Search This Blog

Sunday, August 21, 2011

ஆன்லைன் ஷாப்பிங் - ஒரு அலசல்


ஆன்லைனில் ஆர்டரைப் போட்டால் போதும், எல்லாமே வீடு தேடி வந்துவிடும் காலம் இது! அந்த அளவுக்கு வசதி வாய்ப்புகள் வந்துவிட்டாலும்கூட, இன்னும் நம்மில் பலருக்கு ஆன்லைன் ஷாப்பிங் என்றாலே பயமாகத்தான் இருக்கிறது. ஆன்லைன் ஷாப்பிங்கை எப்படி செய்ய வேண்டும்? எந்தெந்த விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும்? உண்மையில் இது லாபகரமானதா? உங்களை உறுத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கான விடைகள் இதோ...

ஷாப்பிங்குக்கு ரெடியா?

ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதற்காக நீங்கள் தேர்வு செய்துள்ள ஷாப்பிங் இணையதளத்திற்குள் சென்று, முதலில் உங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுங்கள். பெயர், இ-மெயில் முகவரி, தொலைபேசி எண் போன்றவை கேட்கப்படும். வழக்கமான யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் விஷயங்களும் உண்டு. அவ்வளவுதான்! இதைக் கொண்டு எளிதாக ஷாப்பிங் செய்யலாம். பணத்தை டெபிட் கார்டு மூலமாகவோ அல்லது கிரெடிட் கார்டு மூலமாகவோ செலுத்தலாம். பணப் பரிமாற்றம் நடந்ததும், பொருள் வீட்டுக்கு  அனுப்பப்படும். வாங்கும் பொருளுக்கான விற்பனை வரி, சேவைக் கட்டணம் போன்றவற்றையும் சேர்த்தே செலுத்தி விடுவதால், டெலிவரியின்போது எந்த வகைக்காகவும் நாம் பணம் எதுவும் கொடுக்கத் தேவையில்லை.

நன்மைகள்!

பொருட்களை வாங்க கடை கடையாகத் தேடி அலைய வேண்டியதில்லை. நேரம் மிச்சமாகும். அடுத்து தரமான பொருள். ஆன்லைன் ஷாப்பிங்கில் பெரும்பாலும் பிராண்டட் நிறுவனங்களின் பொருட்களே விற்கப்படுகிறது. அறிந்த நல்ல பிராண்டை ஆர்டர் செய்யும் பட்சத்தில், தரத்தில் பிரச்னை வர வாய்ப்பு இருக்காது. எல்லாவற்றையும்விட விலை குறைவு என்பது முக்கியமான விஷயம். கடை வைத்திருந்தால் ஆகும் செலவுகள்  கிடையாது என்பதால் பொருளின் விலை குறைவாகவே இருக்கும்.

கவனிக்க வேண்டியவை!

நம்பகமான இணைய தளத்தை தேர்வு செய்வதன் மூலமே ஏமாறாமல் இருக்க முடியும். தொலைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரி குறிப்பிட்டுள்ள ஷாப்பிங் ஆன்லைன்களை  தேர்வு செய்வது நல்லது.

தொலைபேசி எண் இருந்தால் அந்த எண்ணுக்கு போன் செய்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பொருட்கள் கைக்கு வராத பட்சத்தில் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்க தொலைபேசி எண் அவசியம் தேவை.

ஷாப்பிங்கின்போது  இணையதளத்தின் முகவரி பட்டையானது பச்சை நிறத்தில் பளிச்சிட்டால் அந்தஇணையதளம் நம்பகதன்மை யானது. தைரியமாக ஷாப்பிங் செய்யலாம். இதேபோல நம்பகத்தன்மையான இணைய தளத்தில் கணினி திரையின் வலது பக்கத்தின் கடைசியில் உங்களது பட்டை ஒன்று இயக்கியபடியே இருக்கும்.

பொருட்களின் விலையை மற்ற இணையதளங்களில் இருக்கும் விலையோடு ஒப்பிட்டுப் பார்த்தே வாங்கவும்.

குறிப்பிட்ட தொகைக்கு மேல் பொருட்களை வாங்கினால் பரிசு தருவதாகச் சொன்னால் உஷாராகி விடுங்கள். ஏமாறவே வாய்ப்புகள் அதிகம்.

பெரும்பாலான ஷாப்பிங் இணையதளங்களில் பெயர், முகவரி, கிரெடிட் கார்டு வகை, ரகசிய எண் மற்றும் கார்டின் முடிவுக் காலம் ஆகியவற்றைக் கேட்டிருப்பார்கள். ஆன் லைனில் ஷாப்பிங் செய்ய இந்த விஷயங்களே போதுமானது. அப்படி இல்லாமல், நமது வங்கிக் கணக்கு எண்ணையும் கேட்டால் நிச்சயம் அந்த இணையதளம் போலியானது.

இணையதளத்தில் பொருட்களை வாங்கியதும் அதை உறுதிப்படுத்த உங்களது மெயில் முகவரிக்கு தகவல் அனுப்பப்படும். அந்த தகவலை பொருள் கைக்கு வரும் வரை பத்திரமாக வைத்துக் கொள்வது அவசியம். ஏனெனில், அந்த தகவலில்தான் உங்களது வங்கி கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட பணத்தின் மதிப்பு, நீங்கள் பொருள் வாங்கிய தேதி முதற்கொண்டு எல்லாமே இருக்கும். 



2 comments: