துகொண்டு, 150 படிகள் ஏறினால், அருணகிரிநாதர் யோகாநுபூதி மண்டபத்தில், கல்லால மரத்தடியில் காட்சியளிக்கும் ஞான தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம். அங்கிருந்து கோயிலை அடைந்து, கொடிமரம் அருகில் வீழ்ந்து வணங்கி மகா மண்டபத்துக்குள் செல்லலாம். கருவறையில் ஞானகுஞ்சரி, ஞானவல்லி சமேத ஞானபண்டித சுவாமி அருட்காட்சி வழங்குகிறார். ஒருமுகம், நான்கு கரங்களுடன் பின் இருகரங்களில் கமண்டலம் ஜபமாலை ஏந்தியும், முன் வலக் கரம் அபய முத்திரையிலும், முன் இடக் கரம் இடுப்பிலும் கொண்டு நின்ற கோலத் தில் மிக அற்புதக் காட்சி! சிற்ப ஆகம நூல்கள் குறிப்பிடும் 'பிரம்ம சாஸ்தா’ வடிவம். பிரணவத்துக்குப் பொருள் தெரியாத பிரமனைக் குட்டி, சிறையிட்டு, சிருஷ்டித் தொழிலைத் தாமே மேற்கொண்ட (பிரமசாத்தன்  பிரமனைத் தண்டித்தவன் என்று பொருள்) அருட்கோலம்.

பல்லவர் காலம் மற்றும் முற்காலச் சோழர்கள் காலத்தில் தொண்டை மண்டலத்தில் அமைந்த பெரும்பாலான திருக்கோயில்களில் பிரம்ம சாஸ்தா வடிவமே காணப்படுவது குறிப்பிடத் தக்கது. சிற்ப அமைப்பைக் கொண்டு ஞானமலை ஞானபண்டிதன் திருக் கோலம் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று தெரிய வருகிறது.

தெற்குச் சுற்றில் அருணகிரிநாதருக்குக் காட்சியளித்த 'குறமகள் தழுவிய குமரன்’ வடிவம், வேறு எங்கும் காண இயலாத அற்புத வடிவம். நீல மயிலில் அமர்ந்த கோலக்குமரன், இடதுபுறம் மடிமீது வள்ளியை அணைத்தவாறு இருக்கும் இன்ப வடிவம். அருகில், அருணகிரியார் கூப்பிய கரங்களுடன் இக் காட்சியைக் கண்டு இன்புறுவார். தெற்குச் சுவரில் ஞானமலைக்குரிய இரண்டு திருப் புகழ்ப் பாடல்கள் மற்றும் பதிகம், வரலாறு முதலான கல்வெட்டுகள் முருகன் புகழைப் பாடுகின்றன. வடக்குச் சுற்றில் சண்முக கவசம், குமாரஸ்தவம் மற்றும் படித்திருப்பணி நன்கொடையாளர்கள் பெயர் விவரங்கள் கல்வெட்டில் உள்ளன. மலையின் மேற்புறம் ஏறிச் செல்லும் வழியில் முருகன் உண்டாக்கிய 'வேற்சுனை’ உள்ளது.

சில படிகள் ஏறி மலையின் மேற்புறம் சென்றால், அங்குள்ள மண்டபத்தில் ஞானப்பூங்கோதை சமேத ஞான கிரீஸ்வரர் அருள் காட்சி வழங்குவார். அருணகிரிநாதரை பரமகுருவாகக் கொண்டு  இந்த ஞானமலையில் பல்லாண்டுகள் தவமியற்றியவர் ஞான வெளிச் சித்தர் என்னும் பாலசித்தர் ஆவார். முருகன் திருவடிகள் பதிந்த இவ்விடத்தில் தவமியற்றி, மக்களுக்கு கூன், குருடு, செவிடு, பேடு போன்ற குறைகளை நீக்கி, பல நோய்களுக்கு மருந்தளித்து, ஞானத்தை போதித்தவர். கார்த்திகை மாதம் மூல நட்சத்திர நாளன்று, இவர் ஞானமலை முருகன் திருவடிகளில் கலந்தார். இந்த அற்புதச் செய்தியை 2010ம் ஆண்டு அக்டோபர் நாலாம் நாள் நள்ளிரவில் உணர்த்தியதோடு, முருகன் கோயில் முன்புறம் உள்ள மண்டபத்தூணில் ஞானவெளிச் சித்தரின் உருவத்தைக் காட்டி அருள்பாலித்தான் முருகன். அவர் சமாதி கொண்ட இடத்தில்தான் ஞானகிரீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.

இம்மலையில் இரண்டு குகைகள் உள்ளன. பாலசித்தருக்குப் பிறகு மற்றொரு சித்தர் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தவமியற்றியுள்ளார். மலையின் அடி வாரத்தில் அவருக்கான சமாதி உள்ளது.

ஞானகிரீஸ்வரர் திருக்கோயிலின் பின்புறம், ஞானபண்டித சுவாமி திருவடி பதிந்துள்ள மகா புனிதமான இடத்தைத் தரிசிக்கும்போது, நமக்கு அருணகிரிநாதர் வரலாறு நினைவுக்கு வர, பரவசம் அடைகிறோம். அவருக்குத் திருவடி காட்சியளித்து, யோகாநுபூதி அளித்ததற்கான சான்று இங்கே பதிந்துள்ள முருகனின் பாதச் சுவடுகளே! வள்ளியை மணந்துகொண்டு இங்கு வந்தபோது, இம்மலையில் முருகன் உலவியதாக மக்கள் நம்புகிறார்கள். 'ஞானம்’ என்பதற்கு திருவடி என்றும் பொருள். எனவே, ஞானமலை என்பதை திருவடி மலை என்றும் கூறலாம். 'ஞானமலை முருகன் திருவடிப் பூங்கோயில்’ இங்கே அருமையாகக் காட்சியளிக்கிறது. வேதங்களும் காணாத வேலனின் திருப்பாதங்கள் பதிந்த பரம பவித்திரமான இந்தப் புண்ணியபூமியில் நாம் உடலால் வலம்வர (அங்கப் பிரதட்சணம் செய்ய) இம்மண்டபம் உருவாகியுள்ளது. இங்கே அமர்ந்து ஜபம், தியானம் செய்யும்போது அற்புதமான ஒலி அதிர்வுகளை பலரும் உணர்ந்து அனுபவித்துள்ளனர். இங்கு அங்கப் பிரதட்சணம் செய்தால் நோய்கள் நீங்கும்; மகிழ்ச்சியான இல்லற வாழ்வு அமையும் என்பதை அனுபவத்தால் மட்டுமே உணர முடியும்.


ஞானமலையில் மிகுதியாகக் காணப்படுவது, வெப்பாலை என்னும் அரிய வகை மூலிகை மரம். இதற்கு மலை மல்லிகை, குடசப்பாலை என்றும் பெயர். தோல் சம்பந்தமான நோய் (சொரியாசிஸ்) வெண்குஷ்டம், மூட்டுவலி முதலான உபாதைகளுக்கு இம்மரத்தின் இலை அரிய மூலிகை யாகும். இதன் மிகச் சிறிய விதை, பாதாம் பருப்பின் சுவையுடையது. இம்மரத்தின் காற்று, தம்பதியருக்கு இல்லற இன்பத்தையும், குடும்ப ஒற்றுமையையும் அளிக்கிறது என்பது சித்த மருத்துவம் கூறும் உண்மை. மேலும், இங்குள்ள எலுமிச்சை மணம் கமழும் புல் மூலம் முகத்துக்்கு வசீகரம் அளிக்கும் தைலம் தயாரிக்கலாம்.

வள்ளிமலையில் வள்ளியை மணந்து, தணிகைமலை செல்லும் வழியில் முருகன் முதலில் வள்ளியுடன் பொழுதுபோக்கிய பெருமையுடையது ஞானமலை. எனவே, இம்மலைக்கு வந்து தரிசிப்பவர்களுக்கு ஆனந்தமான வாழ்வையும், மன அமைதியையும் அளித்து மகிழ்விக்கிறான் அந்த வள்ளி மணாளன். இம்மலைக்கு வடமேற்கில் வள்ளிமலையும் வடகிழக்கில் தணிகை மலையும் சமஅளவு (35 கி.மீ) தூரத்தில் அமைந்துள்ளது. மூன்றும் ஒரு முக்கோண வடிவில் அமைந்திருப்பதும், இவற்றை முறையே காலை, பகல், மாலை என ஒரே நாளில் மூன்று வேளைகளில் தரிசிப்பதும் மிகவும் விசேஷம்!

மலை ஏறிச் செல்வதற்கு வசதியாகப்  படிகள் அமைத்துள்ளது ஞானாச்ரமம் அறக்கட்டளை அமைப்பு. நித்ய பூஜை ஏற்பாடு, மலையில் குடிநீர் வசதி முதலானவையும்  செய்யப்பட்டுள்ளன. ஆடிக்கிருத்திகை, பங்குனி உத்திரம், தைப்பூசம் முதலான விசேஷ நாட்களில் காவடி, பால்குடம் எடுத்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து வழிபடுகிறார்கள். கோயிலின் தென்புறம் வேல் பூஜை, லட்சார்ச்சனை, திருவிளக்கு பூஜை மற்றும் பொதுமக்கள் வசதிக்காக அன்னதானம், திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தவும், தற்போது மிக பிரமாண்டமான 'ஞானவேல் மண்டபம்’ (2112 சதுர அடி அளவில்) உருவாகி வருகிறது. இம்மண்டபத் திருப்பணிக்கும், மேற் கொண்டு இக்கோயிலின் பல்வேறு வளர்ச்சிகளுக்கும் பொதுமக்களின் நன்கொடை பெரிதும் தேவைப்படுகிறது.


மலை அடிவாரத்தில் அமைந்துள்ள 'ஞானாச்ரமம் திருமாளிகை’, 'செந்திலடிமை’ டாக்டர் எஸ்.சுந்தரம் அவர்களின் அரிய முயற்சியால் உருவாகியுள்ளது. இம் மாளிகையில் 'குறமகள்தழுவிய குமரன்’ அற்புதமான பஞ்சலோக வடிவம் தரிசித்து இன்புறத்தக்கது. ஆண்டுதோறும் அருணாகிரியாருக்கு காட்சி விழாவும், திருப்புகழ் திருப்படி விழா, லட்சார்ச்சனை போன்ற வைபவங்கள் ஞானாச்ரம அறக்கட்டளை மூலம் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. கோயிலில் பூஜை செய்து வரும் குமரேசன் குடும்பத்தார் ஞானாச்ரமம் திருமாளிகையில் வசித்து வருவதால், தரிசனத்துக்கு வரும் அன்பர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து தருகிறார். மலைமேல், தமிழ்நாடு வனத்துறை உதவியுடன் மரக்கன்றுகள் நடப்பட்டுப் பசுமையுடன் காட்சியளிக் கிறது. ஞானமலையின் ஒருபுறம் ஏரியும், மறுபுறம் வயல்களும் பச்சைப்பசேல் என்று அழகாகக் காட்சியளிக்கின்றன. இந்தக் கிராமத்தில் கல்வி, மருத்துவம் போன்ற சமுதாயப் பணிகளிலும் ஞானாச்ரமம் அறக்கட்டளை ஆர் வமுடன் பங்கு கொண்டு செயலாற்றி வருகிறது.

திருப்புகழைப் பாடிப் பரப்பிய வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் போன்ற அருளாளர்கள் பலர் வழிபட்டு அருள்பெற்ற ஞானமலை முருகனை நாமும் சென்று வழிபடுவோம். உடலும் உள்ளமும் இன்புற்று மகிழ, ஞானபண்டித சுவாமியின் திருவருளை வேண்டுவோம்!

Tuesday, October 14, 2014

பண்டிகை ஆஃபர்கள்!

தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் பண்டிகை ஆஃபர்கள் நம் வீட்டின் கதவைத் தட்ட தொடங்கியுள்ளன. முன்பு கடைகளுக்குச் சென்று பொருட்களைத் தேர்ந்தெடுத்து வாங்குவதை வழக்க மாகக் கொண்டிருந்தனர் நம் மக்கள்.

ஆனால், தற்போது வீட்டிலிருந்தபடியே பண்டிகை பர்ச்சேஸை பக்காவாக முடித்துக்கொள்ளும் வசதியை ஆன்லைன் நிறுவனங்கள் கொண்டுவந்துவிட்டன. புத்தாடைகள் தொடங்கி, டிவி, ஃபிரிட்ஜ் என அனைத்துப் பொருட் களையும் கணினி திரையில் பார்த்தபடி வாங்கிக் குவிக்கிறது இளைஞர் கூட்டம்.

இதனை நன்றாகப் புரிந்துகொண்ட இ-காமர்ஸ் நிறுவனங்களும் ஆஃபர்களை எக்ஸ்பிரஸ் வேகத்தில் வழங்கி வருகின்றன.

ஒரு நாளைக்கான ஆஃபர், ஒரு மணி நேரத்துக்கான ஆஃபர் என பல ஆஃபர்களை இந்த நிறுவனங்கள் வழங்கி வருவதுடன், இடையிடையே அதிரடி ஆஃபர்களை வழங்கி வாடிக்கையாளர்களைத் திக்குமுக்காட செய்கின்றன ஆன்லைன் நிறுவனங்கள்.


இதனைச் சமாளிக்க நேரடியாகப் பொருட்களை விற்கும் சில ரீடெயில் நிறுவனங்களும் தங்கள் பங்குக்கு ஆஃபர்களை வழங்கத் தொடங்கி விட்டன. குறிப்பிட்ட தொகைக்கு நீங்கள் பொருட்களை வாங்கினால், மாதந்தோறும் குறிப்பிட்ட தொகைக்கான பொருட்களை இலவச மாகவே பெறலாம் என்று சொல்லி, தாங்களும் இந்த ஆஃபர் மழையில் இலவசங்களை கொட்டத் தயார் என்று களத்தில் குதித்திருக்கின்றன. இந்த ரீடெயில் நிறுவனங்கள் தரும் ஆஃபரையும் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதி கொண்டுதான் இருக்கிறது.

இந்தியாவில் ரீடெயில் நிறுவனங் களின் வர்த்தகத்தில் அமைப்பு சார்ந்த ரீடெயில் வர்த்தகத்தின் மதிப்பு ரூ.1,76,700 கோடியாக உள்ளது. அதேசமயம், அமைப்பு சார்ந்த ஆன்லைன் வர்த்தகத்தின் மதிப்பு ரூ.13,900 கோடியாக உள்ளது. மொத்த ரீடெயிலுடன் ஒப்பிட்டால்,  வெறும் 7.9 சதவிகிதத்தையே ஆன்லைன் நிறுவனங்கள் ஆக்கிரமிக் கின்றன என்றாலும் ஆஃபர்களை அள்ளி வழங்குவதில் முதலிடம் பிடிப்பவை ஆன்லைன் நிறுவனங்களாகவே இருக்கின்றன. சமீபத்தில் ஃப்ளிப்கார்ட் ‘பிக் பில்லியன் டே’ என்று அறிவித்து,  அன்றைக்கு ஆரவாரமான பம்பர் தள்ளுபடி விற்பனையை நடத்தியது.

அன்று மட்டும் ஏறக்குறைய ஒரு பில்லியன் முறை (100 கோடி) மக்கள் இந்த இணையதளத்தை அணுகி பொருட்களைத் தேடியுள்ளனர் என பெருமையோடு சொல்லிக் கொண்டது ஃப்ளிப்கார்ட் நிறுவனம். ஒரு ரூபாய்க்கு ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்குவது தொடங்கி, பொருளின் விலையில் 90% வரை ஆஃபர் வழங்கும் அதிசயம் அன்று நடந்ததால், காலை 8 மணி தொடங்கி பலரும் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து பல பொருட்களை வாங்கத் தயாரானார்கள்.

இந்த ஆஃபரில் விற்கப்பட்ட பொருட்கள் அனைத்துமே சாதாரண மாக எல்லா கடைகளிலும் கிடைப்பது தான். என்றாலும், நினைத்துப் பார்க்க முடியாத ஆஃபர், அதுவும் மிகச் சில மணி நேரங்களுக்குத்தான் என்கிற பரபரப்பினால் பலரும் பல பொருட்களை வாங்க முற்பட்டனர். குறிப்பிட்ட சில பொருட்களுக்குக் காலையில் மிகக் குறைந்த விலையும், நேரம் ஆக ஆக அதிக விலையும் இருந்தது. இருந்தாலும், ரீடெயில் கடைகளைவிட விலை குறைவுதான் என்பதால், அதிகமான பொருட்களை மக்கள் வாங்கிக் குவித்தனர்.

 பில்லியன் சொதப்பல்கள்!

‘பிக் பில்லியன் டே’ அன்று ஏறக்குறைய ரூ.600 கோடிக்கு வியாபாரம் செய்ததாகச் சொன்னது ஃப்ளிப்கார்ட் நிறுவனம். ஆனால், அன்றைய தினத்தில் பொருட்களை வாங்க வந்தவர்களுக்கு கசப்பான அனுபவமே கிடைத்தது. காரணம், இந்த ஆஃபரில் விற்கப்பட்ட பொருட்களில் பெரும்பாலானவை விற்பனை தொடங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே ஸ்டாக் இல்லை என்ற அறிவிப்பு வந்துவிட்டது.

சில பொருட்களை ஆர்டர் செய்யும்போது ஆஃபர் விலை ஒன்றாகவும், அதனை வாங்கும்போது வேறொரு விலையாகவும் இருந்தது கண்டு பலரும் அதிர்ந்து போனார்கள். அழகான சுடிதார் 500 ரூபாய் விலையில் கிடைக்கிறதே என்று ஆசையாக வாங்கப்போனவர்கள், பணம் கட்டும் போது அது 1,200 ரூபாய் என்று மாறியதைப் பார்த்து அதிர்ந்தனர். 

ஒரு பொருளை வாங்கியவர் அதற்கான பணத்தைக் கட்டிவிட்டு ஆவலாகக் காத்திருக்க, மறுநாள் காலையில் இந்தப் பொருளைத் தருவதில் எங்களுக்குச் சிரமம் உள்ளது. அதனால் உங்கள் பணத்தைத் திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என்று வந்த மெயிலைப் பார்த்து கடுப்பானவர்கள் பலர்.

பரிசாகத் தரப்பட்ட கூப்பனிலும் பல குளறுபடிகள். ரூ.500 மதிப்புள்ள கூப்பனைத் தந்துவிட்டு, இதனை நீங்கள் பயன்படுத்த 3,000 ரூபாக்குமேல் பொருளை வாங்க வேண்டும் என்று நிபந்தனைப் போட்டதும் அதிர்ச்சிதான்.

இன்னும் சிலர், சில பொருட்களின் விலையைக் கடந்த மூன்று மாதங்களாக கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி, இப்போது மீண்டும் குறைத்துள்ளனர். இதெல்லாம் தள்ளுபடியே கிடையாது என  இணையதளங்களில் வெறுப்பு மழை கொட்டினார்கள்.

