Search This Blog

Thursday, April 05, 2012

கடவுள் சிந்தனை திணிக்கப்பட்டதா ?


டி.எம்.நாயர் பார்ப்பனக் கூட்டம் நடுங்க வேண்டும்; என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் டி.எம்.நாயர் அழைப்பு விடுத்ததாகவும், அதையே தான் மீண்டும் கூறுவதாகவும் கருணாநிதி உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதினர்.திராவிட இயக்க வரலாற்றை அறிவதற்கு முன்பு, அதில் டி.எம்.நாயரின் பங்களிப்பைத் தெரிந்து கொள்வோம்.இந்திய சட்ட மன்றத்திற்கான தேர்தல் 1916 இல் நடந்த போது, டி.எம்.நாயர் வேட்பாளராகப் போட்டியிட்டார். மகாத்மா காந்தியின் நண்பர் என்று அறியப்பட்ட வி.எஸ்.சீனிவாச சாஸ்திரியாரால் தோற்கடிக்கப்பட்டார். இதே தேர்தலில் நில உரிமையாளர்களுக் கான தொகுதியில் போட்டியிட்ட பி.இராமராயலிங்கரும். பிற தொகுதிகளில் போட்டியிட்ட பிட்டி.தியாகராய செட்டியாரும், கே.வி.ரெட்டி நாயுடுவும் தோற்கடிக்கப்பட்டனர்.வெகுஜன ஆதரவு இல்லாத காரணத்தினால், தேர்தலில் தோல்வி அடைந்த இவர்கள் கூடி, தேர்தல் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்தார்கள். பிராமணர்கள்தான் தங்களைத் தடுத்து விட்டார்கள் என்பது அவர்களுடைய கண்டுபிடிப்பு. எனவே, பிராமண எதிர்ப்பு என்ற கொள்கையை வகுத்துக் கொண்டார்கள். இப்படி அமைந்ததுதான் “தென்னிந்திய நல உரிமைச் சங்கம்”, இந்த அமைப்புதான் ஜஸ்டிஸ் என்ற நாளிதழையும் நடத்தியது. நாளடைவில், தென்னிதிய நல உரிமைச் சங்கத்தை பொதுமக்கள் ஜஸ்டிஸ் கட்சி என்றும், நீதிக் கட்சி என்றும் அழைத்தனர்.


தேசிய எழுச்சிக்குத் தடை போட முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ஆங்கில ஆட்சியாளர்கள், நீதிக் கட்சியின் வளர்ச்சிக்கு உதவினார்கள்.டி.எம்.நாயர், அக்.7, 1917-இல் நிகழ்த்திய சொற்பொழிவு திராவிட இயக்கத்தவரால் சிறப்பித்துச் சொல்லபடுகிறது. சென்னை நகரத்தின் ஸ்பர்டாங் சாலைப் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார். அந்தச் சொற்பொழிவை ‘வரலாற்றுச் சிறப்புமிக்க வீரங்செறிந்த, எழுச்சிமிக்க, உணர்ச்சி ஊட்டக் கூடிய சொற்பொழிவு என்று தமது ‘திராவிட இயக்க வரலாறு’ என்னும் புத்தகத்தில் வர்ணனை செய்கிறார் இரா.நெடுஞ்செழியன். இந்த உரை திராவிட இயக்கத்தவரின் கொள்கை விளக்க அறிக்கையாகக் கருதப்படுகிறது. ஆகவே, அதை விவரமாகப் பார்க்கலாம்.ஜாலியன் வாலாபாக் படுகொலையை இந்தியர்கள் அனைவரும் ஒரு குரலாகக் கண்டனம் தெரிவித்த காலத்தில், அந்தப் படுகொலையை ஆதரித்து அறிக்கை விட்ட பெருமை டி.எம்.நாயருக்கு உண்டு என்பதை, நினைவில் கொள்ளவேண்டும்.

இன வேறுபாடு என்ற ஆயுதத்தைக் கொண்டு, இந்தியர்களுக்கிடையே பிளவை உண்டாக்க வேண்டும் என்பதே டி.எம்.நாயரின் நோக்கம். ஆனால், தமிழ்நாட்டிலேயே அதற்கு ஆதரவு இல்லை. பெரும்பாலான தமிழறிஞர்கள் இதற்கு எதிர்ப்பாக இருந்தார்கள். அந்த எதிர்ப்பு இந்தத் தலைமுறையிலும் தொடர்கிறது.‘ஆரியர்கள் இயற்கை நிகழ்ச்சிகளைக் காட்டி, ‘கடவுள்’ என்றொரு கற்பனை கருத்தைச் சுட்டிக்காட்டித் திராவிடர்களின் மூளையையே குழப்பிவிட்டார்கள் என்றார் நாயர். (பக்கம் 220 திராவிட இயக்க வரலாறு).

கடவுள் சிந்தனையை ஆரியர்கள் திராவிடருக்குக் கொடுத்தனர் என்பது முழுப் பொய்.

‘இந்திய மொழிகளிலேயே நாத்திகம் தொடர்பான கருத்துக்களை அதிகமாகக் கொண்டிருப்பது சம்ஸ்க்ருதம்தான்’ என்கிறார் நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென். சம்ஸ்க்ருத இலக்கியத்தில் கடவுள் மறுப்பைப் பேசிய சாருவாகனைப் பற்றிய செய்தி இருக்கிறது.‘ஆரியர்கள் கடவுளைக் கொண்டு வந்து திராவிடர்கள் மீது திணித்தார்கள்’ என்று சொல்லும் டாக்டர் டி.எம்.நாயருக்கு தமிழர் வரலாறே தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும்.

தமிழ் அன்னையின் மணிமுடியாகிய திருக்குறளில், கடவுள் வாழ்த்தாக பத்துக் குறட்பாக்கள் உள்ளன. அதில் ஏழு குறட்பாட்கள்  திருவடிப் பெருமையைப் பேசுகின்றன. உருவ வழிபாடும் திருவடிப் போற்றுதலும்  இஸ்லாத்திலும் கிருஸ்துவத்திலும் இல்லாதவை. ஆகவே திருவள்ளுவரும் அவர் காலத்துத் தமிழரும், இயல்பாகவே ஹிந்துக்களாக இருந்தனர் என்று அடித்துப் பேசலாம்.கடவுள் வாழ்த்து மட்டுமல்ல; இந்திரனைப் பற்றியும், சொர்க்கம், நரகம் பற்றியும், ஊழ்வினை பற்றியும் திருவள்ளுவர் எழுதியிருக்கிறார். கடவுள் வேண்டாம் என்று சொல்லும் டி.எம்.நாயரின் வழியில் நடக்கும் திராவிட இயக்கத்தவர் திருவள்ளுவரை சொந்தம் கொண்டாட முடியாது. இந்த மாதிரிப் பிரச்சனைகள் எல்லாம் வரும் என்ற எண்ணத்தில்தான் திருக்குறளை ஈ.வே.ரா. ஒதுக்கி வைத்துவிட்டார். ‘மொத்தத்தில் முப்பது குரலுக்கு மேல் தேறாது’ என்பது ஈ.வே.ரா. வின் அறிவிப்பு. 

இக்கட்டுரை  ஏப்ரல் 4 ஆம் தேதியிட்ட துக்ளக் வார இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.  

No comments:

Post a Comment