Search This Blog

Saturday, January 07, 2012

ஐ.ஐ.டி.யில் சேரணுமா? - 2


முதல் பாகம் படிக்க அறிவோமா ஐ.ஐ.டி

தொழில் நுட்பக் கல்வியை சர்வதேச அளவில் சிறந்த முறையில் கற்றுத் தரும் கல்வி நிறுவனம்தான் ஐ.ஐ.டி. கல்வி நிலையம். இந்தியாவில் இருக்கும் ஐ.ஐ.டி. கல்வி நிலையங்களில் சேருவதற்கு இந்திய மாணவர்கள் மட்டுமின்றி, அயல்நாட்டு மாணவர்களும் போட்டி போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.இந்தியப் பாதுகாப்புப் படையில் தொழில்நுட்பப் பிரிவுகளில் ஆரம்பித்து, ரயில்வே, மின் உற்பத்தி நிலையங்கள், அணு ஆராச்சி மையங்கள் இப்படி நாட்டின் முக்கியத் துறைகளில், உயர் பொறுப்புகளில் அமர்ந்திருப்பவர்கள் பெரும்பாலானோர் ஐ.ஐ.டி. கல்வி நிலையத்தில் படித்தவர்களாகவே இருப்பார்கள்.நாட்டில் பல்வேறு படிப்புகளுக்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளிலேயே ஐ.ஐ.டி. கல்வி நிலையங்களில் சேருவதற்காக நடத்தப்படும் ஐ.ஐ.டி. ஜே.இ.இ. நுழைவுத்தேர்வுதான் மிகக் கடினமான நுழைவுத் தேர்வு ஆகும்.

தேர்வு எப்படி இருக்கும்?


ஐ.ஐ.டி. கல்வி நிலையத்தில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு மொத்தம் இரண்டு தாள்களைக் கொண்டது. முதல் தாள் காலையிலும், இரண்டாம் தாள் மதிய நேரத்திலும் மாணவர்கள் எதிர்கொண்டாக வேண்டும். கேள்வித்தாள் முற்றிலும், ஆங்கிலம் மற்றும் இந்தியில் அமைந்திருக்கும். ஒவ்வொரு கேள்வித்தாளுக்கும் சராசரி மூன்று மணி நேரங்கள். ஒவ்வொரு கேள்வித்தாளும் இயற்பியல், வேதியியல், கணிதம் என்று வேறு வேறு பாடங்களை கொண்டிருக்கும். கேள்வித்தாள் முற்றிலும் அப்ஜெக்ட்டிவ் முறையில் அமைந்திருக்கும். இந்தப் பாடங்களைத் தவிர, அனாலிட்டிக்கல் எபிலிட்டி, ரீசனிங், காம்ப்ரிகென்ஷன் போன்ற பகுதிகளும் இடம்பெறும்.


கம்ப்யூட்டர் முறையில் அமைக்கப்பட்டிருக்கும் விடைத்தாளில் பால்பாயிண்ட் பேனாவால் விடைகளைக் குறிக்க வேண்டும். 


ஆர்க்கிடெக்சர், டிஸைன் படிப்புகளில் சேருவதற்கான வழிமுறை?


ஐ.ஐ.டி. கல்வி நிலையத்தில் பி.ஆர்க்., மற்றும் டிசைன் படிப்பில் இளநிலைப் பட்டப் படிப்பு படிக்க நினைக்கும் மாணவர்களுக்கு, தனியே ஒரு தேர்வு எழுத வேண்டும். ஆப்டிட்யூட் டெஸ்ட் என்று அழைக்கப்படும் இந்தத் தேர்வில் கேள்வித் தாளில் முற்றிலும், கட்டட வடிவமைப்பு மற்றும் டிஸைன் சார்ந்த கேள்விகள் மற்றும் மாணவர்களின் ஓவியத் திறனை சோதிக்கும் வகையில் கேள்விகள் இடம் பெற்றிருக்கும். இந்தக் கேள்வித்தாள் முற்றிலும் ஆங்கிலத்தில் மட்டுமே அமைந்திருக்கும். இந்தத் தேர்வில் தோல்வியைத் தழுவும் மாணவர்கள் ஐ.ஐ.டி. கல்வி நிலையத்தில் டிஸைன் படிப்பிலோ, ஆர்க்கிடெக்சர் படிப்பிலோ சேர முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


வயது வரம்பு என்ன?



இந்தப் படிப்பில் சேர வேண்டும் என்று விரும்பும் மாணவர்கள், பொதுப் பிரிவு மற்றும் ஓ.பி.சி. பிரிவு மாணவர்களாக இருக்கும்பட்சத்தில், அந்த மாணவர்கள் 1987 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தேதிக்குப் பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களாக இருக்கும் பட்சத்தில், 1982 அக்டோபர் முதல் தேதிக்குப் பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.


கண்டிப்பாக கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும். 10 + 2 என்ற முறையில் படித்திருக்க வேண்டியது கட்டாயம். 


கல்வித் தகுதி என்ன?


பிளஸ் டூ வகுப்பில் 60 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களாக இருக்கும் பட்சத்தில் 55 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருப்பது அவசியம்.


இட ஒதுக்கீடு:


தாழ்த்தப்பட்டோர் பிரிவு மாணவர்களுக்கு 15 சதவிகிதமும், பழங்குடியின மாணவர்களுக்கு 7.5 சதவிகித மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அனைத்துக் கல்வி நிலையங்களிலும் 27 சதவிகிதமும் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.  


எப்படி விண்ணப்பிப்பது?



பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட ஆண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ1800. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளி ஆண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ1000. அனைத்துப் பெண் விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ 200. விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாகவும் அனுப்பலாம். ஆன்லைனில் பிரிண்ட் அவுட் எடுத்து தபாலிலும் அனுப்பலாம்.


மேலும் விவரங்களுக்கு : http://www.jee.iitk.ac.in  

அகிலன் 


No comments:

Post a Comment