Search This Blog

Sunday, April 28, 2013

கேன்சர் - கட்டுப்படுத்த முடியாததா

புற்றுநோய்க்கு இதுவரை முழுமையான மருந்து என்று கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த  சித்தர்கள் புற்றுநோய் ஒரு மனிதனுக்கு ஏன் வருகிறது என்ற காரணத்தை விரிவாகச் சொல்லி இருக்கிறார்கள்.'உணவே’ மருந்து. சித்த மருத்துவத்தின் தாரக மந்திரமும் அதுதான். சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டிக்குள் இருக்கும் அனைத்தும்  மருத்துவக் குணம் வாய்ந்தவை. பாட்டி வைத்திய முறையை முற்றிலும் மறந்து நாம் ரொம்பவே விலகிவிட்டதால் வியாதிகள் பெருகிவிட்டன என்றுகூடச் சொல்லலாம். கொடிய நோயாகச் சித்தரிக்கப்படும் புற்றுநோய்க்குக்கூட சித்த மருத்துவத்தில் சிறப்பான சிகிச்சைகள் இருக்கின்றன.

புற்றுநோயும் சித்த மருத்துவமும்

சித்த மருத்துவத்தில் சில நோய்களை அசாத்திய நோய்கள் என்று வகைப்படுத்தினார்கள். அதில் புற்றுநோயும் ஒன்று.

கட்டிகள் கழுத்தில் வரக்கூடிய கழுத்துக் கழலைகள் போன்றவற்றைக் 'கண்ட மாலை’ என்று சொல்லுவார்கள். அது  புற்றாகவும் இருக்கலாம். புற்றுநோய் பற்றி வெவ்வேறு வடிவத்தில் சொல்லி இருக்கிறார்கள்.

காரண காரியங்கள்:  

புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் என்னென்ன என்று வகைப்படுத்தினால், கிடைக்கும் பதில் ஆச்சர்யத்தை தரும். அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்ன தொடர்பு என்பதைப் போன்றதுதான்... ஆனால், உண்மை. 

சித்த மருத்துவத்தில் புற்றுநோய் வருவதற்கு மூன்று முக்கிய காரணங்களைச் சொல்கிறார்கள். அவை :

1. உணவு
2. சுற்றுச்சூழல்
3. மனம் 

உணவை உணருங்கள்:

  பட்டைத் தீட்டின பச்சரிசி, சுத்திகரிக்கப்பட்ட மாவு, அரிசி, கோதுமை, வெள்ளை உப்பு இவற்றை இன்று அதிகமாகப் பயன்படுத்தி வருகிறோம்.  அவற்றைக் குறைத்துக்கொள்ளவேண்டும்.

 உடலுக்கு ஒவ்வாத உணவுகள் மற்றும் அஜீரணம் ஏற்படுத்தும் எண்ணெய், புலால் உணவுகளைத் தவிர்த்து, கஞ்சி, பாலாடை, அவல், சிறுதானிய உணவுகள் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

 சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்ல, 45 வயதைக் கடந்தவர்கள், நேரடியாக இனிப்பு உண்பதைத் தவிர்க்க வேண்டும். வெள்ளை சர்க்கரை வந்த பிறகுதான் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது. காபிக்கு இனிப்பு சேர்க்க, பனை வெல்லம், கருப்பட்டியைப் பயன்படுத்தலாம்.  

 வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.  மாட்டுப் பால் சிறந்தது.  

 பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பண்டங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.  நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக அவற்றில் பல வேதிப்பொருட்களைச் சேர்க்கிறார்கள். மேலும் பிளாஸ்டிக் பைகளில் அடைத்தே பெரும்பாலானவை சந்தையில் கிடைக்கின்றன. இவை உடல்நலத்துக்குக் கேடானவை.

சுகாதாரமான சுற்றுசூழல்:

இப்போது உலகம் சுருங்கிவிட்டது. வெளிநாட்டுப் பழங்கள் உணவுகள் போன்றவை எளிதில் கிடைக்கின்றன. அவை நாடு கடந்து இங்கு வரும்வரை கெடாமல் இருக்கச் சேர்க்கப்படும் ரசாயனப் பொருட்கள் உடலுக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. வசிக்கும் இடத்திற்கு அருகே விளையும் காய்கறி, பழங்களையேப் பயன்படுத்தவேண்டும். அதிலும் இயற்கை உரத்தில் தயாரிக்கப்பட்டதாக இருந்தால், மிகவும் நல்லது.

புற்றுநோயைத் தடுக்கும் மருந்துகள்:

எளிய மணமூட்டிகள் எல்லாமே புற்றுநோயை வரவிடாமல் தடுக்கக்கூடிய அருமருந்துகள்தான்.  

 மஞ்சள் அற்புதமான மருத்துவக் குணங்கள்கொண்டது. சிஸ்டோபிளாஸ்டி என்ற சிகிச்சை புற்றுநோய் வளராமல் தடுக்கும் ஆற்றலைக்கொண்டது.  ஆனால் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். மஞ்சளில் உள்ள மூலக்கூறுகள், பக்க விளைவுகள் ஏதும் இன்றி கேன்சர் செல்லின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும்.  

  லவங்கப்பட்டை, கறிவேப்பிலை, அன்னாசிப் பூ, வெந்தயம், இஞ்சி, கொத்தமல்லி விதை, மிளகு இவை எல்லாவற்றிலும் உள்ள மூலக்கூறுகள் புற்றுநோயைத் தடுக்கக்கூடிய ஆற்றல்கொண்டவை. இவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டியது அவசியம்.  

  புற்றுநோய்க்கான சிகிச்சையின்போது, சில மருந்துகளால் ரத்தத் தட்டுக்கள் குறையும். சளி, இருமலுக்குப் பயன்படக்கூடிய ஆடாதொடை இலை ரத்தத்தட்டுக்களை உயர்த்தும்.  

 தாளித்தபத்ரி புற்றுநோய் வராமல் தடுக்கும் மூலிகை. புற்றுநோயைத் தடுக்கக்கூடிய வேதிப் பொருளான 'டாக்சால்’ (Taxol), தாளித்தபத்ரி மரத்திலிருந்துதான் கிடைக்கிறது.  

 தேராங்கொட்டை, நீரடி முத்து, வல்லாதகி போன்ற  மூலிகைகள் எல்லாமே புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படக்கூடியன. வீரியமிக்க இந்த மூலிகைகளை முறையான ஒரு மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்தவேண்டும். 

மருந்தின் பலன்கள்:

புற்றுநோய்க்கு எதிரான மருந்துகளில் தாவர, உலோக உப்புக்களிலிருந்து செய்யக்கூடிய உயரிய சித்த மருந்துகள் இருக்கின்றன. ரத்தப் புற்றுநோய், குடல் புற்றுநோய், இரைப்பை, கருப்பை, மார்பகப் புற்றுநோய், ஆண்களுக்கான புராஸ்டேட் புற்றுநோய் எனப் பெரும்பாலான புற்றுநோய்களுக்கு மருந்துகள் இருக்கின்றன. ஆனால், எல்லாமே, ஆரம்பக்கட்ட நிலையில் இருக்கும் புற்று நோய்களுக்குப் பலன் அளிக்கக்கூடியன. அறுவைசிகிச்சை செய்துகொண்ட பிறகு மீண்டும் புற்று வராமல் தடுக்க சித்த மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.  கதிர்வீச்சு எடுத்த பிறகும், ஆங்கில மருந்துகளுடன் சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்ளலாம்.

புற்றுநோய்க்கான மருந்துகளை உட்கொள்ளும்போது, உடல் மிகவும் சோர்ந்துவிடும். வெள்ளை அணுக்கள், ரத்தத் தட்டுக்கள் குறைந்துவிடும்.  வெள்ளை அணுக்கள், தட்டுக்களை அதிகரிக்கவும் உடலை உறுதிப்படுத்தவும் சித்த மருத்துகள் உதவும். 

இணைந்த மருத்துவம்

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் ஒருங்கிணைந்த புற்றுநோய் மருத்துவ நிபுணர் குழு (இன்டகரேடிவ் ஆன்காலஜிஸ்ட்) செயல்படுவது மிகப் பிரபலம்.  நோயாளிக்கு நேரத்தையும், செலவையும் இது குறைக்கும். நோயாளிகளின் வாழ்நாளை நீடிக்கவும் வழிவகுக்கும். 

மருந்துகளுடன்,  மூச்சுப் பயிற்சி செய்வதும் நல்ல பலனைத் தரும்.  அதேபோல், நம் நாட்டில் எந்தெந்தத் துறையில் என்னென்ன சிறப்பான மருந்துகள் இருக்கிறதோ, அந்தந்தத் துறை மருத்துவர்கள் ஒருவருக்கொருவர் கலந்தாய்வு செய்து சிறப்பான சிகிச்சையை நோயாளிக்குத் தர முயற்சிப்பதன் மூலம் புற்றுநோயின் தீவிரத்தைப் பெரிதும் கட்டுப்படுத்தலாம்.
 


No comments:

Post a Comment