Search This Blog

Saturday, June 08, 2013

ஓ பக்கங்கள் - இரண்டு கவலைகள்! ஞாநி

கவலை 1: மாத்தூருக்கு மாற்றூர்?


விவசாயம் அழிந்து கொண்டிருக்கிறது; கிராமங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன என்று எல்லாருக்கும் பொதுவாகத் தெரிந்திருக்கிறது. எவ்வளவு அழிவு என்பதை அரசாங்கப் புள்ளிவிவரங்கள் அரசே விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காட்டிக் கொடுத்து விடுகின்றன.

அண்மையில் வெளியான புள்ளிவிவரங்களின் படி தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் சுமார் எட்டு லட்சம் சிறு விவசாயிகள் விவசாயத்தை விட்டுப் போய்விட்டார்கள். அதே சமயம் சுமார் எட்டு லட்சம் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் அதிகரித்து இருக்கிறார்கள்.

விவசாயம் செய்ய கூலியாட்கள் கிடைப்பதே கஷ்டமாக இருக்கிறது என்றுதானே பெரும்பாலான நில உரிமையாளர்கள் அங்கலாக்கிறார்கள்? அப்படியானால் எப்படி விவசாயக் கூலிகளின் எண்ணிக்கை மட்டும் அதிகரிக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. சிறு விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறியது உண்மை. ஆனால் அவர்கள் எல்லாரும் விவசாயக் கூலித் தொழிலாளர்களாக மாறிவிட்டதாகச் சொல்வதற்கு இல்லை. கணக்கெடுப்பின் போது தங்கள் தொழில் விவசாயக் கூலி வேலை என்று சொல்லக்கூடிய பலர் நடைமுறையில் விவசாயம் அல்லாத வேலைகளைத் தேடி சிறு நகரங்களுக் கும் பெருநகரங்களுக்கும் புலம்பெயர்ந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். பல கிராமங்களில் இளம் வயதினர் ஊரில் இல்லை. முதியோரே உள்ளனர்.  புள்ளிவிவரங்களின்படி சுமார் 300 கிராமங்கள் காணாமல் போய்விட்டன. அதாவது அவை கிராமமாக இல்லாமல், அருகே உள்ள நகரத்துடன் கலந்து கரைந்து விட்டன. ஒரு கிராமம் எப்படி செத்துப் போகிறது என்பதை நேரில் போய்ப் பார்க்கும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது.அமெரிக்காவில் வசிக்கும் என் நண்பர் அருளாளன் இங்கே வந்தபோது அவருடன் அவருடைய கிராமத்துக்குச் சென்றேன். சென்னைக்கு அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூருக்குப் பக்கத்தில் இருக்கும் கிராமம் அது. கிருஷ்ணதேவராயர் காலத்தில் ஆந்திர தெனாலி அருகில் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இங்கே கொண்டு வந்து குடியமர்த்திய கிராமம் இது என்று சொல்லப்படுகிறது. பெயர் மாத்தூர். மாற்று ஊர் இப்படித் திரிந்திருக்கலாம்.மாத்தூர் தமிழக அரசியலோடும் இலக்கிய வரலாற்றோடும் ஏதோ ஒருவிதத்தில் தொடர்புடைய கிராமம். அருளாளனின் தந்தையார் மாத்தூர் கி.தசரதன், அறிஞர் அண்ணாவின் உற்ற நண்பர்களில் ஒருவர். பின்னாளில் பச்சையப்பன் கல்லூரி முதல்வராக இருந்தவர். டாக்டர் மு.வரதராசனின் மாணவர். ஆரம்ப காலங்களில் தசரதனின் காரில் அவர் ஓட்ட, அண்ணா பயணம் செய்வது வழக்கம். அண்ணா நடத்திய இதழ்களில் எல்லாம் தசரதன் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். கோடை விடுமுறை சமயங்களில் டாக்டர் மு.வ., தசரதனின் மாத்தூர் வீட்டுக்கு வந்து மாடியறையில் தங்கி நூல்கள் எழுதும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்.அந்த வீட்டையும் ஊரையும் போய்ப் பார்த்தேன். ஊருக்குப் போகிற வழிநெடுக இரு பக்கமும் வயல்களோ பச்சைப் பசேலென்ற தோற்றமோ இல்லை. விவசாயம் இங்கே கைவிடப்பட்டுவிட்டது என்பது முதல் பார்வையிலேயே தெரிந்து விடும்.வல்லக்கோட்டை- ஒரகடத்துக்கு அருகில் இருக்கும் மாத்தூரில் நான் கண்ட ஒரே வளர்ச்சிப் பணி ஒவ்வொரு வீட்டு வாயிலிலும் தண்ணீர்க் குழாய் போடப்பட்டிருப்பது மட்டும்தான். ரியல் எஸ்டேட் முதலாளிகள் தயவில் உள்ளூர் கோவில் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. மற்றபடி ஊரில் பல பகுதிகள் பிளாஸ்டிக் குப்பை மேடுகளாகவே இருந்தன. மாத்தூருக்குப் பொருத்தமே இல்லாத விதத்தில் அதன் மயானத்தை ஒட்டி (என்ன பொருத்தம்!)ஒரு பிரம்மாண்டமான அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகம் எழும்பி இருந்தது.மாத்தூரில் விவசாயம் அடிபட்டதற்கு முக்கியமான காரணம் ஏரிகள் பறிபோனதுதான். ஏரிகளும் ஏரிகளுக்கு நீர்வரத்து வரும் நீர் பிடிப்புப் பகுதிகளும் அரசாங்கத்தால் வெவ்வேறு தொழிற்சாலைகளுக்குக் கொடுக்கப்பட்டு விட்டன.அருகில் இருக்கும் ஒரகடம் தொழிற்பேட்டையில் ஆயிரக்கணக்கான வடஇந்தியத் தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். இப்போது மாத்தூர் போன்ற கிராமங்களில் விவசாயம் இல்லாமல் பழைய சொந்த வீடு மட்டும் வைத்துக்கொண்டு குடியிருப்போருக்கு வருவாய்க்கான ஒரு வழி, இந்தத் தொழிலாளர்களுக்கு வாடகை அறை தருவதுதான். நான் பார்த்த ஒரே ஒரு தெருவில் மட்டும் 200 வடஇந்தியத் தொழிலாளர்கள் குடியிருப்பதாகச் சொன்னார்கள். மாத்தூரில் தரிசாகக் கிடக்கும் விளைநிலங்கள் மேலும் புதிய அடுக்கு மாடிக் குடியிருப்புகள் ஆவதற்காகக் காத்திருக்கின்றன. ஏக்கர் விலை இப்போது சுமார் ஒரு கோடி ரூபாய். 

சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற பெரு நகரங்களை ஒட்டியுள்ள கிராமங்கள் மாத்தூரைப் போல படுவேகமாக அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றன. அடுத்த நிலை நகரங்களையொட்டி உள்ள கிராமங்களின் அழிவு வேகம் மட்டும் குறைவே தவிர, அதே திசையில்தான் எல்லாம் நடக்கின்றன.பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்பதே பவணந்தியின் நன்னூல் வாக்கு. ஆனால் பழையதில் எதைக் கழிப்பது, புதியதில் எதைக் கொள்வது என்ற தெளிவு மக்களுக்கும் அரசுக்கும் தேவைப்படுகிறது. மாநில அரசும் சரி, மத்திய அரசும் சரி கிராமங்கள் அழிந்து நகர்மயமாதல் பற்றியும் விவசாயம் குறைந்து தொழில்மயம் அதிகரிப்பது பற்றியும் என்ன கொள்கைகள், நடைமுறைகள், மாற்றுத் தீர்வுகள் வகுத்து வைத் திருக்கின்றன என்பதே தெரியவில்லை. திட்டமிடுதலும் ஒழுங்குபடுத்தலும் இல்லாமல், எல்லாம் வல்லான் வகுத்ததே வாக்கால் என்பதாக நடந்து கொண்டிருக்கின்றன. பஞ்சாயத்து முதல் ஐ.பி.எல். வரை பணம் மட்டுமே எதையும் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது.மாத்தூர் தெரு வழியே சென்ற தசரதனின் காரில் உட்கார்ந்திருந்த அண்ணாவும், மாடியறையில் எழுதிக் கொண்டிருந்த மு.வ.வும் எதிர்காலம் பற்றிக் கண்ட கனவுகள் என்னவாக இருந்திருக்கும்? நிச்சயம் இப்போது அருளும் நானும் கண்ட காட்சிகளாக இருந்திருக்க முடியாது. கனவுகளை எங்கே தொலைத்தோம்? எப்படித் தொலைத்தோம்? நம் காலக் கனவுகள் என்ன? எங்கே?

