Search This Blog

Sunday, June 16, 2013

கலாம்

 
அப்துல் கலாமுக்குப் பிறகு பிரதிபா பாட்டிலின் பதவிக்காலம்கூட முடிந்து பிரணாப் முகர்ஜி இந்திய ஜனாதிபதி ஆகிவிட்டார். ஆனால், இன்றும் கலாம் இந்திய மக்களின் மனத்தில் ஹீரோதான். கலாமுக்கு இப்போது 81 வயது ஆகிறது. இன்னமும் தினசரி தபாலிலும், மின்னஞ்சல் மூலமாகவும் அவருக்கு நூற்றுக்கணக்கான கடிதங்கள் குவிகின்றன. மாதத்துக்கு சுமார் ஐந்நூறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோரிக்கைகள் வருகின்றன. கவனமாகத் தேர்ந்தெடுத்து அத்தியாவசியம் கருதினால் மட்டுமே ஒப்புதல் அளிக்கிறார். இப்படி மாதத்தில் பதினைந்து, இருபது நாட்களுக்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் சுற்றுப்பயணம். காலையில் சுமார் ஏழு மணிக்கு எழுந்திருக்கும் அவர், தினசரி தம் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு மறுபடியும் படுக்கைக்குப் போகிறபோது அதிகாலை இரண்டு மணிக்கு மேல்.
 
தில்லியின் ராஜாஜி சாலை எண்பத்து கொண்ட பங்களா கலாம் வசிப்பதற்காக அரசாங்கம் ஒதுக்கி இருக்கிறது. தில்லியில் நாடாளுமன்றம், ராஷ்டிரபதி மாளிகை ஆகியவற்றை வடிவமைத்த பிரிட்டிஷ் கட்டடக்கலை வல்லுனர் சர் எட்வின் லுட்கின்ஸ் வசித்த பங்களா இது. சுமார் இரண்டு ஏக்கர் பரப்பில் பசும் புல்வெளி, தோட்டம், அடர்ந்த மரங்கள் கொண்ட இந்த பங்களா இரண்டு அடுக்குகள் கொண்டது. அரசாங்கம் கலாமுக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு வழங்கி இருக்கிறது.  கலாம் இந்த பங்களாவில் குடியேறிய பிறகு மாடியில் பெரிய நூலகம் ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறார். அரசியல், வரலாறு, நிர்வாகவியல் முதல் அறிவியல், தொழில் நுட்பம் வரை பலவிதமான சப்ஜெக்ட்களில் புத்தகங்களைச் சேகரித்து வைத்திருக்கிறார். நிறைய தமிழ்ப் புத்தகங்களும் இருக்கின்றன. மாடியிலும் கீழுமாக இரு அலுவலக அறைகள். மாடியில் தம்முடைய சொற்பொழிவுகளைத் தயார் செய்வது, அன்றாட வேலைகளைக் கவனிப்பது போன்ற பணிகள் நடக்கின்றன. கீழ் அலுவலக அறை, விசிட்டர்களைச் சந்திப்பதற்கானது.
 
கலாமின் நாள், தினசரி காலை ஏழு மணிக்கு காஃபியுடன் ஆரம்பமாகிறது. அன்றைய ஆங்கில, தமிழ் தினசரிகளைப் புரட்டி, முக்கிய செய்திகளைப் படித்து விட்டுத்தான் மற்ற வேலைகள். பத்துமணிக்கு, அலுவலகம் வந்துவிடுவார். கடிதங்களைப் படிப்பது, நிகழ்ச்சிகளுக்கான கோரிக்கைகளைப் பரிசீலிப்பது, இதர பணிகளைக் கவனிக்கிறார். அந்நேரத்தில் இணையத்தில் தன் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களுக்குச் சென்று பார்த்து, தாம் விரும்பும் விஷயங்கள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்வது வாடிக்கை. இமெயில்களைப் பார்த்து, தாமே பதில் அனுப்ப வேண்டியவற்றுக்கு பதில் மெயில் அனுப்பிவிடுவார். மேல் நடவடிக்கைகளுக் குரிய மெயில்களின் மீது என்ன செய்ய வேண்டும் என்று அலுவலக அதிகாரிகளுக்குக் குறிப்புகள் கொடுப்பார். அன்றைய நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களைக் கேட்டுக் கொள்வார். கலாம், இசைப்பிரியர் என்பதால், அலுவலக அறையில் இருக்கும் நேரத்தில் பின்னணியில் லேசாக வீணை, சித்தார் இசை ஒலித்துக் கொண்டிருக்கும். சில சமயங்களில் தியாகராஜ கீர்த்தனைகள்.  

