Search This Blog

Friday, June 28, 2013

தலைமுடியைப் பாதுகாப்பது எப்படி?

தலைமுடி ‘கருகரு’வென்று இருந்தால், அந்த மகிழ்ச்சியே தனிதான். அதேநேரத்தில் தலைமுடி கொட்டத் தொடங்கிவிட்டால், கவலைப்படுகிறவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். 

முடியின் வளர்ச்சி

சராசரியாக ஒருவருக்குத் தினமும் 0.5 மில்லி மீட்டர் நீளத்துக்குத் தலையில் இருக்கும் ஒவ்வொரு முடியும் வளர்கிறது. ஒரு தலைமுடியின் அதிகபட்ச ஆயுள் காலம் 94 வாரங்கள். வயதாக ஆக தலைமுடியின் ஆயுள் 17 வாரங்கள் வரை குறைந்துவிடும். முடியின் வாழ்க்கையில் மூன்று கட்டங்கள் இருக்கின்றன. இவற்றில் முதல் கட்டம், வளர்ச்சிப் பருவம். இந்தப் பருவத்தில் முடி வளர்ந்து கொண்டிருக்கும். அடுத்த கட்டம் தேக்கம். இந்தக் கட்டத்தில் முடி வளராது. அடுத்த கட்டம், முடி உதிரும் பருவம். இந்தப் பருவத்தில் முடி உதிரத் தொடங்கும். இது ஒரு சக்கரச் சுழற்சிபோல நிகழ்கிறது. ஒரு முடி உதிர்ந்து கொண்டிருக்கும்போது, மற்றொரு முடி வளர்ந்து கொண்டிருக்கும். இதனால்தான், ஒரே நேரத்தில் எல்லா முடிகளும் உதிர்வதில்லை. தினமும் 75 லிருந்து 150 முடிகள் உதிர்வது இயற்கை.  

முடி கொட்டுவதற்கு என்ன காரணம்?

தலைமுடி கொட்டுவதற்கு முக்கியக் காரணம், ஊட்டச்சத்து குறைபாடு. இதிலும் குறிப்பாக, இரும்புச் சத்து, துத்தநாகச் சத்து, கால்சியம் சத்து, பயாட்டின் சத்து, புரதச்சத்து முதலியவை குறையும் போது முடி கொட்டும். டைபாய்டு, மலேரியா, அம்மை, மஞ்சள்காமாலை போன்ற கடுமையான நோய்களால் பாதிக்கப்படும் போதும் முடி கொட்டும். ரத்தம், மூட்டு தொடர்பான நோய்கள் இருந்தால், தலையில் பொடுகு இருந்தால், பேன் மற்றும் ஈறுகள் இருந்தால் முடி கொட்ட வாய்ப்புண்டு. கரப்பான் நோய், காளான் நோய் போன்றவை முடி உதிர்வதைத் தூண்டும். தலைமுடி கொட்டுவதற்குப் பரம்பரையும் ஒரு முக்கியக் காரணம்தான். தைராய்டு ஹார்மோன் குறைபாடு காரணமாகவும் முடி கொட்டுகிறது. சில மாத்திரை, மருந்துகளாலும் முடி கொட்டலாம். சிலருக்குத் தேர்வு நேரங்களில் ஏற்படும் மன அழுத்தம் காரணமாகவும் முடி கொட்டுவதுண்டு. இந்தக் காரணங்களைத் தவிர்த்தால் அல்லது சிகிச்சை பெற்றால், முடி கொட்டுவது நிற்கும்.  

இளநரை ஏற்படுவது ஏன்?

வயதாக ஆக தலைமுடி நரைப்பது இயல்பு. சிலருக்கு இளமையிலேயே தலைமுடி நரைத்து விடுகிறது. இதற்கு வம்சாவழி ஒரு முக்கியக் காரணம். பெற்றோருக்கு இளநரை ஏற்பட்டிருந்தால், குழந்தைகளுக்கும் இளநரை ஏற்படும் வாய்ப்பு பெருகும். மன அழுத்தம், பரபரப்பான செயல்பாடு, கவலை, கோபம், சோகம் போன்ற மனம் தொடர்பானவை இளநரை ஏற்படுவதை ஊக்குவிக்கும். தலைமுடி ‘கருகரு’வென முளைக்க வேண்டுமானால், மெலனின் எனும் நிறமிப் பொருள் சரியான அளவில் நம் உடலில் உற்பத்தியாக வேண்டும். இதற்குப் புரதசத்து, கால்சியம் சத்து, வைட்டமின் - B5 போன்றவை தேவை. ஆகவே, இளமையில் சத்துக் குறைபாடு ஏற்படுமானால், தலைமுடி நரைத்துவிடும். இளநரை ஏற்படுவதைத் தவிர்க்க பால், பருப்பு, முளைகட்டிய பயறுகள், பச்சைநிறக் காய்கறிகள் சாப்பிடுவதை அதிகப்படுத்துங்கள். தலைக்குத் தினமும் மசாஜ் கொடுங்கள். நன்றாகத் தூங்கி ஓய்வெடுங்கள்.  

பொடுகுக்குத் தீர்வு

தலைச் சருமத்தில் ‘சீபம்’ எனும் எண்ணெய்ச் சுரப்பு அதிகமாகும்போது, பொடுகு தோன்றுகிறது. செத்துப்போன தோல் செல்கள் எண்ணெய்ச் சுரப்பில் ஒட்டிக்கொண்டு வெள்ளை நிறப் பக்குகளாக வெளியேறுவதைப் ‘பொடுகு’ என்கிறோம். இது, எண்ணெய்ச் சருமம் கொண்டவர்களுக்கு அதிக அளவில் தொல்லை கொடுக்கும். ‘மலசேஜியா குளோபோசா’ எனும் காளான் கிருமிகளாலும பொடுகு தோன்றலாம். மருத்துவர் ஆலோசனைப்படி செலினியம் அல்லது கீட்டோகொனஜோல் மருந்து கலந்த ஷாம்பூ போட்டுத் தலைக்குக் குளித்து, தலைமுடியைச் சுத்தமாகப் பராமரித்தால், பொடுகுத் தொல்லை குறையும். 

கரப்பான் காரணமா?

சிலருக்குக் கரப்பான் நோய் காரணமாகத் தலை முடி உதிரும். கரப்பான் என்பது ஒருவகைத் தோல் அழற்சி நோய். சோப்பு, ஷாம்பூ, உணவு, உடை மற்றும் ஆபரணங்கள் ஒவ்வாமைதான் இந்த நோய்க்கு அடிப்படை. தலைச்சருமம் வீங்கி, சிவந்து, அரிப்பை ஏற்படுத்தும். அதைச் சொறியும்போது, நீர் கோத்து, புண்ணாகிவிடும். அந்த இடங்களில் தலைமுடி உதிர்ந்துவிடும். இதற்குக் காரணம் தெரிந்து சிகிச்சை பெற்றால் கரப்பான் குணமாகும். 

தலையில் பேன் வரக் காரணம்

தலைமுடியைச் சுத்தமாகப் பராமரிக்காமல் இருப்பது, தலைப்பேன் உள்ள நபருடன் நெருக்கமாகப் பழகுவது போன்றவை பேன் தொல்லையை ஏற்படுத்தும். பேன் உள்ளவர் பயன்படுத்திய சீப்பு மூலம் மற்றவர்களுக்குப் பேன் பரவிவிடும். இரவில் படுக்கப் போகும்போது, ‘பெர்லைஸ்’ எனும் பேன் கொல்லி தைலத்தைத் தலைமுடி முழுவதும் பூசி, தலையில் துண்டு கட்டிப் படுத்து, காலையில் ஷாம்பூ தேய்த்துக் குளித்துவிட வேண்டும். ஒருவாரம் கழித்து, மீண்டும் ஒருமுறை இதுபோல் குளிக்க வேண்டும். தலைப்பேன் தொல்லை வராது. 

தலைமுடியைப் பாதுகாக்க...

அனைத்து ஊட்டச் சத்துகளும் அடங்கியுள்ள உணவைத் தினமும் சாப்பிட வேண்டும். குறிப்பாக, பால், கீரைகள், பழங்கள் சாப்பிடுவது தலைமுடி வளர்ச்சிக்கு உதவும். 

தினமும் ஒருமுறை குளிக்க வேண்டும்.

தரமான ஷாம்பூவை வாரம் ஒருமுறை பயன்படுத்தினால் போதும்.
தலைக்குக் குளித்ததும் தலைமுடியை இயற்கையாக உலர்த்துங்கள். ‘டிரையர்’ தவிருங்கள்.

தலைக்குத் தினமும் எண்ணெய் தேய்க்க வேண்டும். 

தலை சீவ மென்மையான சீப்பைப் பயன்படுத்துங்கள். அடுத்தவர்கள் பயன்படுத்திய சோப்பு, சீப்பு, ஷாம்பூ போன்றவற்றைப் பயன்படுத்தாதீர்கள்.
கொத்துக் கொத்தாக தலைமுடி கொட்டினால் மருத்துவரை ஆலோசியுங்கள்.

நவீன சிகிச்சை என்ன?

இப்போதெல்லாம் ஆண்களுக்கு இருப்பது வழுக்கைப் பிரச்னை. பெண்களுக்கு அவர்களுக்கு இருக்கும் சில ஹார்மோன்கள் காரணமாக, பெரும்பாலும் இந்தப் பிரச்னை எழுவதில்லை. தலையில் வழுக்கை விழுந்த இடத்தில் முடி முளைக்கவைக்க ‘முடி மாற்றுச் சிகிச்சை’ எனும் நவீன சிகிச்சை உள்ளது. முடி முளைக்கத் தொடங்கிவிடும்.
 
 

1 comment: