Search This Blog

Wednesday, November 23, 2011

தொண்டு நிறுவனங்கள் (NGO) - பணம் சம்பாதிக்கும் வழி

சமீப காலம் வரை அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் (NGO) என்றால் இந்திய சாலைகளில் பயன்பட ஜப்பானிலோ கொரியாவிலோ செய்யப்படும் “விளையாட்டுக் கார்கள்” என்று நான் நினைத்துக் கொண்டு இருந்தேன். எதையும் உருப்படியாக செய்யாமல் பணம் பண்ணும் விஷயத்தில் மட்டும் நம்மில் சிலர் கை தேர்ந்தவர்களாக உள்ளனர்.அந்நிய அமைப்புகளிடம் தொடர்பு வைத்து இருப்பவர்கள் இதில் குறிப்பாக வல்லவர்களாக உள்ளனர். இந்த அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் இதே வகைதான் என்பது எனக்கு இப்போதுதான் புரிந்தது. டெல்லியில் வேலை இல்லாமல் இருப்பவர்கள் அந்த நகரில் நிறைய உள்ளனர். இவர்களில் பெரும் பகுதியினர் அரசு சாரா தொண்டு நிறுவனங்களை சார்ந்து கொண்டு நிறைய நன்றாக சம்பாதிக்கின்றனர். உங்களுக்கு தேவை எல்லாம் ஒரு கணிப்பொறி, நகல் எடுக்கும் கருவி, போர்ட் பௌண்டேஷன் போன்ற அந்நிய ஸ்தாபனத் தொடர்புகள், ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் பயண ஏஜண்டுகளின் தொடர்புகள் ஆகியவைதான். அத்தகைய ஹோட்டல்களில் நீங்கள் அந்நிய தூதரக ஆட்களை உபசரிக்கலாம். அல்லது அவர்களால் நீங்கள் உபசரிக்கப் படலாம். அத்தகைய அந்நிய தூதரக ஆட்கள் பணப் பெட்டிகள் நிரம்பியவர்களாக இருப்பார்கள். உங்களுக்கு பணத்தை வாரி விட அவர்கள் ஆவலாக இருப்பார்கள். பிற இடங்களைக் காட்டிலும் இந்தியாவில் “அமெரிக்க டாலர்” வெகு தூரம் போகிறது. போர்ட் பௌண்டேஷன், ஒக்ஸ்போம் போன்ற அந்நிய அமைப்புகளிடம் டாலர்கள் நிரம்பி வழிகின்றன. உங்களுக்குத் தேவை எல்லாம் “சரியான தொடர்புகள்” கொண்டு இருப்பதுதான். 

சென்ற வருடத்தில் மட்டும் அண்ணா ஹசாரேவின் குழுவைச் சார்ந்த ஒருவர் 40 முறை வெளி நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். நீங்களும் நானும் 40 வருடங்களில் ஒரே முறைதான் வெளி நாடு செல்ல முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்தஆள் பயண செலவுகளாக மட்டும் 40 லட்சங்கள் பெற்றுள்ளார். பிற செலவுகளாக எத்தனை ஆயிரம் டாலர்கள் இவர் பெற்றுள்ளார் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும். நீங்களும் நானும் பயணம் செய்வது கட்டை வண்டி வகுப்பில். அதுவும் தள்ளுபடி சலுகையில் இந்த ஆள் பயணம் செய்து விட்டு மிகுதியாக வந்த தொகையை தனது கணக்கில் வரவு வைத்துக் கொண்டு விட்டார். இந்த சம்பந்தப்பட்ட ஆள், ஏகப்பட்ட லாபத்தை பார்த்து அதை தனது கணக்கில் வரவு வைத்துக் கொண்டு விட்டார். அதுவும் எந்த வரியும் இல்லாமல் இதற்கெல்லாம் கைமாறாக அந்த நபர் என்ன செய்து இருப்பார்? இந்தியவை இழித்தும் பழித்தும் அயல் நாடுகளில் வசை பாடி இருப்பார். அதற்காகத்தானே அந்நிய ஸ்தாபனங்களும் பணமும் டாலர்களும் கொடுக்கின்றன. இந்த நபர் சில வாசனை திரவியங்களையும், கம்பளி ஆடைகளையும் வாங்கிக் கொண்டு திரும்பி வந்து இருப்பார். கூடவே மறுபடியும் அயல் நாடுகளுக்கு செல்வதற்கான அழைப்பிதழ்களையும் தன்னுடன் எடுத்து வந்திருப்பார். நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி இவை எல்லாம் சுலபமாக பணம் சம்பாதிக்கும் வழிகளாக ஆகி விட்டன.
இதே குழுவை சேர்ந்த இன்னொரு உறுப்பினர் போர்ட் பௌண்டேஷனில் இருந்து 2 ௦௦௦௦௦௦௦கோடி பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. நீங்களும் நானும் நம்முடைய ஆயுள் காலத்தில் இந்த தொகையை கண்ணால் கூட காண இயலாது, சம்பாதிக்கவும் முடியாது. நாம் பெயர் கூட கேள்விப்படாத இந்த ஆளுக்கு இவ்வளவு பெரிய தொகையை அந்த ஸ்தாபனம் கொடுத்துள்ளதற்கு ஏதோ வலுவான காரணங்கள் நிச்சயம் இருக்கும். இவ்வளவு அளவு தொகையை அதிருஷ்டவசமாக பெற அந்த நபர் செய்தது என்ன? அவர் ஏதாவது மிக அதிகமாக விற்பனை ஆகும் ஏதாவது ஒரு புத்தகம் எழுதினரா?அல்லது நோபெல் பரிசு வாங்க ஏதாவது பரிசோதனை சாலையில் ஆய்வு செய்தாரா? அவரோ, அவளோ அந்த மாதிரி எதுவும் செய்யவில்லை. அவர் வெறுமனே அந்த பேரும் தொகையை தன்னுடைய சட்டைப் பையில் போட்டுக் கொண்டு, ஊழலை எதிர்த்துப் போராட திரும்பி வந்துவிட்டார்.இந்த கேள்விகளை எல்லாம் நான் எழுப்புவதற்கு காரணம் உள்ளது. இந்த அரசு சாராத தொண்டு நிறுவங்கள் என்ன செய்கின்றன என்பது எனக்குப் புரியவில்லை. ஏதோ செய்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது. ஆனால் என்ன செய்கிறார்கள் என்பதுதான் தெரிய வில்லை? இல்லை என்றால் போர்ட் பௌண்டேஷன் போன்ற ஸ்தாபனத்திடம் இருந்து இவ்வளவு பெரிய தொகைகளை, வசூல் செய்ய வேண்டிய அவசியம் என்ன?அவர்கள் செய்திகளை திரட்டுகிறார்கள் என்றால், அவை மிகவும் ரகசியமான செய்திகளாக இருக்கும். அந்நிய ஸ்தாபனங்கள் அத்தகைய ரகசிய செய்திகளை தாங்களாகவே நாம் நாட்டில் இருந்து கொண்டு சேகரிக்க இயலாது. அந்நிய ஸ்தாபனங்களால் பண உதவி பெற்று வருகின்ற “ஆராய்ச்சி ” “கொள்கை” நிறுவனங்கள் டெல்லி முழுவதும் நிரம்பி உள்ளன இவைகள் அமைச்சர்களின் அலுவகங்களில் இருந்து செய்திகளை சேகரம் செய்கின்றன.அதுதான் இந்த அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் முக்கிய பணி. பிறகு அந்த செய்திகளுக்கு வடிவம் கொடுத்து அவைகள் எல்லாம் ஏதோ “பெரிய ஆராய்ச்சி செய்து கண்டு பிடிக்கப் பட்டவை மாதிரி”அந்நிய ஸ்தாபனங்களுக்கு பெரிய தொகைகளுக்கு விற்று விடுகின்றனர். இந்த அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தங்கள் சேவைகளுக்காக அந்நிய அமைப்புகளிடம் இருந்து பெரும் தொகைகளை வைத்து சந்திரனையே விலைக்கு வாங்கி விடலாம்.அவ்வளவு கறந்து விடுகிறார்கள்.