பலரும் இப்படி வெறுப்பில் இருப்பதைப் பார்த்து, மறுநாள் காலையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டது ஃப்ளிப்கார்ட் நிறுவனம்.

 அடுத்தது அமேசான்!

ஃப்ளிப்கார்ட்டின் இந்த மெகா ஆஃபரைத் தொடர்ந்து அமெரிக்காவின் அமேசான் நிறுவனமும் இதேமாதிரியான தள்ளுபடி கொண்டாட்டத்துக்குத் தயாரானது. ஏற்கெனவே மிஷன் மார்ஸ் என்கிற பெயரில் ஆஃபர்களைத் தந்த அமேசான், ஃப்ளிப்கார்ட் இழுத்துக்கொண்ட வாடிக்கை யாளர்களை இப்போது தனது பக்கம் இழுத்துக் கொள்ள தயாராகிவிட்டது.

இனிவரும் காலத்தில் ஆன்லைன் நிறுவனங்களை நம்மால் தவிர்க்க முடியாது. விலை குறைவு, வீட்டுக்கு பொருள் வந்து சேரும் வசதிகளால் இனி பலரும் பொருட்களை வாங்க  ஆன்லைனை நாடுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், ஆன்லைனில் பொருட்களை வாங்கும்போது   எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்பது முக்கியமான விஷயம்.


மோடியின் மேக் இன் இந்தியா சாத்தியம் ஆகுமா?

மேட் இன் அமெரிக்கா, மேட் இன் ஜெர்மனி என்கிற வார்த்தைகள் ஒரு காலத்தில் நம்மவர்கள் இடையே படுபிரபலம். இதனை உணர்ந்த பிரதமர் மோடி இதே பாணியில் மக்களைக் கவரும் விதமாக  சமீபத்தில் அறிவித்திருக்கும் திட்டம் தான் ‘மேக் இன் இந்தியா’. உலகின் எந்தப் பகுதியில் இருக்கும் நிறுவனமாக இருந்தாலும் சரி, இந்தியாவில் பொருளைத் தயாரித்து, அதை உலகம் முழுக்க கொண்டு சென்று விற்கலாம். இதன்மூலம் பல கோடி வேலைவாய்ப்பு களை உருவாக்கலாம் என்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். இந்தத் திட்டத்தை முழுமையாக விளக்கும் வகையில் ஒரு தனி இணையதளத்தையே திறந்திருக்கிறது மத்திய அரசாங்கம்.

 

வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க 25 துறைகளை அந்த இணையதளத்தில் பரிந்துரை செய்திருக்கிறார் பிரதமர் மோடி. இந்தத் துறைகள் இன்றைக்கு இந்தியாவில் எப்படி இருக்கிறது, ஏன் இந்தத் துறைகளில் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கான காரணங் களையும் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். இணையதளத்தில் சொல்லப்பட்டு இருக்கும் முக்கிய விஷயங்களைக் கொஞ்சம் பார்ப்போம்.

1ஆட்டோ மொபைல் துறை யில் ஆண்டுக்கு 21.50 லட்சம் வாகனங்களைத் தயாரிக்கிறது நம் இந்தியா. உலக அளவில் ஆட்டோமொபைல் உற்பத்தியில் இந்தியா 4-வது பெரிய நாடாக இருக்கிறது. எனவே, இந்தியாவில் ஆட்டோமொபைல் தொழிலுக்குத் தேவையான கட்டமைப்பு இருப்பதால், இந்தத் தொழிலை வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு வந்து தொடங்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார். மேலும், 2020-ல் வருடத்துக்கு 60 லட்சம் வாகனங் களை விற்பனை செய்யும் அளவுக்கு இந்தியா வளரும்; அடுத்த 20 வருடத்தில் உலகின் மிகப்  பெரிய ஆட்டோமொபைல் ஹப்பாக இந்தியா இருக்கும். 

2 ஆட்டோ மொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்புத் துறை 2012-13-ல் மட்டும் 39.7 பில்லியன் டாலர் வருவாயைப் (சுமார் 2.42 லட்சம் கோடி ரூபாய்) பெருக்கியுள்ளது. தற்போது உலகின் நான்காவது பெரிய ஸ்டீல் உற்பத்தியாளராக உள்ள இந்தியா இன்னமும் இரண்டு ஆண்டுகளில் உலகின் இரண்டாவது பெரிய ஸ்டீல் உற்பத்தியாளராக உருவாகும்.

3உள் கட்டமைப்புத் துறையில் 2017-ம் ஆண்டு வரை 1,000 பில்லியன் டாலர் அளவிலான திட்டங்களுக்குத் தேவை இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி, இந்தியாவில் அடுத்த 20 ஆண்டுகளில் 650 பில்லியன் டாலர் (சுமார் 39.65 லட்சம் கோடி ரூபாய்) அளவுக்கு முதலீடு தேவைப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கட்டுமானப் பணிகள் இந்திய ஜிடிபியில் 10 சதவிகிதப் பங்களிப்பை அளிப்பதால், இந்தத் துறையில் முதலீடு வரவேற்கப்படுகிறது.

4  கனிமவளத் துறையில் இந்தியா உலக அளவில் ஆறாவது இடத்திலும், இரும்பு உலோக இருப்பில் ஐந்தாவது மிகப் பெரிய நாடாகவும் இருக்கிறது.
இந்தியாவில் இன்னமும் 302 பில்லியன் டன் நிலக்கரி இருப்பு உள்ளதால், அடுத்த 20-30 வருடங்களுக்குக் குத்தகைக்கு விடும் அளவுக்கு சக்தி உள்ளது. இந்தியப் பொருளாதார வளர்ச்சியானது மின்சாரம் மற்றும் சிமென்ட் துறையை அதிகம் சார்ந்துள்ளதால், இந்தத் துறைகளில் அதிக முதலீடுகள் வரவேற்கப்படுகின்றன.

5 துறைமுகங் களைப் பொறுத்த மட்டில், 2009-ம் ஆண்டு 575 மில்லியன் மெட்ரிக் டன்களாக இருந்த சரக்கு பயன்பாட்டு வசதி தற்போது 800 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 43,000 கோடி ரூபாய்  அளவிலான முதலீடு கள் 2014-ம் ஆண்டில் ஏற்பட்டுள்ளதும் இந்தத் துறையில் முதலீடு செய்யக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், புதிதாக 87 துறைமுகங்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதேபோன்று பாதுகாப்புத் துறை, தகவல் தொழில்நுட்பம், பார்மா, மாற்று எரிசக்தி, போக்குவரத்து, விண்வெளி, சுற்றுலா போன்ற துறைகளில் உள்ள சிறப்பம்சங்களையும் மோடி அரசு முன்வைத்து இந்தத் திட்டங்களை உருவாக்கியுள்ளது. 

இந்த அறிவிப்புகளை எல்லாம் பார்க்கும்போது, ஆஹா, அற்புதம் என்றுதான் சொல்லத் தோன்றும். ஆனால், இவையெல்லாம் நிறைவேறும் சாத்தியம் கொண்ட திட்டங்கள்தானா, சர்வதேச அளவில் உற்பத்தித் துறையில் இன்றைக்கும் நம் நாடு எங்கே இருக்கிறது என்கிற கேள்விகள் முக்கியமானவை. உலகில் உற்பத்திரீதியாக முன்னிலை வகிக்கும் 189 நாடுகளில் இந்தியா 134வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் ஜிடிபியில் உற்பத்தித் துறையின் பங்களிப்பு வெறும் 16%தான். ஆனால், சீனாவின் உற்பத்தி அதன் ஜிடிபியில் 36%, தென்கொரியா 34% பங்களிப்பை கொண்டுள்ளன. நம் அண்டை நாடு களான பாகிஸ்தானும், பங்களாதேஷும் நம்மைவிட அதிக பங்களிப்பைதான் ஜிடிபிக்கு வழங்குகின்றன.

2022-ல் நமது மொத்த ஜிடிபியில் 25 சதவிகித பங்களிப்பை உற்பத்தித் துறை செய்ய வேண்டும் என்கிற இலக்கு தற்போது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கை நம்மால் அடைய முடியுமா என்றால், கடினம்தான்.

 இந்தியாவில் தொழில் துவங்க 12   முக்கிய அனுமதி பெற வேண்டும். இதற்கு 27 நாட்கள்  செலவாகும்.  கட்டுமான அனுமதி பெற 35 அனுமதி பெற வேண்டும். இதற்கு 168 நாட்கள் செலவாகும். ஆக மொத்தம், அனைத்து அனுமதிகளையும் பெற 1,420 நாட்கள் (அதாவது, 3 ஆண்டுகள் 89 நாட்கள்) தேவைப்படும் என ஆய்வுகள் சொல்கின்றன. இந்த நிலையில் 10 கோடி புதிய வேலைகளை எப்படி உருவாக்க முடியும்  என்கிற கேள்வி எழவே செய்கிறது.

இருப்பினும் தொலைதொடர்பு, ரயில்வே துறையின் உள்கட்டமைப்பு களில் 100 சதவிகித அந்நிய முதலீட்டை யும், பாதுகாப்புத் துறையில் 49 சதவிகித அந்நிய முதலீட்டுக்கும் அரசு அனுமதி தந்திருப்பது இந்தத் திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது. தவிர,  பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களில் நிச்சயம் எதாவது ஒரு திட்டம் அந்த நாட்டுடன் ஒப்பந்தம் செய்யப்படுவதால், தொழில்நுட்ப ரீதியான வளர்ச்சிக்கு  வழிவகுக்கும்.

மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டமானது கேட்பதற்கு உற்சாகம் தரு வதாக இருந்தாலும், இதைச் செயல்படுத்த தேவையான நிலங்கள், மின்சாரம் போன்றவை பெரும் தட்டுப்பாடாகவே  உள்ளன. இந்தத் தடைகளை தகர்க்க மத்திய அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதைப் பொறுத்துதான் இந்தத் திட்டத்தின் வெற்றி அமையும்.






மிஸ்டர் கூல் தோனி !

வெற்றி பெற்றால் மகிழ்ச்சி,  தோற்றால் வருத்தம் அடைவது  சாதாரண மனிதனின் இயல்பு. இதனை மாற்றி எந்தநிலையிலும் நிதானமாகச் செயல்படுபவர்களே சிறந்த தலைவர்களாக மாறுவார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மஹேந்திரசிங் தோனி.

ஜூலை 7, 1981-ல் ராஞ்சியில் பிறந்த தோனி, சிறுவயதில் மிகவும் ஏழ்மையான குடும்பப் பின்னணியில் வளர்ந்தவர். சிறுவயதில் இருந்தே கால்பந்தாட்டத்தில் கோல் கீப்பராக வேண்டும் என்று அவருக்கு ஆசை. ஒருநாள் அவரது நண்பர்கள் விளையாடும் கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பருக்கு காயம் ஏற்பட, தோனி விக்கெட் கீப்பராக அழைக்கப்பட்டார். அதிலிருந்து கிரிக்கெட் ஆர்வம் அவரைத் தொற்றிக்கொண்டது. பீகார் அணியில் இடம்பிடித்த தோனி, நன்கு ஆடினாலும், அவரது அணி தோல்வியைச் சந்தித்த தால், தோனியின் திறமை வெளிச்சத்துக்கு வராமலேயே இருந்தது.


இந்திய ஏ அணியில் இடம் பிடித்த தோனி, கென்யாவுக்கு எதிராக அடித்த சதம் அப்போதைய கேப்டன் கங்குலியின் கண்ணில் பட்டது. பங்களாதேஷ் தொடரில் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கினார் கங்குலி. முதல் ஆட்டத்தில் ‘டக் அவுட்’ ஆகி தோனி வெளியேற, இனி அவர் இந்திய அணியில் இடம் பிடிப்பது கனவுதான் என எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், பாகிஸ்தான் தொடரில் ஆடக் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்ட தோனி 148 ரன்களையும், இலங்கைக்கு எதிராக 183 ரன்களையும் அடித்து உலக கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையைத் தன்பக்கம் திருப்பினார்.


பின்னர் டி20 உலகக் கோப்பையிலிருந்து முக்கிய வீரர்கள் விலக, தோனி கேப்டன் ஆனார். 2011-ல் ஒருநாள் போட்டிக்கான  உலகக் கோப்பையை வென்றார். அடுத்து அவர் தலைமையில்தான் இந்திய அணி அதிகளவில் வெற்றி பெற்றது.
கிரிக்கெட் வீரரான தோனி, இந்தியாவில் கால் பந்து விளையாட்டை ஊக்குவிப்பதற்காக இந்த மாதம் தொடங்க இருக்கும் ஐஎஸ்எல் போட்டியில் விளையாடும் சென்னை அணியில் முதலீடு செய்து இணை உரிமையாளராக ஆகியுள்ளார். தோல்வியோ, வெற்றியோ நிதானமாகச் செயல்பட்டால் தலைவனாகலாம் என்பதற்கு ‘மிஸ்டர் கூல் தோனி’ மிகச் சிறந்த உதாரணம்.

ஹெச்.பி 10 பிளஸ் டேப்லெட்!

இன்றைய  உலகில் டேப்லெட்களின் பங்களிப்பு ஏராளம். ஆபீஸ் டாக்குமென்ட்ஸ் எடிட்டிங், நெட் ப்ரவுஸிங், இ-புக் வாசிப்பு என டேப்லெட்டின் உபயோகம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

சமீபத்தில் ஹெச்.பி நிறுவனம் தனது புதிய டேப்லெட்டான, ‘ஹெச்.பி 10 பிளஸ்’ டேப்லெட்டை (HP 10 PLUS Tablet) அமெரிக்காவில் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் ரூ.17,000 விலையில் விற்பனைக்கு வெளியிடப்போவதாக ஹெச்.பி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரூ.18,500-க்கு  விற்பனையாகும் சாம்சங் கேலக்ஸி டேப் 3 டேப்லெட் ஆண்ட்ராய்டு 4.1 ஜெல்லி-பீன் இயங்குதளத்தைக் கொண்டு இயங்கும்போது இந்த டேப்லெட், ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்-கேட் புதிய இயங்கு தளத்தைக் கொண்டு இயங்குவது இதற்குச் சாதகமான விஷயம்.


10.1 இன்ச் HD தொடுதிரையைக் கொண்டுள்ள ஹெச்.பி 10 பிளஸ் டேப்லெட், 1 GHz குவாட்-கோர் கோர்டெக்ஸ் A7 பிராசஸர் மற்றும் 2GB DDR3L ரேம்மைக் கொண்டு இயங்குகிறது. ஆனால், 7 இன்ச் தொடுதிரையைக் கொண்டுள்ள சாம்சங் கேலக்ஸி டேப் 3 டேப்லெட், 1.2 GHz டுயல் - கோர் பிராசஸர் மற்றும் 1GB ரேம்மைக் கொண்டுதான் இயங்குகிறது.

5 மெகா பிக்ஸல் பின்புற கேமரா மற்றும் 2 மெகா பிக்ஸல் - கேமராவைப் பெற்றுள்ள இந்த டேப்லெட், 16 GB இன்டர்னல் மெமரி யோடு வருகிறது. இதை SD கார்டு மூலம் 32 GB வரை விரிவுபடுத்திக் கொள்ளலாம். இதன் மொத்த எடை 662 கிராம் மட்டுமே.  ஆனால் 3 மெகா பிக்ஸல் பின்புற கேமரா மற்றும் 1.3 மெகா பிக்ஸல் கேமராவைப் பெற்றுள்ள சாம்சங் கேலக்ஸி டேப் 3 டேப்லெட், 8 GB இன்டர்னல் மெமரியோடு தான் வருகிறது. இதையும் SD கார்டு மூலம் 32 GB வரை விரிவுபடுத்திக் கொள்ளலாம். Wi-Fi 802.11 b/g/n, GPS, ப்ளூ-டூத் 4.0 மற்றும் மைக்ரோ USB ஆகிய வசதிகளோடு  7700 mAh சக்தி வாய்ந்த பேட்டரியைக் கொண்டிருப்பதும் சாதகமான விஷயமே!

செ.கிஸோர் பிரசாத் கிரண்

Saturday, October 11, 2014

மரியாதை


நம் காலத்தில் நமக்குமுன்னே கண்ணுக்குத் தெரிகிற பெரியவர்களுக்கு வந்தால், இங்கேதான் மரியாதை என்ற அம்சம் ரொம்பவும் முக்ய ஸ்தானத்தில் இடம் பெறுகிறது. தெய்வசக்தி என்பதைப் பற்றிய நம் கணக்குப்படி அது ஸரியா, தப்பா என்பது வேறு விஷயம்; ஆனால் அதுதானே நடைமுறையில் இருக்கிறது?

அந்தக் கணக்குப்படி பார்த்தால் தெய்வங்கள், பூர்வகால மஹான்கள், நம் காலத்துப் பெரியவர்கள் ஆகிய மூன்று பேருக்கு எப்படி மார்க் போடுகிறோமோ அதற்கு ‘இன்வர்ஸ் ப்ரபோர்ஷ’னிலேயே (எதிரிடை விகிதாசாரத்திலேயே) நாம் அவர்களிடம் காட்டுகிற மரியாதை இருக்கிறது!

ப்ரியம், பந்துத்வம், ஸ்வாதீனம் என்றெல்லாம் இருக்கிற பக்தியம்சங்கள் ப்ரத்யக்ஷப் பெரியவர்களிடம் தூக்கலாக இல்லாமல், அதனாலேயேதானோ என்னவோ, மரியாதையம்சம் இங்கேதான் தலைதூக்கிக் கொண்டு முக்யமாக நிற்கிறது.

மதஸம்பந்தமாகப் பெரியவர்கள் என்றிருக்கிற ஸ்வாமியார்கள் மட்டுந்தான் என்றில்லை; அரசியல் ப்ரமுகர்கள், கட்சித் தலைவர்கள், அறிவாளிகளாக இருக்கப்பட்டவர்கள், கலைகளில் சிறப்புப் பெற்றவர்கள், பணபலம் படைத்தவர்கள் என்று யாரை எடுத்தாலும், எந்தத் துறையிலும் பெரியவர்களாக உள்ளவர்களிடம் மரியாதைதான் நம் அப்ரோச்சில் முக்யமாயிருக்கிறது. ‘மரியாதை’ என்பதைவிட ‘ரெஸ்பெக்ட்’ என்று சொன்னால் இந்த விஷயம் நன்றாகப் புரியும்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Thursday, October 09, 2014

முதுகுவலி... தீர்வுகள்!

 
முதுகுவலி... அனுபவிப்பவர்களுக்கே அதன் வேதனை புரியும்.
 
''முதுகுவலி என்று சொல்வது, ஏதோ சிறிய பிரச்னையாகத் தோன்றலாம். உண்மையில் இது முதுகுத் தண்டுவடம் சார்ந்த பிரச்னை! கழுத்தில் உள்ள 7 எலும்புகள், மார்பகத்தின் பின்புறம் உள்ள 12 எலும்புகள், வயிற்றுப் பகுதியின் பின்புறம் உள்ள 5 எலும்புகள்... இவற்றை உள்ளடக்கியதே முதுகுத் தண்டுவடம். தண்டுவடத்தில் ஏராளமான நரம்புகள் உள்ளன. இதில் உள்ள நரம்புகள் மூளையிலிருந்து கை - கால்களுடன் இணைக்கப்படுகின்றன. இந்த எலும்பு, நரம்பில் ஏற்படும் பிரச்னைகளே ஒருவருக்கு முதுகுவலியை ஏற்படுத்தும்.
 
காரணங்கள்: அதிக நேரம் உட்கார்ந்தபடியே வேலை செய்வது, முறையான பொஸிஷனில் இல்லாமல் கனமான பொருட்களைத் தூக்குவது, பெண்களுக்கு கர்ப்பப்பை, நீர்ப்பை போன்றவற்றில் ஏற்படும் கிருமித்தொற்று, 40 வயதைக் கடந்த பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாறுபாட்டால் எலும்புகளில் உண்டாகும் கால்சியம் குறைவு, குடல்நோய் பாதிப்பு, அதிக அயற்சி (ஸ்ட்ரெய்ன்), கிருமிகளின் தாக்குதல் (காய்ச்சல், வைரஸ், பாக்டீரியா தாக்குதல்), எலும்புப் புற்றுநோய்... இவையெல்லாம் முதுகுத் தண்டுவடத்தில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்பதால், முதுகுவலி வரலாம்.
 
வயது: எல்.கே.ஜி குழந்தைகள் முதல் கோலூன்றும் வயது வரை யாருக்கும் வரலாம்
 
கண்டறிவது எப்படி: சிலருக்கு முதுகுவலியுடன் கூடிய கால்வலி வரக்கூடும். சிலர் இருமும்போது, தும்மும்போதுகூட முதுகுவலியை உணரலாம். சிலருக்கோ குறுகிய தூரம் நடப்பது மட்டுமின்றி, சிறிது நேரம் அமர்வதுகூட இயலாததாக இருக்கும். தண்டுவடத்தில் நாள்பட்ட பாதிப்பு கண்ட சிலருக்கு கூன் விழலாம். திடீரென முதுகுவலி வந்தால், சமீபத்திய ஏதாவதொரு செயலின் விளைவு என்று, தேவையான ஓய்வெடுப்பது போதுமானது. தொடர்ந்து முதுகுவலியால் பாதிக்கப்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். சாதாரண எக்ஸ்ரேவில் என்ன பிரச்னை என்பதைக் கண்டறிய முடியாது என்பதால், எம்.ஆர்.ஐ ஸ்கேன் அவசியம்.
 
சிகிச்சைகள்: ஆரம்பகட்டம் அல்லது பழக்கவழக்கத்தால் ஏற்பட்ட முதுகுவலி உள்ளவர்களுக்கு ஓய்வு, வலிநிவாரணி, நரம்புக்குத் தேவையான விட்டமின் மாத்திரைகள், மருத்துவ ஆலோ சனை சொல்லும் வாழ்க்கை முறை மாற்றம் போதுமானது. இதுவே, அதிகப்படியான பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு அறுவை சிகிச்சையே நிரந்தர தீர்வைத் தரும்.
 
இன்றைய காலகட்டத்தில், தண்டுவட பிரச்னைகளுக்கு மைக்ரோ, லேசர் சர்ஜரி என பல சிகிச்சைகள் மூலம் தீர்வு காணப்படுகிறது. அதேநேரத்தில் இத்தகைய சிகிச்சைகள் சரியான உடல்தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுவதால் வேறுவிதமான பிரச்னைகள் எழ வாய்ப்பில்லை.
 
எவ்வளவு செலவாகும்: எம்.ஆர்.ஐ ஸ்கேன் போன்றவற்றுக்கு 3 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். ஆரம்பகட்ட பிரச்னை என்றால் மருந்து, மாத்திரை என சில ஆயிரங்கள் செலவாகும். அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு 50 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை செலவாகும். அரசு வழங்கும் காப்பீடு திட்டத்தின் மூலமாக இலவசமாகவும், குறைந்த செலவுடனும் செய்துகொள்ளமுடியும்.
 
வராமல் தடுக்க: நீண்ட நேரம் ஒரே இடத்தில், ஒரே பொஸிஷனில் அமர்ந்து வேலை செய்வதைத் தவிர்ப்பது, சேரில் அமர்ந்து வேலை செய்யும்போதும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டும்போதும் 90 டிகிரி நேராக நிமிர்ந்து அமர்வது, குழந்தைகள் அதிக சுமை கொண்ட புத்தகப்பை தூக்குவதை தவிர்ப்பது, தினமும் குறைந்தது அரை மணி நேரம் உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகா இவற்றில் ஏதாவது ஒன்று, வாரத்தில் இரண்டு நாட்கள் குறைந்தது 40 நிமிட நீச்சல் பயிற்சி, தினமும் சத்தான உணவு எடுத்துக்கொள்வது...

இந்தச் செயல்பாடுகள் எல்லாம் உங்கள் தண்டுவடத்துக்கு பாதிப்பு ஏதும் நேராமல் காக்கும். மேலும் முதுகுவலிக்கு மருத்துவ ஆலோசனை இன்றி நீங்களாகவே வலி நிவாரணி எடுத்துக்கொள்வது, பாதிப்பை அதிகப்படுத்துவதோடு, சிறுநீரகப் பிரச்னை வரை இழுத்துச் சென்றுவிடும். முதுகுவலிக்காக கடைகளில் கிடைக்கும் தைலங்கள், பாம் போன்றவற்றை பயன்படுத்துவது தற்காலிக தீர்வு மட்டுமே என்பதை மனதில் கொள்ளுங்கள்!''

சண்முகசுந்தரம் - எலும்பு முறிவு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்
 

கூகுள் மேப், துல்லிய வழிகாட்டி!

அத்தியாவசியத் தேவைகளின் வரிசையில், இன்டர்நெட்டையும் சேர்க்க வேண்டும் எனுமளவு இணையம் அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. அதிலும், இன்டர்நெட்டை பயன்படுத்தும் பள்ளி மாணவர் முதல் இன்டர்நெட் மூலம் கோடி, கோடியாக சம்பாதிப்பவர்கள் வரை அனைவரும் நாடுவது... கூகுள் சேவையைத்தான்! அந்தச் சேவைகளின் பட்டியலும், பயன்பாடும் இங்கே..!

கூகுள் மேப், துல்லிய வழிகாட்டி!

தெருவிட்டு தெரு, ஊர்விட்டு ஊர், மாவட்டம் விட்டு மாவட்டம், மாநிலம் விட்டு மாநிலம் என்று இனி எங்கு செல்ல வேண்டுமென்றாலும், வழி சொல்ல நம் கணினியில், கைப்பேசியில் கூடவே வருவார் மிஸ்டர் கூகுள் மேப். நாம் நிற்கும் புள்ளியில் இருந்து செல்ல வேண்டிய இடத்துக்கான சாலை வழி மட்டுமல்லாது, அதற்கு அருகே உள்ள லேண்ட் மார்க் உள்ளிட்ட தகவல்களையும் துல்லியமாக வழங்கவல்லது கூகுள் மேப். https://www.google.co.in/maps/ என்ற வலைதளம் சென்றால், உலகின் எந்தச் சாலைக்கும் வழி தெரிந்துகொள்ளலாம்.


பெர்சனல் பி.ஏ... கூகுள் காலண்டர்!

எந்த நாளில், எந்த நேரத்தில் யாரைப் பார்க்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்ற அட்டவணைக் குறிப்பு தொடங்கி, பர்சனல் விஷயங்கள் வரையான பதிவுக்கு டைரியை மொத்தமாக ரீ-பிளேஸ் செய்கிறது கூகுள் காலண்டர். www.google.com/calendar

உங்களுக்கே உங்களுக்கென ஒரு பக்கம்... உலகம் பார்க்க!
உங்களின் கற்பனையை, கருத்துக்களை, திறமையைப் பதிவேற்ற உங்களுக்கென சொந்தமாக ஒரு பக்கத்தை இணையத்தில் உருவாக்கிக்கொள்ள வழியமைத்துக் கொடுக்கிறது, கூகுள். https://www.blogger.com’ பக்கத்துக்கு சென்று, 'பிளாக்கர்’ என்ற கூகுள் சேவையைப் பயன்படுத்தி உங்களுக்கென ஒரு இலவசப் பக்கத்தை தொடங்கிக்கொள்ளலாம். இதில் பதிவேற்றும் விஷயங்களை உலகத்தின் பார்வைக்கு வைக்கலாம். 'பிளாக்’-ல் எழுத ஆரம்பித்து, புத்தகம் எழுதும் வரை எழுத்துலகில் இந்தத் தளத்தில் வளர்ந்தவர்கள் பலர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுடச் சுட நியூஸ்!

ஒரு சம்பவம் நடந்த அடுத்த சில நொடிகளிலேயே அதுகுறித்து அனைத்து தகவல்களையும், புகைப்படம் மற்றும் வீடியோவோடு இன்டர்நெட் மூலமாக தெரிந்துகொள்ளும் அளவுக்கு இன்றைக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அதிலும் சிறப்புப் பெறும் விதமாக, https://news.google.co.in/   கூகுள் நியூஸ் பக்கத்தில் தமிழ் தினசரி தொடங்கி, ஆங்கில செய்தித்தாள்கள் வரை ஒவ்வொரு நிமிடத்துக்கு இடைப்பட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

சா.வடிவரசு

Sunday, October 05, 2014

கேட்ஜெட்:அமேசானின் கிண்டில் இ-புக் ரீடர்!

ஸ்மார்ட் போன், டேப்லெட், பேப்லெட், லேப்டாப், டெஸ்க்டாப் என்று பல தொழில்நுட்ப சாதனங்கள் வந்தாலும், ஒரு புத்தகத்தில் படிக்கும் சுவைக்கு நிகரானதாக எந்தத் தொழில்நுட்ப கேட்ஜெட்டும் அமையவில்லை. இந்த இடைவெளியை சரிசெய்ய உருவாக்கப் பட்டதே இ-புக் ரீடர்ஸ். சோனி, கோபோ, பார்னஸ் போன்ற பல பிராண்ட்கள் இ-புக் ரீடர்களைத் தயாரித்தாலும், வாடிக்கையாளர் களுக்கு முதல் சாய்ஸாக அமைவது அமேசான் நிறுவனத்தின் ‘கிண்டில்’ என்னும் இ-புக் ரீடர்.

அமேசான் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய ‘கிண்டில்’ இ-புக் ரீடரை வெளியிட உள்ளது. வரும் அக்டோபர் 9-ம் தேதி முதல் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் இந்தப் புதிய கிண்டில் இ-புக் ரீடர், பழைய கிண்டில் இ-புக் ரீடரைக் காட்டிலும் பல புதிய தொழில்நுட்ப மாற்றங்களைக் கொண்டு உள்ளது.

கிண்டில் இ-புக் ரீடரின் சிறப்பம்சம், அதன் ‘Ink Display’ தொழில்நுட்பம். இந்தத் தொழில்நுட்பம் வாடிக்கையாளர்களுக்குப் புத்தகத்தில் படிக்கக்கூடிய அதே உணர்வைத் தரும் சிறப்பைக் கொண்டது. மேலும், எத்தனை மணி நேரம் தொடர்ந்து படித்தாலும் எந்தவிதப் பாதிப்பும் கண்களுக்கு ஏற்படாது.


தற்போது தொடுதிரை வசதியோடு வரும் புதிய ‘கிண்டில்’, சூரிய ஒளியிலும் எந்தவிதக் குறையும் இல்லாமல் பயன்படுத்தக்கூடிய ‘Glare-Free’ தொழில்நுட்பத்தோடு வருகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் ஏதேனும் புத்தகத்தை வாசிக்கும்போது, ஒரு சொல்லின் பொருளை அறிய இன்-பில்டாக அமைந்துள்ள அகராதி மற்றும் விக்கிபீடி யாவும் இருக்கிறது.

WiFi வசதியோடு வரும் இந்த கிண்டில், மூன்று விலைகளில் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது. ரூ.5,999-க்கு கிடைக்கும் கிண்டிலில் 3G மற்றும் ‘Built-in light’ வசதிகள் கிடையாது. ரூ.10,999 மற்றும் 13,999 ஆகிய இரு கிண்டிலிலும் ‘Built-in light’ வசதி இருக்கிறது. இந்த ‘Built-in light’ வசதி ஒளியை திரைக்கு உள்ளே தருவதனால், கண்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ரூ.13,999 கிண்டிலில் மட்டும் 3G வசதி யுண்டு. 6 இன்ச் தொடுதிரையைக் கொண்டுள்ள இந்த மூன்று மாடல்களும் ‘Amazon.in’-னில் மட்டுமே விற்கப்படுகிறது.

செ.கிஸோர் பிரசாத் கிரண்

Friday, October 03, 2014

ஏ.டி.எம். எச்சரிக்கைகள்!


ஏ.டி.எம். எனப்படும் Automated Telling Machine இப்பொழுது நகரங்கள் மட்டுமல்லாது கிராமங்களிலும் புழக்கத்துக்கு வந்துவிட்டன. அது போலவே ATM–களில் நடக்கும் தவறுகளும் குற்றங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. இவற்றிலிருந்து நுகர்வோர் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள, சில வழிமுறைகளை இப்பொழுது பார்ப்போமா?

ஏ.டி.எம்-ல் நடத்தப்படும் குற்றங்கள்:-

* கார்டில் உள்ள பின் எண்ணையும் மற்ற தகவல்களையும் தெரிந்து கொள்வது.

* இ-மெயில்கள் அனுப்பி, கணக்கு வைத்திருப்பவரின் தகவல்களைத் தெரிந்து கொள்வது.

* ‘ஸ்கிம்மர்’ போன்ற சாதனங்களைப் பயன்படுத்தி ஏ.டி.எம்.களில் உள்ள பணத்தை எடுப்பது.

நாம் கவனித்தில் கொள்ள வேண்டியவை:-

* எந்த வங்கியில் இருந்து ஏ.டி.எம். அட்டை வாங்கப்பட்டதோ, அந்த வங்கியின் ஏ.டி.எம்-ஐ கூடிய வரை பயன்படுத்துங்கள்.

* பின் நம்பர் என்பது Personal Identification Number ஐ குறிக்கும். இந்த எண்ணை கீ-போர்டில் அழுத்தும் போது யாரும் பார்க்காமல் கீ-போர்டு மறைந்து இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

* ஏ.டி.எம்.க்குள் வங்கிகள் அமைத்திருக்கும் ‘கேமராக்கள்’ மூலம் இந்த தகவல்களை மற்றவர்கள் தெரிந்து கொள்வார்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். இது தவிர வேறு நபர்களாலும் இத்தகைய கேமராக்கள் பொருத்த வாய்ப்பு உள்ளது.

* பணம் எடுத்தவுடன் நீங்கள் எடுத்த தொகை, உங்கள் கணக்கில் மீதம் உள்ள தொகையை வெளியேறும் சீட்டு மூலம் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

* பணம் எடுத்த பின், திரையில் கூறியுள்ள அறிவுரைகளின் படி, உங்கள் நடவடிக்கைகளை முடித்துக் கொள்ளுங்கள்.

உங்கள் ‘கார்டை’ வெளியே எடுக்க மறக்காதீர்கள் ஏ.டி.எம்.ஐ விட்டு வெளியே வரும் போது உங்கள் பர்ஸ், மொபைல் ஃபோன் போன்றவற்றை மறந்து விட்டுவிடாதீர்கள்.

* உங்கள் ‘கார்டு’ இயந்திரத்திற்குள் வேகமாக உள்ளே இழுக்கப்பட்டால், அது தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உண்டு.

* நடவடிக்கைகள் முடிந்த உடனேயே உங்கள் கார்டை வெளியே எடுத்து விட வேண்டும் (அதிக பட்சம் 30 விநாடிக்களுக்குள்)

* உங்கள் பின் எண்ணை உங்கள் டயரி மற்றும் வேறு புத்தகங்களில் எழுதி வைக்காதீர்கள். எண்களைத் தவறாக அழுத்தினால், உடனே ""Cancel'' என்ற பட்டனை அழுத்தவும்.

* ஒவ்வொரு ஏ.டி.எம்.மிலும் புகார் செய்ய வேண்டிய தொலைபேசி எண் எழுதப்பட்டு இருக்கும். உங்கள் புகாரை உடனே அந்தத் தொலைபேசி எண்ணுக்குத் தெரியப்படுத்தவும்.

* ஏ.டி.எம். தொடர்பான குறைகளை, நுகர்வோர் தெரிவித்தால் 7 நாட்களுக்குள் குறைதீர்க்கப்பட வேண்டும் என்பது ரிஸர்வங்கியின் அறிவுரை. இவ்வாறு தீர்க்கப்படாவிட்டால் ஒருநாளைக்கு ரூ. 100 மீதம் இழப்பீடு தரப்பட வேண்டும்.

* மேலும் ஆர்.பி.ஐ. உத்தரவின்படி, நுகர்வோரின் பெயர், கணக்கு எண், கார்ட் எண், ஏ.டி.எம். முகவரி, வங்கியின் பெயர், புகாரின் விவரம் போன்ற விவரங்கள் அடங்கிய புகார் படிவங்கள் ஒவ்வொரு ஏ.டி.எம்.லும் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

பலி வாங்கும் சுனாமி


‘சுனாமி’. இந்தச் சொல்லைக் கேட்டாலே 2004ம் ஆண்டில் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளைத் தாக்கிய சுனாமிதான் பலருக்கும் நினைவுக்கு வரும். அந்தச் சுனாமி தமிழகத்தை மட்டுமன்றி 14 நாடுகளைத் தாக்கி, இரண்டரை லட்சம் பேரை பலிகொண்டது. கடலினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளிலேயே சுனாமி தான் மிகப்பெரிய ஆபத்து.

கடலடித் தரைக்குக் கீழே ஏற்படுகிற பூகம்பத்தின் விளைவாகத்தான் சுனாமி தோன்றுகிறது. ஆனால் இப்படியான பூகம்பங்கள் அனைத்துமே சுனாமியை உண்டாக்குவதில்லை. மிகக் கடுமையான கடலடி பூகம்பம் தான் சுனாமியை உண்டாக்குகிறது.

கடலடி பூகம்பம் சில ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் நிகழ்வதாக இருக்கலாம். ஆனால் அப்படியான பூகம்பம் ஏற்பட்ட இடத்திலிருந்து பல ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கின்ற நிலப்பகுதி சுனாமியால் தாக்கப்படலாம்.

சுனாமி ஏற்படும்போது 10 அல்லது 30 மீட்டர் உயரத்துக்கு கடல் நீர் பெரும் பிரவாகமாக நிலப் பகுதிக்குள் பாய்கிறது. பின்னர் சற்று நேரம் கழித்து அந்த நீர் வேகமாக வந்த வழியே கடலுக்குத் திரும்புகிறது. இப்படிக் கடல் நீர் திரும்பிச் செல்லும்போது அனைத்தையும் ஒரேயடியாக அடித்துச் செல்கிறது. இதன் விளைவாகப் பெரும் உயிர்ச் சேதமும் பொருட் சேதமும் ஏற்படுகின்றன.

சுனாமியிலிருந்து தப்பிக்க ஒரே ஒரு வழி உண்டு. சுனாமி தாக்குவதற்கு முன்னர் கடல் நீரானது உள்வாங்கும். கடல் நீர் ஒரேயடியாகப் பின்னுக்குப் போவது என்பது அசாதாரண நிகழ்ச்சி. ஆகவே கடலோரமாக வசிப்பவர்களும் அந்த வட்டாரத்துக்கு வர நேர்ந்தவர்களும் இதை அதிசயமாகக் கருதி வேடிக்கை பார்க்கச் செல்வர். உள்வாங்கிய கடல் பின்னர் வேகத்துடன் கரையை நோக்கிப் பாயும் போது தப்பிப்பதற்கு நேரம் இருக்காது.

ஆகவே கடல் அசாதாரணமான அளவுக்கு உள்வாங்கி அதே நேரத்தில் சுனாமி எச்சரிக்கை விடப்படுமானால், திரும்பிப் பார்க்காமல் மேடான இடத்தை நோக்கி அல்லது உறுதியான கட்டடங்களின் மேல் மாடியை நோக்கி ஓடினால் உயிர் பிழைக்கலாம்.

2004ம் ஆண்டில் தோன்றிய சுனாமி தாய்லாந்து நாட்டின் கரையோரப் பகுதிகளையும் தாக்கியது. அப்போது புகேட் என்னுமிடத்தில் கடல் உள்வாங்கியபோது இங்கிலாந்திலிருந்து சுற்றுலா வந்திருந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 10 வயதான டெல்லி ஸ்மித் என்னும் சிறுமி சுனாமி தாக்கப் போகிறது என்பதை உணர்ந்து எல்லோரும் ஓடிப் போய்விடலாம்" என்று உஷார் படுத்தவே அவளது குடும்பத்தினரும் மற்றும் பலரும் அவ்விதமே மேடான இடத்தை நோக்கி ஓடி உயிர் தப்பினர். பள்ளியில் அவளது ஆசிரியர் சுனாமி பற்றி சொல்லிக் கொடுத்திருந்ததால் அவளால் மற்றவர்களை எச்சரிக்க முடிந்தது.

சுனாமி அலைகளின் உயரம் இந்த அளவுக்குத் தான் இருக்கும் என்று யாராலும் கணித்துக் கூற முடியாது. ஒருசமயம் அலாஸ்காவைத் தாக்கிய சுனாமியின் உயரம் 524 அடி அளவுக்கு இருந்தது.

ஜப்பானில் கிழக்குக் கரை ஓரமாக அமைந்த புகு ஷிமா நகரை 2011ம் ஆண்டில் ஒரு சுனாமி தாக்கியது. இதன் விளைவாக அங்கிருந்த அணுமின் சார நிலையத்திலும் கடல் நீர் புகுந்து விபரீத விளைவுகள் ஏற்பட்டன. சுனாமியின் விளைவாக பல ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதில் வேதனை என்னவென்றால் கடலில் தடுப்புச் சுவர்களை எழுப்பினால் சுனாமியைத் தடுத்து விடலாம் என்று கருதி கரையோரமாகக் கடலின் நடுவே நெடுக 10 மீட்டர் உயரத்துக்கு தடுப்புச் சுவர்களை எழுப்பியிருந்தார்கள்.சுனாமி அலைகள் 15 மீட்டர் உயரத்துக்கு இருந்ததால் தடுப்புச் சுவர்களால் எந்தப் பயனும் ஏற்படவில்லை.  தடுப்புச் சுவர்களால் பலன் இல்லாமல் போகலாம் என்று பல நிபுணர்கள் ஏற்கெனவே கூறியிருந்தனர். அதைப் பொருட்படுத்தாமல் இந்தச் சுவர்கள் எழுப்பப்பட்டன. அது மட்டுமன்றி தடுப்புச்சுவர்கள் கட்டுவதில் கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டதாக விழாவும் கொண்டாடினர்.தமிழகத்தைத் தாக்கிய சுனாமி எப்படி நிகழ்ந்தது என்பதைக் கவனித்தால் சுனாமி பற்றி மேலும் நன்கு அறிந்துகொள்ள இயலும்.அந்தமான் தீவுகளுக்கு கிழக்கே கடலுக்கு அடியில் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் அடி நிலப் பாறைகள் பூமிக்குள் இறங்கின. 1300 கிலோ மீட்டர் நீளத்துக்கு இவ்விதம் பாறைகள் உள்ளே இறங்கியபோதுதான் கடலடியில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. இதனால் அங்கு கடலடித் தரை பல மீட்டர் உயரத்துக்கு மேல் எழும்பிக் கீழே இறங்கியது. கடலடித் தரை இவ்விதம் மேலே எழும்பியபோது அங்கு கடல் நீரும் மேலே எழும்பியது. இதுவே சுனாமி அலைகளை உண்டாக்கியது.கடலுக்கு அடியில் பிரம்மாண்டமான பாறைப் பாளங்கள் பூமிக்குள் ஏன் இறங்க வேண்டும் என்பதைப் பின்னர் கவனிப்போம்.ஜப்பான் நாடு அடிக்கடி சுனாமியைச் சந்திக்கிற நாடு. மக்கள் அனைவருக்கும் சுனாமி என்றால் என்ன என்று நன்கு தெரியும். சுனாமி எச்சரிக்கை விடப்பட்டால் அதை மதிப்பவர்கள். ஆனால் பெரும் செலவில் கட்டப்பட்ட தடுப்புச் சுவர்கள் காப்பாற்றி விடும் என்று நம்பியதால் 2011ம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி பெரும் சேதத்தை உண்டாக்கியது.

சுனாமி அலைகள் விசித்திரமானவை. 2004ம் ஆண்டில் கடல் தரைக்கு கீழே 30 கிலோ மீட்டர் ஆழத்தில் பூகம்பம் ஏற்பட்டது. இந்த இடம் சென்னையிலிருந்து சுமார் 2700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாகும். அந்த இடத்துக்கும் சென்னைக்கும் இடையிலான கடல் பகுதியில் இருந்த கப்பல்கள் எதுவும் சுனாமியால் பாதிக்கப்படவில்லை. இன்னும் சொல்லப் போனால் சுனாமி அலைகள் தமிழக் கரையை நோக்கிச் செல்கிறது என்பது கூட கப்பலில் இருந்தவர்களுக்குத் தெரிந்திருக்காது.கடலில் கடும் புயல் உருவாகும்போது தோன்றுகிற அலைகளுக்கும் சுனாமி அலைகளுக்கும் இடையே பெருத்த வித்தியாசம் உண்டு. புயலின்போது நடுக்கடலில் அலையின் உயரம் 10 மீட்டர் அளவுக்கும் இருக்கலாம். கப்பல்கள் புயல் பகுதியில் சிக்கிக்கொண்டால் கப்பலின் தளத்தின் மீது பயங்கர அலைகள் தாக்கும். இத்துடன் ஒப்பிட்டால் நடுக்கடலில் சுனாமி அலைகளால் கப்பல்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. நடுக்கடலில் சுனாமி அலையின் உயரம் 30 செண்டி மீட்டருக்கு மேல் இருக்காது. சுனாமி அலைகள் கரையை அடையும்போதுதான் பயங்கர வடிவை எடுக்கின்றன. கரையை அடையும்போது அலையின் உயரம் 30 மீட்டராகக் கூட இருக்காலாம்

சுனாமி தாக்குதல் ஏற்படலாம் என்று தோன்றினால் துறைமுகத்தில் உள்ள கப்பல்கள் சுனாமி ஆபத்திலிருந்து தப்பிக்க நடுக்கடலுக்குச் சென்றுவிடும்.

என்.ராமதுரை

எபோலா என்றால் என்ன?


எபோலா (Ebola) என்பது ஒரு வைரஸ் கிருமி. இது உண்டாக்கும் நோய்க்கு எபோலா வைரஸ் நோய் என்று பெயர். 1976ம் ஆண்டு சூடான் மற்றும் காங்கோ நாடுகளில் ஒரே நேரத்தில் இது தோன்றியது. காங்கோ நாட்டின் எபோலா நதிக் கரையில் முதன்முதலில் இது பரவிய காரணத்தால், இந்தக் கிருமிக்கு ‘எபோலா வைரஸ்’ என்று பெயரிடப்பட்டது. இந்த நோ இப்போது கினி, லைபேரியா, நைஜீரியா, சியாரா லியோன் ஆகிய மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வருகிறது. பார்ப்பதற்கு நாகப்பாம்பு படம் எடுத்த மாதிரி இருக்கிற எபோலா வைரஸ், பழம் தின்னும் வௌவால்கள் மூலமும், ஆடு, மாடு, பன்றி, மான், எலி, குரங்கு போன்ற விலங்குகள் மூலமும் மக்களுக்குப் பரவுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிப் பழகினால், அவருடைய இருமல், சளி, தும்மல், உமிழ் நீர், சிறுநீர், ரத்தம், மலம், வியர்வை போன்ற உடல் திரவங்கள் மூலம் மற்றவர்களுக்கும் இது எளிதில் பரவிவிடும். கடுமையான காய்ச்சல், தலைவலி, மூட்டுவலி, தசைவலி, தொண்டை வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, அம்மைக் கொப்புளங்கள், நெஞ்சுவலி, ரத்தக்கசிவு போன்றவை இதன் அறிகுறிகள். இந்த நோய்க்கு சிகிச்சை எதுவுமில்லை. உயிருக்கு ஆபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆகவே, சுய சுத்தம் காப்பது, பொது சுகாதாரம் பேணுவது போன்றவற்றின் மூலமே இதைத் தடுக்க முடியும். கைகளை சோப்பினால் அடிக்கடி சுத்தமாகக் கழுவ வேண்டும். நோய் பரவும் காலத்தில் விலங்குகளின் இறைச்சியைச் சாப்பிடக்கூடாது. நோயாளியுடன் நெருங்கிப் பழகக் கூடாது.

பில்கேட்ஸ்!

 
கம்ப்யூட்டர் வித்தகர், கொடைவள்ளல், தொழில் அதிபர் எனப் பன்முக ஆளுமை படைத்தவர்தான் பில்கேட்ஸ்! பள்ளிப் பெயர் வில்லியம் ஹென்றி கேட்ஸ். இவரது பிறந்த நாள் அக்டோபர் 28ஆம் தேதி. பிறந்த ஆண்டு 1955. உலகத்தின் மிகப் பெரிய கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி மற்றும் சேர்மனாக இருந்தவர். இந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை 1975ஆம் ஆண்டு தனது இளைமைக்கால நண்பரான பால் ஆலன் என்பவரோடு சேர்ந்து துவங்கினார். பில்கேட்ஸ் பல கம்ப்யூட்டர் நிறுவனங்களை உருவாக்கி இருக்கிறார். ஃபோர்ப்ஸ் என்ற அமெரிக்க வணிக இதழ் ஆண்டுதோறும் உலகக் கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதில் 1995ஆம் ஆண்டில் இருந்து தவறாமல் இடம்பிடித்து வருகிறார் பில்கேட்ஸ். பல புத்தகங்களை எழுதி இருக்கிறார். பல புத்தகங்களின் துணை ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். ஆவணப் படங்களிலும் தோன்றியிருக்கிறார்.
 
பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பை 2000ஆம் ஆண்டில் துவக்கி, அதன் மூலம் பல அறக்கட்டளைகள் மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்குப் பெருமளவு பண உதவி செய்து வருகிறார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள சியாட்டில் என்ற பகுதியில் பிறந்தவர் இவர். தந்தை புகழ்பெற்ற வழக்கறிஞர் ஆவார். தாயார் பெயர் மேரி மேக்ஸ்வெல். இவர் யுனைடெட் வே மற்றும் இன்டர்ஸ்டேட் பேங்க் நிறுவனத்தில் பணியாற்றிவர். கம்ப்யூட்டரோடு விளையாடும் கேம்ஸ் பலவற்றைப் பார்த்திருப்பீர்கள் அல்லவா? உங்களைப் போல பள்ளி செல்லும் மாணவனா பில்கேட்ஸ் இருந்தபோது - தனது 13வது வயதிலேயே - கம்ப்யூட்டர் விளையாட்டுகளுக்கான புரோகிராம்களைத் தானே எழுதி இருக்கிறார் என்பது ஆச்சரியம்தானே!
 

Wednesday, October 01, 2014

செவ்வாயில் மங்கள்யான்.

முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை எட்டிய முதல் நாடு, முதல் ஆசிய நாடு, செவ்வாயை அடைந்த நான்காவது நாடு... எனப் பல சாதனைகளைப் படைத்து, இந்தியாவுக்குப் பெருமை பெற்றுத்தந்துள்ளது  மங்கள்யான்.

பூமியில் தொடங்கி செவ்வாயை அடைந்தது வரையிலான நிகழ்வுகள், சாதனை படைத்த விஞ்ஞானி களுக்குப் பாராட்டுக்கள் என, பரபரப்பான மகிழ்ச்சி நாட்களாக உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது மங்கள்யான் சாதனை.
 செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் செலுத்தப்பட்டது,  அது செயல்படும் விதம் பற்றி சில துளிகள்...

மங்கள்யான் விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கு, பி.எஸ்.எல்.வி ராக்கெட் பயன்படுத்தப்பட்டது. ஆனால், விண்வெளிக்குச் சென்றபின் விண்கலத்தை இயக்க, LAM (Liquid Apogee Moto) எனப்படும் சிறப்புத் திரவ இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. 440 நியூட்டன் விசை தரும் இந்த இன்ஜினைக் கொண்டுதான், கோள்களுக்கு இடையேயான விண்வெளிப் பயணத்தையும் செவ்வாய் கிரகத்தின் பாதையில் புகுவதையும் இஸ்ரோ விஞ்ஞானி கள் செயல்படுத்தினர். இந்த இன்ஜின், இஸ்ரோ மையத்தில் உள்ள இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது.

செவ்வாயில் இறங்கியதும், உறக்கத்தில் இருந்த இந்த இன்ஜின், திட்டமிட்டபடி செப்டம்பர் 22-ம் தேதி, விழித்துக்கொண்டு செயல்பட்டது. முக்கிய LAM இன்ஜின் தவிர, மங்கள்யானில் எட்டு சிறிய நெக்கி இன்ஜின்கள் (Thrusters) இருக்கின்றன.

அது என்ன நெக்கி இன்ஜின்கள்? 

விண்வெளியில், ஆன்டெனாவை  பூமிக்கு நேரே வைக்க, விண்கலத்தைத் திருப்ப வேண்டும். தரையில் ஒரு காரையோ, ஆகாயத்தில் ஒரு விமானத்தையோ இயக்க, உராய்வு விசை பயன்படும். ஆனால், விண்வெளியில் காற்றும் இல்லை, உராய்வும் இல்லை. அந்தச் சவாலை சந்திக்கத்தான் இந்த நெக்கி இன்ஜின்கள்.

காற்றடைத்த பலூனில் இருந்து அழுத்தக்காற்று வெளிவரும்போது, பலூன் எதிர்த்திசையில் நியூட்டனின் மூன்றாம் விதிப்படி செல்வதுபோல, இந்த இன்ஜினிலிருந்து அழுத்தவாயு பீய்ச்சிக்கொண்டு வெளியாகும். விண்கலம் எதிர்த்திசையில் நெக்கித் தள்ளப்படும். இவ்வாறுதான், விண்கலத்தை விண்வெளியில் திருப்ப முடியும்.

செவ்வாய் கிரகப் பாதையில் மங்கள்யான் புகுந்த  அன்று நடந்த இயக்கங்கள், சாகசம் நிறைந்தவை. அன்று இன்ஜின் இயங்கி, விண்கலத்தின் விசையைச் சரியான அளவு குறைக்க வேண்டும். இன்ஜின் வாயை விண்கலம் போகும் திசையில் இருக்கும்படி செய்ய, விண்கலத்தில் உள்ள நெக்கி இன்ஜின்களை இயக்கி, விண்வெளியில் அதை பல்டி அடிக்கும்படிச் செய்தார்கள்.

முதலில் LAM இன்ஜின் தொடர்ந்து 23.18 நிமிடங்கள் எரிந்து, விசை தந்தது. அவ்வாறு இன்ஜின் இயங்கும்போது, முதல் 4 நிமிடங்களே பூமியின் பார்வையில் இருக்கும். பின்னர், செவ்வாய் கிரகத்தின் பின்புறம் விண்கலம் சென்றுவிடும். விண்கலத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாது. எனவே,  விநாடிக்கு 1,098 மீட்டர் என்ற எதிர் கதிவேகம் அடைந்ததும், இன்ஜின் தானாக நின்றுவிடும்படி  ஆணைகளை விண்கலத்தில் ஏற்றியிருந்தனர்.


‘கரணம் தப்பினால் மரணம்’ என்பார்களே அதுபோல, கதிவேகம் கூடினால், விண்கலம் செவ்வாயின் பிடியில் இருந்து நழுவிவிடும். கதிவேகம் குறைந்தால், செவ்வாய் கிரகத்தில் மோதி, சுக்குநூறாக உடைந்துவிடும். செவ்வாயை நெருங்கிய மங்கள்யான், முக்கிய நிகழ்வுகள் நடக்கும்போது, செவ்வாயின் பின்புறம் சென்றுவிட்டது. எனவே, விண்கலத்தோடு உள்ள ரேடியோ தொடர்பு அறுந்துவிட, ‘்குருட்டு’ நிலை எனப்படும் நிலையில்தான் விண்கலத்தை வெற்றிகரமாக இயக்கினர் இஸ்ரோ விஞ்ஞானிகள்.

அதுமட்டுமா... அன்று, விண்கலம் சுமார் 223 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. எனவே, ரேடியோ தகவல் வர 12 நிமிடங்கள் ஆனது. எனவே, விண்கலம் செவ்வாய் கிரகத்தின் பின்புறத்தில் இருந்து 7:47-க்கு வெளிவந்தாலும், சுமார் 8 மணிக்குதான் பூமியில் ரேடியோ சிக்னல் கிடைத்தது. அதன் பின்னரே, திட்டம் வெற்றி என அறிவித்தனர்.

மங்கள்யானில் மொத்தம் ஐந்து அறிவியல் கருவிகள் இருக்கின்றன. இதில், கேமரா அன்றே இயக்கப்பட்டு, சோதனை படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. தற்செயலாக, ‘சைடிங் ஸ்ப்ரிங்’ எனும் வால்மீன், செவ்வாய் கிரகத்துக்கு அருகே அக்டோபர் 18 அன்று செல்ல இருக்கிறது. அதனையும் கூடுதலாக மங்கள்யான் மூலம் சோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர் விஞ்ஞானிகள்.

கிங் ஆஃப் இந்தியாவாக செவ்வாய் கிரகத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ள மங்கள்யான், மேலும் பல சாதனைகள் படைப்பது நிச்சயம்!