Search This Blog

Friday, May 18, 2012

ஜூன் மாத முதல் வாரத்தில் பட்டையைக் கிளப்ப வருகிறது பில்லா 2 - அஜித்


அஜித் என்றாலே ரிச், ஸ்டைல், க்ளாமர், பியூட்டி என்று கோலிவுட் இலக்கணம் வரைகிறது. அதுவும் பில்லா 1, மங்காத்தாவுக்குப் பிறகு, மார்க்கெட் கிராஃப் உயர்ந்துகிடக்கிறது. பில்லா-2 அறிவிப்பு வந்த நாளில் இருந்து தல ரசிகர்களின் பல்ஸ் ரேட் தடதடப்பது உண்மை.அஜித்தைப் பற்றி பக்கம் பக்கமாகச் சொல்லலாம். பக்கா ஜெண்டில்மேன். பண்புகளின் உறைவிடம். சக மனிதனை மதிக்கத் தெரிந்த மனித நேயர். அதுவும் பெண்கள் மேல் அவர் வைத்துள்ள மரியாதைக்கு அளவே இல்லை. சின்னவங்க, பெரியவங்கன்னு இல்லை. எந்தப் பெண் அவரைச் சந்திக்க வந்தாலும், அவங்களை உட்காரச் சொல்லி, அவங்க உட்காரும் வரை காத்திருந்து, அப்புறம்தான் அவர் உட்காருவாரு.

காது கொடுத்துக் கேட்கும் பொறுமை. பேசிக்கிட்டு இருக்கும்போது, யாராவது நடுவுல குறுக்கே பேசினா, சில ஹீரோக்களுக்கு கோபம் வந்துடும். அவங்க பேசறதை கேக்கணும்னு விரும்புவாங்க. அஜித் குட் லிசினர். கீன் லிசினர். குறுக்கிட்டவங்க என்ன சொல்றாங்கன்னு முழுசா நிதானமாய் கேட்டுட்டு அப்புறம் பேசுவார். இந்தப் பண்புகளெல்லாம் இயற்கையாவே அவர் கிட்ட இருக்கு. உண்மையான மனுஷன் கிட்ட பழகிய கதகதப்பு அவர்கிட்ட உண்டு


சில மாதங்கள் முன்பு அஜித்தை நான் சந்தித்தபோது, பில்லா கதையை, பில்லா எப்படி சர்வதேச அளவில் பெரிய தாதாவாகிறான் என்ற கதையைப் படமாக்கத் தாம் விரும்புவதாகவும் டைரக்டர் விஷ்ணுவர்த்தன் அதை டைரக்ட் செய்தால் நன்றாக இருக்கும் என்றும் சொன்னார். ‘பில்லா’ படத்தில், பில்லா ஏற்கெனவே கொல்லப்பட்டு விடுகிறார். எனவே, ‘பில்லா-2’ என்பது, ‘பில்லா’ படத்துக்கு முந்தைய காலகட்டத்தில், 1990களில் நடக்கும் கதையாக இருக்க வேண்டும்.விஷ்ணுவர்த்தன், ஏற்கெனவே ஒரு தெலுங்குப் படத்தில் கமிட் ஆகியிருந்ததால், சக்ரி டைரக்ஷன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அஜித்-சக்ரி இருவரிடையே நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க்-அவுட் ஆனது. அஜித்தின் ஆலோசனையின் பேரில் சக்ரியும் அவரது குழுவும் ‘பில்லா-2’ படத்துக்கு திரைக்கதை உருவாக்கினார்கள். சில வாரங்களில், ஹைதராபாத்தில் ‘பில்லா-2’ படப்பிடிப்பு ஆரம்பமானது.நாங்கள் முதலில் புக் பண்ணியது யுவன்சங்கர் ராஜாவைத்தான். பின்னர் ஹீரோயின் பற்றி விவாதித்தோம். ஒருசமயம் பிரேஸில் நாட்டைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி ப்ரூனா என்னைச் சந்திக்க எனது அலுவலகத்துக்கு வந்தார். சக்ரியை சந்திக்க ப்ரூனாவை அனுப்பினேன். மேக்-அப், ஸ்க்ரீன் டெஸ்ட் எல்லாம் எடுத்து, சக்ரி ப்ரூனாவை செலக்ட் செய்தார். தொடர்ந்து, 2008ல் மிஸ் இந்தியாவாகவும், உலக அழகிப் போட்டியில் டாப் ஐந்து பேர்களில் ஒருவரான பார்வதி ஓமனக்குட்டனை, மற்றொரு முக்கிய பாத்திரத்துக்குத் தேர்வு செய்தோம்.வித்யுத் ஜம்வால் பில்லா-2ல் முக்கிய வில்லன்களில் ஒருவர். சுதான்ஷு பாண்டே, கவர்ச்சியான பெண்கள், புடைசூழ பணக்கார ‘டான்’ தாதாவாக - பில்லா-2ல் நடித்திருக்கிறார். எவ்வளவு பெரிய ஸ்டார் அஜித். எவ்வளவு எளிமையாகப் பழகுகிறார், அவருடன் நடிக்கும் போது, எந்த நடிகரும் நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ளலாம்" என்பார் சுதான்ஷு பாண்டே. 