இந்தியாவிலும், இந்தியாவிற்கு வெளியிலும், எராளமான அந்நிய ஸ்தாபனங்கள் வேலை செய்து வருகின்றன. அவைகள் எவ்வாறு இயங்குகின்றன, அவைகள் என்ன செய்கின்றன என்பதைப் பற்றி நமக்கெல்லாம் ஒன்றும் தெரியாது. நகரின் இதயம் போன்ற மையப் பகுதிகளில் அவைகளுக்கு பிரம்மாண்டமான அலுவலங்கள் உள்ளன. அதிகாரிகள், அரசியல்வாதிகளுடன் நெருக்கமாக தொடர்பு வைத்துள்ள வர்களை, இந்த அந்நிய ஸ்தாபனங்கள் வேலைக்கு வைத்துள்ளன. இந்த அந்நிய ஸ்தாபனங் களுக்கு தங்கள் நாட்டு  “பாதுகாப்பு அமைப்புகளுடனும்” வலுவான தொடர்பு உள்ளது. ஏன் என்றால் எந்த அந்நிய அமைப்பும் அந்நியர்களும் அந்நிய பத்த்ரிக்கையளர்கள் உள்பட தங்களுடைய நாட்டு பாதுகாப்பு அமைப்புகளால் விசாரிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட பிறகே, நம்நாட்டில் பணி செய்ய முடியும். எல்லா அந்நிய பத்திரிக்கையாளர்களும், அந்நிய ஸ்தாபனங்களும் போர்ட் பௌண்டேஷன் உட்பட தங்கள் நாட்டு பாதுகாப்பு அமைப்புகளின் அனுமதிக்குப் பிறகே இந்தியாவுக்கு வந்து பணி செய்கின்றனர்.எனவே எல்லா அந்நிய அமைப்புகளுக்கும் அவர்கள் நாடுகளின் பாதுகாப்பு அமைப்புகளுடன் தொடர்பும், நெருக்கமும் இருப்பது வெளிப்படையான ரகசியமாகும். வெளி நாடுகளில் பணி செய்யும் இந்திய பத்திரிக்கையாளகளும், இந்திய அமைப்புகளும் கூட நம்முடைய பாதுகாப்பு அமைப்புகளால் பரிசோதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட பிறகே அங்கு சென்று பணியாற்ற இயலும்.முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் “கலாச்சார விஷயங்களுக்கான காங்கிரஸ்” என்னும் ஒரு அமைப்பு இருந்தது. உலகம் முழுவதும் அது பரவி செயல்பாடுகள் செய்து வந்தது. அதில் மிகவும் புகழ் பெற்ற ஆட்கள் இருந்தனர்.பெற்றந்த் ரஸ்ஸல் போன்ற மனிதர்கள் அதில் இடம் பெற்று இருந்தனர்.பின்னாளில் அமெரிக்காவுக்கு எதிராக ரஸ்ஸல் திரும்பிய பிறகு ரஸ்ஸல் அந்த அமைப்பில் இருந்து விலகி விட்டார்.
டில்லியின் ஹைலி சாலையில் இந்த காங்கிரசுக்கு அலுவலகம் இருந்தது.சாப்ரு கட்டிடத்திற்கு அருகில் இந்த காங்கிரஸின் அலுவலகம் அமைந்து இருந்தது. காங்கிரஸின் ஆசிய தலைமை அலுவலகம் என்று அது வர்ணிக்கப்பட்டது. மும்பையை சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளர் இந்த கலாச்சார விஷயங்களுக்கான காங்கிரஸ் பிரிவின் தலைவராக அங்கு இருந்தார்.ஹைலி சாலையில் இருந்த இந்த “கலாச்சாரங்களுக்கான காங்கிரஸ் அமைப்பு” அடிக்கடி கூட்டங்களை நடத்தும். அதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிறர் கலந்து கொள்வார்கள். எங்கேயாவது ஓசியில் சாராயம் கிடைக்கிறது என்றால், அங்கு ஓடும் ரகத்தை சேர்ந்த கும்பல்களும் அத்தகைய கூட்டங்களில் கலந்து கொள்வார்கள். இந்த காங்கிரஸ் கம்யூனிச எதிர்ப்பை அடிப்படையாகக்  கொண்டது. என் கவுண்டர் என்னும் பெயரில் அது ஒரு மாதந்திர பத்திரிக்கையை நடத்தி வந்தது.அதன் விலை ஒரு ரூபாய்தான். அந்த பத்திரிக்கை மிகவும் போற்றத்தக்க வகையில் நடத்தப்பட்டு வந்தது. ஸ்டீபன் ஸ்பென்டர் என்னும் ஆள் பத்திரிக்கையை நடத்தி வந்தார். இந்த ஆள்தான் லண்டனில் ஜார்ஜ் ஆர்வேல் என்னும் புகழ் பெற்ற நபரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.இந்த காங்கிரஸ், ஐரோப்பா மற்றும் இதர இடங்களிலும் கருத்துரையாடல்களை நடத்தியது. அதற்கு இந்திய எழுத்தாளர்களும், “அறிவு ஜீவிகளும்” வரவேற்கப்பட்டனர். இதில் எல்லாம் ஒரு குறைச்சலும் இல்லை. ஆனால் பிறகுதான் இந்த அமைப்பு “அமெரிக்க உளவு ஸ்தாபனமான சிஐஏவால் உருவாக்கப்பட்டது என்பது தெரிந்தது. பனிப்போரின் உச்சக் கட்டத்தில் இந்த அமைப்புக்கு முழுக்க முழுக்க பணம் கொடுத்தது சி.ஐ.ஏ.தான். இது எங்களுக்கு எல்லாம் பெருத்த அதிர்ச்சியாக இருந்தது.ஆனால் டெல்லியில் இருந்த பலரும் இம்மாதிரி சந்தேகத்தை ஏற்க்கனவே கொண்டு இருந்தனர். இந்த விஷயம் வெளியில் தெரிந்த இரண்டு மூன்று வாரங்களுக்குள் அந்த டெல்லி அலுவலகத்தை மூடி விட்டனர்..அதன் நிர்வாகத்தை கவனித்துக் கொண்டு இருந்த ஆள் கல்தா கொடுக்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டார். இந்த அமைப்பின் நடவடிக்கைகளும் முற்றிலும் முடங்கிப்போயின. பெற்றந்த் ரஸ்ஸல் மற்றும் இதரர்கள் இந்த அமைப்பில் இருந்து ராஜினாமா செய்தனர்.அவர்கள் அதன் பிறகு இந்த அமைப்பு குறித்து பெரும் கூச்சலை எழுப்பினர். ஆனால் இதெல்லாம் சி.ஐ.எ. வையோ அல்லது அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பனிபோரையோ, எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு அரசு சாரா தொண்டு நிறுவனங்களை இயக்குவது யார் என்பது நமக்கு தெரியாது. இதைத்தான் இந்த கட்டுரை தெளிவாக சொல்கிறது.அரசு சாரா தொண்டு நிறுவனங்களை நடத்துபவர்கள் அந்நிய நாடுகளிடம் இருந்து எராளமான பணத்தை பெறுகின்றனர். அதே அந்நிய நாடுகளின் நலன்களுக்காகவும் தான் அவர்கள் வேலையும் செய்து கொண்டு இருக்கின்றனர்.சில பயங்கரவாத அமைப்புகளுக்காகக் கூட அவர்கள் வேலை செய்து வருகின்றனர். ஆனால் மேற்பரப்பில் அவர்கள் சுத்த சுயம் பிரகாசிகளாக,ஏழைகளுக்கு தொண்டு செய்பவர்கள் போல் காட்சி அளிக்கலாம். அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தங்களுடைய கணக்கு வழக்குகளை மூடி மறைக் கின்றனர்.சில ஆயிரம் டாலர்களுக்காக அவர்கள் தங்களுடைய விசுவாசத்தையும் அந்த அந்நிய நாடுகளிடம் விற்று விடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
போர்ட் பௌண்டேஷன் ஒரே ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனத்துக்கு இரண்டு கோடி ரூபாய்கள் ஒரு பித்தலாட்டமான திட்டத்திற்காக கொடுக்க முடியும் என்பது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது.அந்த தொண்டு நிறுவனம் அந்த பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.ஆனால்,அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை சரியாக தெரிந்து கொள்ளும் வரை, அந்த நிறுவனத்தின் மீது எனக்கு எந்த மதிப்பும் மரியாதையும் இருக்காது. வெளி நாடுகளில் 40 கலந்தாய்வுக் கூட்டங்களில் பங்கெடுக்கும் ஒரு நபர் பிழைப்புக்கு என்ன செய்வார் என்பது தெரிய வேண்டும் அல்லவா?அம்மாதிரி நபர் இந்த பிரச்சனை பற்றியோ அந்த பிரச்சனை பற்றியோ கருத்து சொன்னால் நாமும் அதை நம்ப வேண்டுமா? இம்மாதிரி ஆட்களில் சிலருக்கு அந்நிய உளவு நிறுவனங்களுடன் நிச்சயம் தொடர்பு இருக்கும்.அவர்கள் நமக்கு ஒன்றுமே தெரியாத சில  நிறுவனங்களுக்காக உளவு பார்த்துக் கொண்டு இருக்கலாம். அவர்கள் தங்கள் கணக்கு வழக்குகளில் பித்தலாட்டம் செய்கிறார்கள் என்பதை விட இந்த விஷயம்தான் எனக்கு மிகவும் கவலையைக் கொடுக்கிறது.இந்த அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் யாருக்காக வேலை செய்து கொண்டு உள்ளார்கள் என்பது அரசுக்கு தெரியுமா? அரசுக்கு இது பற்றி எதுவும் தெரியாது என்பது எனக்கு தெரியும். விஷயம் நம் கையை விட்டு மீறிப் போவதற்கு முன்பாக நமது அரசு இந்த விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.   
(நன்றி;ஆர்கனைசர் வார இதழ் 12-11-2011)
ஆங்கிலத்தில்:டாக்டர் ஜெய் துபாஷி 
தமிழாக்கம்: லா.ரோஹிணி

No comments:

Post a Comment