Search This Blog

Tuesday, May 01, 2012

அருள்வாக்கு - உடம்பு என்கிற மூட்டை!


உலகத்துக்கு நல்லது செய்வதும் மூட்டை தூக்குகிற மாதிரிதான். அதைச் செய்ய சக்தி வேண்டும். சக்தியை நன்றாக வளர்த்துக் கொள்ளாமல் இந்த மூட்டையைத் தூக்குகிறேன் என்று ஆரம்பித்தால் இடுப்பைப் பிடித்துக் கொள்ளும். உடம்புக்குப் பிடிப்பு வியாதி உண்டாகிற மாதிரி உள்ளத்துக்கும் வியாதி ஏற்படும். சின்ன வயசில் உங்கள் உள்ளத்துக்குப் போதிய சக்தி ஏற்படுகிற முன்பே, படிப்புத் தவிர மற்ற விஷயங்களை மேற்கொண்டால், உள்ளத்துக்கு வியாதிதான் உண்டாகும்.ஏற்கனவே நம் உள்ளத்தில் ஆசை, கோபம் முதலிய பல வியாதிகள் இருக்கின்றன. முன்பு நாம் எல்லோரும் ஒரு விதத்தில் மூட்டை தூக்கிகளாக இருந்ததால்தான் இந்த வியாதிகள் வந்திருக்கின்றன. நாம் செய்கிற ஒவ்வொரு தப்புக் காரியமுமாகச் சேர்ந்து மூட்டையாகி விடுகிறது. இந்தப் பிறப்புக்கு முன்னால் இன்னொரு பிறப்பில் தப்புக்கள் செய்தோம். அதனால்தான் இப்போது இந்த உடம்பு என்கிற மூட்டை வந்திருக்கிறது. இதில், பழைய தப்புக்களின் வாசனையும் இருக்கிறது. அதனால்தான் ஆசை, கோபம் எல்லாம் நமக்கு இருக்கின்றன. அது போவதற்காகத் தான் குழந்தையாக இருக்கும்போது பள்ளிக்கூடத்துக்குப் போகிறோம்.அறியாமை என்கிற வியாதி, படிப்பு என்கிற மருந்தினால் போகிறது. அதோடு நம் கெட்ட குணங்களும் போக வேண்டும். இதற்குப் படிப்பு மட்டும் போதாது. பணிவு வேண்டும். பணிந்து கிடந்தால் கெட்ட குணங்கள் ஓடிப்போகும். தாய், தந்தை, ஆசிரியர், தெய்வம் ஆகியவர்களிடம் பக்தியோடு, படிப்பில் கவனம் செலுத்தி வந்தால் அறிவும் வரும், குணமும் வளரும்.

பணிவு இல்லாமல் படிப்பில் மட்டும் தேர்ச்சி பெற்றால் எவரும் முழு மனிதனாக ஆக முடியாது. ‘நமக்கு எல்லாம் தெரியும். நாம் புத்திசாலி’ என்ற அகம் பாவம்தான் வெறும் படிப்பினால் உண்டாகும். இப்படிப்பட்டவர்களுக்கு பகவான் துணை புரியமாட்டார். பகவானின் அநுக்கிரகம் இல்லாமல் எத்தனை புத்திசாலியாலும் வாழ்க்கையில் சந்தோஷம் பெற முடியாது.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

No comments:

Post a Comment