Search This Blog

Tuesday, April 23, 2013

உயிரை உருக்கும் உடல்பருமன்!

சர்க்கரை எப்படியெல்லாம் மனித ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது என்பதைச் சற்று விரிவாகப் பேசுவோம். நான் இனி சொல்லப் போகும் பல விஷயங்கள் உங்களுக்குச் சற்று ஆச்சர்யமாக இருக்கலாம்...  அல்லது, அதிர்ச்சியாகவும் இருக்கலாம். ஆனால், மருத்துவரீதியான அந்த உண்மைகளைச் சொல்வது என்னுடைய தார்மிகக் கடமை என்கிற முறையில், தொடர்கிறேன்.

முதலில், சர்க்கரையின் தாக்கம் எவ்வாறு சர்க்கரை நோய்க்கு வித்திடுகிறது என்று பார்ப்போம்.

சர்க்கரையின் 'கிளைசீமிக் இன்டெக்ஸ்' (GI), 100 என்று பார்த்தோம். அதாவது, உட்கொண்ட மாத்திரத்தில் ஏதோ 'டிரிப்’ ஊசி மூலம் ஏற்றியதைப் போல உடனே உறிஞ்சப் பட்டு ரத்தத்தில் கலக்கிறது. அடுத்த விநாடியே கணையத்துக்கு ஒயர்லஸ் செய்தி பறக்கிறது. உடனே கணையத்தின் பீட்டா (Beta) செல்களில் இருந்து இன்சுலின் வேகமாக உற்பத்தியாகி இந்த சர்க்கரையை ஜீரணிக்க உதவுகிறது. இதையே தொடர்ச்சியாகவும் அதிகமாகவும் உட்கொண்டால், கணையம் அதிவேகமாக செயல்பட்டு, பீட்டா செல்கள் ஓய்ந்துவிடும் சூழ்நிலை உருவாகும். இதுவே சர்க்கரை நோயின் ஆரம்ப நிலை.

இன்னொரு வகையாகவும் இது சாத்தியம். சர்க்கரை ஒரு வெற்றுக் கலோரி (Empty Calories) என்று குறிப்பிட்டேன். கலோரி என்பது எரிபொருள் சக்தி. இது ஒருபோதும் வீணாவதில்லை. ஒரு டீஸ்பூன் சர்க்கரையில் 16 கலோரி இருக்கிறது. தேவைக்கு அதிகமாக உட்கொள்ளும் இந்தக் கலோரிகள் ஈரலில் 'டிரைகிளிசரைட்' (Triglyceride) என்கிற கொழுப்பாக மாறி, சேமித்து வைக்கப்படுகிறது (நாம் செலவழிக் காத பணத்தை ஃபிக்ஸட் டெபாசிட் என சேமிப்பதைப் போல!). உற்பத்தி ஸ்தானமான ஈரலில்தான் இக்கொழுப்பு முதலில் சேமிக்கப்படுகிறது. பிறகுதான் உடலின் மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு சேமிக்கப்படும்.

தற்போது பெரும்பாலான நோயாளிகளுக்கு 'ஸ்கேன்’ பரிசோதனை செய்வது சர்வசாதாரணமாகிவிட்டது. பலருடைய ஸ்கேன் ரிப்போர்ட்டில் 'ஃபேட்டி லிவர்' (Fatty Liver) என்று எழுதப் பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருக் கலாம். இதன் அர்த்தத்தை நோயாளி களும் புரிந்துகொள்வதில்லை - பல நேரங்களில் டாக்டர்களும் அதிகமாக பொருட்படுத்துவதில்லை. 'அது ஒன்றும் இல்லை... சும்மா ஃபேட்டி லிவர்தான். சாப்பாட்டில் கொழுப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள்’ என்று டாக்டர்கள் பலர் சொல்வது எனக்குத் தெரியும். உண்மையை ஆழமாக ஆராய்ந்தால், இக்கொழுப்பின் பூர்விகம்... கொழுப்பு சார்ந்த உணவில்லை, சர்க்கரை மிகுந்த உணவுதான் என்பது விளங்கும்.


இப்படி ஈரலில் சேமிக்கப்படும் கொழுப்பு, ஈரலைத் தாண்டி உடலின் மற்ற பகுதிகளில் அடைத்து வைக்கப்படுவதுதான் 'உடல் பருமன் நோய்' (Obesity Syndrome). ஆம்... உடல் பருமனை இப்போது ஒரு நோய் என்றுதான் நாங்கள் அழைக்கிறோம். ஒருவர் அதிக எடையுடன் இருப்பதற்கும் (Overweight), உடல் பருமன் நோய்க்கும் வேறுபாடு உண்டு. பிஎம்ஐ ( BMI-Body Mass Index)  எனப்படும் உடல் பருமன் அளவீடு  என்ற அளவுகோலை வைத்து இதைக் கணக்கிடுகிறோம்.

பிஎம்ஐ = உடல் எடை (கி.கி)    உயரம் (மீ) X உயரம் (மீ). ஒருவரின் பிஎம்ஐ 18.5 முதல் 25 வரை இருந்தால் சரியான எடை என்றும், 25 - 30 வரை இருந்தால் அதிக எடை என்றும், 30-க்கு மேலே இருந்தால் உடல் பருமன் என்றும் கணக்கு.
உடல் பருமன்தான் பல நோய்களுக்கும் முன்னோடி என்பது இப்போது பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. இதய பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, மூளை பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு, ஈரல் பாதிப்பு என்று பல்வேறு நோய்களும் இதன் கிளைகளே.

'மெட்டபாலிக் சிண்ட்ரோம்’ அல்லது 'சிண்ட்ரோம் எக்ஸ்’ என்றழைக்கப்படுகிற நோய்க்கூட்டு, இப்போது மருத்துவ உலகில் மிகவும் பிரபலம். அப்படி என்றால் என்ன?

1. உடல் பருமன்.
2. டிரைகிளிசரைட் என்ற கெட்ட கொழுப்பு 150 மி.கி அளவுக்கும் மேல்.
3. HDL எனப்படும் நல்ல கொழுப்பு 40 மி.கி. அளவுக்கும் கீழ்.
4. சர்க்கரை (வெறும் வயிற்றில்) 100 மி.கி. அளவுக்கும் மேல்.
5. ரத்தக் கொதிப்பு 130/85-க்கு மேல்
6. இன்சுலின் எதிர்ப்புத் தன்மை.
இவற்றில் ஏதேனும் 4 இருந்தால், அதுவே சிண்ட்ரோம் எக்ஸ். உலக ஜனத்தொகையில் 35% பேர் இதில் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளிவிவரம் கூறுகிறது.

மேலை நாடுகளில் கி.பி. 1,600-ம் ஆண்டுக்கு முன் மனிதனின் சராசரி உணவில் 2,600 கலோரிகள் இருந்தது. கி.பி. 1,800-ல் இது 3000 கலோரியாக உயர்ந்தது. தற்போது இது 3,500 கலோரியாக உயர்ந்து விட்டது. நம்மவர்களின் அன்றாட கலோரி அளவு 1,800-ல் இருந்து தற்போது 2,500 என உயர்ந்திருக்கிறது. இந்த 'கிடுகிடு’ உயர்வுக்குக் காரணம் சர்க்கரை, சர்க்கரை மிகுந்த கோலா பானங்கள், வெள்ளை அரிசி, உருளைக்கிழங்கு போன்றவையே என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
உடல் பருமன் நோய் தற்போது உலகளவில் பிரளயகால தொற்றுநோய் (Epidemic) போல் பரவி வருகிறது. அதாவது, அம்மை, காலரா போன்ற நோய்கள் வந்தால் ஊரையே அழித்துப் புயல் வேகத்தில் பரவுவதுபோல என்று பொருள். குறிப்பாக, தற்போது குழந்தைகளையும் தாக்கி வருகிறது. உலகளவில் சுமார் 25% குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். பிறந்து 1 முதல் 2 ஆண்டுகள் வரை தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் ஒல்லியாகவே வளர்வார்கள். இவர்களுக்கு பிற்காலத்தில் சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு போன்ற நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் மிகக்குறைவு. ஆனால், சர்க்கரையும் கொழுப்பும் நிறைந்த புட்டிப்பாலில் வளரும் குழந்தைகள் 'கொழுகொழு’ என்று வளர்வார்கள். நீங்களும் சந்தோஷப்படுவீர்கள். இக்குழந்தைகள்தான் எதிர்காலத்தில் சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, இதய நோய் போன்ற வியாதிகளுக்கு எளிதில் ஆளாகிவிடுகிறார்கள். பல நாடுகளில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளில் பாதிபேருக்கு மேல் இந்த பாதிப்பு இருக்கிறது. நம் நாட்டில் மெட்ரோ நகரங்களில் உடல் பருமன் நோய் பூதாகாரமாக இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. டெல்லி, சண்டிகர் போன்ற நகரங்களில் 70% பேர் உடல் பருமனாக இருக்கிறார்களாம்.

அந்தக் காலத்தில் உடல் பருமன் ஒரு கௌரவமான விஷயமாகக் கருதப்பட்டது. ராஜாக்களும், ஜமீன்தார்களும் இதைப் பெருமையாக நினைத்தார்கள். அமெரிக்காவில் இது இப்போது தலைகீழாகிவிட்டது. அங்கே பணக்காரர்கள் இப்போது ஒல்லியாக இருக்கிறார்கள். பொருளாதார கீழ்மட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் குண்டாக இருக்கிறார்கள். இதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள்தான் முக்கியமானவை. பணக்காரர்கள் விஷயம் தெரிந்து மாவுச்சத்து/சர்க்கரைச் சத்து அல்லாத உணவுகளை உட்கொள்கிறார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களோ... வெள்ளை ரொட்டி, உருளைக்கிழங்கு சிப்ஸ், பர்கர் போன்ற துரித உணவுகளை (fast food) உண்டு குண்டாகிறார்கள். நாமும் தற்போது அதைத்தானே செய்ய ஆரம்பித்திருக்கிறோம்? அதனால்தான் பெரு நகரங்களில் 70% பேர் குண்டாகிவிட்டார்கள். விரைவில் இது கிராமங்களுக்கும் பரவும். அதனால்தான் இதை ஒரு தொற்றுநோய் என்று குறிப்பிட்டேன்.

மொத்தத்தில், இன்று காணப்படும் பல்வேறு நவீன உயிர்க்கொல்லி நோய்களுக்கும் முக்கியக் காரணமாக அமைவது 'மெட்டபாலிக் சிண்ட்ரோம்'தான். இதன் முக்கிய அங்கமே உடல் பருமன் நோய்தான். உடல் பருமனுக்கு மூல காரணம் சர்க்கரைதான் என்பதை உணர்த்தவே இத்தனை விளக்கங்களும்.

சர்க்கரை எவ்வளவு ஆபத்தானது என்பது இப்போது புரிகிறதா..?!

No comments:

Post a Comment