படத்தின் கதையின்படி, ஐரோப்பாவில் சில பகுதிகள் படமாக்க வேண்டியிருந்தது. இதுவரை எந்தத் தமிழ்ப் படமும் எடுக்கப்படாத, 1990களின் தோற்றத்துடன் இருக்கும், வளர்ந்து வரும் ஜார்ஜியா நாட்டில், பல காட்சிகளைப் படமாக்கினோம்.ஜார்ஜியாவுக்குச் செல்லுவதற்கு, துபாய் வழியாக, அல்லது இஸ்தான்புல் வழியாகச் செல்ல வேண்டும். துபாய் வழியாகச் செல்லும் ஏர் ஜார்ஜியா விமானத்தில் முதல் வகுப்பு இல்லாததால், அஜித்துக்கு மட்டும் இஸ்தான்புல் வழியாக புக்கிங் செய்திருந்தோம். எனக்கு முதல் வகுப்பு எல்லாம் வேண்டாம். நம் குழுவினருடன், பயணம் செய்யவே விரும்புகிறேன். அதுதான் மஜா" என்று சொல்லி குழுவினருடன் பயணம் செய்தார். முதல் முறையாக, ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்த எட்டு நடிகர்கள், ஒரு தமிழ்ப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.ஆர்.டி. ராஜசேகர்தான் கேமரா. நிறைய ஆக்ஷன் காட்சிகள், மயிர்க்கூச்செறியும் ஸ்டண்ட் காட்சிகள் என்று இருக்கும் போது, ஆக்ஷன் படங்களில் கைதேர்ந்த ராஜசேகர் கேமராவைக் கையாள்வதுதானே பொருத்தம்?படத்தைப் பார்க்கும் போது அவரது அருமை புரியும்.ஜார்ஜியா நாட்டில் நாங்கள் படப்பிடிப்பு நடத்திய போது மைனஸ் பத்து டிகிரி டெம்பரேச்சர், தாங்க முடியாத குளிர். ஹெலிகாப்டர் அந்தக் குளிரில் பறக்கும் போது, குளிர் இன்னும் அதிகமாகியது. பறக்கும் ஹெலிகாப்டரிலிருந்து, அஜித்தும் வில்லனும் சண்டை போடுகிறார்கள். ஒரு கையில் மிஷின் துப்பாக்கியுடன், அஜித் குதிப்பதாக காட்சி அமைக்கப்பட்டிருந்தது. ஸ்டண்ட் டூப்கள் ஹெலிகாப்டரில் இருந்தார்கள். நானே செய்கிறேன், என்னால் முடியும்" என்று அஜித் சொன்னார். பறக்கும் ஹெலிகாப்டரிலிருந்து, அப்படியே குதித்து அந்தரத்தில் தொங்கி ஹெலிகாப்டரின் அடிப்பாகத்தில் கம்பியைப் பிடித்துச் சண்டை போட்டார் அஜித். ஆர்.டி. ராஜசேகரும் சரி, சக்ரி, ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்டண்ட் டைரக்டர் ஸ்டெஃப்பான் ரிச்டரும் சரி, அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டார்கள். இரண்டு கேமராக்கள் வைத்துப் படமாக்கிய காட்சி இது.ஜார்ஜியாவில் லிக்கானி என்ற மலைப் பகுதியில், ரஷிய முன்னாள் அதிபர் ஸ்டாலின் கோடையில் தங்கும் அரண்மனையில், முதல் நாள் அஜித், ப்ரூனா, பார்வதி ஓமனக்குட்டன் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டன. தாய்லாந்து ஸ்டண்ட் இயக்குனர் கேச்சா, அஜித் வில்லன் ஆட்களுடன் போடும் சண்டைக் காட்சியையும் எடுத்தார். அன்று இரவு கடும் பனிமழை. காலையில் எழுந்து பார்த்தால், அந்த அரண்மனை திறந்தவெளியிலும், வெளியேயும் முழங்கால் அளவுக்கு பனி! எடுத்த காட்சிகளும், அன்று எடுக்க வேண்டிய காட்சிகளும், இரண்டும் மாட்ச் பண்ண முடியாத அளவு மாறுபட்டு இருந்தன. முதல் நாள் எடுத்த காட்சிகளை ஸ்கிராப் பண்ணிவிட்டு, எல்லாக் காட்சிகளையும் ஃப்ரெஷ்ஷாக, புதியதாக எடுக்கச் சொன்னேன். இரண்டு நாட்கள் எடுக்க வேண்டிய காட்சிகள், சண்டைக் காட்சிகள் அனைத்தையும் ஒரே நாளில், உணவு இடைவேளை இன்றி, எடுத்து முடித்தோம். அஜித் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் முழுமையான ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார்.விட்டுப் போன சில காட்சிகளை எடுக்க (பாட்ச் வொர்க்) மூன்று நாட்களுக்கு மறுபடியும் ஜார்ஜியா சென்றிருந்தோம். எங்கள் குழுவில் இருந்து இருபது பேர் மட்டும். அஜித் திறமையான குக் என்பது பலருக்குத் தெரியும். எங்கள் குழுவினருக்காக, அஜித், ஆட்டுக்கறி சமையல் செய்து அனைவருக்கும் பரிமாறி அசத்திவிட்டார். உட னிருந்த ஜார்ஜியா இளைஞர்கள், இளம் பெண்கள், அதைச் சாப்பிட்டு மிகவும் மகிழ்ந்தனர்.

