Search This Blog

Sunday, February 05, 2012

சாதனையும்(இந்திய டென்னிஸ்) மரண வலியும் (இந்திய கிரிக்கெட்)!


இந்திய டென்னிஸ் வீரர்கள் முதலிரண்டு ரவுண்டுகள் வரைதான் முன்னேறுவார்கள், எப்போதாவது தான் பெரிய வெற்றிகளைப் பெறுவார்கள் என்கிற அவநம்பிக்கையை முதல்முதலில் உடைத்தவர் லியாண்டர் பயஸ். இரட்டையர் பிரிவில் ஆஸ்திரேலிய ஓபன், அமெரிக்க ஓபன், விம்பிள்டன், பிரெஞ்ச் ஓபன் என 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைச் சமீபத்தில் படைத்துள்ளார் பயஸ். 90-களின் இறுதியில் இருந்தே மகேஷ் பூபதியுடன் இணைந்து இரட்டையர் பிரிவில் பயஸ் ஆதிக்கம் செலுத்தினாலும், அவரின் சாதனை மைல் கல்லில் ஆஸ்திரேலிய ஓபன் மட்டுமே நழுவிக் கொண்டே இருந்தது. ஆஸி. போட்டியில் பயஸ் தர வரிசையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவின் பாப் பிரையன்-மைக் பிரையன் சகோதரர்கள் ஜோடியை எதிர் கொண்டார். இதற்குமுன் மூன்று முறை ஆஸ்திரேலிய ஓபனின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினாலும், அனைத்திலும் பயஸ் தோல்வி கண்டார். அதில் இரண்டு முறை இதே பிரையன் சகோதரர்களிடம்தான் பயஸ் ஜோடி தோல்வி கண்டது. ஆனால், இந்த முறை, புது ஜோடியான ஸ்டெபனிக்குடன் இணைந்து வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திவிட்டார். இரட்டையர் போட்டிகளின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர் லியாண்டர் பயஸ் என்று டென்னிஸ் நிபுணர்கள் பாராட்டுகளைக் குவிக்கிறார்கள். ஆனால் இந்தியாவில், எத்தனை பேருக்கு லியாண்டர் பயஸின் சாதனைகளைத் தெரியும்? சச்சினுக்கு அளித்த மதிப்பில் 50 சதவிகிதத்தையாவது பயஸ் அனுபவித்திருப்பாரா? பாரத ரத்னா விருதுக்கான பரிந்துரையில்கூட இவருடைய பெயர் இடம்பெறவில்லையே? 16 வயதிலிருந்து சலிக்காமல் டேவிஸ் கோப்பையில் ஆடிக்கொண்டிருக்கிறார். 22 வருடமாக டென்னிஸ் அரங்கில் இந்தியாவுக்கு கௌரவம் தேடிக் கொடுக்கிறார். இவருக்குக் கைமாறாக நாம் என்ன செய்துவிடப்போகிறோம்? 


இதைவிட ஒரு கேவலத்தை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பார்த்ததில்லை. வெளிநாட்டில், தொடர்ந்து 8 டெஸ்டுகளில் தோற்றுப்போய் அவமானத்தின் விளிம்பில் நிற்கிறது இந்திய கிரிக்கெட் அணி. போராடித் தோற்றாலாவது கொஞ்சம் சமாதானப்படலாம். ஆனால், எல்லாமே மரணஅடித் தோல்விகள். பெர்த் டெஸ்ட், இரண்டரை நாளில் முடிந்து போனது. இந்தத் தொடரில் அடிலெய்டு டெஸ்டில் மட்டுமே இந்திய அணி கடைசி நாள் வரை விளையாடியுள்ளது. அதுவும் ஆஸ்திரேலியா ஃபாலோ ஆன் கொடுக்காததன் காரணமாகவே போட்டி 5 நாள் வரை நீடித்தது. 4 டெஸ்டுகளிலும், இக்கட்டான நேரங்களில், ஒரு வீரர்கூட அணிக்கு, பெரிய திருப்புமுனையைக் கொடுக்கவில்லை.  அடுத்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் - செப்டெம்பரில்தான். நிறைய கால அவகாசம் உள்ளதால், உடனடியாக எந்த முடிவும் எடுக்கப்படாது என்று நிதானமாகப் பேசுகிறது பி.சி.சி.ஐ. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பு 2-வது இடத்தில் இருந்த இந்திய அணி, 0-4 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தொடரை இழந்ததால் இப்போது 3-வது இடத்துக்கு இறங்கியுள்ளது. தோனிக்குப் பதிலாக ஷேவாக் கேப்டனாகலாம் என்று செய்திகள் வெளிவருகின்றன. இங்கிலாந்து தொடருக்கு முன்னால் எத்தகைய சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார் தோனி!இந்திய கிரிக்கெட்டில் நட்சத்திர வீரர்களைப் போற்றும் கலாசாரம் மிக மோசமானது என்கிறார் ஐயன் சேப்பல். முதல் மூன்று டெஸ்ட்டுகள் தோற்ற நிலையில் பேட்டியளித்த பி.சி.சி.ஐ. தலைவர் ஸ்ரீனிவாசன், நம் வீரர்கள்மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்று பேசி, சேப்பல் சுட்டிக்காட்டியதை உறுதிப்படுத்தியிருக்கிறார். ஆஷஸ் தொடரில் தோற்றவுடன் விசாரணை கமிஷன் வைத்து, தம் தவறுகளை உடனடியாகத் திருத்திக் கொண்டது ஆஸ்திரேலியா. இந்திய கிரிக்கெட்டுக்கு அந்தத் துணிச்சல் இருக்கிறதா? தவறிழைத்த வீரர்களுக்குத் தண்டனை கிடைக்குமா?

கண்ணன் 

2 comments:

  1. விடுங்க பாஸ்சு, வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம் !!

    ரிலாக்ஸ் பண்ண இத படிங்க !!
    http://sathivenkat.blogspot.in/2012/02/blog-post.html

    ReplyDelete
  2. Bharat Ratna for Paes? A good suggestion, but how many media persons are even thinking about it. We have thousand debates about Salman Rushdie, but not even one English mainstream media anchors are mentioning about this lacuna.

    I keep hearing about paid media. I never believed it, but it looks like it is true.

    Only cricket , why, is it because of the glamour.?
    Stop watching those matches where financially bloated guys take part.

    Send letter to those ad companies, telling them not to show those cricketers.

    Pathetic, we wont give due respect to rel heroes, be it V.Anand or L.Paes.

    ReplyDelete