கலாமின் காலை சிற்றுண்டி பகல் பதினொரு மணிக்குத் தான். பங்களாவில் இருக்கும் சமையல் அறையைக் கவனித்துக் கொள்ள நான்கு சமையல் காரர்கள் உண்டு. வழக்கமாக ஒரு தோசை. அடுத்து உப்புமா, பூரி, இட்லி இதில் ஏதாவது ஒன்று இருக்கும். பழங்கள், தயிர் சாப்பிடுவார். பிரேக்ஃபாஸ்ட் முடித்துவிட்டு மறுபடியும் அலுவலக அறைக்கு வந்துவிடுவார். பகல் இரண்டு, இரண்டரை வரை தம் பணிகளில் மூழ்கி இருப்பார். அதன் பிறகு புல்வெளியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு வாக்கிங். அப்போது, பெரும்பாலும் சில நண்பர்கள், தன் அலுவலக அதிகாரிகள் உடன் வர ஆலோசனைகள் நடக்கும். மறுபடியும் டிஸ்கஷன், கடிதங்கள், ஃபைல்கள் பார்த்துவிட்டு மாலை ஐந்து மணிக்குத் தான் லஞ்ச். தென்னிந்திய உணவு வகைகளை விரும்புவார். மதிய உணவில் ஒரு சப்பாத்தியுடன், சாதம், சாம்பார், ரசம், தயிர், காய்கறிகள் இருக்கும் என்றாலும், ஒவ்வொரு சாதமும் நாலைந்து ஸ்பூன் அளவுதான் சாப்பிடுவார். அதன் பிறகு கொஞ்சம் ஓய்வு.

தில்லியில் மாலையில் நிகழ்ச்சிகள் ஏதும் ஒப்புக் கொள்ளவில்லை என்றால், ஏழு மணியளவில் விசிட்டர்களைச் சந்திப்பது அவரது வழக்கம். தனிப்பட்ட நபர்களைச் சந்திப்பது உண்டு என்றாலும், விசிட்டர்களை குழுக்களாகச் சந்தித்து, உரையாடுவதையே அவர் விரும்புவார். குழந்தைகள், கல்லூரி, பள்ளி மாணவர்கள் குழுவினர் அவரை சந்திக்க நேரம் கேட்டால் முன்னுரிமை கொடுத்து அவர்களை சந்திப்பார். சுமார் ஒன்பது, ஒன்பதரை மணி வரை விசிட்டர்களைச் சந்தித்த பிறகு, மீண்டும் ஒரு மணி நேரம் வாக்கிங். பத்தரை மணிக்கு மேல் மிக லைட்டான டின்னர். அதன்பிறகு தம் நூல் நிலையத்திலிருந்து புத்தகங்களை எடுத்துப் படிக்க ஆரம்பிப்பார். நேரம் போவதே தெரியாது. தினமும் படித்து முடித்து விட்டு, படுக்கைக்குச் செல்லும்போது இரவு இரண்டு மணியைத் தாண்டி இருக்கும். சில நாட்களில் மூன்று மணி கூட ஆகிவிடும்.

No comments:

Post a Comment