Search This Blog

Monday, April 22, 2013

தொடரும் ஐ.பி.எல். சர்ச்சைகள்!


ஐ.பி.எல். என்றால் சிக்ஸர்களும் பவுண்டரிகளும் மட்டுமல்ல, தவறாமல் இடம்பெறும் சர்ச்சைகளும்தான்.

இந்த வருடம், ஐ.பி.எல். ஆரம்பிப்பதற்கு முன்பே, இலங்கை வீரர்களுக்கு சென்னையில் தடை என்கிற முதல் சர்ச்சை ஏற்பட்டது. அடுத்த பிரச்னை, கம்பீரும் கோலியும் நேருக்கு நேர் மோதிக் கொள்ள முயற்சி செய்தது.

2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், முதலிரண்டு விக்கெட்டுகள் விழுந்த பிறகு, கம்பீரும் கோலியும் பொறுப்பாக ஆடி, அணியைச் சரிவிலிருந்து மீட்டுக் கொண்டு வந்தார்கள். பிறகு, பல மேட்சுகளில் இருவரும் சேர்ந்து அபாரமான பார்ட்னர்ஷிப்களை அமைத்திருக்கிறார்கள். ஆனால், பெங்களூருவில் இருவரும் கடுமையாக மோதிக் கொள்ளப் பார்த்தார்கள். கோலி அவுட்டானவுடன் கம்பீர் ஏதோ சொல்லிவிட, உடனே கோலி பெவிலியனுக்குத் திரும்பாமல் கம்பீரை நோக்கி ஆக்ரோஷமாக வர, பதிலுக்கு கம்பீரும் கோலியை நோக்கி வர, டி.வி.யில் லைவாகப் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் பதறிப் போனார்கள்.

நல்லவேளையாக, மற்ற வீரர்கள் இருவரையும் தடுத்ததால், மிகப்பெரிய அசம்பாவிதம் நடக்காமல் போனது. இல்லாவிட்டால் ஆளுக்கு ஒரு குத்து விட்டிருக்கவும் வாய்ப்பிருந்தது. இருவருக்கும் ஏதோ பழைய பகை இருக்கலாம் என்கிறார்கள் கவாஸ்கரும் டீன் ஜோன்ஸும். இருவரும் தில்லி வீரர்கள் என்பதால் தில்லி கிரிக்கெட் சங்கத்துக்கு மிகப்பெரிய சங்கடம் ஏற்பட்டிருக்கிறது. பி.சி.சி.ஐ. இருவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.அடுத்தது இன்னமும் தொடரும் ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த் பிணக்கு. 2008ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம், மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியடைந்தது. பிறகு, இரு அணி வீரர்களும் கைகுலுக்கிய சிறிது நேரத்தில் ஸ்ரீசாந்த் தேம்பித் தேம்பி அழுத காட்சியை இந்தியாவே பார்த்துத் திகைத்தது. தோல்வியினால் கடுப்பில் இருந்த ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த் கன்னத்தில் அறைந்ததாகச் சொல்லப்பட்டது. (கன்னத்தில் அறைந்த வீடியோ காட்சி ஒளிபரப்பு செய்யப்படவில்லை). பி.சி.சி.ஐ., ஹர்பஜன் சிங்குக்கு ஐ.பி.எல். தொடரின் மீதமுள்ள மேட்சுகளில் விளையாட தடை விதித்தது. பிறகு, இந்திய அணியில் ஹர்பஜனும் ஸ்ரீசாந்தும் ஆட வேண்டிய நிலை வந்தபோது, ‘ஹர்பஜன்சிங் எனது மூத்த சகோதரர் மாதிரி. அந்தக் கசப்பான சம்பவத்தை மறந்து விட்டேன்’ என்று ஸ்ரீசாந்த் கூறினார். 2009ல், ஸ்ரீசாந்த் உதவியுடன் நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் செஞ்சுரி அடித்தார் ஹர்பஜன். எல்லாமே சுமுகமாகப் போய்க் கொண்டிருந்த நேரத்தில், மீண்டும் இப்பிரச்னை கிளம்பியுள்ளது. எல்லாம் இந்த கம்பீர் - கோலி மோதலால்தான். இதைப் பற்றிய செய்தி வெளியிடப்பட்டபோது, ‘ஸ்லாப் கேட்’ என்று 2008ல் நடந்த சம்பவத்துடன் ஒப்பிட்டு எழுதப்பட்டது. உடனே ட்விட்டரில் வெகுண்டெழுந்தார் ஸ்ரீசாந்த்.

‘அவர் என் கன்னத்தில் அறையவில்லை. விசாரணை நடத்திய சுதிர் நானாவதிக்கு இந்த உண்மைகள் அனைத்தும் தெரியும். எனது கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்பதால் தான் இத்தனை ஆண்டுகளாக மௌனமாக இருந்தேன். இப்போது உண்மைகளை அனைவரும் அறிய வேண்டிய நேரம் வந்து விட்டது. அந்த வீடியோ காட்சியைப் பகிரங்கமாக வெளியிட வேண்டும்,’ என்று எழுதிவிட்டார்.அவ்வளவுதான். கம்பீர் - கோலி சண்டையை எல்லோரும் மறந்துவிட்டனர். ஹர்பஜன் - ஸ்ரீசாந்தின் ‘ஸ்லாப் கேட்’ விவாதிக்கப்பட்டது. நியூஸ் சேனல்களில் அனல் பறந்தது. நல்ல வேளையாக, ஹர்பஜன் இதைப் பற்றிக் கருத்து எதுவும் தெரிவிக்காததால் கிளம்பிய தீப்பொறி அணைக்கப்பட்டது. மீண்டும் இந்த விவகாரத்தைக் கிளப்பினால் ஸ்ரீசாந்துக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று பி.சி.சி.ஐ. கண்டனம் தெரிவித்துள்ளது. எனவே, இந்தப் பிரச்னை இப்போதைக்கு முற்றுப் பெறுகிறது.ஐ.பி.எல். ஆரம்பித்துவிட்டால் லலித் மோடி உற்சாகமாகிவிடுவார். ட்விட்டரில் தினமும் சர்ச்சைக்குரிய செய்திகளை அள்ளிவிடுவார். அதுவும், சி.எஸ்.கே. - ஸ்ரீனிவாசனுக்கு எதிராகப் பேசுவதென்றால் அப்படியொரு ஆர்வம்! ‘சென்ற வருடங்களில் சி.எஸ்.கே.வில் இருந்த ஸ்ரீசாந்த், இந்தமுறை சன் ரைசர்ஸ் அணிக்கு ஏன் சென்றார்? பொதுவாக ஸ்ரீனிவாசன், தன் கூடாரத்தில் உள்ளவர்களை எதிரணிக்கு அனுப்பமாட்டாரே, இதிலுள்ள ரகசியங்கள் என்ன?’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். ஹர்பஜன் சிங் - ஸ்ரீசாந்த் பிரச்னை மீண்டும் கிளம்பியவுடன், ‘இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ என்னிடம் உள்ளது. சம்பவம் நடந்த போது, அருண்ஜெட்லி கேட்டுக் கொண்டதால்தான் வீடியோவை வெளியிடவில்லை. வீடியோவை வெளியிடுவது குறித்து விரைவில் முடிவு செய்வேன்’ என்று ட்விட் செய்து பரபரப்பைக் கிளப்பினார். பிறகு சில மணி நேரங்களில், ‘வீடியோவை வெளியிடமாட்டேன். பிரச்னை முடிவடைந்து விட்டது’ என்று சொல்லிவிட்டார்.

இன்னும் ஒரு மாதத்துக்குமேல் ஐ.பி.எல். தொடரப்போகிறது. அதுவரை, சர்ச்சைகளுக்கு ஒரு முடிவு இல்லை.ஆஸ்திரேலியாவுக்கு எதிராகப் பட்டையைக் கிளப்பிய ரவீந்திர ஜடேஜாதான் இந்திய கிரிக்கெட்டின் புதிய ராக் ஸ்டார். ஐ.பி.எல்.-லில் இவர்தான் தினம் தினம் பேசப்படுகிறார். சர் ஜடேஜா என்று ஜடேஜாவை ட்விட்டரில் தோனி கேலி செய்ய, உடனே பற்றிக் கொண்டுவிட்டது. அடுத்த சில நாள்களில், கடைசி பந்தில் (நோ பால்) கேட்ச் கொடுத்து அவுட்டாகியும் சி.எஸ்.கே.வை வெற்றி பெறச் செய்தார் ஜடேஜா. அவ்வளவுதான், சர் ஜடேஜாவின் புகழ் எங்கேயோ போய்விட்டது. சென்ற வருடம் ராஜ்கோட்டில் Jaddu's Food Field என்கிற ஹோட்டலை ஏழு கோடி செலவில் தொடங்கி இருக்கிறார், ஜடேஜா. ஆனால், ஐ.பி.எல்.-லில் நட்சத்திரம் ஆகி, இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கு முன்பு சாதாரண வாழ்க்கையையே வாழ்ந்திருக்கிறார். ஜடேஜாவின் அப்பா, வாட்ச்மேனாக வேலை பார்த்திருக்கிறார். அம்மா நர்ஸாக. இந்திய அணியில் ஆடவேண்டும் என்ற அம்மாவின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறார் ஜடேஜா.

ச.ந.கண்ணன்

1 comment:

  1. ஐ பி எல் சர்ச்சைகள்! அதற்கு ஒரு விளம்பரமாகி மேலும் வருவாய் ஈட்டி தருகிறது! நாம்தான் இளிச்ச வாயர்கள்! நன்றி!

    ReplyDelete