Search This Blog

Sunday, June 30, 2013

தங்கம் விலை: இன்னும் குறையுமா?

தங்கத்தின் விலை கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சந்தையில் மிகவும் குறைந்திருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை நண்பகலின்போது சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,997 டாலர் என்கிற அளவுக்கு விலை குறைந்தது. இதனால், ஆபரணத் தங்கத்தின் விலையும் ஒரு கிராமுக்கு 2,400 ரூபாய்க்கும் கீழே சென்றது.
 
தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே குறைந்து வந்தது. அமெரிக்க ஃபெடரல் வங்கி 85 பில்லியன் டாலர் மதிப்பிலான பாண்டுகளை விற்பனை செய்வதை வரும் ஆண்டு இறுதிக்குள் நிறுத்திக்கொள்ளப் போவதாக அறிவித்தபின் டாலரின் மதிப்பு அதிகரித்து தங்கத்தின் விலை குறைந்தது. 2010 ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு ஒரு அவுன்ஸ் 1,200 டாலருக்கு சென்ற வாரத்தில் சென்றது.நியூயார்க்கின் மிகப் பெரிய கோல்டு இ.டி.எஃப். நிறுவனமான எஸ்.பி.டி.ஆர். கோல்டு இ.டி.எஃப். ஃபண்ட் இந்த ஆண்டில் இதுவரை 381 டன் அளவுக்கு தங்கத்தை விற்பனை செய்துள்ளது. மேலும், தங்கத்தை அதிகமாக வாங்கும் சீனா மற்றும் இந்தியாவில் தேவை சமீபகாலமாக குறைந்து வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கி தங்க நகைகள் மீது கடன் தருவதைக் குறைத்ததும், இறக்குமதி வரியை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளாலும், சீனாவில் பொருளாதாரம் மந்தமாக இருப்பதாலும் தங்கத்தின் மீதான தேவை குறைந்துள்ளது.

 

 
இரண்டு மாதங்களுக்கு முன் தங்கம் விலை இறங்கியபோது நம் நாட்டில் பெருமளவிலானவர்கள் போட்டிபோட்டுக்கொண்டு தங்கம் வாங்கினார்கள். ஆனால், இப்போது அதைவிட தங்கம் விலை குறைந்தபோதும் அதை வாங்குவதற்கான ஆர்வம் மக்களிடம் இல்லை. காரணம், தங்கம் இன்னும் குறையும் என்கிற எதிர்பார்ப்பும், இனி அதன் விலை பெரிதாக உயராது என்கிற எண்ணமும்தான்.


 

No comments:

Post a Comment