கவலை 2: செக்சும் டீச்சர்களும்


ஜெயலலிதா அரசு ஓர் அர்த்தமற்ற உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. பள்ளிகளில் பாலியல் சீண்டல்கள், குற்றங்களைத் தடுப்பதற்காக, இனி பெண்கள் பள்ளியில் பெண் ஆசிரியைகளும், ஆண்கள் பள்ளியில் ஆண் ஆசிரியர்கள் மட் டுமே நியமிக்கப்படுவார்கள் என்று அறிவித்து இருக்கிறது.  ஒருபால் உறவு ஏற்பட்டு விட்டால், ஜெயலலிதா அரசு அடுத்து என்ன செய்யும்? எல்லா ஆசிரியர் பதவிகளையும் திருநங்கைகளுக்கு மட்டும் என்று ஒதுக்கிவிடுமா? ஜெயலலிதா அரசின் உத்தரவு அபத்தமானது; ஆபத்தானது; ஆசிரியர்களை ஒட்டுமொத்தமாக அவமதிப்பது. லட்சக்கணக்கான ஆசிரியர்களில் மொத்தமாக ஒரு நூறு ஆசிரியர்கள் தவறான நடத்தை உடையவர்கள் என்றால், அவர்களைக் களை எடுக்க வேண்டுமே தவிர, எல்லா ஆசிரியர்களையும் சந்தேகத்தோடு அணுகும் உத்தரவு கேவலமானது.இந்த உத்தரவின் அடுத்தகட்ட நடவடிக்கையாக, கோ-எஜுகேஷன் பள்ளிகளை எல்லாம் அரசு மூடிவிட முடிவு செய்யும் ஆபத்தும் இருக்கிறது. பெண்கள் கல்வி கற்க வெளியிலேயே செல்லக் கூடாதென்று பிரசாரம் செய்யும் சில அசட்டு மடாதிபதிகள், மௌல்விகளின் தரத்தில் அரசும் இருக்கக்கூடாது. அலுவலகங் களில் ஆணும் பெண்ணும் ஒன்றாகப் பணிபுரிவதால் சிக்கல் என்று அடுத்தகட்டமாக எல்லா அலுவலகங்களிலும் பிரிவினைக் கொள்கையை அரசு பின்பற்றுமா?சிறு வயது முதல் ஆணும் பெண்ணும் சேர்ந்து பழகி ஒருவரையொருவர் புரிந்து கொண்டு மதித்து வாழக் கற்றுக் கொடுப்பதே தேவை. அதைப் பள்ளியில்தான் தொடங்க முடியும். அதற்குத் தடையாக இருக்கும் ஒரு சில புல்லுருவிகளை நீக்க வேண்டுமே தவிர, குழந்தையைக் குளிப்பாட்டிய தண்ணீரோடு சேர்த்து குழந்தையையும் தூக்கி எறியும் அபத்தத்தைச் செய்யலாகாது. பெண்களுக்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா நினைத்தால், டாஸ்மாக்கை மூடுவது நல்லது.

1 comment:

  1. கிராமங்கள் அழிந்து வருவது உண்மைதான்! எங்கள் கிராமத்தில் கூட சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாறிவிட்டன!

    ReplyDelete