Search This Blog

Sunday, June 16, 2013

அருள்வாக்கு - மனசே வியாதிதான்!

லோக வாசனைகளில் நன்றாகத் தடிப்பேற்றிக் கொண்டு ஒழுங்குக் கெட்டுப்போன நாம் முதலில் லோக கார்யங்களை ஒழுங்காகச் செய்து அந்தத் தடிப்பைத் தேய்த்துத் தேய்த்துக் கரைத்துவிட்டு அப்புறந்தான் லோகத்தைவிட்ட ஆத்மாவுக்குப் போக வேண்டும். அதாவது, முதலில் தர்ம மார்க்கத்தில் போய், அப்புறம்தான் ப்ரஹ்மத்துக்கு முயல வேண்டும். தர்மம் என்பது ஸத்கர்மம் வழியாகவே ஆற்றப்படுவது. அதனால்தான் இன்னாருக்கு இன்ன கர்மம் என்று பக்குவம் பார்த்து, அதிகார பேதம் பார்த்துப் பிரித்துக் கொடுத்திருக்கும் போது அப்படிப்பட்ட கர்மத்தையே அவரவருக்கும் ஸ்வகர்மம் என்று சொல்லாமல் ஸ்வதர்மம் என்று சொல்லியிருப்பது.

வியாதி போன பிற்பாடுதான் விருந்து சாப்பிட முடியும். ஆத்மானந்தமாகிய அம்ருத போஜனம் பண்ணணுமென்றால் முதலில் கர்ம வியாதியையும் மனோ வியாதியையும் போக்கிக் கொள்ள வேண்டும். (மனோ வியாதி என்றால் மனஸுக்கு ஏற்படும் க்லேசம், ப்ரமை போன்ற வியாதியைச் சொல்லவில்லை. மனஸே ஒரு வியாதியாக ஆத்மாவிலே தோன்றியிருப்பதைத்தான் சொல்கிறேன்.)

மனஸின் உயர்ந்த பண்புகளோடு கலந்து சரீரத்தின் வேலைகளை அதிகமாகக் கொண்டிருக்கும் தர்ம கர்மாக்கள் மூலமும், சரீரத்தின் வேலைகள் குறைவாகவும், மனஸின் உத்தம குணங்களே அதிகமாக இருக்கும் பக்தி உபாஸனையினாலும் கர்ம வியாதி, மனோ வியாதிகளைப் போக்கிக் கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் சரீர ப்ரக்ஞை மிகவும் அதிகமாதலால் கர்மாவுக்கு முக்கியத்துவம். அப்புறம் பக்திக்கு முக்கியத்துவம். அப்புறம்தான் ஆத்ம விசாரமே முக்கியமாகிற நிலைக்குப் போவது.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

No comments:

Post a Comment