கோவாவில் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டே,நேரம் கிடைக்கும் போதெல்லாம் சமையல் செய்வார் அஜித். எல்லாம் அவர் செலவு, எல்லாம் அவர் கைவண்ணம், நடிகர் நடிகைகள், யூனிட்காரர்கள் அனைவரும் அஜித் தயாரித்த சிக்கன் பிரியாணியைச் சாப்பிட்டு மகிழ்ந்தார்கள்.அவரது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா இருவரும் கோவா வந்து மூன்று நாட்கள் எங்களுடன் தங்கினார்கள். அவர்களுக்கான விமானச் செலவு, டூரிஸ்ட் கார் கட்டணம், ஹோட்டலில் சாப்பிட்டதற்கு பில் என்று எல்லா கட்டணங்களையும், செலவையும் அஜித்தே செலுத்தினார்.படத்தைப் பற்றி விவாதிக்க எங்களோடு ரெஸ்டாரெண்டுக்கு வந்தாலும் சரி, வெளிப்புறப் படப்பிடிப்பு நடக்கும் நகரங்களில் டின்னருக்குச் சென்றாலும் சரி, அஜித்தான் ‘பில்’லுக்கு பணம் கொடுப்பார்.ஜார்ஜியாவில், கேரவான் வசதிகள் இல்லை. படப்பிடிப்பின் போது நடுங்கும் குளிரிலும், மற்ற யூனிட்காரர்களுடனே அஜித் இருப்பார். அஜித்திடம் மற்றொரு முக்கியமான அம்சம், தம்மை ஒப்பந்தம் செய்யும் தயாரிப்பாளர்களிடம் படத்தின் இசை வெளியீட்டு விழா, படத்துக்கான நிகழ்ச்சிகள், டி.வி. நிகழ்ச்சிகள் எதிலும் தான் கலந்து கொள்ள மாட்டேன் என்பதை முதலிலேயே தெளிவுபடுத்திவிடுவார். தான் பெறும் சம்பளத்துக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுப்பார். தம்மைப் பார்க்க அனைவரும் தியேட்டருக்கு வந்து, திரைப்படத்தில்தான் தன்னைப் பார்க்க முடியும் என்ற கொள்கையைப் பின்பற்றுகிறார்.இந்தப் படத்தில் யுவன் சங்கர் ராஜா, தன்வீஷா, சுவி சுரேஷ் பாடியிருக்கும் ‘ஏதோ மயக்கம்’ பாடலில் அஜித்துடன், மூன்று பிரேஸில் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகிகள், தோளோடு தோள் உராய்ந்து நடனம் ஆடியிருக்கிறார்கள்.தமிழ்ப் படங்களில் முதல் முறையாக ‘பில்லா-2’ படத்துக்கு மற்றொரு சிறப்பு. பட ரிலீஸுக்கு முன்பு ‘பில்லா-2 ஃபேஷன் ஷோ’ பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்படுகிறது," என்று முடிக்க மனமில்லாமல் முடித்துக்கொண்டார் சுரேஷ் பாலாஜி.

எஸ்.ரஜத்

1 comment: