Search This Blog

Saturday, August 13, 2011

''தங்கம் விலை இன்னும் ஏறும்!''

 
ரண்டு பெண்கள் சந்தித்துக்கொண்டால், அவர்கள் பேசுவது... ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கத்தின் விலையைத்தான்! இந்த நிமிடத்தில், 24 காரட் கொண்ட 10 கிராம் தங்கத்தின் விலை 26,000-ஐ தாண்டிவிட்டது. இன்னும் சில மாதங்களில் அது 27,000-க்கு மேல் அதிகரிக்கும்என்பது நிபுணர்களின் கணிப்பு.
 
கையிருப்பு குறைவு!  
 
''உலகத்தில் தங்கம் வெட்டி எடுப் பது குறைந்துகொண்டு வருவதும், பூமிக்கு அடியில் தங்க இருப்பு குறைவாக இருப்பதும் முக்கியக் காரணங்கள். பூமிக்குள் இருந்து இதுவரை சுமார் 1,70,000 டன் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு உள்ளது. இதன் தோராயமான மதிப்பு 7.2 டிரில்லியன் (டிரில்லியன் என்பது லட்சம் கோடி) அமெரிக்க டாலர். ஆனால், உலக அளவில் புழக்கத்தில் இருக்கும் கரன்ஸிகள், நிறுவனப் பங்குகள், சேமிப்புகள், டெபாசிட்கள் போன்றவற்றின் மதிப்பு சுமார் 60 டிரில்லியன் டாலர். இது தங்கத்தின் மதிப்பைவிட சுமார் 8.5 மடங்கு அதிகம். அதாவது, உலக அளவில் மக்களி டம் அதிகப் பணம் இருக்கிறது. ஆனால், தங்கம் குறைவாக இருக்கிறது என்பதால், அவர்கள் என்ன விலை என்றாலும் அதை வாங்கத் தயாராகவே இருக்கிறார்கள். இதனால்தான் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஊழல் பணத்தை தங்கமாகப் பதுக்குகிறார்கள். இந்திய மெடிக்கல் கவுன்சில் தலைவராக இருந்த கேதன் தேசாய் வீட்டில்  1,500 கிலோ தங்கம் பறிமுதல்செய்யப்பட்டதை மக்கள் இன்னும் மறக்கவில்லை.
 
உலகம் முழுக்கத் தங்கத்தின் தேவை ஆண்டுக்கு 3,550 டன்னாக இருக்கிறது. ஆனால், நமக்குக் கிடைப்பது 2,450 டன்தான். அதாவது, பற்றாக்குறை சுமார் 1,100 டன். மேலும், உலக அளவில் பூமிக்கு அடியில் வெறும் 22,000 டன் தங்கம்தான் மொத்தமே இருப்பதாகக் கணக் கிடப்பட்டு உள்ளது. தங்கத்தை செயற்கை முறையில் தயாரிக்க முடியாது என்பதால், அதன் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மேலும், தங்கத்தை எடுப்பதற்கான செலவு நாளுக்கு நாள் அதிகரிப்பதால், அதன் விலை குறையும் என எதிர்பார்க்க முடியாது. 
 
மற்ற முதலீடுகளில் லாபம் இல்லை! 
 
உலக அளவில் பங்குச் சந்தை கடந்த 2008-ம் ஆண்டுக்குப் பிறகு பெரிய அளவில் லாபம் கொடுக்கவில்லை. கடந்த ஓர் ஆண்டில் இந்தியப் பங்குச் சந்தை கொடுத்த வருமானம் மைனஸ் 8 சதவிகிதம். அதே நேரத்தில், இதே காலத்தில் தங்கம் கொடுத்திருக்கும் வருமானம் 42 சதவிகிதம்.அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பல வங்கிகள் அண்மை ஆண்டுகளில் மஞ்சள் கடுதாசி (திவால்) கொடுத்து வருகின் றன. இதனால், வங்கிகளில் சேமிப்புக் கணக்கு மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட்களில் முதலீடு செய்தவர்கள் கதி அதோ கதிதான். விளைவு, அசலுக்கு மோசமில்லாமல் பாதுகாப்புக் கருதி ஃபிக்ஸட் டெபாசிட்களில் செய்வதை தவிர்த்துவிட்டு, தங் கத்தை வாங்கிக் குவிக்கிறார்கள். வெளிநாடுகளில் உள்ள வங்கிகள், தங்கள் கையிருப்பில் உள்ள அமெரிக்க டாலர்களைக் கொடுத்து தங்கமாக மாற்றுகின்றன.
 
டாலர் மதிப்பு வீழ்ச்சி 
 
அமெரிக்கா டாலரின் வெளி மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதும் தங்கம் விலை உயர்வுக்கு ஒரு முக்கியக் காரணம். அதாவது, அமெரிக்க டாலராக வைத்திருப்பதற்கு பதில் தங்கமாக வாங்கி வைத்துவிட்டால், அதன் விலை எப்படியும் உயரும். தேவை ஏற்படும்போது தங்கத்தை விற்று செலவு செய்துகொள்ளலாம் என்கிற மனநிலை அமெரிக்கா தொடங்கி இந்தியா வரை பரவிவிட்டது. இது உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. 
 
முதலீட்டுக் கோணம்..! 
 
ஒரு காலத்தில் அணிந்து அழகு பார்க்க மட்டுமே தங்கத்தை மக்கள் பயன் படுத்தினார்கள். இப்போது அதை லாபகரமான முதலீ டாகப் பார்க்கிறார்கள். சாதாரண மக்கள் பவுன் கணக்கில் வாங்கினால், கோடீஸ்வரர்கள் கிலோ கணக்கில் வாங்குகிறார்கள். நாடுகளோ டன் கணக்கில் வாங்கிக் குவிக்கின்றன. அண்மையில்கூட, தென் கொரியாவின் மத்திய வங்கி (நம் ஊர் ரிசர்வ் பேங்க் போல்) 25,000 கிலோ தங்கத்தை வாங்கி இருக் கிறது. சீனா, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாட்டு மக்கள் தங்கத்தில் முதலீடுசெய்வது அதிகரித்துள்ளது. 
 
 
நன்றி 
டாக்டர் பாபி எஸ்.ஸ்ரீனிவாசன் 
நிதி மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் 
சென்னை 

&

விகடன்






 

No comments:

Post a Comment