Search This Blog

Sunday, April 08, 2012

மச்ச அவதாரம்! - ஆழ்கடல் அதிசயம் , ஜேம்ஸ் கேம்ரோன்


உலக சினிமா வரலாற்றில் அழியாத இடம் பெற்றிருக்கும் படம் ‘டைடானிக்’. இன்றும் உலகின் எந்தப் பகுதியில் திரையிடப்பட்டாலும் வசூலை அள்ளிக்குவிக்கும் இந்தப் படத்தின் டைரக்டர் ஜேம்ஸ் கேம்ரோன். தொடர்ந்து தன் படங்களுக்கு ஆஸ்கர், அகாடமி விருதுகளை வாங்கிக் கொண்டிருக்கும் இந்த டைரக்டர் இந்த ஆண்டு பெறப்போகும் ஒரு விருது அவரது சினிமாவுக்காக இல்லை. அறிவியலில், கடல்பற்றிய ஆராச்சியில் அவரது பங்களிப்புக்காக..ஆழ்கடலின் அடிப்பகுதியை முதலில் பார்த்து, அதில் பயணம் செய்த முதல் மனிதன் என்ற சாதனையை சமீபத்தில் நிகழ்த்தியிருக்கிறார் கேம்ரோன். சினிமா திரைக் கதையாசிரியர், கேமரா மேன், டைரக்டர் என பல முகங்கள் கொண்ட இவருக்குப் பிடித்த ஒரு விஷயம் ஆழ்கடல் ஆராச்சி. ஸ்கூபா டைவராக உலகின் கடல் பகுதிகளைப் பார்த்திருக்கும் இவரது ஆசை, கடலின் அடி மண்ணைப் பார்க்கவேண்டும் என்பது. பள்ளிப்படிப்பை பாதியில் விட்டு டிரக் டிரைவ ராகி, ஸ்டார்வார் பார்த்த ஆர்வத்தால் நூலகங்களில் சினிமா, கேமரா பற்றிப் படித்தறிந்து போராடி சினிமா உலகில் சரித்திரம் படைத்திருக்கும் கேம்ரோன் ‘இது என் 7 ஆண்டுக் கனவு’ என்று சொல்கிறார். இவர், ‘அவதார்’ படத்துக்குப் பின் இதில் தீவிரமாக ஈடுபட்டு அதற்காகத் தன்னைத் தயாரித்துக் கொள்ள ஆரம்பித்தார். உலகிலேயே அதிக ஆழமான கடல் பகுதியாக அறியப்பட்டிருக்கும் ‘சாலென் ஜர் டீப்’ என்ற கடல் பகுதியில் செல்வதற்காகவே பல மில்லியன் டாலர் செலவில் 24 அடி நீளத்தில் ஒரு குட்டி சப்மெரீன் ‘டீப் ஸீ சாலென்ஜர்’ தயாரிக்கப்பட்டது. அவருக்குப் பிடித்த பச்சை வண்ணத்தில், இயந்திரக் கைகள், சக்திவாந்த விளக்குகள், 3டி கேமராக்கள் என விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட இதில் ஒருமுறை பரிசோதனைப் பயணமும் செய்து பார்த்திருக்கிறார். ஸ்பெயின் நாட்டின் ஒரு பகுதியான மேரினா தீவு பகுதிதான் உலகிலேயே ஆழமான கடற்பரப்பைக் கொண்டது. அந்தக் கடல் பகுதியில்தான் இந்தச் சாதனையைச் செய்திருக்கிறார்.

நாங்கள் திட்டமிட்டதைவிட மிக வேகமாக ஒரு டார்பிடோ போலப் பாய்ந்து டீப் ஸீ-சாலென் ஜர் கடலடியை 2 மணி நேரத்தில் அடைந்தது. கடலின் அடிப்பகுதியில் 4 மணி நேரம் சிறிது தூரம் அந்தக் கப்பலை ஓட்டிச்சென்று பார்த்தேன். அடர்ந்த இருட்டில், 35,000 அடி ஆழத்தில் கப்பலின் விளக்குகளின் வெளிச்சத்தில் பார்த்த அற்புதமான காட்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. வேறு ஒரு கிரகத்திலிருப்பதைப் போல உணர்ந்தேன். கப்பலின் ஹைடிராலிக் பிரேக் சரியாக இயங்காததால் சீக்கிரமே திரும்பி விட்டேன்" என்று சொல்லும் கேம்ரானின் இந்தப் பணியில் நேஷனல் ஜியாகிரபிக் சோஸைட்டியின் ஆராச்சியாளர்களுக்காக சாம்பிள் சேகரித்ததோடு 3டி படங்களும் எடுத்திருக்கிறார்.உட்காருமிடம் நாலு அடிக்கும் குறைவாக ஒரு விண் வெளிப்பயணியின் சீட்போல வடிவமைக்கப்பட்டிருந்த இந்த சப்மெரீன் ஓர் ஆழ்கடல் ஆராச்சிக் கப்பலிலிருந்து இறக்கப்பட்டதிலிருந்து பயணத்தை ஒவ்வொரு நிமிடமும் ‘ஆக்டோபஸ்’ என்ற தமது உல்லாசப் படகிலிருந்து கண்காணித்து, அவருடன் வயர்லெஸ் தொடர்பிலிருந்தவர் கேம்ரானின் அருமை நண்பர் பால்ஆலன். இவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனர்களில் ஒருவர். கேம்ரான் தரும் தகவல்களை அங்கிருந்து டிவீட் செய்து கொண்டிருந்தார். டி.வி. சேனல்கள் அதை அறிவித்துக் கொண்டிருந்தன. கேம்ரோனின் சப்மெரீன் கடல் மட்டத்துக்கு வெளிவரும் பகுதியில் ஹெலிகாப்டர் கண்காணிப்பும் இருந்தது. கடலடியிலிருந்து அவர் அனுப்பிய முதல் செய்தி ‘எல்லாம் சரியாக இயங்குகிறது.’சினிமா சாதனையாளர்களில் அவர்கள் துறையைத் தவிர மற்ற துறைகளில் பெரிய சாதனையை நிகழ்த்திய சினிமாக்காரர்கள் மிகச் சிலரே. கேம்ரோன் கடலாராச்சித் துறையில் படைத்த வரலாற்று சாதனை காலம் முழுவதும் பேசப்படும்.

ஆழ்கடலிலிருந்து எழுந்த நீர் பிரளயத்திலிருந்து உலகைக் காப்பாற்ற பகவான் மச்ச அவதாரம் எடுத்ததாகச் சொல்கிறது நம் புராணம். ஆழ்கடலின் நிலத்தடியை நிஜமாகவே பார்த்துவந்த இவரின் அடுத்த படம் அதுவாகவே இருக்குமோ?

ரமணன்

1 comment: