Search This Blog

Thursday, April 25, 2013

கணித மேதை சகுந்தலா தேவி.

சினிமா பிரபலங்களையும், கிரிக்கெட் பிளேயர்களையும் தாண்டி 'ரோல் மாடல்’களை யோசிக்க முடியாத இந்திய சமூகத்தில், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவியருக்கான ஒரு ரோல் மாடல் கணித மேதை சகுந்தலா தேவி. ஆனால், அவர் இப்போது நம்மிடையே இல்லை!
 
'ஹ்யூமன் கம்ப்யூட்டர்’ என்று கொண்டாடப்பட்ட சகுந்தலா தேவியிடம், 13 இலக்க எண்ணை இன்னொரு 13 இலக்க எண்ணால் பெருக்கச் சொன்னால், அதற்கான விடையைச் சொல்ல அவருக்கு ஒரு சில விநாடிகளைத் தவிர பென்சில், தாள், கால்குலேட்டர் என எதுவும் தேவைப்படாது.
 
சுமார் 33 வருடங்களுக்கு முன்பு... அதாவது கணினி என்பது பிரமாண்ட அளவுகளில் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கூடங்களில் மட்டுமே இருந்த காலகட்டத்தில், சகுந்தலா தேவியை லண்டன் மாநகரின் இம்பீரியல் கல்லூரிக்கு அழைத்தார்கள் பேராசிரியர்கள். அவரிடம் 201 இலக்கங்களைக்கொண்ட ஒரு எண்ணைக் கொடுத்து அதன் 23-வது வர்க்க எண்ணைக் கேட்டார்கள். 28 விநாடிகளில் சகுந்தலா பதில் சொல்ல, வாயடைத்துப்போனார்கள் அந்தப் பேராசிரியர்கள்.
 
 
அந்தரத்தில் வித்தை காட்டும் ஒரு சர்க்கஸ் கலைஞனுக்குப் பெண்ணாகப் பிறந்த சகுந்தலா, சிறுமியாக இருக்கும்போது சீட்டுக்கட்டுகளில் இருக்கும் 52 அட்டைகளை வைத்துப் பல வித்தைகளைக் காட்டினார். அந்த வித்தைகள் அனைத்துக்கும் கணிதம்தான் அடித்தளம் என்பதைத் தாண்டி சகுந்தலாவின் தந்தையால் அவரது பெண்ணின் திறமைகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை. சகுந்தலாவை நல்ல பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிப் படிக்கவைக்கக்கூட இயலவில்லை அவரால்.
 
ஏழ்மைக்கு இடையிலும் தன்னார்வத்தோடு தன் முயற்சிகளைப் பட்டை தீட்டியபடியே இருந்தார் சகுந்தலா. ஐன்ஸ்டீன் மூன்று மணி நேரம் செலவழித்துக் கண்டுபிடித்த ஒரு கணக்குக்கான விடையை சகுந்தலா தேவி மிகச் சில நொடிகளில் ஐன்ஸ்டீன் முன்னிலையிலேயே தீர்த்தார்.அசந்து போன ஐன்ஸ்டீன், சகுந்தலாவின் திறமையைப் பாராட்டிச் சான்றிதழும் அளித்திருக்கிறார்.
 
ஆனால், காமதேனுவே கிடைத்தாலும் அதை காராம்பசுவாக மட்டுமே பயன்படுத்திக்கொள்ளும் நம் நாடு, சகுந்தலா தேவியை ஒரு ஜோசியக்காரராக மட்டுமே பயன்படுத்திக்கொண்டது. மனக்கணக்காகவே எப்படி அவ்வளவு பிரமாண்டக் கணக்குகளை சகுந்தலா தீர்க்கிறார் என்பதை சகுந்தலாவிடமிருந்து கடைசி வரை தெரிந்துகொள்ளாமலேயே இருந்துவிட்டோம். கடந்த வாரம் பெங்களூரில் மரணமடைந்த சகுந்தலாவுடனேயே, அவரது மனக்கணக்கிடும் திறமையும் மரித்துவிட்டது!

1 comment: