Search This Blog

Friday, April 26, 2013

அருள்வாக்கு - நிறைவு!


ஜலத்துக்கு நிறைவு சமுத்திரம். டம்ளரில், செம்பில், குடத்தில், அண்டாவில், கிணற்றில், குளத்தில், நதியில் என்று ஒன்றைவிட ஒன்று ஜாஸ்தியாக இருக்கிற ஜலம் கடைசியில் சமுத்திரம் என்று முடிகிறது. இப்படியே ஞானத்துக்கும் கிருபைக்கும் நிறைவான சமுத்திரம் பராசக்தி. நமக்குக் கொஞ்சம் அறிவு, கொஞ்சம் அன்பு இருக்கிறது. பிராணிகளுக்கு நம்மை விடக் குறைவு. நம்மைவிட ஜாஸ்தி அறிவுள்ள, ஜாஸ்தி கிருபா சக்தி உள்ள தேவ ஜாதிகள் இருக்கின்றன. நம்மிலேயே மஹான்களானவர்கள் மகாஞானிகளாக, பரம காருண்யத்தோடு இருக்கிறார்கள். இந்த ஞானம், கிருபை பூரணமாக நிறைந்த இடத்தைத்தான் ஸ்வாமி, பரமாத்மா, பராசக்தி என்று சொல்வது.

எல்லாவற்றையும் அறிகிற ஞானம் அது; அறிகிறது மட்டுமில்லை. அறியப்படுகிற எல்லாமுமே அதுதான். அதற்கு வேறாக இன்னொன்று இருந்து, அதை இது அறிகிறது என்றில்லை. அப்படி இன்னொன்று இருப்பதற்கு இடம் இருந்துவிட்டால், இது எங்கும் நிறைந்த பூரணம் ஆகாது. இன்னொன்று துளித்துளி இருந்து விட்டால்கூடச் சரி, இதற்குக் குறைதான் - இது அந்தத் துளியில் இல்லாததால் இது பூரணமில்லை; நிறைந்த ஒரே நிறைவில்லை என்றுதானே அர்த்தம்? இதனால் என்ன முடிவாகிறது என்றால், பரமாத்மாவைத் தவிர அறியப்படுகிற வஸ்து என்று இரண்டாவது பதார்த்தமே கிடையாது என்பதுதான்.

அப்படியானால் இத்தனை ஜீவாத்மாக்கள் வேறு வேறாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோமே இது என்ன? இது ஒரு பெரிய வேஷம்தான், மாயா நாடகம்தான். வேஷம் கலைந்துவிட்டால், நிறைந்த நிறைவான ஒன்றே ஒன்றுதான். அதுவே அறிவாக நிற்கும். ‘சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே’ என்று தாயுமான ஸ்வாமிகள் சொல்கிற அறிவு! அது பூரணமானதால், அதனால் அறியப்பட வேண்டிய வஸ்து என்று வேறு எதுவுமே இல்லை. தன்னையே அறிந்து கொண்டிருக்கிற அறிவு அது.

இப்படி இரண்டாவதாக வேறே இல்லாமல் ஜீவாத்மாவை அந்தப் பரமாத்ம சமுத்திரத்தில் கொண்டு போய்க் கரைப்பதுதான் வாஸ்தவமான நிறைவு.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

No comments:

Post a Comment