Search This Blog

Wednesday, November 24, 2010

மீண்டும் நாளந்தா!

இந்தியத் திருநாட்டின் பெருமைகளைப் பண்டித நேருவின் "நான் கண்ட இந்தியா'வில் பார்க்கலாம். மனித நாகரிகங்கள் வளர்ந்த தொட்டில் இந்தியா. மனித குலம் தமிழ் மண்ணில் தோன்றியது. பல்வேறு தேசிய இனங்கள், பல கலாசாரங்கள் கொண்ட தொகுப்பே இந்தியா. இவ்வாறான கலாசாரமிக்க இந்தியாவில் ஆதியில் பல கலாசாலைகள் இருந்தன. நாளந்தா, காஞ்சி, தட்சசீலம், நாகார்ஜுனா, உஜ்ஜயினி என்று நீண்ட பட்டியலிடலாம்.

இன்றைக்கு மேலை நாடுகள் பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப விஞ்ஞான வசதிகள் சார்ந்த நாகரிகம், வாய்ப்புகள் என்று வளர்ச்சி அடைந்துவிட்டிருந்தாலும் இந்தியாவிலிருந்த நாளந்தா உள்ளிட்ட சிந்தனைச் சாலைகள் செயல்பாட்டில் இருந்த (கி.மு. 415) காலத்தில் இம்மாதிரியான கலாசாலைகள் அங்கு இருக்கவில்லை. கிரேக்க நகர் நிர்வாக அமைப்பு, ரோமானிய அரசு நிர்வாகம் போன்றவை யாவும் நாளந்தாவுக்குப் பின்னால் ஏற்பட்டவைதான்.

உலகத்துக்கு நாகரிகத்தை, கல்வியை வழிகாட்டிய பெருமை நமது மண்ணுக்கு மட்டுமே உண்டு. இன்னும் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் நாளந்தாவுக்கு முந்தையது நமது தமிழனின் சங்க காலம்; காஞ்சியிலும் நாளந்தா மாதிரி பௌத்த அமைப்புகள் அமைத்த கல்விக்கூடங்கள் இருந்தன என்ற பெருமை தமிழ் மண்ணுக்கு உண்டு.

1193-ம் ஆண்டு கீர்த்தி பெற்ற நாளந்தா பல்கலைக்கழகம், துருக்கியைச் சேர்ந்த மன்னர் பக்தியார் கில்ஜியால் சீரழிக்கப்பட்டது. கல்வியின் கலங்கரை விளக்கமாக அன்று விளங்கிய நாளந்தா, பாடலிபுத்திரத்திலிருந்து 55 கி.மீ. தொலைவில் இருந்தது. இந்தப் புகழ்மிக்க கல்விக்கூடம்தான் உலகத்துக்கே முதன்முதலில் புத்தரின் போதனைகளைப் பரப்ப முற்பட்டது.  

நாளந்தா என்றால் "குறைவற்ற கொடை' என்று பொருளாகும். நாளந்தா அமைந்த மாமரத் தோப்பில் 1 கி.மீ. அளவுக்கு அகழாய்வு நடந்தது. அப்போது மொகஞ்சதாரா, ஹரப்பா போன்று நாளந்தாவிலும் கட்டடச் சுவர்கள் தென்பட்டன. சுட்ட செங்கற்களால் நேர்த்தியாகக் கட்டப்பட்டு, தில்லியில் உள்ள ஜந்தர் மந்தர்போல் செங்கல் வண்ணத்தோடு வரலாற்றுச் சாட்சியங்களாக இன்றும் அவை எழுந்து நிற்கின்றன.

நாளந்தாவை குப்த மன்னர்களும், மௌரிய அரசர்களும் கட்டினர். கி.மு.415லிருந்து 455 வரை இருந்த மன்னர் சக்ரதித்யா என்ற குமர குப்தர் இதற்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்கினார். செங்கல், சுண்ணாம்பு, வெல்லம், வில்வம், உளுந்து ஆகியவற்றைக் கொண்டு வான் உயரக் கட்டடங்கள் இங்கே அப்போது எழுப்பப்பட்டன. இந்தப் பல்கலைக்கழகத்தைச் சுற்றி மதில் சுவர்களும், நான்கு நுழைவு வாயில்களும் அமைந்திருந்தன. அங்குள்ள காவலர்கள் அனுமதித்தால்தான் உள்ளே செல்ல முடியும்.

தனித்தனியாக 10 வளாகங்கள், 10 கோயில்கள், 30 மாணவர்கள் அமரும் வகையில் வகுப்பறைகள், கருத்தரங்க அரங்குகள், தியான மண்டபங்கள் என்ற இவை யாவும் செங்கற்களால் கட்டப்பட்டவை. வகுப்பறைக்குப் பேராசிரியர்கள் வந்து பாடம் நடத்த, இன்றைக்கு இருப்பதுபோல மேடைகள், ஒரு வகுப்பறையில் 30 மாணவர்கள் அமரக்கூடிய காற்றோட்டமான வசதிகள், தருமத்தின் புதையல் என்று அழைக்கப்பட்ட "தர்மா கஞ்ச்' என்ற 9 மாடி நூலகம் போன்றவை அமைந்திருந்தன. இந்த நூலகத்தை பக்தியார் கில்ஜி எரித்தபொழுது அங்கிருந்த உயிரோட்டமான ஓலைச் சுவடிகள் எரிந்து சாம்பலாகவே ஆறு மாதங்கள் ஆயின என்று வரலாறு கூறுகிறது. இந்த நூலகத்தில் பௌத்தம், இந்து மதம், வானிலை, அறிவியல், மருத்துவம், கணிதம், தர்க்கவியல், யோக சாஸ்திரம், வேதங்கள் போன்ற பல்வேறு தலைப்புகளில் விதவிதமான ஓலைச்சுவடிகள் நிரம்ப இருந்தனவாம்.

மாணவர்கள் தங்க அனைத்து வசதிகளோடு 11 விடுதிகளில், 11,500 அறைகள் இருந்தன. அங்கு வசதியான குளியலறைகளும் இருந்தன. மாணவர்களுக்கு உணவு சுவையாக, சுத்தமாக, தாராளமாக வழங்கப்பட்டன. மொத்தம் 10,000 மாணவர்கள், 2,000 பேராசிரியர்கள் நாளந்தாவில் இருந்தனர். இந்தப் பல்கலைக்கழகத்துக்கு துருக்கி, கிரீஸ், இந்தோனேஷியா, சீனா, திபெத், ஜப்பான், கொரியா, பெர்சியா போன்ற வெளிநாடுகளிலிருந்து மாணவர்கள் வந்து தங்கிக் கல்வி பயின்றனர். பல்கலைக்கழக மதிற்சுவரின் வெளியே பெரிய ஏரிகளும், பூங்காக்களும் இருந்தன.

இங்கு வெறும் மானிடவியல் மட்டுமல்லாமல், அறிவியல் மற்றும் பொதுச் சுகாதாரம் போன்றவை பற்றிய கல்வியும், பயிற்சியும் சுமார் 800 ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.குறிப்பாக, பௌத்த தத்துவங்களுக்கு நாளந்தா கல்விக் கேந்திரமாகத் திகழ்ந்தது. நாளந்தா சிதையுண்ட பின்பு பலகாலம் கடந்துதான் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. அப்போது கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் இல்லை. இன்றைக்கு உலக அளவில் பழமை வாய்ந்த பல்கலைக்கழகம், மொராக்காவில் உள்ள ஃபெஸ் நகரிலுள்ள அல் கரோயின் பல்கலைக்கழகமாகும். இது கி.பி. 895-ல்தான் தொடங்கப்பட்டது. அதேபோல கெய்ரோவில் கி.பி. 975-ல் அல் அழர் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இவ்விரண்டைவிட நாளந்தா பழமை வாய்ந்தது.

நாளந்தாவின் பெருமைகளை சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்த யுவான் சுவாங், தன்னுடைய பயணக் குறிப்பில் சிறப்பாகச் சொல்கிறார். நாளந்தாவின் கட்டடங்கள், கோபுரங்கள், கோயில்கள், கலையரங்குகள் பற்றி தெளிவாகச் சொல்கிறார். வானுயரக் கோபுரங்கள் பனிப்படலத்தைத் தொடும் அளவுக்கு இருந்ததாகக் குறிப்பிடுகிறார். பெர்சியன் வரலாற்று ஆய்வாளர் மின்ஹஜ் இ சிரஜ், பக்தியார் கில்ஜியின் படையெடுப்பால் பல்கலைக்கழகம் மட்டும் எரியாமல், பல புத்த பிட்சுகள் எரிக்கப்பட்டதாகவும், ஆயிரக்கணக்கான பிட்சுகளின் தலைகள் துண்டிக்கப்பட்டன என்றும் குறிப்பிடுகிறார்.

நாளந்தா பல்கலைக்கழகம் புத்துயிர் பெற 90-களிலேயே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முயற்சியால் 2006-ல், உலக அளவில் ஆலோசனைக் குழு அமார்த்தியா சென் தலைமையில் அமைக்கப்பட்டது. இக் குழுவில் சிங்கப்பூர் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜார்ஜ் யோ, வரலாற்று ஆய்வாளர் சுகதா போஸ், தேசாய் பிரபு, சீன அறிஞர் வாங் பான்வெய் போன்றோர் இடம்பெற்றுள்ளனர். நாடாளுமன்றத்தில் நாளந்தா பல்கலைக்கழகம் குறித்த மசோதாவும் நிறைவேறியுள்ளது.

இப் பல்கலைக்கழகத்தைத் திரும்பவும் அமைக்க 500 மில்லியன் டாலர் தேவைப்படுகிறது. இதற்காக சர்வதேச அளவில் நிதி திரட்டும் பணிகளும் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருக்கின்றன. இந்திய - சிங்கப்பூர் அரசுகள் இப்பணியில் ஆர்வம் காட்டி வருகின்றன. ஆக்ஸ்போர்டு, ஹார்வர்டு, யேல், பாரிஸ், பொலோனா போன்ற பல்கலைக்கழகங்கள் நாளந்தாவுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளன.

உலகில் சிறந்த 25 பல்கலைக்கழகங்களில் ஆசியாவில் சிறப்பான பல்கலைக்கழகங்கள் டோக்கியோ, ஹாங்காங், கியோடோ ஆகும். இந்த வரிசையில் பழமையான நாளந்தா ஆசியக் கண்டத்தின் முழுமைக்கும், ஏன் உலக அளவில் மேம்பாட்டுக்கான பணிகளைச் செய்யும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் எழுந்துள்ளது. பன்னாட்டு அளவில் அமையும் இப் பல்கலைக்கழகம் ரூ. 250 கோடி கட்டுமானத்துக்கும், மற்ற செலவுகளுக்கு ரூ. 250 கோடி என்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பிகாரில், ராஜ்கீர் செல்லும் பில்கி மகதேவா என்ற பகுதியில் முள்புதராக இருந்த இடம், பல்கலைக்கழகம் அமைய கையகப்படுத்தப்பட்டுள்ளது.

பன்னாட்டுத் திட்டமாக அமையும் இப் பல்கலைக்கழகம் எதிர்காலத்தின் நம்பிக்கை. ஹான்ஸ் என்ற காட்டுமிராண்டிகள் ரோம் பேரரசை அழித்தது போன்று இந்தியாவின் அடையாளமாகத் திகழ்ந்த நாளந்தாவை அழித்தாலும் அதனுடைய தரவுகள் ஓரளவு நம்முடைய பெருமைகளைப் பேசச் செய்கின்றன.

யுவான் சுவாங் குறிப்பிட்டவாறு அறிவுக் கோயிலாக மட்டுமல்லாமல் சகிப்புத்தன்மையுடன் அனைவரும் ஒன்றாக இணைந்து மனித நேயச் சந்திப்பாக இவ்வளாகம் இருந்தது. அமைக்கப்பட உள்ள பல்கலைக்கழகம் அம்மாதிரி அமைந்தால் எதிர்காலத்தில் யுவான் சுவாங்கின் கருத்து மெய்ப்படும்.

டாக்டர் அமார்த்தியா சென் குழுவினர் இதற்கான பணிகளில் இறங்கினாலும் இதை அமைக்கப் பல்வேறு சிரமங்களும் ஏற்பட்டுள்ளன. சீனாவுக்கும் தலாய் லாமாவுக்கும் நெருடல்; தர்மசாலாவில் 50 ஆண்டுகளாகத் தங்கிப் பணி செய்யும் தலாய் லாமா, சீனாவின் வற்புறுத்தலால் இந்தப் பிரச்னையில் தொடர்ந்து புறக்கணிக்கிறார் என்ற கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. உலகளாவிய ஒத்துழைப்புடன் இவற்றையெல்லாம் கடந்து நாளந்தா மீண்டும் உயிர்த்தெழும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

பண்டித நேரு அலாகாபாத் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றியபோது, பல்கலைக்கழகம் என்றால் மனித நேயம், அறிவாற்றல், கருத்து உரிமை, புரிதல், உணர்தல், கண்டு கொள்ளுதல், பகுத்தறிதல், உண்மையைத் தேடல், சகிப்புத்தன்மை என்பதன் வெளிப்பாடு ஆகும். இந்த உயர்ந்த லட்சியத்தை நோக்கி நாளந்தா பயணிக்க வேண்டும்.




No comments:

Post a Comment